search icon
என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால்-சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துகின்றனர்.
    • வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களைச் சரியாகவும், முழுமையாகவும், தெரிந்து கொள்ள வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்விப் பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 'டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்' வேலை, அதிக சம்பளம் என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால்-சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துகின்றனர்.

    அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து தகவல் பெறப்படுகிறது. எனவே வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களைச் சரியாகவும், முழுமையாகவும், தெரிந்து கொள்ள வேண்டும்.

    அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிடில், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை அல்லது குடி பெயர்வோர் பாதுகாப்பு அலுவலர், சென்னை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டும், ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்குச் செல்லும் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும், வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் விவரங்களை www.amigrate.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் சென்னை குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண் 90421 49222 மூலமாகவும் poechennai1 @mea.gov.in, poechennai2@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் இதுதொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறலாம். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் அயலகத் தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 18003093793, 8069 009901, 80690 09900 (மிஸ்டு கால் நம்பர்) ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சித்திரை மாத பிரமோற்சவம் ஆதிகேசவ பெருமாளுக்கு கடந்த 23-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கடந்த 29-ந்தேதி ஆதிகேசவ பெருமாள் திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் பாஷிய காரா சாமி (ராமானுஜர்) கோவில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலில் ஆதிகேசவ பெருமாளுக்கு என்னென்ன உற்சவங்கள் நடைபெறுகிறதோ அதே போல் ராமானுஜருக்கும் நடைபெறுவது வழக்கம்.

    சித்திரை மாத விழாவில் ஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாட்கள் உற்சவமும் ராமானுஜருக்கு அவதார விழா என்று 10 நாட்கள் உற்சவமும் தனித்தனியாக நடைபெறும். இந்நிலையில் சித்திரை மாத பிரமோற்சவம் ஆதிகேசவ பெருமாளுக்கு கடந்த 23-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10 நாள் விழாவில் சிம்ம வாகனம், கருட சேவை, சேஷ வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனத்தில் பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 29-ந்தேதி ஆதிகேசவ பெருமாள் திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இந்த நிலையில் இன்று காலை ராமானுஜர் 1007-வது அவதார உற்சவத்தில் முக்கிய விழாவான திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீராமானுஜர் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பி சாமியை வழிபட்டபடி ஊர்வலமாக சென்றனர்.

    • பட்டு ஜரிகை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு காரணமாக, பட்டுச்சேலைகளின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது.
    • வழக்கமாக 2 அல்லது 3 ஆண்டுகளைக் கடந்த பட்டுச்சேலைகள் 65 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள் உலகப்புகழ் பெற்றது. இங்குள்ள பட்டுச்சேலைகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்கப்படுகின்றன. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து பட்டுச்சேலைகளை வாங்கி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை விற்பனை குறைந்து உள்ளது. தற்போது, பட்டுச்சேலை விற்பனையில் தொடர்ந்து ஏற்படும் மந்தம் காரணமாக, பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் திணறி வருகின்றன. கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கங்களில் விற்பனை குறைந்ததால் சுமார் ரூ.110 கோடி அளவிற்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டுச்சேலைகள் தேக்கமடைந்துள்ளதாக கைத்தறி சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களிலும் ஆயிரக்கணக்கான பட்டுச்சேலைகள் விற்பனை ஆகாமல் குவிந்து கிடக்கின்றன.

    பட்டு ஜரிகை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு காரணமாக, பட்டுச்சேலைகளின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது. விலை அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுவதால் அதன் விற்பனை பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறை, மற்றும் போலி பட்டுகள் விற்பனையும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

