என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    வீட்டில் மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் இந்த முறையில் பிஸ்கட் செய்யலாம். இன்று மைதா பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 200 கிராம்,
    வெண்ணெய் - 100 கிராம்,
    பொடித்த சர்க்கரை - 75 கிராம்,
    உப்பு, பேக்கிங் பவுடர் - தலா கால் டீஸ்பூன்.



    செய்முறை:

    * மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாகக் கலந்து பலமுறை சலித்துக் கொள்ளவும்.

    * வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் கலந்து மிருதுவாகும் வரை குழைக்கவும்.

    * சர்க்கரை நன்றாக கரைந்தவுடன் இதனுடன் மைதா, பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்துக் கலந்து பிசையவும்.

    * இந்த மாவை சப்பாத்தி கல்லில் வைத்து வட்டமாக தட்டவும். இதனை பாட்டில் மூடி அல்லது பிஸ்கட் அச்சினால் கால் அங்குல பருமன் அளவுக்கு வட்டமாக வெட்டவும். வெட்டிய துண்டுகளை 'போர்க்’ (முள்கரண்டி) கொண்டு லேசாக குத்திவிடவும்.

    * ஒரு தட்டில் நெய் தடவி, மேலே மைதா மாவு தூவி, செய்து வைத்த துண்டுகளை இடைவெளிவிட்டு அடுக்கவும். அடிகனமான வாணலியில் மணலை சூடுபடுத்தி, அதன் மேல் தட்டை வைத்து, இட்லி பானை மூடியால் அழுத்தி மூடவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). 20 நிடத்துக்குப் பிறகு, வாசனை வர ஆரம்பித்ததும் அடுப்பை அணைக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு பிஸ்கட்டுகளை வெளியே எடுக்கவும்.

    * சூப்பரான ஸ்நாக்ஸ் மைதா பட்டர் பிஸ்கட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விடுமுறை தினமான நாளை (ஞாயிற்று கிழமை) நன்கு காரசாரமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட விரும்புவோம். இன்று நாட்டுக்கோழி கிரேவியின் எளிய செய்முறையைக் காண்போம்.
    தேவையான பொருட்கள்:

    நாட்டுக் கோழி - 200 கிராம்
    பெரிய வெங்காயம் - 1/4 கப்
    தக்காளி - 1
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    தண்ணீர் - 3/4 கப்
    உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    தக்காளி - 1  
    பெரிய வெங்காயம் - 1
    இஞ்சி - 1/2 இன்ச்
    பூண்டு - 4 பற்கள்
    சோம்பு - 1/2 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
    பட்டை - 1/4 இன்ச்
    ஏலக்காய் - 2
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    வரமிளகாய் - 1.



    செய்முறை :

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * நாட்டுக்கோழியை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 2-3 முறை நீரில் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

    * மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.

    * ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த, பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக 5 நிமிடம் குறைவான தீயில் வதக்க வேண்டும்.

    * பிறகு அதில் நாட்டுக்கோழியை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, 1 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும்.

    * விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து கொத்தமல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான நாட்டுக்கோழி கிரேவி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விடுமுறை நாட்களில் சற்று வித்தியாசமான முறையில் ஏதேனும் ஒரு ரெசிபியை ட்ரை செய்து சாப்பிட்ட விரும்பினால் சேமியா பொங்கலை செய்து சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 2 கப்
    பயத்தம் பருப்பு - 2 கப்
    மிளகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    இஞ்சி - சிறிது
    ப.மிளகாய் - 2
    முந்திரிப் பருப்பு - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    பெருங்காயத்தூள் - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    நெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    * இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

    * ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

    * பயத்தம் பருப்பை முக்கால் பதம் வரை வேக வைக்கவும்.

    * பிறகு அதோடு வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து, இரண்டையும் நன்கு குழைய வேக வைக்க வேண்டும்.

    * அடுத்து அதனுடன் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

    * அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து நெய் ஊற்றி, மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரிப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, அந்த சேமியா கலவையில் போட்டு, ஒரு முறை கிளறி இறக்க வேண்டும்.

    * இப்போது அருமையான சேமியா பொங்கல் ரெடி!!!

    * இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குடைமிளகாயையும், உருளைக்கிழங்கையும் கொண்டு அற்புதமான ரெசிபி ஒன்றை செய்யலாம். அது தான் ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குடைமிளகாய் - 4
    உருளைக்கிழங்கு - 4
    பச்சை பட்டாணி - 1 கப்
    எண்ணெய் - தேவையான அளவு
    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
    மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * குடை மிளகாயில் காம்பு பக்கத்தை மட்டும் நீக்கி விட்டு அதில் உள்ள விதையை எடுத்து விடவும்.

    * உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து, அத்துடன் சீரகப் பொடி, மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு பிரட்டி விட வேண்டும்.



    * கடைசியாக வேக வைத்த பட்டாணியை சேர்த்து நன்கு, பச்சை வாசனை போக கிளறி விட்டு இறக்க வேண்டும்.

    * குடை மிளகாயின் உள்ளே வதக்கிய உருளைக்கிழங்கு மசாலாவை நிரப்பிக் கொள்ள வேண்டும்.

    * மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

    * எண்ணெயானது சூடானதும், தீயை குறைத்து வாணலியில் குடைமிளகாய்களை அடுக்கி வைத்து மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

    * பின் மூடியை திறந்து, குடைமிளகாயை திருப்பி போட்டு, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். இதேப்போன்று குடைமிளகாய் நன்கு வேகும் வரை திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டும்.

    * குடைமிளகாய் நன்கு வெந்த பின்னர், அதனை இறக்கி பரிமாறினால், சுவையான ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மீன் குழம்பில் தேங்காய் பால் ஊற்றி செய்யும் போது சூப்பராக இருக்கும். இன்று தேங்காய் பால் ஊற்றி மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வஞ்சிரம் மீன் - அரை கிலோ அல்லது துண்டு மீன்
    சின்னவெங்காயம் - 3
    தக்காளி - 2
    சின்னவெங்கா மற்றும் தக்காளி விழுது - ஒரு கப் (ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்)
    பச்சைமிளகாய் - 2
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    வறுத்த வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்
    முதலாவது (கெட்டியான) தேங்காய்ப்பால் - ஒரு கப்
    இரண்டாவது (தண்ணியான) தேங்காய்ப்பால் - ஒரு கப்
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை:

    * கொத்தமல்லி, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி மற்றும் பச்சைமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்துவைத்துள்ள தக்காளி மற்றும் வெங்காய விழுதை இதனுடன் சேர்த்து 2 நிமிடங்களுக்குக் கிளறவும்.

    * அடுத்து அதில் இரண்டாவது தேங்காய்ப்பால், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

    * மிளகாய்த்தூள் வாடை நீங்கியவுடன் மீனைச் சேர்த்து, மீன் வெந்தவுடன் முதல் தேங்காய்ப்பால் மற்றும் வெந்தயத்தூளைச் சேர்த்து, கொதி வருவதற்குள் அடுப்பை அணைத்து, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

    * மணக்கும் மலபார் மீன் குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பருப்பு, தேங்காய் போளி சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இந்த பால் போளி சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று இந்த பால் போளி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா கால் கப்,
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
    சர்க்கரை சேர்க்காத கோவா - கால் கப்,
    சர்க்கரை - கால் கப் + ஒரு டேபிள்ஸ்பூன்,
    மைதா மாவு - முக்கால் கப்,
    கார்ன்ஃப்ளார் - கால் கப்,
    உப்பு - ஒரு சிட்டிகை,
    நெய் - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
    பால் - 7 கப்,
    குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.



    செய்முறை:

    * ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், மைதாமாவு, உப்பு மூன்றையும் போட்டு அதனுடன் தண்ணீர் ஊற்றிப் பிசைந்து, நெய் விட்டு கலந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.

    * பாலை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும்.

    * பால் பாதியாக சுண்டியதும் அதில், ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, குங்குமப்பூவை கலந்து இறக்கி தனியாக வைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் கோவா, முந்திரி, பாதாம், பிஸ்தா, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் எல்லாவற்றை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

    * பிசைந்த மைதாமாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் ஒரு டீஸ்பூன் இந்த பருப்பு கலவையை வைத்து நன்றாக அழுத்தி மூடி வைக்கவும். (எண்ணெயில் பொரிக்கும்போது வெளியில் வராத அளவுக்கு)

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் எல்லா போளிகளையும் பொரித்து எடுக்கவும்.

    * பொரித்த போளிகளை சுண்ட காய்ச்சிய பால் கலவையில் போட்டு ஊற விட்டு பரிமாறவும்.

    * சூப்பரான பால் போளி ரெடி.

    குறிப்பு: பாலில் ஊறி சாப்பிட சுவையாக இருக்கும். சூடாகவும் சாப்பிடலாம். ஜில்லென்றும் பரி மாறலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பன்னீர் பட்டாணி குருமா. இன்று இதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பட்டாணி - அரை கப்
    பன்னீர் - 200 கிராம்
    பெரிய வெங்காயம் - ஒன்று
    தக்காளி - 2
    இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு.

