என் மலர்
பொது மருத்துவம்
- விரால் மீனில் நிறைய சுண்ணாம்புச்சத்து உள்ளது.
- குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்த உதவும் எனவும் கண்டறியப்பட்டு உள்ளது.
கடல் மீன்களைவிட சில நன்னீர் மீன்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அதில், விரால் மீனும் ஒன்று.
இது புரதம் நிறைந்த மீன் வகை ஆகும். உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. குறிப்பாக நீரிழிவு பாதிப்பு இருப்பவர்கள் விரால் மீன் உணவுகளை அவ்வப்போது உண்டு வருவது நல்லது என்று கூறப்படுகிறது.
விரால் மீன் இறைச்சியில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். கர்ப்பிணிகள் விரால் மீன் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கருவில் உள்ள குழந்தையின் கண் பார்வை திறன், மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் என்றும், குழந்தையின் எலும்புகளை வலுப்படுத்த உதவும் எனவும் கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த மீனில் நிறைய சுண்ணாம்புச்சத்து உள்ளது. இதனால், எலும்புகளை வலுவாக்கி, மூட்டு வலி, கால் வலி போன்ற பாதிப்புகளை தணிக்கிறது. இது தவிர, கண் பார்வை கோளாறுகளை தடுக்கும். மூளை செயல்பாட்டை அதிகரித்து, நினைவாற்றலை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்கவும், தசை வளர்ச்சிக்கு உதவும் என்றும் நம்பப்படுகிறது.
விரால் மீன் பொதுவாக பாதுகாப்பான உணவாக கருதப்பட்டாலும், அதிக அளவு உட்கொள்ளும்போது சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். இதனை தேவைக்கு அதிகமாக சாப்பிடும்போது வயிற்று வாயு அல்லது செரிமான கோளாறுகள் ஏற்படலாம். இருப்பினும் இது விரால் மீனுக்கு மட்டுமல்லாமல் மற்ற அனைத்து மீன்களுக்கும் பொருந்தும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் சரியாக வேக வைக்காத விரால் மீன் உணவை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பாக்டீரியா தொற்று ஏற்படலாம்.
- அதிக உப்பு உட்கொள்வது உங்கள் இதயத்தைப் பாதிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
- ரத்தத்தில் உள்ள நீரின் அளவை அதிகரித்து செல்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது.
இந்திய உணவு வகைகளில் உப்பு மிக முக்கியமான ஒன்றாகும். உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற நிலையில் நாம் அதனை அளவுக்கு மீறி சில சமயங்களில் எடுக்கிறோம். அதிகமாக உப்பு சாப்பிடுவது எலும்புகளை பலவீனப்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது உடலில் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. உணவில் அதிக உப்பு உட்கொள்வது உங்கள் சிறுநீரகங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
சிறுநீரகங்கள் சோடியத்தை வடிகட்ட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உப்பு அதிகமாக சேர்த்தால் குளிர்காலத்தில் நமது சருமம் வறண்டு உடலில் உள்ள நீர் சமநிலையை சீர்குலைக்கிறது. இதனால் முகத்தில் சுருக்கங்கள் விரைவாக தோன்றும்.
அதிக உப்பு உட்கொள்வது உங்கள் இதயத்தைப் பாதிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இது ரத்தத்தில் உள்ள நீரின் அளவை அதிகரித்து செல்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே குளிர்காலத்தில் பக்கோடா, சமோசா, சாட் போன்ற வறுத்த உணவுகள் அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- கரையக்கூடிய நார்ச்சத்து நீரில் கரைந்து ஜெல் மாதிரி ஆகி, உடலின் கொழுப்புச் சத்து அளவைக் குறைக்க உதவுகிறது.
- கரையாத நார்ச்சத்து குடலின் இயக்கத்தை விரைவாக்கி மலச்சிக்கலை தடுக்கும்.