    மேலும் விற்பனை மந்தம் காரணமாக பட்டுச்சேலை உற்பத்தியும் காஞ்சிபுரத்தில் குறைக்கப்பட்டு உள்ளது. மூன்று சேலைகளை ஒரு மாதத்தில் நெய்ய வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், தற்போது 2 மாதங்களுக்கு ஒருமுறை தான் பணி வழங்கப்படுவதாக நெசவாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    வழக்கமாக 2 அல்லது 3 ஆண்டுகளைக் கடந்த பட்டுச்சேலைகள் 65 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும். தற்போது அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும், ஆயிரக்கணக்கான பட்டுச்சேலைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து உள்ளதால், அவற்றை தள்ளுபடியில் விற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே கூட்டுறவு சங்கங்களில் விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கும் பட்டுச்சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கைத்தறி சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து கைத்தறித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், ஆண்டுதோறும் பட்டுச்சேலைகளை கொள்முதல் செய்து வருகிறது. அடிக்கடி பட்டுச்சேலை கண்காட்சி நடத்தி விற்பனை செய்கிறோம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், ஊழியர்களுக்கு பரிசுப்பொருள் வழங்கும்போது, கைகளால் நெய்யப்பட்ட பட்டு சேலைகள், கைத்தறி பொருட்களை வாங்கி வழங்கும்படி தொழிற்சாலைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ஜி விஸ்வநாதன் கூறும்போது, தங்கம், வெள்ளி விலைவாசி உயர்வின் காரணமாக பட்டுச்சேலை உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் ஜரிகை விலை உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக ரூ.30 ஆயிரம் விற்க வேண்டிய ஒரு பட்டுச்சேலையின் விலை ரூ.50 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. மேலும் கடும் வெயில் மற்றும் பாராளுமன்ற தேர்தல் காரணமாக பட்டுச்சேலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    முக்கியமாக காஞ்சிபுரத்தில் போலி பட்டு சங்கங்கள் அதிகமாக தொடங்கப்பட்டுள்ளன. அரசு சங்கங்கள் பெயர் பலகை போலவே போலி சங்கங்கள் பெயர் மற்றும் பட்டுச்சேலை கொடுப்பதற்காக அட்டைப்பெட்டி, பை ஆகியவை ஒரிஜினல் சங்கங்கள் போலவே தயாரித்து வாடிக்கையாளர்களை மிகப்பெரிய அளவில் ஏமாற்றுகிறார்கள்.

    இதுகுறித்து அரசு பட்டு கூட்டுறவு சங்கங்களின் சார்பில் பலமுறை புகார்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டுச்சேலைகள் தேக்கம் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக புதிய சேலைகளை நெய்வதற்கு நெசவாளர்களுக்கு தொழில் சரிவர கொடுக்க முடியவில்லை. காரணம் ஏற்கனவே பல ரக சேலைகள் சொசைட்டிகளில் தேங்கியுள்ள காரணத்தினால் புதிதாக தொழில் கொடுக்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக நெசவாளர்கள் நெசவுத்தொழிலை விட்டுவிட்டு பல்வேறு வேலைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

    • மாலையில் மாடுகள் திரும்பியபோது வரும் வழியில் ஒன்றன் பின் ஒன்றாக மொத்தம் 9 பசு மாடுகள் மர்மமான முறையில் இறந்து விழுந்தன.
    • மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் வழியில் நெற்பயிர்கள், நெல்குவியல்கள் உள்ளன.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் அடுத்த தென்னேரி கிராமத்தில் ஏராளமானோர் மாடுகள் வளர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் வழக்கம் போல் ஏராளமான மாடுகள் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்றன. மாலையில் மாடுகள் திரும்பியபோது வரும் வழியில் ஒன்றன் பின் ஒன்றாக மொத்தம் 9 பசு மாடுகள் மர்மமான முறையில் இறந்து விழுந்தன. மேலும் 4 மாடுகள் மயக்கமடைந்து உள்ளன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் வழியில் நெற்பயிர்கள், நெல்குவியல்கள் உள்ளன. அதை மாடுகள் சேதம் செய்ததால் மாடுகளுக்கு ஏதேனும் பூச்சி மருந்து கலந்த உணவை அளித்திருக்கலாம் என்றனர்.

    இதுபற்றி அறிந்ததும் வாலாஜாபாத் வட்டாட்சியர் சதீஷ் , வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் விரைந்து வந்தனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் மாடுகள் இறப்புக்கான காரணம் குறித்து பரிசோதனை செய்தனர்.

    • தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் காஞ்சி பட்டு சேலைகள் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • ஒரே ரகத்தில் நெய்யப்பட்ட சேலை கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

    காஞ்சிபுரம்:

    கைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் காஞ்சி பட்டு சேலைகள் உலகப் புகழ் பெற்றவையாக திகழ்கின்றன. மத்திய அரசின் புவிசார் குறியீட்டை பெற்றுள்ள காஞ்சி பட்டு சேலைகள் சிறப்பு அம்சங்களை கொண்டவையாக திகழ்கின்றன.

    தங்கம், வெள்ளி ஜரிகைகளை கோர்த்து செய்யப்படுவதால் 25 ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சி பட்டு சேலைகள் தனித்துவம் பெற்றவையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் காஞ்சி பட்டு சேலைகளின் வியாபாரமும் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகவே இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ரூ.300 கோடி அளவுக்கு பட்டு சேலைகள் விற்பனையாகின்றன.

    தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் காஞ்சி பட்டு சேலைகள் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் ஏரிக்கரையில் உள்ள தமிழ்நாடு ஜரிகை ஆலையில் உற்பத்தியாகும் ஜரிகையில் 0.5 சதவீதம் தங்கம், 40 சதவீதம் வெள்ளி, 35.5 சதவீதம் காப்பர், 24 சதவீதம் பட்டு இழை ஆகியவை சேர்க்கப்படும்.

    ஒரு பாக்கெட்டில் 242 கிராம் அளவுக்கு ஜரிகை இருக்கும். 5 கட்டைகளில் சுற்றப்பட்டுள்ள இந்த ஜரிகையை ஒரு மார்க் என்று அழைப்பார்கள். இந்த ஒரு மார்க் ஜரிகை ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் தங்கம்-1.210 கிராம், வெள்ளி-96.8 கிராம், காப்பர்-85.91 கிராம், சில்க்-58.08 கிராம் சேர்க்கப்பட்டிருக்கும்.

    தங்கம், வெள்ளி விலை உயர்வால் பட்டு சேலைகள் விலையை 30 சதவீதம் அளவுக்கு உற்பத்தியாளர்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளனர். காஞ்சி பட்டு சேலைகள் ரூ.10 ஆயிரத்தில் இருந்து 2 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தங்கம் மற்றும் வெள்ளி விலையேற்றம் காரணமாக ஜரிகை விலை உயர்ந்து பட்டு சேலைகளின் விலையும் அதிகரிப்பதால் விற்பனை பாதிக்கப்படும் என்று பட்டு சேலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    விற்பனை பாதிக்கப்படும் பட்சத்தில் பட்டு சேலைகள் தேக்கம் அதிகமாகி உற்பத்தியை குறைக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    இதனால் நெசவாளர்களுக்கு எப்போதும் போல வேலையை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஒரு மார்க் ஜரிகை ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.20 ஆயிரமாக விலை உயர்ந்து உள்ளது. ஒரே ரகத்தில் நெய்யப்பட்ட சேலை கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

    தேர்தல் காரணமாக கடந்த 1½ மாதமாக பட்டு சேலைகள் வியாபாரம் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தங்கம், வெள்ளி விலையேற்றமும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையாகி வந்த பட்டு சேலை ரூ.15 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும், இப்படி அனைத்து ரக சேலைகளின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.

    • கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கும்பாபிஷேகதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செல்லபெருமாள் நகரில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ செல்வ முத்துக்குமார கோவில் திருப்பணி முடிந்து இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கணபதி யாகம், கோ பூஜை, லஷ்மி ஹோமம், நவகரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை யாகசாலை பூஜைகள், விக்னேஷ்வர பூஜை, பிரம்மசுத்தி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்ட்டது. பின்னர் கைலாய இசை வாசிக்கப்பட்டு கோவில் கோபுரத்தில் அமைக்கப்பட்ட கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

     ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா என கோஷம் எழுப்பி சாமியை வணங்கினர். கும்பாபிஷேகதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • வாக்குச்சாவடியின் முன்பகுதியில் வாழை மர தோரணம், இளநீர் மற்றும் பழங்கள், காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு பசுமையாக காணப்பட்டது.
    • அதிகாலை முதலே ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து மரக்கன்றுகளை வாங்கிச்சென்றனர்.

    காஞ்சிபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 1932 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 372 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டு கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளது.

