என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெருந்துறையில் 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி

    பெருந்துறையில் 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை சென்னிவலசு பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி (வயது 80). இவரது மனைவி சங்கராம்மாள்(70). இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனி தனியாக வசித்து வருகிறார்கள்.

    பாலுசாமி அதே பகுதியில் தள்ளுவண்டியில் போண்டா, பஜ்ஜி வியாபாரம் செய்து வருகிறார்.

    இன்று காலை 6 மணியளவில் சங்கராம்மாள் அந்த பகுதியில் உள்ள ஊர் பொது கிணறு அருகே சென்றார். 70 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 50 அடிக்கு தண்ணீர் உள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக சங்கராம்மாள் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியும்.

    மேலும் கிணற்றில் தண்ணீர் பிடிப்பதற்காக வைத்திருந்த வாலி கயிற்றை சங்கராம்மாள் பிடித்து கொண்டு காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள் என அலறினார்.

    அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் கிணற்றை பார்த்தனர். அப்போது மூதாட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் வேலுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் இரண்டு தீயணைப்பு வீரர்கன் கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி மூதாட்டி சங்கராம்மாளை சுமார் 30 நிமிட போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்டனர். பின்னர் சங்கராம்மாள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    Next Story
    ×