நம் உடலின் சரியான செயல்பாட்டிற்கு நார்ச்சத்து மிகவும் முக்கியமானது. பல வகையான நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. நார் பொதுவாக கரையக்கூடிய நார் மற்றும் கரையாத நார் என்று இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது.
இந்த 2 வகைகளிலும் பல ஊட்டச்சத்துகள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் வயிற்றில் இருந்து செரிக்கப்படாமல் உங்கள் பெருங்குடலுக்குச் சென்று வயிற்றை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். அவை பக்கவாதம், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற சில நோய்களைத் தடுக்க உதவுகின்றன. தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் எடையை கட்டுப்படுத்துவதிலும் உதவுகின்றன.
கரையக்கூடிய நார்ச்சத்து நீரில் கரைந்து ஜெல் மாதிரி ஆகி, உடலின் கொழுப்புச் சத்து அளவைக் குறைக்க உதவுகிறது. கரையாத நார்ச்சத்து குடலின் இயக்கத்தை விரைவாக்கி மலச்சிக்கலை தடுக்கும். நார்ச்சத்து உணவுகள் குடலில் நீரை இழுத்து செரிமானத்தை எளிதாக்கும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை குறையும், குடல் சுத்தமாக இருக்கும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கச் செய்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும். கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்புச் சத்து அளவைக் குறைக்கிறது. இதனால் இதய நோய்களின் ஆபத்து குறைகிறது. சில ஆய்வுகள் கூறியபடி நார்ச்சத்து நிறைந்த உணவுகள் குடல் புற்றுநோயைத் தடுக்க உதவுகின்றன என்கின்றனர் டாக்டர்கள்.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரவில் இட்லி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- கொய்யாப்பழம், ஆப்பிள், பப்பாளி இவற்றைச் சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.
உடல் ஆரோக்கியத்துக்கு 3 வேளையும் சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அதில் குறிப்பாக இரவு உணவை மாலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் முடித்துவிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.
முன்னதாகவே சாப்பிடும் பழக்கம் செரிமானத்திற்குப் பெரிதும் உதவுகிறது. எனவே இந்த நேரத்திற்குள் உங்களது இரவு உணவை முடித்துவிட வேண்டியது அவசியம்.
இரவில் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். கோதுமை ரவை கிச்சடி அல்லது இட்லி போன்றவற்றைச் சாப்பிடலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரவில் இட்லி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக கோதுமை ரவை கிச்சடி, சப்பாத்தி, சிறுதானியங்களால் செய்யப்பட்ட அடை போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.
40 வயதைக் கடந்தவர்கள் சிறுதானியங்களை முழுமையாகப் பயன்படுத்தி பொங்கல், உப்புமா அல்லது பிரியாணி வடிவில் சமைத்து உண்பது சிறந்தது. ஆரம்பத்தில் இதுபோன்ற உணவு பழக்கத்தை கொண்டு வரும்போது பசி எடுக்கலாம்.
அவ்வாறு இரவு 10 மணிக்கு மேல் பசி எடுத்தால், கனமான உணவுகளைத் தவிர்த்துவிட்டுப் பழங்களைச் சாப்பிடலாம். குறிப்பாக கொய்யாப்பழம், ஆப்பிள், பப்பாளி இவற்றைச் சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.
இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கின்றனர் டாக்டர்கள்.
- உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அப்படியே மூளைக்கு வாசிப்பு.
- தினமும் சில பக்கங்களையாவது படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வோம்.
புத்தக வாசிப்பு குறித்த சுவாரசியமான 10 தகவல்கள்...
* வெறும் 6 நிமிடங்கள் புத்தகம் படித்தாலே போதும், உங்கள் மன அழுத்தம் 68 சதவீதம் வரை குறையும். இது பாடல் கேட்பது அல்லது நடைபயிற்சி செய்வதை விட வேகமாக மனதை அமைதிப்படுத்துகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
* புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள், படிக்காதவர்களை விட சராசரியாக 2 ஆண்டுகள் அதிகமாக வாழ்கிறார்கள் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வாசிப்பானது மூளையை சுறுசுறுப்பாக வைப்பதுடன், வாழ்நாளையும் அதிகரிக்கிறது.