    மாவட்டம் முழுவதும் 670 போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 350 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் தேர்தல் பணியில் 800 அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கம் பகுதியில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடியின் முன்பகுதியில் வாழை மர தோரணம், இளநீர் மற்றும் பழங்கள், காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு பசுமையாக காணப்பட்டது.

    மேலும் இந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்ட அனைவருக்கும் மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது. இதனால் அதிகாலை முதலே ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து மரக்கன்றுகளை வாங்கிச்சென்றனர்.

    திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, மாதவரம், பூந்தமல்லி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தலைமையில் 35 பறக்கும் படைகள், 22 அதிவிரைவு படைகள் அமைக்கப்பட்டு 1065 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், 268 மத்திய பாதுகாப்பு படையினர், 90 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 462 முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதே போல் பொன்னேரி, ஆவடி, மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இணையதளம் வழியாக கண்காணிக்கப்படுகிறது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2825 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

    • திமுக-வுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பலை வீசுவதாக பிரதமர் மோடி நேற்று பேசியுள்ளார்.
    • இதைப் பார்த்து சிரிப்பதா அல்லது அவரின் பகல் கனவைப் பார்த்து பரிதாபப்படுவதா என தெரியவில்லை.

    காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் படப்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    திமுக-வுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பலை வீசுவதாக பிரதமர் மோடி நேற்று பேசியுள்ளார். இதைப் பார்த்து சிரிப்பதா அல்லது அவரின் பகல் கனவைப் பார்த்து பரிதாபப்படுவதா என தெரியவில்லை. தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர்.

    முதலமைச்சராக இருந்த மோடிக்கு பிரதமரானதும் மாநிலங்களைக் கண்டாலே பிடிக்கவில்லை. மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே போராட்டமாக இருக்கிறது. மிகவும் மலிவான பிரிவினைவாத அரசியல் செய்து வருகிறார்.

    ஜவுளி ஏற்றுமதியில் நம்பர் 1, ரெடிமேட் ஏற்றுமதியில் நம்பர் 1, தோல் பொருள் ஏற்றுமதியில் நம்பர் 1, ஏற்றுமதி ஆயத்த நிலைக் குறியீட்டில் நம்பர் 1, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் நம்பர் 1, கர்ப்பிணி சுகாதாரக் குறியீட்டில் நம்பர் 1, மகப்பேறுக்கு பிந்தைய கவனிப்பில் நம்பர் 1, 50 சிறப்பு பொருளாதார மண்டலங்களுடன் நாட்டிலேயே நம்பர் 1

    பழனிசாமி அவர்களே இதெல்லாமே நாங்கள் சொன்னவை அல்ல, ஒன்றிய அரசின் புள்ளி விபரங்கள். அதிமுக ஆட்சியில் தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசையில் 14-வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை, திமுக ஆட்சியமைந்ததும் மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றியுள்ளோம்.

    "நான் ஒன்றிய அரசிடம் விருது வாங்கியுள்ளேன். நீங்கள் ஏதாவது விருது வாங்கினீர்களா? என எடப்பாடி பழனிசாமி நம்மிடம் கேட்கிறார். 'நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்' என்ற படத்திற்கேற்ப, பாஜக அரசு உங்களுக்கு விருது வழங்கியிருக்கும்

    பழனிசாமி அவர்களே நாங்கள் மக்களிடம் விருது வாங்கியுள்ளோம். அது எல்லாவற்றையும் விட பெரியது. இன்னொரு விருது, ஜூன் 4ம்தேதி 40-க்கு 40 என்ற விருது கிடைக்கும் பழனிசாமி அவர்களே Wait and See..!"

    எல்லோருக்கும் எல்லாம், அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்படாத, நான் முதல்வன் திட்டத்தால் ஏராளமான மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். பல ஆயிரம் மாணவர்களின் கனவுகள், நிஜமாக மாறியுள்ளது.

    இன்னொரு தேர்தல் வாக்குறுதி அல்லாத திட்டம்தான் காலை உணவுத் திட்டம். சுமார் 16 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான் விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிற அளவுக்கு உயர்ந்துள்ளது.
    • பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் கைத்தறி பற்றி குறிப்பிடவில்லை. நெசவாளர் பற்றி கவலைப்படாத ஒரு அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) மீண்டும் காஞ்சிபுரம் வந்து அ.தி.மு.க. வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.

