search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷவாயு தாக்குதல்"

    • செந்தமிழ்ச்செல்வன் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
    • விஷ வாயு தாக்கி 4 பேரும் மயக்கம் அடைந்தனர்.

    ராணிப்பேட்டை:

    வேலூர் மாவட்டம், சதுப்பேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (வயது 31). இவரது மனைவி ஷீலா, இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    செந்தமிழ்ச்செல்வன் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

    நேற்று இரவு செந்தமிழ் செல்வனுடன் ராணிப்பேட்டை வி.சி. மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜா (47), வாழைப்பந்தலை சேர்ந்த ராமதாஸ் (26), புளியங்கன்னு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (49) ஆகியோர் தோல் தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது விஷ வாயு தாக்கி 4 பேரும் மயக்கம் அடைந்தனர். இதில் செந்தமிழ் செல்வனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    ராஜா, ராமதாஸ், மகேந்திரன் ஆகியோர் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தனர். இதனை கண்ட சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செந்தமிழ் செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூரில் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
    • சம்பவ இடத்திற்கு கருர் எஸ்.பி. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் சுக்காலியூர் காந்திநகர் பகுதியில் குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாக கான்கிரீட் வேலை நடந்துள்ளது.

    இந்நிலையில், அதில் போடப்பட்ட சவுக்கு குச்சிகள் மற்றும் கான்கிரீட் பலகைகளைப் பிரிப்பதற்காக கழிவுநீர் தொட்டியின் மேன்ஹோல் எனப்படும் மூடியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த மோகன்ராஜ், ராஜேஷ் ஆகிய 2 தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர்.

    இவர்களது அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு சென்ற சிவா என்ற மற்றொரு தொழிலாளியும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் மற்ற தொழிலாளர்கள் அங்கு வந்து பார்த்த போது, 3 பேரும் மயங்கி கிடப்பதைப் பார்த்து உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 3 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு கருர் எஸ்.பி. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வரும் கழிவுநீர் தொட்டியில் எவ்வாறு விஷவாயு தாக்கியது என்பது குறித்தும், அது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • முதலில் லட்சுமணன் என்ற கூலி தொழிலாளி தனது உடலில் கயிறைக் கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கினார்.
    • நீண்ட நேரம் ஆகியும் லட்சுமணன் கிணற்றிலிருந்து வெளியே வரவில்லை அவரது சத்தமும் கேட்கவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வண்டு மில்லி பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வர ராவ். இவரது வீட்டில் உள்ள உறை கிணற்றை தூர்வார முடிவு செய்தார். இதையடுத்து நேற்று காலை பி.என். காலனியை சேர்ந்த லஷ்மன் (வயது 35), வம்பா (60), சீனிவாச ராவ் (53) என 3 தொழிலாளர்களை தூர்வாரும் பணிக்காக அழைத்து வந்தார்.

    முதலில் லட்சுமணன் என்ற கூலி தொழிலாளி தனது உடலில் கயிறைக் கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கினார். நீண்ட நேரம் ஆகியும் லட்சுமணன் கிணற்றிலிருந்து வெளியே வரவில்லை அவரது சத்தமும் கேட்கவில்லை. இதையடுத்து வம்பாவும், பிறகு சீனிவாச ராவ் என 2 தொழிலாளர்களும் கிணற்றில் இறங்கினார்.

    கிணற்றுக்குள் இறங்கிய 3 தொழிலாளர்களும் வெளியே வராததால் நாகேஸ்வரராவின் மகன் ராமராவ் கிணற்றில் இறங்கினர். அவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த நாகேஸ்வர ராவ் இது குறித்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்த போது கிணற்றில் விஷவாயு தாக்கி 4 பேரும் இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து தீயணைப்புத்துறையினர் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் கிணற்றில் இறங்கி இறந்த 4 பேர் உடலையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×