search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளிகாம்பாள் கோவில்"

    • காளிகாம்பாள்-பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரின் அம்சமாய் வீற்றிருக்கின்றாள்.
    • திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட அர்த்தமேரு அமைந்துள்ளது.

    ''துவஜஸ் தம்பத்திற்கு'' கிழக்கேயுள்ள கர்ப்ப கிரஹத்தினுள் அன்னை ஸ்ரீகாளிகாம்பாள் அர்த்த பத்மாசனத்தில் பாச, அங்குசத்தைக் கையிலேந்தி, கமலத்தில் புன்னகை செய்கின்றாள். அம்பாளின் திருவடியில் பிருங்கி மகரிஷியின் கொள்ளு பேரனும் துவஷ்ட விஸ்வகர்மாவின் மகனுமான பிரம்ம ரிஷி ஸ்ரீவிஸ்வரூபனின் (திரிசிரன்) மூன்று தலைகள் செதுக்கப்பட்டுள்ளன.

    (ஆதாரம்: வியாச முனிவர் அருளிய ஸ்ரீமத் பாகவதம், துவைபாயன முனிவர் அருளிய ஸ்ரீதேவி பாகவதம், ஸ்ரீநாராயண பட்டதிரி அருளிய ஸ்ரீநாராயணீயம்)

    ஸ்ரீஅம்பாள் மேற்கு நோக்கி அமர்ந்திருப்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும். அன்னையின் திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கரர் ரால் நிறுவப்பட்ட அர்த்தமேரு அமைந்துள்ளது.

    மூலவர் உட்பிரகாரத்திற்கு மேற்கில் உற்சவர் மண்டபம் அமைந்துள்ளது. ஸ்ரீஅம்பாள் பெரிய நாயகி (உற்சவர்) மகா தேஜசுடன் மகாலட்சுமியாகவும், மகா சரஸ்வதியாகவும் இரு பக்கங்களிலும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றாள்.

    ''ஸசாமர ரமாவாணி ஸ்வயதட்சிண ஸேவிதா'' என்று ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தில் கூறப்பட்டுள்ளது. லட்சுமி தேவியும், சரஸ்வதி தேவியும் தன்னுடைய வலது இடது பக்கத்திலும் வெண்சாமரத்துடன் நின்று சேவிக்கப்படுபவள் என்பது இதன் கருத்து.

    அம்பாளின் முன்னிலையில் திருமகளும் கலைமகளும் பணிப்பெண்களாக இருந்து பணிபுரிகின்றனர். உலக நடைமுறையில் செல்வமும், கல்வியும் சேர்ந்திருப்பதைக் காண்பது அரிது. ஆனால், அம்பாளின் அருளுக்கு பாத்திரமாகின்றவர்களிடம் கல்வியும் செல்வமும் சேர்ந்தே அமையும் என்பது உறுதி.

    பெரிய நாயகி உற்சவர் அம்பாளே கிண்ணித்தேரில் திருவீதி வலம் வருகிறாள். ஸ்ரீஅம்பாள் சிறிய நாயகி உற்சவர் பெரும்பாலும் கோவில் பிரகார மண்டபத்துக்குள்ளேயே பிரதட்சணம் வருவதுண்டு. உற்சவர் மண்டபத்திற்கு கிழக்கில் சிற்ப வேலைபாடுகளுடன் கருங்கல்லிலான பதினாறு கால் மண்டபம் அழகுற அமைந்துள்ளது.

    இந்த மண்டபத்தில் எட்டு தூண்களில் அஷ்டாட்சரியை நினைவூட்டும் வகையில் சிற்சிறு வடிவங்களில் பாலகிருஷ்ணன் சிறிய திருவடி வழிபடும் பெண் தபசி, பெண் சேவார்த்திகள் சிற்பங்கள் அமைந்துள்ளன. காளிகாம்பாள்-பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரின் அம்சமாய் வீற்றிருக்கின்றாள்.

    ஸ்ரீகாளிகாம்பாள் சந்நிதி கருவறையின் முன்பு 12 கால் மண்டபம் அமைந்துள்ளது. விமானம் மேற்கட்டியில் - பாம்பு - சூரிய சந்திரனைப் பற்றுவது போல் அமைந்துள்ளனர். மீன்கள் சிறியதும் பெரியதும் உலாவுவது போன்ற கடற்காட்சியை அமைத்துள்ளார்கள். வாஸ்து முறைப்படி அமைந்த திருக்கோவிலாக அமைந்துள்ளது காளிகாம்பாள் திருக்கோவில்.