    திறந்த வேனில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று அண்ணா சொன்ன அந்த பொன்மொழியை அ.தி.மு.க. தொடர்ந்து கடைபிடித்து அதை நிறைவேற்றுவதற்கு பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.

    இன்று ஸ்டாலின் போற பக்கமெல்லாம் பேசுகிறார். அ.தி.மு.க. 3 ஆக போய் விட்டது 4 ஆக போய் விட்டது என்கிறார். மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்துக்கு வந்து பார்க்கட்டும் அண்ணா பிறந்த மண், அண்ணா கண்ட கனவை நினைவாக்கும் கட்சி அ.தி.மு.க. காஞ்சிபுரமே குலுங்குகிற அளவுக்கு இன்று மக்கள் வெள்ளம். அ.தி.மு.க.வை பிரிக்க பார்க்கிறீர்கள். அது ஒரு போதும் நடக்காது. உங்களது எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது.

    அண்ணா கண்ட கனவை நிச்சயமாக நிறைவேற்றியே தீருவோம். அது எங்களது இரு பெரும் தலைவர்களுடைய கொள்கை, லட்சியம். அதை நிறைவேற்றுவது தான் எங்களை போல் உள்ள தொண்டனுக்கு பெருமை.

    இந்த மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம். விவசாயிகள், நெசவாளர்கள் நிறைந்த மாவட்டம். உழைப்பாளர்கள் நிறைந்த இந்த பூமியிலே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    விவசாயம், நெசவுத்தொழில் இரண்டு தொழிலும் பிரதான தொழிலாக உள்ள காஞ்சி மாவட்டம் மென்மேலும் வளருவதற்கு நம்முடைய வெற்றி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் வெற்றி பெற வேண்டும்.

    இன்றைக்கு எத்தனையோ பேர் வருவார்கள், போவார்கள். ஆனால் மக்களுக்கு சேவை செய்வதிலே அ.தி.மு.க.தான் முன்னிலையில் இருக்கும். இந்த மண்ணிலே எத்தனையோ தலைவர்கள் பிறக்கின்றார்கள். வாழ்கிறார்கள். இறக்கின்றார்கள்.

    இடைப்பட்ட காலத்திலே மக்களுக்கு நன்மை செய்கின்ற தலைவர்கள்தான் மக்கள் உள்ளத்திலே வாழ்வார்கள். அப்படி நமது முப்பெரும் தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா இந்த மண்ணிலே மறைந்தாலும் மக்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள். இன்னும் சில தலைவர்கள் வீட்டு மக்களுக்காக வாழ்கிற தலைவர்கள். யார் என்று உங்களுக்கு தெரியும்.

    இன்றைக்கு இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்று சொல்கிறார்கள். அது அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் இன்று இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. எனவே அ.தி.மு.க. ஆட்சி தான் இதற்கு காரணம்.

    ஏரிகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் மணிமங்கலத்தில் நான் குடிமராமத்து திட்டத்தை தொடங்கி வைத்தேன். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் பொதுப்பணித்துறையில் இருக்கிறது. அதில் சுமார் 6,211 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு குடிமராமத்து திட்டத்தில் கொண்டு வந்து முழுக்க விவசாயிகள் பங்களிப்போடு திட்டத்தை நிறைவேற்றினோம். இதற்கு மட்டும் சுமார் ரூ.1,240 கோடி நிதி ஒதுக்கினோம்.

    இந்த குடிமராமத்து திட்டம் மூலமாக ஏரிகள் ஆழமாக்கப்பட்டது. மழை நீர் முழுவதும் சேமித்து வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. குடிநீருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

    இந்த அற்புதமான திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது.

    இங்கு 40 வருடத்திற்கு ஒருமுறை அத்திவரதர் மக்களுக்கு அருள் புரிந்தார். அ.தி.மு.க. ஆட்சியில்தான் அத்திவரதர் எழுந்தருளி மக்களுக்கு காட்சி அளித்தார். அந்த விழாவில் 60 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த காஞ்சிபுரம் நகரமே சிறப்பு பெற்றது.

