என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோபி அருகே மோட்டார்சைக்கிள்-மொபட் மோதல்: 3 பேர் பலி

    கோபி அருகே மோட்டார்சைக்கிள், மொபட் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடத்தூர்:

    ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த காசிபாளையத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 60). இவர் அளுக்குளியில் உள்ள தனியார் மில்லில் தோட்ட தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் அளுக்குளியில் உள்ள தனது மகளை பார்த்துவிட்டு வீட்டுக்கு தன்னுடன் வேலை செய்த ராஜ்குமார் (25) என்பவருடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். மொபட்டை ராஜ்குமார் ஓட்டினார். பின்னால் வெள்ளியங்கிரி உட்கார்ந்திருந்தார்.

    கோபியை அடுத்த கா.கணபதிபாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த குளவிகரட்டை பகுதியை சேர்ந்த கவின் (25), ரமேஷ் (32) ஆகியோர் வந்த மோட்டார்சைக்கிளும், மொபட்டும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. மேலும் அந்த வழியாக வந்த சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்த கோபிநாத் (35) என்பவரின் மோட்டார்சைக்கிளும் இந்த விபத்தில் சிக்கியது. இதனால் மொபட் மற்றும் மோட்டார்சைக்கிளில் இருந்து 5 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியிலேயே வெள்ளியங்கிரி, ராஜ்குமார், கவின் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    ரமேஷ் மற்றும் கோபிநாத் ஆகியோர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×