    முதற்பிரகாரம் வலம் வரும் போது அக்னி மூலை மடப்பள்ளி. அடுத்து தென் கிழக்கு. உற்சவர் வீதிவுலா புறப்படுமுன் கண்ணாடி சேவை தென் சுவரில். சுதை வேலை சத்ரபதி சிவாஜி அம்பாளை தொழுது வழிபடும் காட்சி. பாரதியார் அருகில் நிற்கிறார்.

    அடுத்து காமாட்சியை ஆதிசங்கராச்சாரியார் வழிபடும் காட்சி. மேல் வரிசையில் தென்மேற்கு மூலையில் சித்தி விநாயகர் கம்பீரமாக அமர்ந்து காட்சித் தருகின்றார். மேற்குக் குட வாயில் கோட்டம் திரிசூலம் (துவஜஸ்தம்பம்) கொடி மரம் இருபுறம் துவார பாலகியர் நின்று அம்மனை தரிசிக்க வழி அனுப்புகின்றனர்.

    வடமேற்குப் பகுதியில் துணைவிகள் சமேதராக இருக்கும் அபூர்வ சித்தி-புத்தி விநாயகரும், அருகிலிருக்கும் அகோர வீரபத்திர சுவாமி, மாகாளியும் மகிமை நிறைந்தவர்கள். பவுர்ணமி நாளன்று அகோர வீரபத்திர சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தினால் - பில்லி - சூனியம் - பேய் - பிசாசு போன்றவை எது பற்றியிருந்தாலும் உடனே விலகி விடும்.

    வடகதிர்காம முருகப்பெருமான் ஸ்ரீவள்ளி தேவசேனையுடன் அருள்புரிகின்றார். சஷ்டி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு அமர்ந்துதான் ''உள்ளம் உருகுதைய்யா'' என்ற பாடலை அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் 1952-ல் பாடியுள்ளார் என்பது கல்வெட்டுச் செய்தியாகும். அப்பாடலை பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் அவர்கள் பாடியுள்ளார்.

    அடுத்த கோ மடம் - நாகேந்திரர் சன்னதி - ஸ்ரீவிராட்விஸ்வ பரப்பிரம்மம் சன்னதி அமைந்துள்ளது. அதன் எதிரில் ஸ்ரீகாயத்ரி தேவி சன்னதியும், ஸ்ரீதுர்க்கை சன்னதியும் அமைந்துள்ளன. துர்க்கை சன்னதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் பக்தர்கள் எலுமிச்சம் பழம் விளக்கேற்றியும் நெய் விளக்கேற்றியும் வழிபாடு செய்வது கண் கொள்ளாக் காட்சியாகும்.

    வடகிழக்கில் தெற்கு நோக்கி வெள்ளித் தேர் மற்றும் வாகன மண்டபம் அருகில் அறங்காவலர் அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது. அடுத்து நடராஜர் சன்னதியில் ஆண்டுதோறும் நடராஜர் அபிஷேகம் திருவாதிரை உற்சவம் - மாணிக்க வாசகர் விழா சிறப்பு சொற்பொழிவுடன் திருவாசகம் ஓதப்பெற்று நடைபெற்று வருகிறது.

    • ஸ்ரீகாளிகாம்பாளை ரிஷிகளும், தேவர்களும் வணங்கியதாகப் புராணங்கள் சொல்கின்றன.
    • ‘‘முக்தி தரும் நகரங்களுள் முக்கியமாம் காஞ்சி நகர்’’

    ''தொண்டை வள நாடு சான்றோருடைத்து'' என ஒளவைப் பிராட்டியாரால் சிறப்பிக்கப்பட்ட தொண்டை மண்டலத்தில், காஞ்சி மாநகரத்தில் அமர்ந்துள்ள ஸ்ரீகாமாட்சி தனது இச்சா மந்திரத்தால் பன்னிரண்டு திருத்தலங்களில் காட்சி தந்து கருணைபுரிகின்றாள். அவ்வண்ணம் அமர்ந்த திருத்தலங்களில் ஒன்றாக விளங்குவது ஸ்ரீகாளிகாம்பாள் அமர்ந்துள்ள பரதபுரி என்றழைக்கப்படும் இத்தலமாகும்.

    ''முக்தி தரும் நகரங்களுள் முக்கியமாம் காஞ்சி நகர்'' என்ற திருத்தலத்துக்கு ஈசான்யப் பாரிசமாகவும், திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற திருமயிலைக்கு வடக்குப் பாரிசமாகவும், மகத்துவமிகுந்த திருவொற்றியூருக்குத் தென் பாரிசமாகவும், பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ள திருவேற்காட்டிற்கு நேர் கிழக்காகவும் அமைந்துள்ளது இத்திவ்யத் தலமாகும்.