    அப்படி அத்திவரதரை தரிசனம் செய்ய பல லட்சம் பேர் வந்து குழுமி பத்திரமாக வீடு திரும்பினாார்கள். அந்த அளவுக்கு அ.தி.மு.க. ஆட்சி நிர்வாக திறமை பிரதிபலித்தது.

    இந்த பகுதியில் கைத்தறி, விசைத்தறி இரண்டு தொழிலும் நலிவடைந்துள்ளது. இந்த தொழிலை நம்பிதான் இப்பகுதி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. கைத்தறி நெசவு படிப்படியாக சரிந்து விட்டது. விசைத்தறி அதோடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சி விரைவில் மலரும். நமது வெற்றி வேட்பாளர் ராஜசேகர் வெற்றி பெற்று இந்த தொழில் சிறக்க பாராளுமன்றத்திலே குரல் கொடுப்பார்.

    பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் கைத்தறி பற்றி குறிப்பிடவில்லை. நெசவாளர் பற்றி கவலைப்படாத ஒரு அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருக்கிறது.

    ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் இந்த கைத்தறி நெசவாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. கைத்தறி நெசவாளர்களை பாதுகாத்தோம். கைத்தறி நெசவு தொழில் அ.தி.மு.க. ஆட்சியில்தான் பாதுகாக்கப்பட்டது.

    காஞ்சி என்று சொன்னாலே பட்டுதான் நினைவுக்கு வரும். பட்டு விற்பனைக்கு பெயர் பெற்ற நகரம் பட்டு நெசவு இங்குதான் அதிகமாக உள்ளது.

    இந்த தொழில்கள் சிறக்க வேண்டும் என்றால் அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மத்திய-மாநில அரசுகள் இந்த மக்களுக்கு தேவையான திட்டங்களை எதுவும் இதுவரை செய்யவில்லை.

    இன்று கடுமையான மின் கட்டண உயர்வு உள்ளது. வீடுகளுக்கு பயன்படுத்துகிற மின் கட்டணம் உயர்ந்து விட்டது. விசைத்தறி மற்றும் கடைகளுக்கு பயன்படுத்துகிற கட்டணம் 'பீக் ஹவர்' என்று கூறி அதிக கட்டணத்தை வசூலிக்கிறார்கள்.

    மின் கட்டண உயர்வினால் கடுமையாக தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி பாதிக்கப்பட்டு விட்டது. கடைகளுக்கு அதிக வரி போடப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசு வந்தாலே மின் கட்டணம் உயர்ந்து விடும். இது கோடை காலம். அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின் வெட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    அ.தி.மு.க. ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் தடையில்லா மின்சாரத்தை தந்தோம். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டில் விலைவாசி உயர்வு அதிகமாகி விட்டது. இன்று 1 கிலோ அரிசி 18 ரூபாய் உயர்ந்து விட்டது. எண்ணெய் விலை உயர்ந்து விட்டது, பருப்பு, சர்க்கரை விலை உயர்ந்து விட்டது. மளிகை பொருட்கள் விலை அனைத்தும் 40 சதவீதம் உயர்ந்து விட்டது. வேலையில்லை. வருமானம் இல்லை. செலவு அதிகம். மக்கள் இன்றைக்கு படாதபாடுபடுகிறார்கள்.

    இப்படிப்பட்ட அவல நிலைதான் தி.மு.க. ஆட்சியில் பார்க்கப்படுகிறது. ஆனால் ஸ்டாலின் பேசும்போது என்ன சொல்கிறார், தி.மு.க. ஆட்சி மக்களுக்கு நன்மை செய்கிற ஆட்சி என்று சொல்கிறார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய அரசு மக்கள் விரோத ஆட்சியாக தி.மு.க. அரசை பார்க்கிறார்கள்.

    தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான் விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிற அளவுக்கு உயர்ந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சி எப்போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சி புரிகிறதோ அப்போதெல்லாம் விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் தி.மு.க. ஆட்சி மக்களை பற்றி சிந்திப்பது கிடையாது. மக்கள் படும் துன்பத்தை அவர்கள் பார்ப்பதில்லை. ஆகவே ஏழை மக்களுக்கு உதவி செய்கிற ஒரே கட்சி அ.தி.மு.க. கட்சி. அ.தி.மு.க. அரசுதான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வங்கி உயர்அதிகாரிகள் மற்றும் ஏ.டி.எம். எந்திரத்தை கையாளும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்படாமல் இருந்ததால் அதில் கொள்ளை நடந்தது உடனடியாக தெரியவில்லை.

    தாம்பரம்:

    படப்பை, பிரதான சாலையில் சவுத் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் அந்த வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 6-ந் தேதி மாலையில் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.23 லட்சத்து 35 ஆயிரத்து 300 பணத்தை ஊழியர்கள் நிரப்பி சென்றனர். வழக்கமாக பணம் நிரப்பப்பட்ட பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் எந்திரத்தில் பணம் வைப்பது வழக்கம். ஆனால் புதிதாக பணம் நிரப்பப்பட்ட பின்னர் கடந்த 2 நாட்களிலேயே வாடிக்கையார்களால் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க முடியவில்லை. அனைவருக்கும் ஏ.டி.எம்.மில் பணம் இல்லை என்ற தகவலே காண்பித்தது.

    இதுபற்றி வாடிக்கையாளர்கள் வங்கியில் புகார் செய்தனர். அதிகாரிகள் ஏ.டி.எம். எந்திரத்தை ஆய்வு செய்தபோது, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாதபடி நம்பர் லாக் செய்யப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதுபற்றி வங்கி உயர்அதிகாரிகள் மற்றும் ஏ.டி.எம். எந்திரத்தை கையாளும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஏ.டி.எம்.மில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பப்பட்ட 2 நாட்களுக்கு பிறது நம்பர் பிளேட் இல்லாத காரில் 4 மர்ம ஆசாமிகள் வருவதும், அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பயன்படுத்தும் நம்பர் லாக் மூலம் அடுத்தடுத்து 2 நாட்களில் மொத்தம் ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 200 கொள்ளையடித்து சென்றிருப்பதும் தெரிந்தது.

    முதல் நாளில் ரூ.8 லட்சத்து 17 ஆயிரத்து 200 மற்றும் மறுநாள் காலை 9:40 மணிக்கு வந்து ரூ.4 லட்சத்து 86 ஆயிரத்தை எந்தவித பதட்டமும் இன்றி பட்டப்பகலில் கொள்ளையடித்து சென்று உள்ளனர். ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்படாமல் இருந்ததால் அதில் கொள்ளை நடந்தது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து வங்கியின் மேலாளர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக மணிமங்கலம் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளை கும்பல் ஏ.டி.எம்.மின் ரகசிய எண்களை தெரிந்து கைவரிசை காட்டி உள்ளதால் வங்கியோடு தொடர்புடைய நபர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பிய ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சித்திரை பெருவிழா வருகிற 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்.
    • தினமும் மாலை 6 மணிக்கு திருமுறை சொற்பொழிவு.

    காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவையொட்டி தினமும் காலை, இரவில் பல்வேறு வாகனங்களில் கச்சபேஸ்வரர் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் உலா வருகிறார். 20-ந்தேதி காலையில் அதிகார நந்தியும், இரவில் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. 22-ந்தேதி ரதம், 28-ந் தேதி தீர்த்தவாரி உற்சவம், 29-ம் தேதி சங்காபிஷேகம், 63 நாயன்மார்கள் வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    30-ந் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு திருமுறை சொற்பொழிவு, இசை நடன நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நடராஜன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
    • வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்கி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்த நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது பேசிய அண்ணாமலை, 'ஸ்ரீபெரும்புதூரில் இருக்க கூடிய அன்பு சொந்தங்களே நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். ஒருத்தர் சம்பந்தமே இல்லாம 1980-ல் பேசியதே பேசுறாங்க. இந்தி, சமஸ்கிருதம், இது, அது, வடக்கு தெற்கு-ன்னு. இன்னும் இந்த பிஞ்சி போன செருப்ப அவங்க தூக்கி எரியலைங்க. இது தி.மு.க.' என்று பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

    ×