search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன் விற்பனை"

    • காசிமேடு சந்தையில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
    • குடும்பசெலவு, வாழ்க்கை தரம் மேம்பட உழைக்கிறோம். இதில் எங்களுக்கு மன நிறைவை தருகிறது.

    ராயபுரம்:

    சென்னையில் உள்ள காசிமேடு மீன்மார்க்கெட் மிகப்பெரிய மீன்சந்தையாக உள்ளது. சுமார் 1500 விசைப்படகுகள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

    மீன்பிடி தடைகாலத்தை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் காசிமேடு மீன்மார்க்கெட் களை கட்டி காணப்படும். இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    நள்ளிரவில் தொடங்கும் மீன்வியாபாரம் காலை 7 மணி வரை விறுவிறுப்பாக இருக்கும்.

    கடலுக்குள் சென்று படகுகளில் ஆண்கள் மீன் பிடித்து வந்தாலும் அதனை கரையில் இறக்கி மீன் ஏலக் கூடத்திற்கு எடுத்து செல்வது, மீன்களை தரம் பிரிப்பது, ஏலம் விடுவது, விற்பனை செய்வது, மீன்களை சுத்தம் செய்து கொடுப்பது என அனைத்திலும் பெண்கள் கொடி கட்டி பறக்கிறார்கள். இதனால் காசிமேடு சந்தையில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். பெரும்பாலும் காசிமேடு, தண்டையார்பேட்டை உள்ளிட்ட சுற்றி உள்ள பகுதியை சேர்ந்தவர்கள் இதில் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பெரும்பாலானோர் தங்களது குடும்பத்தினர் தலைமுறை, தலைமுறையாக இந்த மீன்விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார்கள். இதுதொடர்பாக மீன்களை சுத்தப்படுத்தி கொடுக்கும் பெண் ஒருவர் கூறியதாவது:-

    காசிமேட்டில் மீன் விற்பனையில் பெரும்பாலும் பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள்.வாடிக்கையாளர்கள் கேட்பதற்கு ஏற்ப சிறிய துண்டுகளாக வெட்டி கொடுப்போம். சில நிமிடத்திலேயே மீன்களை சுத்தப்படுத்தி கொடுத்து விடுவோம். ஒரு மீனை 65 துண்களாகவும் வெட்டி கொடுத்து உள்ளேன். ஒரு கிலோ சூறை மீனை 5 நிமிடத்தில் சுத்தம் செய்வோம். இறால் மீன்களை 10 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் சுத்தம் செய்து கொடுத்து விடுவோம்.

    பல தலைமுறைகளாக பலர் இங்கு மீன் விற்பனை உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்களது வாழ்வாதாரமே இந்த காசிமேடு சந்தைதான்.

    குடும்பசெலவு, வாழ்க்கை தரம் மேம்பட உழைக்கிறோம். இதில் எங்களுக்கு மன நிறைவை தருகிறது. காசிேமடு மீன்விற்பனை கூடத்தை நவீனமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10 ஆயிரம் மீனவர்களுக்கு இது முக்கிய வாழ்வாதார இடமாக உள்ளது.
    • பழவேற்காடு ஏரியில் பிடிக்கப்படும் நண்டு, இறால்களுக்கு தனி சுவை உண்டு.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய 2-வது உவர்ப்பு நீர் ஏரி ஆகும். இதனை சுற்றி 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் சுமார் 1500 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடித்து வருகின்றனர். சுமார் 10 ஆயிரம் மீனவர்களுக்கு இது முக்கிய வாழ்வாதார இடமாக உள்ளது.

    இங்கு 150-க்கும் மேற்பட்ட வகையான மீன்கள்,இறால்,நண்டுகள், பிடிபட்டு வருகிறது. பழவேற்காடு மீனுக்கு என்று தனி மவுசு உண்டு. பெரும்பாலும் இங்கு பிடிக்கப்படும் மீன்கள் உடனடியாக விற்பனைக்கு கரைக்குகொண்டு வரப்படுவதால் ஐஸ்கட்டிகளில் பதப்படுத்தாமல் உடனடியாக விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் பழவேற்காடு மீன்களை வாங்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இதனால் பழவேற்காட்டில் மீன்விற்பனை களைகட்டி காணப்படுகிறது.

