என் மலர்tooltip icon

    கடலூர்

    புவனகிரி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். கடந்த மாதம் அவரது கணவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
    புவனகிரி:

    புவனகிரி அருகே உள்ள சுத்துக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஆர்வலன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா (வயது 40). திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் ஆர்வலன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் உயிரிழந்தார். இதனால், கவிதா தனிமையில் கஷ்டப்பட்டு வந்தார். அதோடு கணவரை இழந்த நாள் முதல் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் கவிதா வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தூக்கில் பிணமாக தொங்கிய கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவிதாவின் தற்காலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே ராமாபுரம் அடுத்த குறிஞ்சிநகர் பகுதியில் 2 பேர் நாட்டுத்துப்பாக்கியுடன் பறவைகளை வேட்டையாட முயற்சிப்பதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

    அப்போது அங்கு 2 பேர் நாட்டுத்துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருமாணிக்குழியை சேர்ந்த நாகப்பன் மகன் ரமேஷ் என்கிற கார்த்தி (வயது 32), சங்கர் மகன் சூர்யா(21) என்பதும், உரிமம் பெற்று வாங்கிய துப்பாக்கியை அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக உரிமத்தை புதுப்பிக்காமல் பயன்படுத்தியதும், வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், சூர்யா ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
    கடலூர் மாவட்டத்தில் பயிர் சேத விவரங்களை கணக்கெடுக்கும் பணி 2 நாட்களில் முடிக்கப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறையின் மூலம் நிவர் புயல் சேத விவரங்கள் மற்றும் மறுசீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு, நிவர் புயலால் பசு மாடுகள், ஆடுகள், கன்று குட்டி, கூரை வீடுகள் உள்ளிட்டவற்றை இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறுகையில், நிவர் புயலின் போது மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பொதுமக்களுக்கு எவ்வித உயிர்சேதமும், பொருட்சேதமும் இன்றி பாதுகாக்க முடிந்தது.

    25-ந் தேதி இரவு நிவர் புயலால் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக கடலூரில் 282.2 மி.மீ. மழையும், சராசரியாக 120.57 மி.மீ. மழையும் பெய்துள்ளது. அப்போது முன்னெச்சரிக்கையாக கடலோர பகுதிகள் மற்றும் அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளில் வசித்த 17,186 குடும்பங்களை சேர்ந்த 52,226 மக்கள், மாவட்டத்தில் உள்ள 441 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

    நிவர் புயலின் போது பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் 95 குடிசை வீடுகள் முழுமையாகவும், 642 குடிசைகள் பகுதியாகவும், 174 நிலையான வீடுகள் பகுதியாகவும், 5 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது. மேலும் 94 ஆடுகள், 53 மாடுகளும், 6,300 வாத்துகள், 5,500 கோழிகளும் செத்துள்ளன.

    இதுவரை கணக்கெடுக்கப்பட்டதில் 4,770 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், மணிலா உள்ளிட்ட பயிர்களும், 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட காய்கறி வகை பயிர்களும் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து பயிர் சேத விவரங்களை கணக்கெடுக்கும் பணியில் 1,500 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதனால் இன்னும் 2 நாட்களில் கணக்கெடுக்கும் பணி முடிவடைந்து விடும். பின்னர் அதன் அடிப்படையில் பயிர் சேதங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

    இதுதவிர மழைநீர் தேங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளில், மழைநீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் அப்பகுதிகளில் கொசு மருந்து மற்றும் பிளிச்சீங் பவுடர் உள்ளிட்டவை தெளித்து, நோய் தொற்று ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவின்குமார், கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜெயராஜ பவுலின் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    நிவர் புயலால் கனமழை பெய்தது. இதையொட்டி கடலூரில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை வடிய வைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    கடலூர்:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியை அச்சுறுத்திய நிவர் புயல் கடந்த 25-ந் தேதி மரக்காணம் அருகே கரையை கடந்தது. இருப்பினும் கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டியது. இந்த காற்றினால் மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன. கால்நடைகளும் பலியாகின. விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல், வாழை, மணிலா, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் தண்ணீர் தேங்கியது.

    சில இடங்களில் வாழை முறிந்து சேதமடைந்தன. இது தவிர பலத்த மழையால் வீடுகளை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக புதுப்பாளையம், கோண்டூர், பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், முதுநகர் ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் இருந்த வீடுகளில் மழைநீர் புகுந்தது. இந்த தண்ணீரை பொதுமக்கள் வாளியை வைத்து இறைத்து வெளியேற்றினர்.

