தமிழ்நாடு செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்தது- தலைவர்கள், வேட்பாளர்களின் தீவிர பிரசாரம் தொடங்கியது

Published On 2024-03-23 11:31 IST   |   Update On 2024-03-23 11:31:00 IST
  • அண்ணாமலை கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகி வருகிறார்.
  • நாளை மாலை நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.

சென்னை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. வருகிற 27-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

இதனால் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

நாளை மறுநாள் முதல் அடுத்த 3 நாட்களும் முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர்கள் அனைவரும் வருகிற 25-ந்தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்கிறார்கள்.

பிரசாரத்துக்கு இன்னும் 25 நாட்களே இருப்பதால் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தையும் தொடங்கி உள்ளனர். தங்களது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வேட்பாளர்கள் முக்கிய பிரமுகர்களை சந்தித்தும் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் திருச்சி சிறுகனேரியில் தேர்தல் பிரசாரத்தை நேற்று மாலை தொடங்கினார். அங்கு நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், திருச்சி தொகுதியில் போட்டியிடும் துரை வைகோ, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு ஆகியோரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

முதல்நாள் பிரசாரத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவே தஞ்சாவூருக்கு சென்ற மு.க.ஸ்டாலின் இன்று காலையில் பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது 2-வது நாள் பிரசாரத்தை மேற்கொண்டார்.


பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தஞ்சாவூரில் இன்று மாலை நடைபெறும் 2-வது நாள் பிரசார பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை இன்று மாலை தொடங்குகிறார்.

விருதுநகர் வடக்கு மாவட்டம் காரியாபட்டி பஸ் நிலையம் அருகே பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசும் உதயநிதி ஸ்டாலின் வருகிற 27-ந்தேதி வரை தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பொதுக்கூட்டங்களில் பேசி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் உள்ளிட்டோரும் தங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நாளை (24-ந்தேதி) தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். சேலம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள கரிய வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 9 மணி அளவில் சாமி தரிசனம் செய்யும் எடப்பாடி பழனிசாமி பின்னர் திறந்த வேனில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

ஒவ்வொரு தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் தான் தனது பிரசாரத்தை தொடங்குவார். அதே போல் இந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க உள்ளார். பின்னர் சேலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்.

திருச்சியில் நவலூர் குட்டப்பட்டு என்ற இடத்தில் நாளை மாலை நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.

கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும் எடப்பாடி பழனிசாமியுடன் ஒரே மேடையில் பங்கேற்று தங்களது பிரசாரத்தை தொடங்குகிறார்கள்.

பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகி வருகிறார். அவரது சுற்றுப்பயண விவரங்கள் தயாராகி வருகிறது. பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் தங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.

இதன் மூலம் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தலைவர்கள், வேட்பாளர்கள் ஓட்டு வேட்டையால் பாராளுமன்ற தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

Tags:    

Similar News