என் மலர்
முன்னோட்டம்




வில் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் படம் ‘ஆருத்ரா’. இதில் கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். மும்பை மாடல் அழகி திஷிதா, கொல்கத்தாவை சேர்ந்த மோகல், ஐதராபாத்தை சேர்ந்த சோனி ஆகியோர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். ஒளிப்பதிவு- பி.எல். சஞ்சய், இசை- வித்யாசாகர், எடிட்டிங்- ஷான் லோகேஷ், கலை-ராம்பிரசாத், ஸ்டண்ட்-கணேஷ், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்- பா.விஜய்.
படம் பற்றி அவரிடம் கேட்ட போது....
‘‘ஸ்ட்ராபெரி’ படத்தை தொடர்ந்து எனது இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஆருத்ரா’. நான், தொன்மையான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவன ஊழியராக இதில் நடித்திருக்கிறேன். எனது தந்தையாக எஸ்.ஏ. சந்திர சேகரன் நடிக்கிறார். கே.பாக்யராஜும், மொட்டை ராஜேந்திரனும் துப்பறியும் நிபுணர்களாக நடித்திருக்கிறார்கள்.
இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க வேண்டும்? என்ற முக்கிய செய்தியை சொல்லி இருக்கிறோம்.
‘ஆருத்ரா’ பட டீசரை புத்தாண்டு தினத்தில் துபாயில் வெளியிடுகிறோம். பொங்கலுக்கு பிறகு ‘ஆருத்ரா’ படத்தை திரையிட திட்டமிட்டுள்ளோம். இதை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறார்கள்’’ என்றார்.

ஜும் இன்எஸ்.பிலிம் பேக்டரி தயாரிக்கும் படம் ‘கருவேலம் பூக்கள்’. இதில் நாயகனாக தூயவன், நாயகியாக சவுந்தர்யாராய் அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் பூவிதா, யுவராணி, நெல்லை சிவா, அலெக்ஸ், வீட்டு ராஜா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு- நேமம் வி.சிவானந்தம், டி.மகிபாலன், இசை-சரண் பிரகாஷ், எடிட்டிங்- ஆர்.டி. அண்ணாதுரை, ஸ்டண்ட்- தவசிராஜ், நடனம்-பவர்சிவா, பாடல்கள்- புலவர் அன்பழகன், தயாரிப்பு -டி.ஏ. ஜவகர் தாசன், இயக்கம்- திரைப்பட கல்லூரி மாணவர் டி.ஏ.வினோபா. படம் பற்றி கூறிய இயக்குனர்....
“மது பழக்கத்திற்கு அடிமையான ஒருவனால் குடும்ப வாழ்க்கையே திசைமாறி செல்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் சமுதாய புரட்சியை தோற்றுவிக்கிறாள். இதன் விளைவுகளை பின்னணியாகக் கொண்டு ஜனரஞ்சகமாக உருவாக்கப்படும் படம் ‘கருவேலம் பூக்கள்’. இது உண்மை சம்பவத்தை மையக்கருவாக கொண்டு உருவாகிறது” என்றார்.
புலவர் ச.அன்பழகன் எழுத்தில் கானாபாலா பாடிய ‘அக்கக்கா...அக்கக்கா, உன் அப்பாட்மண்டு எங்கக்கா’ என தொடங்கும் கிளு கிளுப்பான பாடல் ‘கருவேலம் பூக்கள்’ படத்தில் இடம் பெற்றுள்ளது. ஏலகிரி, பகுதியில் சமீபத்தில் இந்த பாடல் காட்சி படமானது. 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்று ஆடிப் பாடுவதாக இந்த காட்சி அமைக்கப்பட்டுள்ளது.