* பழைய புத்தகங்களில் இருந்து வரும் அந்த தனித்துவமான வாசனைக்கு ஒரு பெயர் இருக்கிறது. அதுதான் 'பிப்லியோஸ்மியா' (Bibliosmia). காகிதம், மை மற்றும் பசை ஆகியவை காலப்போக்கில் சிதைந்து இந்த வாசனையை உருவாக்குகின்றன. இது பலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
* கதைகள் மற்றும் நாவல்களை படிப்பவர்களுக்கு 'எம்பதி' எனப்படும் பச்சாதாபம் அல்லது பிறர் உணர்வுகளை புரிந்துகொள்ளும் திறன் அதிகமாக இருக்கும்.
* உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அப்படியே மூளைக்கு வாசிப்பு. இது மூளையின் இணைப்புகளை வலுப்படுத்துகிறது. தொடர்ந்து படிப்பது, அல்சைமர், டிமென்சியா போன்ற மறதி நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது.
* நாம் எவ்வளவு அதிகமாக படிக்கிறோமோ அவ்வளவு புதிய வார்த்தைகளை தெரிந்துகொள்கிறோம். இது நம் பேச்சு மற்றும் எழுத்துத் திறனை மேம்படுத்தி, தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.
* நிறைய புத்தகங்களை வாங்கி, அவற்றைப் படிக்காமலே அடுக்கி வைக்கும் பழக்கத்துக்குப் பெயர், 'சுண்டோகு' (Tsundoku). இது பல புத்தக பிரியர்களிடம் இருக்கும் ஒரு வித்தியாசமான பழக்கம்.
* தூங்குவதற்கு முன் செல்பேசி, தொலைக்காட்சி என மின்னணு திரைகளை பார்ப்பதை விட, புத்தகம் வாசிப்பது சிறந்த தூக்கத்தை தரும். இது மனதைத் தளர்த்தி, தூக்கத்துக்கான சுழற்சியை மூளைக்கு அறிவுறுத்துகிறது.
* ஒரு நாவலை படித்து முடித்த பிறகும்கூட, சில நாட்களுக்கு மூளையின் நரம்பியல் இணைப்புகளில் மாற்றம் இருக்கும். அதாவது, ஒரு நல்ல புத்தகம் உங்களை உடல் ரீதியாகவும் மாற்றக்கூடியது.
*சராசரியாக ஒரு நபர் நிமிடத்துக்கு 200 முதல் 300 வார்த்தைகளைப் படிப்பார். ஆனால், உலகின் அதிவேக வாசகர்கள் நிமிடத்துக்கு 4 ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் படிக்கும் திறன் கொண்டவர்கள் !
வாசிப்பு என்பது ஒரு தனி உலகத்துக்கான திறவு கோல். அது நமக்கு அறிவை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும், மனஅமைதியையும் அள்ளித் தருகிறது. தினமும் சில பக்கங்களையாவது படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வோம். வாழ்க்கையை இன்னும் அழகாக மாற்றுவோம்.
- போதிய தூக்கம் இல்லாமல் போனால் உடலில் சோர்வு காணப்படும்.
- கல்வியில் இவர்கள் சக மாணவர்களைவிட சிறந்து விளங்கினார்கள்.
நன்றாக தூங்கி எழும்போது உடலில் ஒருவித புத்துணர்வு கிடைக்கும். அதே வேளையில், போதிய தூக்கம் இல்லாமல் போனால் உடலில் சோர்வு காணப்படும்.
இதுசம்பந்தமாக சர்வதேச அமைப்பு ஒன்று இளம் வயது ஆண், பெண்களிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில், தூங்கச்செல்லும் நேரம், விழிக்கும் நேரம் மற்றும் இதய துடிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 3 குழுக்களாக பிரித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு முடிவில், குறைந்தபட்சம் 7 மணி நேரத்திற்கு மேலாக தூங்கிய குழுவில் இருந்தவர்களின் உடல் நிலை மிகவும் சிறப்பாக இருந்ததும், இவர்களின் இதய துடிப்பு மிகவும் சீராக இருந்ததும் தெரியவந்தது.
