என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் நம்பியூர் காந்திபுரம் வடக்குவீதி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 28 கோழிகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது.
தொடர்ந்து அதே பகுதியில் கன்னியம்மாள் என்பவருக்கு சொந்தமான பட்டியில் புகுந்து 3 ஆடுகளையும், அடுத்த நாள் செட்டியம்பதி என்ற பகுதியில் 2 ஆடுகளையும் மர்ம விலங்கு அடித்து கொன்றது.
தொடர்ந்து கால்நடைகளை மர்மவிலங்கு தாக்கி வந்ததால் இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கால்தடங்கைள ஆய்வு செய்தனர்.
அப்போது ஆடு, கோழிகளை அடித்து கொன்றது சிறுத்தை என்று தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் 5 இடங்களில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டது.
பகல் நேரங்களில் அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கி கொள்ளும் சிறுத்தை இரவு நேரங்களில் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடுவது தெரிய வந்தது. இதையடுத்து காட்டு பகுதிக்கு பொதுமக்கள் தனியாக செல்ல கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நம்பியூர் அருகே உள்ள இருகாலூர் என்ற கிராமத்தில் பொன்காத்த அய்யன் கோவில் குளம் என்ற பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் சிறுத்தையின் உருமல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது சிறுத்தை அந்த பகுதியில் உலாவிக் கொண்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ்பாண்டியன், வனத்துறை மருத்துவர் சதாசிவம் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சிறுத்தை பதுங்கி இருந்த பொன்காத்த அய்யன் கோவில் குளத்து பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அங்கு 6 தானியங்கி கேமராக்களை பொருத்தினர்.
மேலும் இரவு நேரம் ஆகிவிட்டதால் வனத்துறையினருடன் கிராம மக்களும் சேர்ந்து கொண்டு செல்போன் டார்ச்லைட் மற்றும் மின்விளக்குகள் மூலம் விடிய விடிய சிறுத்தையை தேடினர்.
மேலும் இருகாலூர் பகுதியில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் வனத்துறை சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி கிராமமே வெறிச்சோடியது.
வனத்துறையினர், தன்னார்வலர்கள் பொன்காத்த அய்யன் கோவில் குளத்து பகுதியில் 2 பிரிவாக பிரிந்து இன்று 2-வது நாளாக சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ட்ரோன் கேமரா மற்றும் தானியங்கி கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சிறுத்தையை பிடிக்கும் வரை பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதேபோல் பொன்காத்த அய்யன் கோவில குளத்து பகுதியில் பதுங்கி உள்ள சிறுத்தை திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே உள்ள குட்டகம் ஊராட்சிக்குட்பட்ட ஏழூர் கிராமம் பகுதியில் சுற்றியதாகவும் கூறப்படுகிறது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறுத்தையின் உருமல் சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு-திருப்பூர் எல்லையான பாப்பாங்குளம் பகுதியில் புகுந்த சிறுத்தை திருப்பூர் நகருக்குள் புகுந்தது. இதையடுத்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தை பிடிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஒரு சிறுத்தை ஊருக்குள் நுழைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1 மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் கவுன்சிலர்களுக்கான தேர்தல் வரும் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29-ந் தேதி தொடங்கியது.
ஈரோடு மாநகர் பகுதியில் 4 மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், வீரப்பன்சத்திரம் அலுவலகம் என 6 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் 4 நகராட்சியில் அந்தந்த அலுவலகங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 42 பேரூராட்சி அலுவலகங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் 447 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நேற்று மாநகராட்சியில் 100 பேர், 4 நகராட்சியில் 164 பேர், 42 பேரூராட்சியில் 822 பேர் என மொத்தம் ஒரே நாளில் 1,086 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதில் மாநகராட்சி பகுதியில் மட்டும் இதுவரை 126, 4 நகராட்சிகளில் 246, பேரூராட்சிகளில் 1,161 பேர் என 1,533 பேர் இது வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இதனால் இன்று தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக்கட்சியினர் போட்டி போட்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதேப்போல் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதனால் இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட இடங்களில் திருவிழா போல் கூட்டம் காணப்பட்டது. வேட்பாளர்கள் உடன் 2 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக 4 மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி மைய அலுவலகம், வீரப்பன்சத்திரம் அலுவலகம் என 6 இடங்களில் கடந்த 29-ந் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது தங்களுடைய சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரி இனங்கள் 100 சதவீதம் செலுத்தி வரி நிலுவை இல்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும், அதனை வேட்புமனு தாக்கலின்போது கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனை அடுத்து மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் மாநகராட்சியில் செலுத்த வேண்டிய நிலுவை வரியை கடந்த சில நாட்களாக செலுத்தி வருகின்றனர். இதன்படி கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி முதல் கடந்த 2-ந் தேதி வரை 5 நாட்களில் மட்டும் ரூ.58 லட்சத்து 96 ஆயிரம் நிலுவை வரி செலுத்த பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தீர்மானத்தை கவர்னர் திருப்பி அனுப்பி விட்டார்.
எனவே தீர்மானத்தை திருப்பி அனுப்பிய தமிழக கவர்னரை கண்டித்தும். அவரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், நீட் தேர்வு எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் கவர்னர் உருவபொம்மையை எரிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பன்னீர் செல்வம் பார்க்கில் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் சாக்குபை, தண்ணீர் குடம் ஆகியவற்றுடன் தயாராக இருந்தனர்.
இதை அறிந்த தமிழ்புலிகள் கட்சியினர் மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் தலைமையில் ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு உள்ள சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த கவர்னரின் உருவப்படத்தை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கவர்னருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதை தொடர்ந்து பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் இருந்த போலீசார் விரைந்து சென்று தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் உள்பட 19 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக ஈரோடு தாலுகா அலுவலகம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.






