search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனநாயக கட்சி"

    • போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்தனர்
    • குடியரசு கட்சியின் பிற வேட்பாளர்களும் விலக வேண்டும் என்றார் விவேக்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் நவம்பர் மாத காலகட்டத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் (Joe Biden) மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trmup) தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.

    கடந்த 2020ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ் அளிக்கப்படும் நிலையில் டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

    அமெரிக்க சட்டத்தின்படி தேசத்துரோகமாக கருதப்படும் இந்த செயலுக்கு தூண்டுதலாக டிரம்ப் செயல்பட்டதாக அவர் மீது கொலராடோ (Colorado) மாநில நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.

    இந்நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து கொலராடோ நீதிமன்றம், 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு டிரம்பிற்கு தடை விதித்துள்ளது. அந்நாட்டு தேர்தல் முறைப்படி குடியரசு கட்சியின் "பிரைமரி" (primary) தேர்தல் எனப்படும் முதல்நிலை வாக்குப்பதிவில் டிரம்பின் பெயர் வாக்குச்சீட்டில் இருக்க கூடாது என உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்ய உள்ளார்.

    குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் பிற வேட்பாளர்களில் ஒருவரான இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி, "இதை சட்டவிரோதமான நடவடிக்கையாக பார்க்கிறேன். இது அமெரிக்காவில் மோசமான விளைவை ஏற்படுத்தும். டிரம்ப் பெயர் வாக்குச்சீட்டில் இடம் பெறாமல் இருந்தால் நானும் போட்டியிலிருந்து விலகுவேன். இதே போன்று குடியரசு கட்சியின் பிற வேட்பாளர்களும் விலக வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என எக்ஸ் சமூகவலைதளத்தில் தனது அதிகாரபூர்வ கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    இது ஒரு புறமிருக்க, தேர்தலில் கொலராடோ ஜனநாயக கட்சிக்கே அதிக சாதகமானது என்பதால் டிரம்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பும் மேல்முறையீடும் பெரிதாக தேர்தல் முடிவில் மாறுதலை ஏற்படுத்தாது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

    • மீண்டும் அதிபராக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார் டிரம்ப்
    • பல கண்டங்களிலிருந்தும் அமெரிக்காவிற்கு உள்ளே அகதிகள் குவிகிறார்கள் என்றார் டிரம்ப்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அந்நாட்டு பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    இருகட்சி ஜனநாயகம் நடைமுறையில் உள்ள அமெரிக்காவில், தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் பிரதமராக உள்ளார். அவர் மீண்டும் அடுத்த வருட தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களம் இறங்க உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட தயாராகி வரும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடு முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தின் டுர்ஹாம் (Durham) நகரில் ஒரு பேரணியில் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட பல கண்டங்களிலும் உள்ள பல நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு உள்ளே அகதிகள் குவிந்து வருகின்றனர். அவர்களால் நம் நாட்டு "ரத்தம்" விஷமாகி வருகிறது. அவர்கள் உலகம் முழுவதும் உள்ள மனநல காப்பகங்கள், சிறைச்சாலைகள் உள்ளிட்ட இடங்களை "விஷம்" ஆக்கி வருகின்றனர். மீண்டும் அதிபராக நான் தேர்வானால் இவ்வாறு லட்சக்கணக்கில் மக்கள் சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் நுழைவதை முற்றிலும் ஒழித்து விடுவேன்."

    இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    தனது பிரசாரம் முழுவதும் எல்லைகளை பலப்படுத்த சட்ட விரோதமாக வரும் அகதிகளை தடுக்க மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்து வரும் டிரம்ப், ஏற்கெனவே கடந்த செப்டம்பரில் அகதிகளை "அமெரிக்க ரத்தத்தை விஷம் ஆக்குபவர்கள்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்களிப்பவர்களுக்கு பொது அறிவு இருப்பதை சோதிக்க வேண்டும் என்கிறார் விவேக்
    • வாக்களிக்கும் உரிமையை கல்வியறிவுடன் கலப்பதை விமர்சகர்கள் எதிர்க்கின்றனர்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார். ஆனால், டொனால்ட் டிரம்ப் மீதுள்ள பல்வேறு வழக்குகளில் வரப்போகும் தீர்ப்பினை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும் நிலை உள்ளது.

    இதனால் குடியரசு கட்சி வேட்பாளர்களில் டிரம்பிற்கு அடுத்த நிலையில் அதிக ஆதரவு உள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.

