search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தியாகராஜர்"

    • மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.
    • நிகழ்ச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு சிக்கல் குருசரண் பாடுகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறும். அதன்படி கடந்த மாதம் 177-வது ஆராதனை விழாவுக்கான பந்தல்கால் நடப்பட்டது.

    இதையடுத்து 5 நாட்கள் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை விழாவானது கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் இறுதிநாளான இன்று தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளையொட்டி காலை 6 மணியளவில் திருவையாறு திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் இருந்து அவரது சிலை ஊர்வலமாக உஞ்சவிருத்தி பஜனையுடன் புறப்பட்டது.

    மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.

    பின்னர் தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கெளளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஸாதிஞ்சநெ ஓ மநஸா...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ரா கநகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

    பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார், கடலூர் ஜனனி, சீர்காழி சிவசிதம்பரம், அருண், அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் உள்பட 1000-க்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். அப்போது, தியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து மாலை வரை பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், தியாக பிரம்ம மகோத்சப சபை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு சிக்கல் குருசரண் பாடுகிறார். 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் தியாகராஜர் சுவாமி வீதி உலா காட்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து திரைப்பட பின்னணி பாடகி நித்யஸ்ரீமகாதேவன் பாடுகிறார். பின்னர் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

    • இத்திருக்கல்யாண வைபவத்தை காண்பதால் பெரும் பாக்கியம் கிடைக்கும்.
    • இதன்மூலம் சைவத்தலங்களில் பங்குனி உத்திரம் பெறும் சிறப்பை நாம் உணர முடிகிறது.

    சைவத் திருக்கோயில்களில் பங்குனி உத்திரத் திருநாள் பண்டைய காலந் தொட்டே கொண்டாடப்பட்டு வந்தது என்பதை புராணங்கள் வாயிலாக நாம் அறியலாம்.

    சுந்தரேஸ்வரர் மீனாட்சியம்மையை ஒரு பங்குனி உத்திர திரு நாளில் தான் மணம் செய்தார் என புராணங்கள் பேசுகின்றன.

    எனவே இந்நாளில் சிவாலயங்களில் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது மரபு.

    இத்திருக்கல்யாண வைபவத்தை காண்பதால் பெரும் பாக்கியம் கிடைக்கும்.

    இதை நாயன்மார்களின் வாழ்வின் மூலம் அறியலாம்.

    இறைவனின் தோழராக போற்றப்படும் சுந்தரர் பங்குனி உத்திரநாளில் திருவாரூர் சென்று தியாகராஜரின் திருமண வைபவத்தை கண்டு தரிசிப்பது வழக்கம்.

    சுந்தரமூர்த்தி நாயனர் தம் துணைவியார் பரவையாரை விட்டுப்பிரிந்து திருவொற்றியூரில் சங்கலியாரைத் திருமணம் செய்து கொண்ட காலத்தில் பங்குனி உத்திர விழாவன்று திருவாரூர் செல்ல முடியாத நிலையில்,

    தன் தோழரான சிவபெருமானிடமே பங்குனி உத்திரத்தன்று தியாகராஜர் திருக்கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் தன் விருப்பதைச் சொல்லி பரவையாரிடம் தூது அனுப்பியதாக பெரிய புராணம் பேசுகிறது.

    இவ்வரலாற்றில் இருந்து சைவத்தலங்களில் பங்குனி உத்திரம் பெறும் சிறப்பை நாம் உணர முடிகிறது.

    • இங்கு லவனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு கோவிலும் உள்ளது.
    • நந்தி மனிதவடிவில் உள்ள இந்த நந்தீஸ்வரர் கோவில் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

    திருவொற்றியூரில் பிரதோஷக் காலம் மிகவும் போற்றி வணங்கத்தக்கதாக இருந்ததை திருவொற்றியூர் தலபுராணம் சிறப்பாக பேசுகிறது.

    சிவபெருமான் நஞ்சு உண்ட பின் தேவர் தொழ ஆடியருளிய திருக்கூத்தினை தலபுராணம் விரிவாகக் கூறுகிறது.

    நாரத முனிவர், ராமன் மகன் லவனுக்கு திருவொற்றியூரின் பெருமைகளை கூறும்போது இங்கு வந்து படம்பக்க நாதரை பிரதோஷக் காலத்தில் தரிசித்தால் மிகபெரும் பயன்களை அடைவாய் என்று குறிப்பிட்டார்.

    இதையடுத்து அயோத்தியில் இருந்து கிளம்பி லவன் தொண்டை மண்டல நாட்டு திருவொற்றியூர் நோக்கி வந்தான்.

    லவன் பிரதோஷம் வழிபாடு செய்ய திருவொற்றியூர் வரும் வழியில் இடையே பெரும் மழை வந்தது.

    பயணம் தடைப்பட்டது. ஓற்றியூர் இறைவனை பிரதோஷ காலத்தில் தரிசிக்க தடையாக பெருமழை வந்ததே என வருந்தி, தன் உடலை மாய்த்து உயிர் விட லவன் துணிந்தான்.

    அப்போது காளை வாகனத்தில் ரிஷப ரூபாராய் ஓற்றியூரான் லவன் இருந்த இடத்திலேயே தரிசனம் தந்து அருளினார்.

    அந்த இடம் லவன் பேரூர் என பெயர் பெற்றது.

    தற்போது போரூர் என வழங்கப்படுகிறது.

    இங்கு லவனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு கோவிலும் உள்ளது.

    ஓற்றியூர் ஈசன் பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்வோர்க்கும் இன்னும் வளங்கள் யாவும் வழங்குகிறார்.

    பிரதோஷ காலத்தில் நந்தியினை வழிபட்டும், ஆலகால விஷம் உண்டு ஆனந்த கூத்தாடிய பெருங் கருணைக்கடல் தியாகராஜாகிய சிவபெருமானை பக்தியுடன் திருவடிபணிந்து வழிபட்டால் எல்லா வளமும், நலமும் தேடி வரும்.

    திருவொற்றியூர் வடக்கு மாடவீதியில் உள்ள ஸ்ரீநந்திஸ்வரர் கோவிலுக்கு பிரதோஷ காலத்தில் சென்று வழிபட்டால் சிறந்த பயன்களை பெறலாம்.

    நந்தி மனிதவடிவில் உள்ள இந்த நந்தீஸ்வரர் கோவில் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

    ×