என் மலர்
ஈரோடு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் அவ்வப்போது தண்ணீர் குடிப்பதற்காக அணைக்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வனப்பகுதியில் இருந்து 2 குட்டிகளுடன் 5 யானைகள் வெளியேறி பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு வந்தன.
பின்னர் அந்த யானைகள் அணையில் தேங்கி நின்ற தண்ணீருக்குள் இறங்கின. இதைத்தொடர்ந்து தண்ணீரை துதிக்கையால் உறிஞ்சி குடித்ததுடன் யானைகள் ஒன்றன் மீது ஒன்று தண்ணீரை பீய்ச்சி அடித்து விளையாடின. அதுமட்டுமின்றி தண்ணீரில் யானைகள் குளித்து கும்மாளமிட்டன. அரை மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் அணையின் மேல் பகுதியில் உள்ள தார் சாலைக்கு வந்த யானைகள், அதை கடந்து காராச்சிக்கொரை வனப்பகுதிக்குள் சென்றன.
பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே அஞ்சூர் நல்லசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. லாரி டிரைவர். இவருடைய மகன்கள் கோகுல் (வயது 23), மனோஜ் (20). கோவையில் உள்ள மென்பொருள் கம்பெனியில் கோகுல் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மனோஜ் பி.எஸ்சி. இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று கோகுல், மனோஜ் ஆகியோர் அந்த பகுதியை சேர்ந்தவர்களுடன் சாமி தரிசனம் செய்வதற்காக கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் 2 பேரும் கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு குளிப்பதற்காக பகல் 2.30 மணி அளவில் காவிரி ஆற்றில் உள்ள மணல்மேடு பகுதிக்கு சென்றனர்.
முதலில் மனோஜ் இறங்கி குளிக்க தொடங்கினார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கினார். இதை கண்ட உடனே மனோஜின் கையை பிடித்து இழுக்க கோகுல் முயன்றார். ஆனால் அவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். உடனடியாக இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நிலைய அதிகாரி சிவராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோகுல், மனோஜ் ஆகியோரின் உடல்களை மீட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
அண்ணன், தம்பியின் உடல்களை பார்த்து அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சதுமுகை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (45). தச்சு தொழிலாளி. இவரது மனைவி திலகா. இவர்களுக்கு காயத்ரி என்ற மகளும், அரவிந்த் என்ற மகனும் உள்ளனர்.
சரவணனுக்கும், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட சரவணன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். அப்போது அவரது தலையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் எக்ஸ்ரேவில் ஒரு இடத்தில் கருப்பாக இருந்தது. இதைப்பார்த்த சரவணன் அது கேமரா என்றும், அதை பக்கத்து வீட்டுகாரர் தான் வைத்து விட்டார் என்றும் கூறி வந்தார். இது தொடர்பாகவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.
சரவணன் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள 300 அடி உயரம் உள்ள ஒரு தனியார் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுபற்றி தெரிய வந்ததும் சத்தியமங்கலம் டி.எஸ்.பி., சுப்பையா, தாசில்தார் ரவிசங்கர் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்தனர். மேலும் 108 ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது.
செல்போன் டவரில் இருந்த சரவணனை போலீசார் கீழே இறங்கி வர மைக்கில் பேசினார்கள். ஆனால் அவர் பக்கத்து வீட்டுக்காரர் என் மண்டையில் கேமரா வைத்து விட்டார். எனவே அவரை கைது செய்யுங்கள். இல்லாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.
அவரது மனைவி மற்றும் மகள், மகனும் அழைத்தனர். ஆனால் அவர் வரமறுத்துவிட்டார். இதையடுத்து போலீசார் பக்கத்து வீட்டுக்காரர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஒரு கட்டத்தில் சரவணன் அதிர்ச்சி அடைந்து செல்போன் கோபுரத்தில் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டார்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பெல்ட் அணிந்து கொண்டு செல்போன் கோபுரத்தில் ஏறினர். பின்னர் அவரிடம் நைசாக பேசி காலை 9.30 மணியளவில் அவரை பத்திரமாக கீழே அழைத்து வந்தனர். பின்னர் அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் அவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தொழிலாளி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தகவல் கிடைத்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு நடைமுறைக்கு வந்தபோது சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்வுகள் பல கட்டங்களாக அறிவிக்கப்பட்ட பின்னரும், தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இந்தநிலையில் மத்திய அரசு தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
கடந்த 10-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், ஈரோட்டில் தீபாவளியையொட்டி நேற்று முன்தினம் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.