    மேலும் பழவேற்காடு ஏரியில் பிடிக்கப்படும் நண்டு, இறால்களுக்கு தனி சுவை உண்டு. இதனால் இங்குள்ள நண்டு, இறால்களை வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    ஏரியில் பிடிக்கப்படும் நண்டுகள் சணல் மூலம் உயிருடன் கட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கட்டு நண்டு மிகவும் பெயர் போனவை. ஒரு நண்டு 50 கிராம் முதல் 11/2 கிலோவிற்கு மேல் இருக்கும்.

    பழவேற்காடு நண்டுக்கு தற்போது மவுசு மேலும் அதிகரித்து உள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பழவேற்காடு பகுதிக்கு வந்து தங்களுக்கு பிடித்தமான பெரிய நண்டுகளை வாங்கி செல்கிறார்கள். ஒரு கிேலா நண்டு ரூ.400 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது.

    ஒரு கிலோவுக்கு மேல் உள்ள நண்டு ரூ.2 ஆயிரத்து 200 வரை விலை போகிறது.

    இதுகுறித்து நண்டு வியாபாரி ராஜா, சங்கீதா ஆகியோர் கூறும்போது, பழவேற்காடு நண்டுக்கு என தனி சுவை உண்டு. இதனால் இங்கு பிடிபடும் நண்டுகளை அதிகம் பேர் விரும்பி வாங்கி செல்கிறார்கள். இப்போது பழவேற்காடு நண்டுகளை வாங்க அதிகாமானோர் வந்து செல்கிறார்கள். நண்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் நாள்பட்ட சளி குறையும்.ஒரு நண்டு ஒரு கிலோவிற்கு மேல் இருந்தால் கிலோ 2200 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. பெரியவகை நண்டுகளின் கொடுக்குகளை அதன் உடம்புடன் சனலை வைத்து கட்டி விற்பனை செய்யப்படுகின்றன. இவை மிகவும் ஆபத்தானது. விரலை கடித்தால் துண்டாகி விடும் ஆபத்து உள்ளது. பழக்கம் உள்ளவர்கள் இதனை எளிதில் கையாள முடியும் என்றனர்.

    • உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர்.
    • சிறிய வகை நெத்திலி 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும். இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீன் வறுத்து குறைவாக இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்தது.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமானோர் திரண்டு போட்டி போட்டு மீன்களை வாங்கி சென்றதை காண முடிந்தது. மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. வழக்கமாக 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் சங்கரா மீன் 400 ரூபாய்க்கும், சிறிய வகை சங்கரமீன் 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வஞ்சிரம் ஒரு கிலோ 1100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கடோரா வகை மீன் கிலோ 550 ரூபாய்க்கும், பன்னி சாத்தான் மீன் 450 ரூபாய்க்கும், நெத்திலி வகை மீன் 250 ரூபாய்க்கும், சிறிய வகை நெத்திலி 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஏற்கனவே காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மீன்களை குறைந்த அளவில் வாங்கி சென்றதை காண முடிந்தது. இருப்பினும் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை மீன்கள் வாங்கப் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • கடந்த வாரத்தை தொடர்ந்து ஞாயிற்றுகிழமையான இன்றும் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வரத்து சற்று குறைவாக காணப்பட்டது.
    • வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வரத்து அதிக அளவில் இருக்கும்.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து ஜூன் 15-ந் தேதி முதல் மீனவர்கள் மீன் பிடித்து வந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் பொது மக்களின் கூட்டம் அதிகரித்து மீன்களை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

    கடந்த வாரத்தை தொடர்ந்து ஞாயிற்றுகிழமையான இன்றும் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வரத்து சற்று குறைவாக காணப்பட்டது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வரத்து அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் மீன் வரத்து தொடர்ந்து குறைவு காரணமாக கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்ந்து விற்கப்பட்டது. வழக்கமாக ஒரு கிலோ 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படும் பாறை மீன் இன்று 450 முதல் 500 ரூபாய் வரை விற்கப்பட்டது.

