விளையாட்டு மைதானத்தில் இரும்பு கதவு தலையில் விழுந்து 11 வயது சிறுவன் மரணம்

சிகிச்சை அளித்தும் பலனின்றி சில நிமிடத்திலேயே நிரஞ்சன் பரிதாபமாக இறந்து விட்டார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு மைதானத்தில் இரும்பு கதவு தலையில் விழுந்து 11 வயது சிறுவன் மரணம்
Published on

பெங்களூரு:

பெங்களூரு மல்லேசுவரம் அருகே உள்ள பைப்லைன் ரோட்டில் வசித்து வருபவர் விஜய்குமார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு நிரஞ்சன் (11) என்ற மகன் உள்ளார். இவர் மாநகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் நிரஞ்சன் விளையாடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றான்.

மாலை 4 மணியளவில் மல்லேசுவரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு நிரஞ்சன் சென்றபோது மைதானத்தின் முன்பக்க கதவு பூட்டி கிடந்தது. உடனே அந்த கதவை நிரஞ்சன் திறக்க முயன்றதாக தெரிகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த இரும்பு கதவு சரிந்து நிரஞ்சன் மீது விழுந்து அமுக்கியது. இதில் தலையில் பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிரஞ்சனை உடனடியாக அருகில் இருந்த அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சில நிமிடத்திலேயே நிரஞ்சன் பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து மல்லேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com