    இத்தலத்தைப் பற்றி, மச்சபுராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம் மற்றும் பவிஷ்ய புராணங்களில் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகாளிகாம்பாளை ரிஷிகளும், தேவர்களும் வணங்கியதாகப் புராணங்கள் சொல்கின்றன.

    வியாசர், பராசர், அகத்தியர், ஆங்கிரேசர், புலஸ்தியர் மற்றும் வருணன் முதலான முனிசிரேஷ்டர்களும் தேவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும், செல்வத்துக்கதிபதியான குபேரன் இத்தலம் வந்து ஸ்ரீ காளிகாம்பாளை வழிபட்ட பின்னர்தான் குன்றாத பெருஞ் செல்வங்களைப் பெற்றான் என்ற புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன.

    ராஜ கோபுரம்

    22.1.1976 அன்று தவத்திரு சுவாமி ராமதாசர் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் பிரம்மஸ்ரீ டி.எஸ்.ராஜப்பா தலைமையில் ராஜகோபுரத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 21.1.1983 அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அவ்வாறே ராஜகோபுரத்தின் வாயிலுக்கு உட்புறம் இருந்த திறந்த வெளியில் ஸ்ரீகாயத்ரி மஹா மண்டபத்தில் 20.11.1982 அன்று மண்டபத் திருப்பணி தொடங்கப்பட்டு விரைவில் முடிக்கப்பட்டது.

    மேற்கு நோக்கிய சன்னதி

    அன்னையின் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது ஏன்? எதற்கு? என்ற வினா நம்முள் எழுகின்றது. ஆம். உண்மையே. கிழக்கு (பூர்வாபி முகம்) நோக்கிய சன்னதிக்கு எத்துணை சிறப்புகள் உண்டோ அத்துணை சிறப்புகளைக் காட்டிலும் கூடுதலாக மேற்கு நோக்கிய (பச்சிமாபி முகம்) சன்னதிக்கு உண்டு. பாரத நாட்டில் மேற்கு நோக்கிய சன்னதிகள்

    1. காசி - விஸ்வேஸ்வரர்

    2. திருக்காளத்தி - காளத்தி நாதர்

    3. சென்னை - ஸ்ரீகாளிகாம்பாள்

    4. திருமயிலை - கபாலீஸ்வரர்

    5. திருவான்மியூர் - வான்மீகிநாதர் (மருந்தீஸ்வரர்)

    6. திருக்காஞ்சி - வரதராஜப்பெருமாள்

    7. திருவாணைக்கா - ஜலகண்டேஸ்வரர்

    8. திருச்சி - தாயுமானவர்

    9. பழனி - முருகப்பெருமான்

    இதுபோன்ற ஆதாரங்களை ஆய்ந்து பார்க்கின்ற போது இவைகள் அனைத்தும் விஸ்வகர்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே, மேற்கு பார்த்த சன்னிதானங்கள் அனைத்தும் விஸ்வகர்ம செழுமரபினர்கட்கு பாத்தியப் பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்டதும் போற்றி வழி பாடாற்றப்படுவதும் ஆகும் என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிவு.

    • இறைவனுக்கு கமடேஸ்வரர் என்று பெயர்.
    • லிங்க வடிவில் கலந்திருக்கும் நிலை என்பதே கமடேஸ்வரர் என்பதன் பொருள்.

    இங்கு வீற்றிருக்கும் இறைவனுக்கு கமடேஸ்வரர் என்று பெயர். இப்பெயர் வந்த வரலாறு ஒரு புராணச் செய்தியை உள்ளடக்கியது.

    கைலையில் உமா, மகேஸ்வரன் இருவரில் அழகில் சிறந்தவர் யார் என்று சிவ பெருமான் தெரிந்துகொள்ள விரும்பினார். இக்கேள்விக்கு எந்த விடையை அளித்தாலும் அது இருவரில் ஒருவரை வருத்தப்படுத்தும் என்பதால் கேள்விக்கு விடையளிக்க ஒருவரும் முன்வரவில்லை.