    சங்கரா மீன் வழக்கமாக 200 முதல் 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 400 முதல் 450 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ரூபாய் 150-க்கு விற்கப்பட்ட ஓரவகை மீன் 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வச்சிரா மீன் 800 ரூபாய்க்கும், வவ்வால் மீன் 500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பன்னி சாத்தான் மீன் வழக்கமாக 300 முதல் 350 ரூபாய்க்கு விற்கப்படும். ஆனால் இன்று 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 600 முதல் 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் இன்று ஆயிரம் முதல் 1200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதலை மீன் ஒரு கிலோ 500 க்கு விற்கப்பட்டது. இதே போல் நெத்திலி மீன் 250 ரூபாய்க்கும், கனவா வகை மீன் 200 ரூபாய்க்கும், கானாங்கத்தை மீன் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகமாக விற்பனை நடந்தாலும் மீன்கள் வாங்க கடலூர் துறைமுகத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.

    • இன்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட காசிமேடு மீன்மார்க் கெட்டில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • மற்ற மீன்களின் விலையும் கடந்த வாரத்தை விட சற்று அதிகமாகவே காணப்பட்டது.

    ராயபுரம்:

    காசிமேடு மீன்மார்க் கெட்டில் விடுமுறை நாட்களில் மீன்வாங்க மக்கள் கூட்டம் அதிகம் அலை மோதும். மீன்பிடி தடை காலத்திற்கு பின்னர் கடந்த வாரமாக எதிர்பார்த்த அளவு பெரியவகை மீன்கள் வராமல் இருந்தது.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற 400 முதல் 450 விசை படகு மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.

    இதனால் பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு அதிக அளவில் குவிந்து இருந்தன. வஞ்சிரம், வவ்வால், பாறை, உள்ளிட்ட மீன்கள் அதிகமாக காணப்பட்டது.

    பெரியவகையாக இருந்ததால் சங்கரா, பாறை, இறால், கடம்பா போன்ற மீன்களின் விலை ரூ.50 முதல் ரூ.100 வரை விலை கூடுதலாக விற்கப்பட்டன. இதேபோல் மற்ற மீன்களின் விலையும் கடந்த வாரத்தை விட சற்று அதிகமாகவே காணப்பட்டது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட காசிமேடு மீன்மார்க் கெட்டில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை 2 மணி முதலே மீன்வியாபாரிகள் மற்றும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்விலை அதிகமாக இருந்ததால் மீன்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் பெரியவகை மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். பெரியவகை வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1000 முதல் ரூ.1100 வரை விற்கப்பட்டது. காசிமேட்டில் மீன்விலை(கிலோவில்) வருமாறு:-

    கொடுவா- ரூ.600

    சீலா- ரூ.500

    சங்கரா- ரூ.500

    பாறை- ரூ.600

    இறால்- ரூ.400

    நண்டு- ரூ.300

    நவரை- ரூ.200

    கானங்கத்தை- ரூ.200

    கடம்பா- ரூ.300

    • ஆழ்கடல் மீன்பிடிக்க சென்ற சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைக்கு திரும்பின.
    • மீன் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

    ராயபுரம்:

    தமிழகத்தில் ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கிய 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து காசிமேட்டில் இருந்து சுமார் 800 விசைப்படகு மீனவர் கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    கடந்த வாரம் முதல் ஞாயிற்றுக் கிழமையின் போது குறைந்த அளவிலான விசைப்படகுகளே கரை திரும்பியதால் பெரியவகை மீன்கள் எதிர்பார்த்த அளவு விற்பனைக்கு வரவில்லை.

    இந்த நிலையில் தடைக்காலம் முடிந்து 2-வது ஞாயிற்றுக் கிழமையான இன்று ஆழ்கடல் மீன்பிடிக்க சென்ற சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைக்கு திரும்பின.

    இதனால் காசிமேட்டில் பெரியவகை மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவிந்து இருந்தது. கடந்த வாரத்தை விட இன்று பெரிய வகை மீன்கள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டது.

    இதையொட்டி அதிகாலை முதலே பொது மக்கள், வியாபாரிகள் மீன்வாங்க குவிந்ததால் காசிமேட்டில் கூட்டம் அலைமோதியது.