    பல்வேறு நகரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அமெரிக்காவை சூழ்ந்துள்ள சிக்கல்கள் குறித்தும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் பேசி வரும் விவேக் ராமசாமி, முதன்முறை மற்றும் இளம் வாக்காளர்கள் குறித்து பேசிய கருத்து ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி 18 வயது நிறைவடைந்தவர்கள் தேர்தல்களில் வாக்களிக்க தகுதி பெறுகிறார்கள்.

    ஆனால், விவேக் ராமசாமி முன்மொழிந்துள்ள மாற்று திட்டத்தின்படி, 18 வயதை எட்டியவர்கள் தேர்தலில் வாக்களிக்க அடிப்படை பொது அறிவிற்கான ஒரு தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும் அல்லது 6 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது முதல்நிலை அவசர சேவை பணியாளர்களாக சில காலங்கள் பணியாற்றி இருக்க வேண்டும்.

    தனது இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள விவேக், வாக்களிக்க விரும்பும் இளைஞர்களுக்கு அடிப்படை பொது அறிவு அவசியம் என கூறுகிறார். தான் வென்றால் இதற்கான அரசியலமைப்பு சட்ட மாறுதல்களை கொண்டு வர உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    விவேக்கின் இந்த கருத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இது கருப்பினத்தவர்களுக்கான வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் முயற்சி என்றும் பல்வேறு பயனற்ற மற்றும் பதில் தெரியாத கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றிற்கு பதிலளிக்க முடியாததால், வாக்குரிமை இழக்கும் அபாயம் தோன்றும் என கருத்து தெரிவிக்கும் கருப்பின பிரதிநிதிகள், கல்வியையும் வாக்களிக்கும் உரிமையையும் ஒன்றுடன் ஒன்று கலக்க கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, இதற்கான அரசியலமைப்பு சட்ட மாறுதலை கொண்டு வர அமெரிக்க பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிட்ட வேண்டியது அவசியம் என்றும், 4ல் 3 மாநில சட்டசபைகளிலும் இதற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் அதனால் இது நிறைவேறுவது கடினம் என்றும் சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    விவேக் ராமசாமி முன்மொழிந்துள்ள மாறுதல்கள் அதிபர் தேர்தலில் அவருக்கும் அவரது குடியரசு கட்சிக்கும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில்தான் தெரிய வரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    • இரு கட்சி வேட்பாளர்களுக்கே மாறி மாறி வாக்களித்து வருகின்றனர்
    • கென்னடி ஜூனியருக்கு 19 சதவீத வாக்குகள் கிடைக்கலாம் என ஆய்வு தெரிவிக்கின்றது

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    இரு கட்சி ஜனநாயக முறை கடைபிடிக்கப்படும் அமெரிக்காவில், தற்போது ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் (80) அதிபராக பதவி வகிக்கிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) தீவிரமாக ஆதரவு சேகரித்து வருகிறார்.

    பல வருடங்களாக இரண்டு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கே அமெரிக்க மக்கள் மாறி மாறி வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இரு முன்னணி வேட்பாளர்களை விட புதிய மற்றும் இளைய வயது வேட்பாளர்களை அமெரிக்கர்கள் களத்தில் காண விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார சிக்கல்கள் உருவெடுத்துள்ளது. பல துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளன. விலைவாசி கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷிய-உக்ரைன் போர் ஆகியவற்றில் அமெரிக்காவின் நிலைப்பாடு பல விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

    இப்பின்னணியில், 2024 அதிபர் தேர்தல் நடைபெற போகிறது.

    இரு கட்சிகளின் செயல்பாடுமே திருப்தி அளிப்பதாக இல்லை என்றும் இரு கட்சி வேட்பாளர்களுக்கே மாறி மாறி வாக்களித்து வந்ததால் சலிப்படைந்து விட்டதாகவும், மூன்றாவதாக ஒரு கட்சி தேவை எனும் மனநிலைக்கு அமெரிக்க மக்கள் வந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    இரு கட்சியை சாராமல் இதுவரை மூன்றாவதாக எந்த வேட்பாளரும் அங்கு வென்றதில்லை.

    1992ல் தொழிலதிபர் ராஸ் பெரோ (Ross Perot) இரு கட்சிகளையும் சாராத சுயேட்சை வேட்பாளராக 19 சதவீத வாக்குகள் வாங்கியிருந்தார் என்பதும் 2000ல் ரால்ஃப் நாடர் (Ralph Nader) 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தற்போது சுயேட்சை வேட்பாளராக ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், (Robert F. Kennedy Jr) மூன்றாவது வேட்பாளராக களம் இறங்கினால் உருவாகும் மும்முனை போட்டியில் 20 சதவீத வாக்குகளை அவர் வெல்ல கூடும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. தேர்தல் நெருங்கும் போது அவருக்கு ஆதரவு கூடலாம் என்றும் மக்கள் நினைக்கின்றனர்.