    இதற்கிடையில் நேற்று முன்தினமும், நேற்றும் மழை ஓய்ந்து வெயில் அடித்து வருவதால் சாலைகளில் தேங்கி நின்ற மழைநீர் அனைத்தும் வடிந்து விட்டது. ஆனால் தாழ்வான இடங்களில் தேங்கி நின்ற மழைநீர் வடியவில்லை. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கவுசல்யாநகர், ஸ்ரீதேவிநகர், குமரன்நகர், முருகாலயா நகர், பொன்னுசாமிநகர், சக்திநகர், சிவாநகர், சிங்காரவேலன் நகர், முத்தையாநகர் உள்பட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதை மோட்டார் மூலம் இறைத்து நகராட்சி ஊழியர்கள் வெளியேற்றி வருகின்றனர். மேலும் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி உத்தரவின்பேரில் உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் ஊழியர்கள் ஸ்ரீதேவிநகரை சுற்றியுள்ள தண்ணீரை வடிய வைக்க சாலையை குறுக்கே வெட்டி, அதில் குழாய் அமைத்து மழைநீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் தண்ணீரை வடிய வைக்க முடியவில்லை. அந்த இடங்களில் மாற்று ஏற்பாடு செய்து வடிய வைக்க அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

    இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் தாழ்வான இடங்களில் தேங்கி உள்ள மழைநீரை வடிய வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    கடலூரில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது
    கடலூர்:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி உத்தரவின்பேரில் கடலூர் வண்டிப்பாளையம் ராமுமுதலியார் தோட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு நகர தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். 

    மாநில பொதுக்குழு என்.குமார், மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ரவிக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாந்திராஜ், மாவட்ட பொருளாளர் ராஜன், மாவட்ட செயலாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் தொகுதி தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். 

    நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். இதில் மாவட்ட துணை தலைவர் மணி, நகர செயலாளர்கள் சங்கர், கோபால், பாலகுரு, ஊடக பிரிவு வினு சக்கரவர்த்தி, அருள், இளைஞர் காங்கிரஸ் ராமகிருஷ்ணன், ஆட்டோ வேலு, நகர பொருளாளர் ராஜூ சவுக்கார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிதம்பரம் அருகே தோழிகளுடன் குளித்த போது வாய்க்காலில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்தனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பால்வாதூன்னான் காலனியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் மகாலட்சுமி (வயது 9). அதே பகுதியை சேர்ந்த ராயர் மகள் அனு என்கிற தார்நிஷா(11). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மகாலட்சுமி 4-ம் வகுப்பும், அனு 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அதே பகுதியில் உள்ள கழுதை வெட்டி வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதுபற்றி அறிந்த மகாலட்சுமியும், அனுவும் அதே பகுதியை சேர்ந்த தங்களது தோழிகள் 2 பேருடன் நேற்று மதியம் 1 மணி அளவில் கழுதை வெட்டி வாய்க்காலுக்கு சென்றனர். வாய்க்காலில் தண்ணீர் அதிகளவில் சென்றதால், அவர்கள் 4 பேரும் வாய்க்காலின் கரையோரம் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் குளித்துக் கொண்டிருந்த மகாலட்சுமியும், அனுவும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர்கள் இருவரையும் தண்ணீர் அடித்துச் சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது தோழிகள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சலிட்டனர்.

    இந்த சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் வாய்க்காலில் இறங்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகளை தேடினர்.

    ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு மாணவிகள் இருவரையும் பிணமாக மீட்டனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவிகளின் உடல்களை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி 2 மாணவிகள் இறந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூரில் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் நண்பர் முத்துக்குமாரின் தந்தை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே  கிருஷ்ணாபுரத்தில் உள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டியின் நண்பர் முத்துக்குமாரின் தந்தை சுகிசந்திரன் வீட்டில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    2 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கி குவித்ததாக எழுந்த புகாரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம் சிறையில் மரணம் அடைந்த செல்வமுருகனின் உடல் தாமதமாக கொண்டு செல்லப்பட்டதாலும், மருத்துவ கண்காணிப்பாளர் இல்லாததாலும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நேற்று நடைபெறவில்லை.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து கிராமத்தை சேர்ந்தவர் செல்வமுருகன். இவர் நகை பறிப்பு வழக்கில் கைதாகி விருத்தாசலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது செல்வமுருகன் மர்மமான முறையில் இறந்தார்.

    செல்வமுருகனின் சாவுக்கு காரணமாக இருந்த போலீசார் மீது கொலை வழக்குபதிவு செய்யக்கோரியும், செல்வமுருகனின் உடலை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என செல்வ முருகனின் மனைவி பிரேமா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க விருத்தாசலம் நீதிமன்றத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து கணவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடகோரி கடந்த 19-ந் தேதி பிரேமா விருத்தாசலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த், மர்மமான முறையில் இறந்த செல்வமுருகனின் உடலை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இருந்து செல்வமுருகனின் உடல் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று அவரது உடல் மறுபிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் மாலை 4.45 மணிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டதாலும், மருத்துவ கண்காணிப்பாளர் இல்லாததாலும் பிரேத பரிசோதனை செய்யவில்லை. இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடலூர் நகர் பகுதிகளில் உள்ள குண்டுஉப்பலவாடி, தாழங்குடா, பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், செம்மண்டலம், கடலூர் முதுநகர் பனப்பாக்கம், ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.
    கடலூர்:

    தமிழகத்தை உலுக்கிய ‘நிவர்’ புயல் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வலுவிழந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கல்பாக்கம் பகுதியில் கரையை கடந்தது.