    வஞ்சிரம், பாறை, வவ்வால், நெத்திலி, சங்கரா, இறால், கடமா உள்ளிட்ட மீன்களை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். ஆனால் மீன் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இதனால் மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1000 முதல் ரூ.1200 வரை விற்பனை செய்யப்பட்டது. பாறை ரூ.400 முதல் ரூ.500 வரையும், இறால் ரூ.400 முதல் ரூ.1300 வரையும், சங்கரா ரூ.300 முதல் ரூ.500 வரையும், வவ்வால் மீன் ரூ.300 முதல் ரூ.600 வரையும், பாறை-ரூ.350,நெத்திலி-ரூ.150 க்கு விற்பனை ஆனது.

    இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, கடந்த வாரத்தை விட கூடுதலாக விசைப்படகுகள் கரை திரும்பியதால் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அடுத்த வாரத்தில் கூடுதலாக மீன்கள் வரும் என்பதால் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.

    • நான் வெயிலில் சென்று மீன் விற்க வேண்டாம் என்று கருதி எனது மகன் எனக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார்.
    • வேலை பார்ப்பதற்காக மகன் கார் வாங்கி கொடுத்திருக்கும் சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன்வயல் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம்(வயது60). இவரது மனைவி காளியம்மாள்(55). இவர்களுக்கு சுரேஷ் கண்ணன் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

    சிவானந்தமும், அவரது மனைவியும் ஊரணி மற்றும் கண்மாயில் மீன் பிடித்து விற்பனை செய்து தங்களது பிள்ளைகளை படிக்க வைத்தனர். வறுமை காரணமாக தங்குவதற்கு கூட இடமில்லாமல் தவித்த சிவானந்தம், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கீழக்கரையில் ஒருவரது விவசாய நிலத்தில் தங்கியிருந்தார்.

    தங்களது கஷ்டத்தை பற்றி கவலைப்படாமல் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்தனர். இதனால் சிவானந்தத்தின் மகன் சுரேஷ் கண்ணன் மரைன் என்ஜினீயரிங் படித்து முடித்தார். அவர் தற்போது வளைகுடா பகுதியில் உள்ள கப்பல் நிறுவனத்தில் மாதம் ரூ.2 லட்சம் ஊதியத்தில் என்ஜினீயராக பணி புரிந்து வருகிறார்.

    அதன்மூலம் தனது சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்த சுரேஷ் கண்ணன், வீடு இல்லாமல் தவித்த பெற்றோருக்கு புதிதாக வீடும் கட்டி கொடுத்துள்ளார். மேலும் தனது தாய்-தந்தையை வேலைக்கு செல்ல வேண்டாம் எனவும் கூறியிருக்கிறார். ஆனால் உழைத்து சாப்பிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சிவானந்தம் மற்றும் அவரது மனைவி தொடர்ந்து மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

    வயதான காலத்திலும் உழைக்கும் தங்களின் தாய்-தந்தையின் கஷ்டத்தை குறைக்கும் வகையிலும், அவர்கள் எளிதாக மீன் விற்பனை செய்வதற்காகவும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள காரை சுரேஷ் கண்ணன் வாங்கி கொடுத்துள்ளார். அந்த காரிலேயே தற்போது சிவானந்தம் மீன்களை எடுத்து சென்று வியாபாரம் செய்து வருகிறார்.

    மீன் விற்பனை எங்களது குடும்ப தொழில். எனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் மீன் விற்க செல்லாமல், வீட்டிலேயே இருக்குமாறு எனது மகன் கூறினார். ஆனால் கடைசி வரை தொழிலை விடாமல் உழைக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாகும்.

    நான் வெயிலில் சென்று மீன் விற்க வேண்டாம் என்று கருதி எனது மகன் எனக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த காரிலேயே மீன்களை ஏற்றி கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வறுமை நிலையிலும் கடினமாக உழைத்து படிக்க வைத்து ஆளாக்கிய தாய்-தந்தையின் வலியை உணர்ந்து, அவர்கள் எளிதாக சென்று வேலை பார்ப்பதற்காக மகன் சொகுசு கார் வாங்கி கொடுத்திருக்கும் சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    ×