    நீண்ட காலமாக உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் பொதுமக்களுக்கு - குறிப்பாக இளம் வயதினருக்கு - ஒரு சலிப்பு ஏற்பட்டு விடுவதாகவும், அதனால் புதிய முகங்களையே வேட்பாளர்களாக தேட தொடங்குவதாகவும் அரசியல் நிபுணர்களும், உளவியல் வல்லுனர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். 

    • பிரபல தொலைக்காட்சிக்கு விவேக் ராமஸ்வாமி பேட்டியளித்தார்
    • விவேக் ராமஸ்வாமி மிகவும் நம்பிக்கைக்குரிய வேட்பாளர்

    உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவில், 2024 நவம்பரில் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே தற்போது வரை களத்தில் இறங்க இருக்கின்றனர்.

    ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட ஆர்வமாக உள்ளார்.

    குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக இருக்கிறார். ஆனால் அவர் மீது உள்ள வழக்குகளின் தீர்ப்புகளை பொறுத்தே அவர் போட்டியில் இருப்பாரா இல்லையா என தெரிய வரும்.

    இந்நிலையில் குடியரசு கட்சி சார்பிலேயே 10-க்கும் மேற்பட்டவர்கள் வேட்பாளராக போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில் அக்கட்சியிலேயே நிக்கி ஹேலி, ஹிர்ஷ் வர்தன் சிங், மற்றும் விவேக் ராமஸ்வாமி ஆகிய 3 இந்திய வம்சாவளியினரும் தீவிரமாக களம் இறங்கி இருக்கின்றனர்.

    இவர்கள் அனைவரிலும் மிகவும் வயது குறைந்தவரும், ஹார்வர்டு மற்றும் யேல் பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றவரான விவேக் ராமஸ்வாமி, கேரளாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய இந்திய பெற்றோர்களுக்கு பிறந்தவர்.

    பல அதிரடி திட்டங்களையும், கருத்துக்களையும் கூறி வரும் விவேக், அமெரிக்காவில் வாக்களிக்கும் வயதை 25 ஆக அதிகரிக்க வேண்டும் என வாதாடுகிறார்.

    சில மாதங்களுக்கு முன் உலகின் நம்பர் 1 பணக்காரரான அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், தனது சீன சுற்றுபயணத்தின் போது தெரிவித்ததாவது, "அமெரிக்காவும், சீனாவும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள். சீனாவில் எனது வர்த்தகத்தை விரிவுபடுத்த போகிறேன். சீனாவின் சக்தியையும், நம்பிக்கையையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்," என்று அவர் கூறியிருந்தார்.

    ஆனால் இதை குறிப்பிட்டு மஸ்கை விமர்சித்திருந்தார் விவேக். அப்போது அவர், "டுவிட்டரை எக்ஸ் என மாற்றி மேம்படுத்தும் முயற்சியை ஆதரிக்கிறேன். அதே வேளையில், சீனா தனது மறைமுக நோக்கங்களுக்காக அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களை பொம்மைகளை போல் இயக்குவதை எதிர்க்கிறேன். இதற்கு அமெரிக்கர்கள் கருவிகளாக போய் விட கூடாது. இதனை எதிர்க்கும் தலைமை வேண்டும்," என்று விமர்சித்து இருந்தார்.

    இந்நிலையில் டக்கர் கார்ல்ஸன் எனும் ஒரு பிரபல தொலைக்காட்சி பேட்டியாளருக்கு விவேக் ராமசாமி பேட்டியளித்தார். இப்பேட்டியின் வீடியோவை இணைத்து தனது எக்ஸ் (டுவிட்டர்) கணக்கில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் எலான் மஸ்க். தன்னை விமர்சித்த விவேக் ராமசாமியை, ஆச்சரியப்படும் விதமாக மஸ்க், "ஒரு நம்பிக்கைக்குரிய வேட்பாளர்" என பாராட்டியுள்ளார்.

    இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷி சுனாக், பிரிட்டன் பிரதமராக இருந்து வரும் நிலையில், அமெரிக்காவிலும் அதே போல் ஒருவர் வரவேண்டும் என பல இந்தியர்கள் விரும்புகிறார்கள்.

    வைரலாகியிருக்கும் இந்த வீடியோவை கண்ட இந்தியர்கள், தன்னை விமர்சித்தவராக இருந்தாலும் விவேக் ராமசாமியின் தலைமை மற்றும் திறமை குறித்து எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


    ×