    தாளிக்க :

    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
    கறிவேப்பிலை - சிறிதளவு

    அரைக்க :

    தேங்காய்த்துருவல் - அரை கப்
    முந்திரி - 8.



    செய்முறை :

    * பன்னீரை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    * நறுக்கிய பன்னீர், பச்சைப் பட்டாணி, வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு, குக்கரை மூடி ஒரு விசில் விடவும்.

    * விசில் போனவுடன் மூடியைத் திறந்து அரைத்த தேங்காய் முந்திரி விழுது சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

    * அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, கொதிக்கும் குருமாவில் சேர்த்துக் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * சூப்பரான பன்னீர் பட்டாணி குருமா ரெடி.

    கவனிக்க வேண்டியவை:

    தண்ணீர் அளவு அதிகமாக இருக்கக் கூடாது. பட்டாணி அதிகம் வெந்துவிடக்கூடாது. அதிக நேரம் கொதிக்கக் கூடாது. இதில் தண்ணீர் அளவு அதிகமானால், மட்டும் பொட்டுக்கடலையை அரைத்துச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த பட்டர் சிக்கன் கிரேவி அருமையான சைடிஷ். இன்று இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1 கிலோ
    கெட்டியான தயிர் - 1 கப்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    சிவப்பு தந்தூரி கலர் - 1/2 டீஸ்பூன்
    தக்காளி - 4
    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
    தக்காளி சாஸ் - 4 டேபிள் ஸ்பூன்
    க்ரீம் - 1 கப்
    முந்திரி - சிறிது
    கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    * சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    * கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முந்திரியை பேஸ்ட் செய்து கொள்ளவும்.

    * தயிரில் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு மற்றும் சிவப்பு தந்தூரி கலர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
    * சிக்கனில் கலந்த மசாலாவை ஊற்றி நன்கு பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு மணிநேரம் ஆனப் பின்பு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெய் போட்டு, ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * பிறகு ஒரு அகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தைப் போட்டு வறுத்து, 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    * அடுத்து வெண்ணெயை போட்டு, தட்டு கொண்டு மூடி, தீயை குறைவில் வைத்து தக்காளியை வேக வைக்க வேண்டும்.

    * எண்ணெயானது தனியே பிரியும் போது, அதில் 1 டீஸ்பூன் மிளகாய் தூள், கரம் மசாலா, க்ரீம், உப்பு மற்றும் வறுத்து வைத்துள்ள சிக்கனைப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

    * இறுதியில் அதில் முந்திரி பேஸ்ட் மற்றும் தக்காளி சாஸ் ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து கடைசியாக அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.

    * இப்போது சூப்பரான பட்டர் சிக்கன் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சத்தான மதிய உணவு செய்து கொடுக்க விரும்பினால் இந்த கார்ன் புலாவ் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கப்
    வேகவைத்து உரித்த கார்ன் முத்துக்கள் - அரை கப்
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி விழுது - அரை கப்
    மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
    பிரியாணி மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
    எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
    புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்



    செய்முறை :

    * புதினா, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    * குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யைச் சேர்த்து சூடானதும், வெங்காயத்தை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

    * பிறகு, தக்காளி விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), பிரியாணி மசாலாத்தூள், புதினா, கொத்தமல்லித்தழை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

    * இத்துடன் ஒன்றரை கப் தண்ணீர், எலுமிச்சைச்சாறு, உப்பு, கார்ன் முத்துக்கள் சேர்த்துக் கலக்கவும்.

    * அடுத்து அதில் அரிசியைச் சேர்த்துக் கலக்கி குக்கரை மூடி வெயிட் போடவும்.

    * ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 2 நிமிடம் கழித்து இறக்கி விசில் போனவுடன் மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.

    * சூப்பரான கார்ன் புலாவ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கன் பிரியாணியில் பல்வேறு வகைகள் உள்ளது. அந்த வகையில் இன்று சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    சீரக சம்பா அரிசி - 2 டம்ளர் (அரை கிலோ)
    பெரியவெங்காயம் - 2 + ஒன்று
    தக்காளி - 3
    பட்டை - ஒன்று
    ஏலக்காய் - 2
    கிராம்பு - 2
    அன்னாசிப்பூ - 2
    பச்சை மிளகாய் - 4
    இஞ்சி - பூண்டு விழுது - இரண்டரை டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
    புதினா - ஒரு கைப்பிடி
    தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    தயிர் - அரை கப்
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
    தேங்காய் எண்ணெய் - கால் கப்
    நெய் - கால் கப்
    முந்திரி - 10
    குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
    பால் - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :


    * சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    * வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    * ப.மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    * மிக்ஸியில் துருவிய தேங்காய், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.

    * பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும்.

    * ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, எண்ணெயில் பிரவுன் நிறத்துக்கு வதக்கி எடுத்து தனியாக வைக்கவும்.

    * ஒரு பவுலில் சிக்கன், கால் கப் தயிர், 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    * அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சுடானதும், நீளமாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமிருக்கும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.



    * இத்துடன் பச்சை மிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும்.

    * அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து மீண்டும் பச்சை வாசனை போக வதக்கியதும் மஞ்சள் தூள், சிக்கன் சேர்த்து வதக்கவும்.

    * இத்துடன் கொத்தமல்லித்தழை, புதினா, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து குறைந்த தீயில் சிக்கனை வேகவிடவும்.  தண்ணீர் சேர்க்க வேண்டாம். தயிர் மற்றும் சிக்கனில் உள்ள தண்ணீரே வேக போதுமானது. வெந்ததும் தனியாக எடுத்து ஒரு ப்ளேட்டில் வைக்கவும்.

    * அரிசியை நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரை எடுத்து சுடவைத்துக் கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில்  வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து வதக்கி, அரிசியைச் சேர்த்து லேசாக வதக்கவும்.

    * பிறகு சுடுநீரை ஊற்றி, உப்பு போட்டு முக்கால் பாகம் வெந்ததும் இறக்கிவிடவும்.

    * மீண்டும் அடுப்பில் மற்றொரு வாயகன்ற பெரிய பாத்திரத்தை வைத்து, நெய் ஊற்றி சிக்கன் மசாலாவை சேர்த்துப் பரவலாக்கவும். அதன் மீது வெந்த நெய் சோறு, பிறகு வறுத்த பிரவுன் நிற பெரியவெங்காயம் சிறிதளவு தூவவும்.

    * இப்படி சிக்கன் கலவை, நெய்சோறு, வறுத்த வெங்காயக் கலவை என்கிற விகிதத்தில் ஒன்றன் மீது ஒன்றாகப் பரப்பவும். குங்குமப்பூ ஊறிய பாலை அப்படியே பிரியாணி முழுக்க ஊற்றி, பாத்திரத்தை இறுக்கமாக மூடி, அதன் மேல் கனமான பாத்திரத்தை வைத்து, 5 நிமிடம் தம் போட்டு இறக்கினால், சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி தயார்.

    * சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், புலாவ், பிரியாணி, சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரான, சுவையான செட்டிநாடு சிக்கன் சாப்ஸ் செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 1/2  கிலோ
    எண்ணெய் - தேவையான அளவு
    வெங்காயம் - 3
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 10 பல்
    மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - 1
    தக்காளி - 2
    உப்பு - சுவைக்கேற்ப
    கொத்தமல்லி - சிறிதளவு.

    வறுத்து அரைக்க :

    காய்ந்த மிளகாய் - 5
    கொத்தமல்லி விதை - 2 டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    * கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    * இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * தக்காளியை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    * வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    * அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகுமாறு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன், தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் சிக்கன், மஞ்சள்தூள், அரைத்த மசாலா தூள், சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.

    * சிக்கன் கிரேவி போல் வேண்டுமென்றால் 5 நிமிடங்கள் தீயில் வைத்து கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து பரிமாறவும்.

    * டேஸ்டியான சிக்கன் சாப்ஸ் ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சூப்பரான டிபன் செய்து கொடுக்க விரும்பினால் இந்த முட்டை அடையை செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டைகள் - 2
    கடலைப்பருப்பு - ஒரு கை
    துவரம்பருப்பு -  ஒரு கை
    பாசிப்பருப்பு -  1 ஸ்பூன்
    உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    வற்றல் மிளகாய் - 2
    இஞ்சி விழுது - அரை ஸ்பூன்
    பூண்டு - 4 பற்கள்
    பெரிய வெங்காயம் - 2
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    கொத்தமல்லி - கால் கப்



    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
     
    * பருப்பு வகைகள், மிளகாய் வற்றலை நீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

    * நன்றாக ஊறியதும் அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும்.

    * இந்த முட்டை கலவையை மாவுக்கலவையுடன் சேர்த்து, அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிய சிறிய அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    * சூப்பரான மாலை நேர டிபன் முட்டை அடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×