    இதனால் பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது. ‘நிவர்’ புயலால் கடலூர் மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், வழக்கத்துக்கு மாறாக மழை கொட்டி தீர்த்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    ஒரே நாளில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் 2,989.10 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது. இதனால் கடலூர் பகுதியில் ஓடும் தென்பெண்ணையாறு, கெடிலம் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கேப்பர்மலை-வண்டிப்பாளையம் சாலையில் தண்ணீர் ஆறாக கரைபுரண்டு ஓடியது.

    இந்த மழை வெள்ளம் கடலூர் நகர் பகுதிகளில் உள்ள குண்டுஉப்பலவாடி, தாழங்குடா, பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், செம்மண்டலம், கடலூர் முதுநகர் பனப்பாக்கம், ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. இன்று காலை வெயில் அடித்தது. ஆனால், குடியிருப்பு பகுதியில் உள்ள மழைநீர் வடியவில்லை. புயலால் கடலூர் மக்கள் தப்பினாலும் வீடுகளுக்குள் தண்ணீர் நிற்பதால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்துள்ளனர்.

    முதுநகர் பனப்பாக்கம் பகுதியில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றால் படகு மூலம்தான் அங்குள்ளவர்கள் வருகின்றனர். எனவே வெள்ளத்தை வடிய வைக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை பொதுமக்கள் வற்புறுத்தியுள்ளனர்.
    நிவர் புயலுக்கு தமிழக அரசு எதிர்பார்த்ததை விட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பாதிப்பு குறைவாக காணப்பட்டது என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

    கடலூர்:

    வங்க கடலில் உருவான ‘நிவர்’ புயல் வலுவிழந்து கரையை கடந்தது. பலத்த காற்று வீசியதால் கடலூர் மாவட்டத்தில் விளை நிலங்கள் சேதமடைந்தது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளை பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பார்வையிட்டு அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு எதிர் பார்த்ததை விட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பாதிப்பு குறைவாக காணப்பட்டது. மக்களுக்கு தேவையான உணவு வசதி, தங்குமிடம் அனைத்தையும் தமிழக அரசு செய்திருந்தது.

    பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களும் புயலால் பாதித்த மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை செய்து கொடுத்தனர்.

    அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை நாங்கள் உறுதி படுத்தினோம். தமிழக அரசு புயல் பாதிப்பு குறித்து கேட்பதை வைத்து மத்திய அரசு நிதி ஒதுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பண்ருட்டி அருகே சுவரில் துளைபோட்டு அடகு கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    விழுப்புரம் அக்பர் நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டையில் புலவனூர் செல்லும் சாலையில் நகை கடை வைத்துள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு பாலமுருகன் வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர்.

    கடையின் சுவரின் 1½ அடி அகலத்தில் துளை போட்டனர். பின்னர் கடைக்குள் சென்று அங்குள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    25-ந் தேதி நேற்று காலை கடைக்கு பாலமுருகன் வந்தார். அப்போது சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த டி.வி., கண்காணிப்பு கேமரா, வெள்ளி-தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து பாலமுருகன் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.

    அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியாக எடுத்ததால் புயலால் பெரிய பாதிப்பு இல்லை என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
    கடலூர்:

    வங்கக் கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையைக் கடந்தது. இதன் காரணமாக, பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை- காற்றினால் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் கடலூர் மாவட்டமும் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    கடலூரில் பாதிக்கபட்ட பகுதிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நிவாரண பொருட்களை வழங்கினார்.

    கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் நகராட்சி நடுநிலைபள்ளியில் புயல் பாதுகாப்பு மையத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். நிவர் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். 

    புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிடம் குறைகளைக் கேட்டறியும்போது முதலமைச்சரை முதியவர் ஒருவர் திடீரென தொட்டு வணங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    அதனை தொடர்ந்து புயல் பாதுகாப்பு மையத்தில் மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரிடம் மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். 

    கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.  புயலால் சேதமான படகுகளுக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    நிவர் புயலால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நிவர் புயலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக இருந்தோம்.

    மாவட்ட ஆட்சியர்களுக்கும் முழுமையான அறிவுரை வழங்கப்பட்டது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியாக எடுத்ததால் புயலால் பெரிய பாதிப்பு இல்லை. புயல் வெள்ளத்தின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உயிரிழப்பை தவிர்க்க மழை நீர் முழுவதும் அகற்றப்பட்ட பிறகே மின்சார வினியோகம் தொடங்கும்.

    பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்த விவசாயிகள், இழப்புக்கு உரிய நிவாரணம் பெற முடியும். 

    கடலூரில் சேதம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. சுமார் 2.3 லட்சம் பேர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.இரவு பகல் பாராமல் பணியாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினருக்கு பாராட்டுகள் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார். 
    ×