search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் மரணம்"

    • கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது வீராவுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.
    • நீண்ட நேரம் தேடியும் சிறுவன் கிடைக்காததால் செய்யாறு தீயணைப்பு துறையினருக்கும், அனக்காவூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    செய்யாறு:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தன். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு வீரா (வயது 16), சிவா என 2 மகன்களும், செம்பருத்தி என்ற மகளும் உள்ளனர்.

    வீரா 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இவர்கள் குடும்பத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த குளம் மந்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்தில் கலந்து கொள்வதற்காக வந்தனர். நேற்று காலை கிரகப்பிரவேசம் முடிந்து அனைவரும் அருகே உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர்.

    கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது வீராவுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனைக் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து தண்ணீரில் மூழ்கிய வீராவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    நீண்ட நேரம் தேடியும் சிறுவன் கிடைக்காததால் செய்யாறு தீயணைப்பு துறையினருக்கும், அனக்காவூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி கிணற்றிலிருந்து சிறுவனை பிணமாக மீட்டனர்.

    பின்னர் போலீசார் வீராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைதாகும் சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 40-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்போது சீர்திருத்தப் பள்ளியில் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி தாம்பரம் பகுதியில் ரெயில்வே பொருட்களை திருடியதாக தாம்பரம் அடுத்த குப்பைமேடு, கண்டபாளையத்தை சேர்ந்த பழனி என்பவரது மகன் கோகுல் ஸ்ரீ (வயது17) யை தாம்பரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவரை மறுநாள் (30-ந்தேதி) செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். இந்த நிலையில் சீர்திருத்தப் பள்ளியில் இருந்த போது கோகுல் ஸ்ரீக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோகுல் ஸ்ரீ இறந்து போனார். இதுபற்றி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுவன் கோகுல்ஸ்ரீ எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. சீர்திருத்தப்பள்ளியில் சிறுவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுவன் கவி தேவநாதனுக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்தது. அருகில் இருந்த கம்பவுண்டரிடம் ஊசி போட்டு வந்துள்ளனர்.
    • பிரேத பரிசோதனைக்கு பிறகு காய்ச்சலுக்கு ஊசி போட்டதால் சிறுவன் இறந்தானா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவரும்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் மகேசுவரன். இவரது மனைவி கற்பகவள்ளி. இந்த தம்பதியினருக்கு யூவஸ்ரீ என்ற 10 வயது மகளும், கவிதேவநாதன் என்ற 5 வயது மகனும் உள்ளனர் .

    மகேசுவரனின் மனைவி கற்பகவள்ளி உடல் நலக்குறைவால் 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். 2 குழந்தைகளையும் மகேசுவரனின் தாயார் வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் சிறுவன் கவி தேவநாதனுக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்தது. அருகில் இருந்த கம்பவுண்டரிடம் ஊசி போட்டு வந்துள்ளனர். இருப்பினும் காய்ச்சல் குறையாததால் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் சம்பந்தபுரம் பகுதியில் தனியாக மருத்துவமனை நடத்தி வருவதை அறிந்து அவரிடம் ஊசி போட சென்றுள்ளனர். அங்கு சிறுவன் கவி தேவநாதனுக்கு ஊசி போட்டு வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கு வந்த அரை மணி நேரத்தில் சிறுவன் திடீரென்று மயங்கி விழுந்தான்.

    உடனடியாக அவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்க மறுத்ததை தொடர்ந்து ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ராஜபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ப்ரீத்தி, வடக்கு காவல் ஆய்வாளர் ராஜா ஆகியோர் சிறுவனின் உறவினர்களிடம் சமாதானம் செய்து உடலை விருதுநகர் அரசு மருத்துவமனை கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு காய்ச்சலுக்கு ஊசி போட்டதால் சிறுவன் இறந்தானா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவரும்.

    காய்ச்சலுக்காக ஊசி போட்டு சிறுவனை இழந்த குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பகத்சிங்கை தூக்கிலிடும் காட்சியை சஞ்சய் நடித்தான்.
    • முகத்தை துணியால் மூடி கழுத்தில் கயிறை கட்டி சோபாவில் இருந்து குதித்துள்ளான்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா டவுன் கவுளகோட் பேரங்கானை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பாக்யலட்சுமி. இவர்கள் அங்குள்ள டி.சி. அலுவலகம் அருகே டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

    இவர்களது மகன் சஞ்சய்(வயது 12). இவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நாளை (செவ்வாய்க்கிழமை) பள்ளியில் கர்நாடக உதய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சஞ்சய், பகத்சிங் வேடம் அணிந்து நடிக்க இருந்தான். இதற்காக சஞ்சய் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தான்.

    அப்போது பகத்சிங்கை தூக்கிலிடும் காட்சியை சஞ்சய் நடித்தான். முகத்தை துணியால் மூடி கழுத்தில் கயிறை கட்டி சோபாவில் இருந்து குதித்துள்ளான். அந்த சமயத்தில், அவனது கழுத்தை கயிறு இறுக்கியது.

    இந்த வேளையில் வீட்டில் யாரும் இல்லாததால், சஞ்சய் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான். வெளியே சென்றிருந்த அவனது பெற்றோர், வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது, சஞ்சய் தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் பரங்கி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சஞ்சயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பரங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து சஞ்சயின் தந்தை நாகராஜ் கூறும்போது, ​​"எனது மகன் படிப்பு மட்டுமின்றி பாடம் சாராத விஷயங்களிலும் தீவிரமாக இருந்தான். நாடகத்தில் பகத்சிங்கின் வேடத்தில் நடிக்க தானே உடை மற்றும் பிற தேவைகளை செய்துகொண்டான். நாடக ஒத்திகை பார்த்தபோது அவன் இறந்துவிட்டான்.

    வழக்கமாக பள்ளி முடிந்ததும் எங்கள் டீக்கடைக்கு சஞ்சய் வருவது வழக்கம். ஆனால் சம்பவத்தன்று அவன் வரவில்லை. இரவில் அவன் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதைக் கண்டோம். உடனே அவனை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவனை எங்களால் காப்பாற்ற முடியவில்லை என கூறி கதறி அழுதார்.

    சஞ்சய் படிக்கும் பள்ளி முதல்வர் கோட்டுரேஷ் கே.டி கூறுகையில், "சஞ்சய் சிறந்த மாணவர், வகுப்பறை மற்றும் கூடுதல் பாடநெறி நடவடிக்கைகளில் முதலிடம் பிடித்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த பள்ளியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக தினத்தன்று கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் குழந்தைகளின் ஆர்வத்தை அந்தந்த வகுப்பு ஆசிரியர்களிடம் தெரிவிக்குமாறு பெற்றோர்களிடம் கூறினோம். பகத்சிங் நாடகம் தொடர்பாக சஞ்சய் தானே பயிற்சி செய்திருக்கலாம் என்றார்.

    ×