செய்திகள்
டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் ராகுல் பிரதமராக ஆதரவு - கெஜ்ரிவால்
டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கத் தயார் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #ArvindKejriwal #RahulGandhi
புதுடெல்லி:
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது கெஜ்ரிவாலின் கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்போதைய பாராளுமன்ற தேர்தலிலும் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில் இந்த விவகாரம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கத் தயார் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதாக இருந்தால் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க ஆதரவு அளிப்போம். எனக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. யார் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிக்க தயாராகவே உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி நிதின் கட்கரி பிரதமரானால் ஆதரிக்க தயார் என ஏற்கனவே கெஜ்ரிவால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #ArvindKejriwal #RahulGandhi