search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பகத்சிங் வேடத்தில் நடிக்க ஒத்திகை பார்த்த சிறுவன் மரணம்- தூக்கு கயிறு கழுத்தை இறுக்கியது
    X

    சஞ்சய் கவுடா

    பகத்சிங் வேடத்தில் நடிக்க ஒத்திகை பார்த்த சிறுவன் மரணம்- தூக்கு கயிறு கழுத்தை இறுக்கியது

    • பகத்சிங்கை தூக்கிலிடும் காட்சியை சஞ்சய் நடித்தான்.
    • முகத்தை துணியால் மூடி கழுத்தில் கயிறை கட்டி சோபாவில் இருந்து குதித்துள்ளான்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா டவுன் கவுளகோட் பேரங்கானை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பாக்யலட்சுமி. இவர்கள் அங்குள்ள டி.சி. அலுவலகம் அருகே டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

    இவர்களது மகன் சஞ்சய்(வயது 12). இவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நாளை (செவ்வாய்க்கிழமை) பள்ளியில் கர்நாடக உதய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சஞ்சய், பகத்சிங் வேடம் அணிந்து நடிக்க இருந்தான். இதற்காக சஞ்சய் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தான்.

    அப்போது பகத்சிங்கை தூக்கிலிடும் காட்சியை சஞ்சய் நடித்தான். முகத்தை துணியால் மூடி கழுத்தில் கயிறை கட்டி சோபாவில் இருந்து குதித்துள்ளான். அந்த சமயத்தில், அவனது கழுத்தை கயிறு இறுக்கியது.

    இந்த வேளையில் வீட்டில் யாரும் இல்லாததால், சஞ்சய் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான். வெளியே சென்றிருந்த அவனது பெற்றோர், வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது, சஞ்சய் தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் பரங்கி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சஞ்சயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பரங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து சஞ்சயின் தந்தை நாகராஜ் கூறும்போது, ​​"எனது மகன் படிப்பு மட்டுமின்றி பாடம் சாராத விஷயங்களிலும் தீவிரமாக இருந்தான். நாடகத்தில் பகத்சிங்கின் வேடத்தில் நடிக்க தானே உடை மற்றும் பிற தேவைகளை செய்துகொண்டான். நாடக ஒத்திகை பார்த்தபோது அவன் இறந்துவிட்டான்.

    வழக்கமாக பள்ளி முடிந்ததும் எங்கள் டீக்கடைக்கு சஞ்சய் வருவது வழக்கம். ஆனால் சம்பவத்தன்று அவன் வரவில்லை. இரவில் அவன் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதைக் கண்டோம். உடனே அவனை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவனை எங்களால் காப்பாற்ற முடியவில்லை என கூறி கதறி அழுதார்.

    சஞ்சய் படிக்கும் பள்ளி முதல்வர் கோட்டுரேஷ் கே.டி கூறுகையில், "சஞ்சய் சிறந்த மாணவர், வகுப்பறை மற்றும் கூடுதல் பாடநெறி நடவடிக்கைகளில் முதலிடம் பிடித்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த பள்ளியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக தினத்தன்று கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் குழந்தைகளின் ஆர்வத்தை அந்தந்த வகுப்பு ஆசிரியர்களிடம் தெரிவிக்குமாறு பெற்றோர்களிடம் கூறினோம். பகத்சிங் நாடகம் தொடர்பாக சஞ்சய் தானே பயிற்சி செய்திருக்கலாம் என்றார்.

    Next Story
    ×