மேலும், இவர்கள் அன்றாட வாழ்வில் படிப்பு, புதிய சொற்களின் அர்த்தம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளை சுலபமாக எதிர் கொண்டவர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டது. இத்துடன், கல்வியில் இவர்கள் சக மாணவர்களைவிட சிறந்து விளங்கினார்கள்.
எனவே, இளம் வயதினர் போதிய உடல் மற்றும் மன வளர்ச்சியை இயற்கையாக பெற இளம் வயது பருவத்தில் எக்காரணம் கொண்டும் தூக்கத்தை இழக்காமல் போதிய நேரத்தை தூக்கத்திற்கு ஒதுக்கி நன்கு தூங்கி எழ வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
- தேவையில்லாமல் இறுக்கமாக கட்டுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
- சலவை சோப்பு வைத்து கொட்டிய இடத்தை நன்றாக கழுவி, 10-15 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் செய்வது சிறந்தது.
விஷப்பூச்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இன்றைய கால கட்டத்தில், அவற்றிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதே பெரிய சவாலாக இருக்கிறது. அந்தக் காலத்தில் கிராமப்புறங்களில் செடி, கொடிகளுக்கு இடையே மட்டுமே காணப்படும் விஷப்பூச்சிகள் தற்போது நகர்ப்புறங்களுக்குள் படை எடுக்க தொடங்கி விட்டன. இந்தச்சூழலில் திடீரென தேனீ, குளவி போன்றவை கடித்தால் என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக்கூடாது என்பது பற்றி பார்ப்போம்.
செய்யக்கூடாதவை
கடித்த இடத்தில் கீறுதல், விஷத்தை உறிஞ்சுதல், மிகுந்த அழுத்தம் கொடுத்தல், மருந்துகள் தடவுதல், தேவையில்லாமல் இறுக்கமாக கட்டுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
அபாய அறிகுறிகள்
மூச்சுத்திணறல்
முகம், உதடு, நாக்கு அல்லது தொண்டை வீக்கம்
கடும் தலைச்சுற்றல், மயக்கம்
தொடர்ந்து வாந்தி அல்லது வாந்தி உணர்வு
இதயத் துடிப்பு அதிகரித்தல்
உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றுதல்
கடும் அலர்ஜி
விஷப்பூச்சி கொட்டினால் என்ன செய்ய வேண்டும்?
தேனீயோ அல்லது குளவியோ கொட்டினால் முதலில் பதற்றம் கொள்ளாமல் கொட்டிய இடத்தில் இருக்கும் அந்த கொடுக்கை ஏ.டி.எம். கார்டு, ஸ்கேல் வைத்து அழுத்தி தேய்த்து அகற்றவும். விஷப்பூச்சி கொட்டிய இடத்தில் கையை வைத்து அழுத்தவோ, கொடுக்கை பிடுங்கவோ கூடாது.
சலவை சோப்பு வைத்து கொட்டிய இடத்தை நன்றாக கழுவி, 10-15 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் செய்வது சிறந்தது. உடனே மருத்துவமனை செல்வது முக்கியமானது.
- வாரத்திற்கு 4 அல்லது 5 முறை இவ்வாறு செய்தால் போதுமானது.
- அதிகபட்சமாக 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவது போதுமானது.
காலையில் சில நிமிடங்கள் சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவது உடலுக்கும், மன ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும். எலும்பு ஆரோக்கியத்துக்கும் வித்திடும். உடலின் உள் கடிகாரமான சர்க்காடியன் தாளத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இரவில் தூக்கத்தை மேம்படுத்தும். செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும் வழி வகுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும். அதேவேளையில் உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்க எந்த நேரத்தில் சூரிய ஒளியில் நேரம் செலவிடுவது சிறந்தது என்ற குழப்பம் பலருக்கும் எழுவதுண்டு.
உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்க வேண்டுமானால் காலை 10 மணிக்குள் சூரிய ஒளியில் நேரத்தை செலவிட்டால் மட்டும் போதுமானதல்ல. ஏனெனில் வைட்டமின் டி-க்கு தேவையான புறஊதாக்கதிர்கள் பெரும்பாலும் காலை 7 மணிக்கு முன்பு பூமியை அடைவதில்லை. இதனால் அதிகாலை சூரிய ஒளி வைட்டமின் டி உற்பத்திக்கு பயன்படுவதில்லை. அந்த சமயத்தில் சூரிய ஒளியின் வீரியம் அதிகமாகவோ ஊதாக்கதிர்கள் வலுவாகவோ இருக்காது.
காலை நேரத்தை பொறுத்தவரை சூரிய ஒளி சர்க்காடியன் தாளங்களை ஒழுங்குபடுத்த உதவும் என்றாலும், வைட்டமின் டி உற்பத்திக்கு தேவையான புற ஊதாக்கதிர்களின் தீவிரம் இதில் இருப்பதில்லை. வைட்டமின் டி உற்பத்திக்கான சிறந்த நேரம் எது தெரியுமா? காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை. இந்த நேரத்தில் புற ஊதாக்கதிர்கள் அதிகமாகவும், நிழல்கள் குறைவாகவும் இருக்கும்.
அந்த சமயத்தில் கைகள், கால்கள் மற்றும் முகம் என உடல் பாகங்கள் மீது சூரிய ஒளி சுமார் 15 நிமிடங்கள் படரும்படி நேரத்தை செலவிடலாம். வாரத்திற்கு 4 அல்லது 5 முறை இவ்வாறு செய்தால் போதுமானது. அதே நேரம் 15 நிமிடங்களுக்கு அதிகமாக சூரிய ஒளி உடலில் படுவது நல்லதல்ல.
ஏனெனில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சூரிய ஒளியின் தாக்கமும், வெப்பமும் அதிகமாக இருக்கும் என்பதால் வெயிலில் சருமம் சேதம் அடையக்கூடும். அதனை தடுக்க அதிகபட்சமாக 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவது போதுமானது. குளிர் காலத்தில் புற ஊதாக்கதிர்களின் வீரியம் அதிகரிக்க காலதாமதாகும் என்பதால் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைக்குள் சூரிய ஒளியில் நேரத்தை செலவிடலாம். ஆனால் 15 நிமிடங்களை தாண்டக்கூடாது.
- முழு தானியங்கள் ஊற வைத்து சாப்பிடுவதால், ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்பதால் எண்ணெயில் வறுக்க கூடாது.
- முழு தானியங்களை ஊற வைக்காமல் சாப்பிடுவது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.
குயினோவா அல்லது தினை போன்ற முழு தானியங்களை ஊற வைத்து சாப்பிடுவது ஊட்டச்சத்து எதிர்ப்பு பொருட்களை நீக்கி உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச அனுமதிப்பதோடு மென்மையாகவும், ஜீரணிக்க எளிதாகவும் ஆக்கும் என்பதால் சாப்பிடுவதற்கு முன்பு முழு தானியங்களை ஊற வைக்க வேண்டும்.
முழு தானியங்கள் ஊற வைத்து சாப்பிடுவதால், ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்பதால் எண்ணெயில் வறுக்க கூடாது. முழு தானியங்களை ஊற வைக்காமல் சாப்பிடுவது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
நட்ஸ் மற்றும் விதைகள் கொட்டைகள் மற்றும் பாதாம் போன்றவற்றை ஊற வைப்பது அவற்றில் உள்ள பைடிக் அமிலத்தைக் குறைத்து நொதிகளை செயல்படுத்துவதோடு, எளிதாக ஜீரணிக்கச் செய்து, அவற்றின் ஊட்டச்சத்துக்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. ஊற வைத்த பாதாம், பச்சை கொட்டைகள் மற்றும் விதைகளுடன் ஒப்பிடும் போது ஜீரணிக்க எளிதாக இருப்பதால், நட்ஸ் மற்றும் விதைகள் கொட்டைகளை ஊற வைத்தே சாப்பிட்டு பழகுங்கள்.
- தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட மலை பிரதேசங்களில் அதிகம் விளைகிறது.
- ஊறுகாயாக தயாரித்தும் ருசிக்கலாம்.
நெல்லிக்காயில் நூற்றுக்கணக்கான வகைகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று பன்னீர் நெல்லிக்காய், மினி ஆப்பிள் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் இது பெல் ஆப்பிள், வேக்ஸ் ஆப்பிள், ஜாவா ஆப்பிள், ரோஸ் ஆப்பிள், லவ் ஆப்பிள், வாட்டர் ஆப்பிள் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது பில்லாந்தேசி குடும்பத்தை சேர்ந்தது. இதன் விதைகள் கரும்பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கும். தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட மலை பிரதேசங்களில் அதிகம் விளைகிறது.
ஊட்டச்சத்து:
இந்த நெல்லிக்காயில் நார்ச்சத்து வைட்டமின்கள் ஏ, பி1, சி, ஈ மற்றும் கனிமங்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.
நன்மைகள்:
* ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.
* கண் பார்வையை மேம்படுத்தும்.
* சளி இருமலை குறைக்கும்.
* முடி வளர்ச்சிக்கு உதவும்.
* கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
எப்படி சாப்பிடலாம்?
பன்னீர் நெல்லிக்காயை தேன் அல்லது பன்னீருடன் கலந்து சாப்பிடலாம். ஊறுகாயாக தயாரித்தும் ருசிக்கலாம். பன்னீர் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றுவது உடல் எடையை கட்டுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
- இன்றைய வேகமான வாழ்க்கையில், தூக்கமின்மை ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது.
- இவை அனைத்தும் உங்கள் தூக்கம் போதுமான அளவு ஆழமாக இல்லை என்பதைக் குறிக்கிறது.
தூக்கம் என்பது வெறும் ஓய்வு மட்டுமல்ல, அது உடலின் ஒரு அத்தியாவசிய செயல்முறையாகும். தூக்கத்தை ஓய்வு நேரமாக நாம் நினைக்கிறோம், ஆனால் இந்த நேரத்திலும் கூட, உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். தூக்கத்தின் போது, உடல் ஆற்றலைச் சேமிக்கிறது, செல்களை சரிசெய்கிறது, மூளை நினைவுகளை ஒழுங்கமைக்கிறது. அதனால்தான் தூக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
எட்டு மணி நேரம் முழுமையாகத் தூங்கியும், சோர்வாக, தலைச்சுற்றலாக, சோம்பலாக உணர்ந்தால், அது வெறும் தூக்கமின்மை மட்டும் காரணம் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
8 மணி நேரம் தூங்கிய பிறகும் ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?
இன்றைய வேகமான வாழ்க்கையில், தூக்கமின்மை ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பலர் 8 மணிநேரம் முழுமையாக தூங்கிய பிறகும் காலையில் சோர்வாக உணர்கிறார்கள். கண்கள் திறந்தாலும், மனம் கனமாகவே இருக்கும், உடல் சோம்பலாகவே இருக்கும், நாளின் தொடக்கமே பாரமாகத் தெரிகிறது. பெரும்பாலும் மக்கள் இதை மன அழுத்தம் அல்லது வேலை அழுத்தம் என கருதுகிறார்கள். ஆனால் உண்மையான காரணம் வேறு ஒன்று. இதற்கு மிகப்பெரிய காரணம் தூக்கக் கோளாறு. இதன் பொருள் நீங்கள் இரவில் பல முறை எழுந்தாலும், அதை நீங்கள் உணரவில்லை. இதன் காரணமாக, தூக்கம் முழுமையாகத் தெரிகிறது, ஆனால் உண்மையில் அதன் தரம் மோசமாக உள்ளது.