தீபாவளி என்றாலே தியேட்டரில் வெளியாகும் புதுப்படங்களை பார்க்க ரசிகர்கள் பட்டாளம் திரண்டு காணப்படும். அதனால் பிரபல நடிகர்கள் நடித்து வெளியாகும் படங்களின் சினிமா தியேட்டர்கள் நள்ளிரவில் இருந்தே பரபரப்பாக காணப்படும். திரைஅரங்கம் முழுவதும் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் வழக்கமான ஆரவாரத்துடன் ரசிகர்கள் யாரும் திரை அரங்குகளுக்கு வரவில்லை.
தியேட்டர்களில் அமர்ந்து படம் பார்க்க கட்டுப்பாடுகள் இருப்பதால், ரசிகர்கள் வருகை குறைந்து உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த தீபாவளிக்கு தியேட்டர்கள் திறப்பதில் பல்வேறு தடைகள் இருந்ததால் மக்களின் அபிமான நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியிடப்படவில்லை. இதுவும் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வராததற்கு காரணமாகும் என்று தியேட்டர் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். தொடர்ச்சியாக திரையரங்குகள் திறந்து திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகும்போது ரசிகர்கள் தியேட்டர்களை தேடி வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 7 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் மெதுவாக குறைந்து கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 100-க்கும் குறைவானவர்கள் புதிதாக தொற்றுக்கு பாதிக்கப்படுகிறார்கள்.
நேற்று முன்தினம் புதிதாக 63 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டார்கள். மேலும், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 59 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் நேற்று வெளியிடப்பட்ட மாநில சுகாதாரத்துறையின் பட்டியலின்படி மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 599 ஆக உயர்ந்தது.
இதில் 10 ஆயிரத்து 838 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 625 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த அந்தியூரை சேர்ந்த 60 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 136 ஆக உயர்ந்தது.
பெருந்துறை:
பெருந்துறை சென்னிவலசு பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி (வயது 80). இவரது மனைவி சங்கராம்மாள்(70). இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனி தனியாக வசித்து வருகிறார்கள்.
பாலுசாமி அதே பகுதியில் தள்ளுவண்டியில் போண்டா, பஜ்ஜி வியாபாரம் செய்து வருகிறார்.
இன்று காலை 6 மணியளவில் சங்கராம்மாள் அந்த பகுதியில் உள்ள ஊர் பொது கிணறு அருகே சென்றார். 70 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 50 அடிக்கு தண்ணீர் உள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக சங்கராம்மாள் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியும்.
மேலும் கிணற்றில் தண்ணீர் பிடிப்பதற்காக வைத்திருந்த வாலி கயிற்றை சங்கராம்மாள் பிடித்து கொண்டு காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள் என அலறினார்.
அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் கிணற்றை பார்த்தனர். அப்போது மூதாட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் வேலுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் இரண்டு தீயணைப்பு வீரர்கன் கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி மூதாட்டி சங்கராம்மாளை சுமார் 30 நிமிட போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்டனர். பின்னர் சங்கராம்மாள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கோபி:
கோபி அருகே உள்ள குளவிகரடை சேர்ந்தவர் கவின் (25). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இரவு இவர் காசிபாளையத்தில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு மொபட்டில் சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் குளவிகரடை நோக்கி வந்தார். அவருடன் அதேபகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (60) என்பவரும் வந்தார்.
இதேபோல் திருச்சியை சேர்ந்த ராஜ்குமார் (23), ரமேஷ் (20) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், சத்தியமங்கலத்தை சேர்ந்த கோபிநாத் (35) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் வந்தனர்.
கணபதிபாளையம் பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது மொபட்- மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்தானது. இதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளியங்கிரி (60), கவின் (25), ராஜ்குமார் (23) ஆகிய 3பேரும் உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த ரமேஷ் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கும், கோபிநாத் சத்தியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