மோசமான தூக்கத்தின் அறிகுறிகள்
தூக்கம் மோசமாக இருப்பதற்கான சில அறிகுறிகள் சோர்வாக எழுந்திருத்தல், பகலில் மூளை மூடுபனி, மதியம் திடீரென சக்தி குறைந்து போதல், சாதாரணமாக உணர காஃபின் தேவைப்படுதல் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் உங்கள் தூக்கம் போதுமான அளவு ஆழமாக இல்லை என்பதைக் குறிக்கிறது.
தூக்கத்தைக் கெடுக்கும் பழக்கங்கள்
இரவு நேர காஃபின், மது, கனமான உணவு மற்றும் படுக்கையில் உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்துதல் ஆகியவை தூக்கத்தின் மிகப்பெரிய எதிரிகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பிரகாசமான விளக்குகள் மற்றும் ஸ்க்ரோலிங் ஆகியவை மூளையை தொடர்ந்து சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றன, ஆழ்ந்த தூக்கத்தைத் தடுக்கின்றன.
இரவில் தாமதமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு கனமான இரவு உணவு செரிமானத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இது உடல் முழுமையாக ஓய்வெடுப்பதைத் தடுக்கிறது, இதனால் அடிக்கடி தூக்கக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக, காலையில் நீங்கள் சோர்வாகவும் சோம்பலாகவும் உணர்கிறீர்கள்.
சிறந்த தூக்கத்திற்கு மருத்துவரின் ஆலோசனை
படுக்கைக்கு 8 மணி நேரத்திற்கு முன்பு காஃபின் பயன்பாட்டைக் குறைத்தல், படுக்கைக்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவு உட்கொள்வது, மது அருந்துவதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் படுக்கையறையை குளிர்ச்சியாகவும் இருட்டாகவும் வைத்திருப்பது ஆகியவை அடங்கும்.
தொலைபேசியிலிருந்து தூரம் அவசியம்.
உங்கள் தொலைபேசியை படுக்கைக்கு எடுத்துச் செல்வது தூக்கத்தின் தரத்திற்கு மிகப்பெரிய தீங்குகளில் ஒன்றாகும். திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளி தூக்கத்திற்கு அவசியமான மெலடோனின் என்ற ஹார்மோனை அடக்குகிறது.
மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?
நல்ல பழக்கவழக்கங்கள் இருந்தபோதிலும் சோர்வு தொடர்ந்தால், அது தூக்கத்தில் மூச்சுத்திணறல், ஓய்வற்ற கால் நோய்க்குறி, மன அழுத்தம், மருந்துகள் அல்லது இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மேலும் குறிப்பிட்ட தகவலுக்கு நீங்கள் மருத்துவரை அணுகலாம்.
- இத்தாலிய வார்த்தையான புரோக்கோலோவில் இருந்து இதற்கு பெயர் சூட்டப்பட்டது.
- புரோக்கோலி தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
பூங்கொத்து வடிவில் காட்சியளிக்கும் புரோக்கோலி மத்திய தரைக்கடல் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக அறியப்படுகிறது.
இத்தாலிய வார்த்தையான புரோக்கோலோவில் இருந்து இதற்கு பெயர் சூட்டப்பட்டது. தோற்றத்தில் காலிபிளவரை ஒத்திருக்கும். பூவாக மலரும் பகுதி பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். புரோக்கோலி குளிர் தட்பவெப்பநிலையில் வளரக்கூடியது. அதனால் கோடை காலத்தில் வளராது. இதை அன்றாட உணவில் சேர்த்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகள் வலுப்பெறும். தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
புற்றுநோய் ஆபத்தையும் குறைக்கும். இதில் வைட்டமின்கள் சி. கே. பி9 மற்றும் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் என எண்ணற்ற ஊட்டச்சத்துகள் காணப்படுகிறது. இதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கும்.