    அதற்கு அவர் தான் ஏற்படுத்தியுள்ள ஒரு தாமரைத் தடாகத்திற்கு சென்று அதன் எழிலைக் கண்டு வருமாறு பின்னர் விடையளிப்பதாகவும் கூறினார். பெருமானும் இறைவியுடன் சென்று பார்த்தபோது அந்த சூழல் தவம் மேற்கொள்ளத் தகுந்த இடமாக தோன்றவே சிவபெருமான் அங்கமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். இறைவி எழில் மிக்க அந்த சூழலால் கவரப்பட்டு அங்குள்ள மலர்களாலும் மற்றும் பட்டுத் துகிலாலும் தன்னை மேலும் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டாள்.

    இருவரும் புறப்பட்டு வரும் வழியில் பரப்ரம்மத்தால் சிருஷ்டிக்கப்பட்ட பெரியதொரு நிலைக்கண்ணாடியில் அவர்கள் தங்கள் உருவத்தை பார்க்க நேரிட்டது. அதில் பாம்பணி, சுடலைப்பொடி, வெள்ளெருக்கு மாலை, புலித்தோல் என்றிந்த விதமான தன் தோற்றத்தைக் கண்டவுடன் பரப்ரும்மம் எவ்வளவு அழகாகத் தம்மை தர்மசங்கடத்தில் இருந்து விடுவித்துக் கொண்டார் என்பது புரிந்தது.

    பரப்ரம்மம் நிலையில்லாத அழகின்மேல் ஆசை கொண்ட மனம் அருவுருவமாக `லிங்க' வடிவில் அமைவதாக என்று கூறினார். கமம் என்றால் நிறைவு (தொல்காப்பியம் கூறும் பொருள்) ஆன்மாக்களுடன் அருவருவாய் லிங்க வடிவில் கலந்திருக்கும் நிலை என்ற பொருளில் கமடேஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

    • தேர் திருவிழாவில் ஓர் சமுதாய தத்துவம் அடங்கியுள்ளது.
    • `விராட் விஸ்வ சொரூபமே எட்டு அடுக்காகும்'

    தேர் திருவிழாவில் ஓர் சமுதாயத் தத்துவம் அடங்கியுள்ளது. தேரையிழுக்க ஒருவரால் முடியாது. எனவே பலருடைய ஒத்துழைப்பும் முழுமையாக தேவை. சும்மா கையை வைத்து இழுத்தால் தேர் நகராது. பலரும் முழுமையாக செயல்பட்டாலும் பலரும் பல திசையில் இழுத்தாலும் தேர் நகராது.

    ஒருமுகப்பட்டு ஒரே திசையில் இழுக்க வேண்டும். ஆக அப்படி இழுத்தாலும் ஒரு நொடிப் பொழுதில் நிலையை அடைவதில்லை. காலம் தேவைப்படுகின்றது. அதுபோலவே, சமுதாயம் ஒற்றுமையுடன் செயல்படவும், ஒற்றுமை நிலவவும் ஆலயங்களில் திருத்தேர் விழா கொண்டாடினர்.

    சென்னபுரி, ஸ்ரீகாளிகாம்பாள் ஸ்ரீ சக்ரத் தேர் மிகவும் அழகும் சக்தியும் வாய்ந்த திருத்தேராக காட்சியளிக்கின்றது. பிரம்மோற்சவத்தில் இரவில் ஒலிக்கும் வெண்கல ஓசை `ஓம் ஓம்' என்ற பிரணவ ஓசையை நம் செவியில் இனிய இசையாக ஒலிக்கும் என்பதை நேரில் கண்டவர் கூறுவர்.

    தேரில் முப்பத்து முக்கோடி தேவர்களும், யட்சர்களும் கின்னர்களும், கந்தருவர்களும் வசிப்பார்கள். உருத்திர கணிகைகளும், ரிஷிகளும் வசிப்பார்கள். இவர்களின் சிற்பங்கள் தேரின் அடிப்பாகத்தினைச் சுற்றிலும் இருக்கும். மேலும், பிரம்மா, விஷ்ணு, பரமசிவன், இந்திரன், சூரியன் இவர்கள் அதிதேவதைகளாக இருப்பர். தேரின் அமைப்பு அண்ட பிண்டத்திற்கு சமானம்.

    `விராட் விஸ்வ சொரூபமே எட்டு அடுக்காகும்' உச்சியில் இருக்கும் கலசம் சோடசாந்தம், அதற்கடுத்த கீழடுக்கு துவாத சாந்தம், அதற்கு அடுத்து கீழடுக்கு மத்தக ஸ்தானம், அடுத்த அடுக்கு புருவ மத்திய ஸ்தானம், நடுவில் தாங்கும் குத்துக் கால்கள் முன் மூன்று துளைகள் மூன்று கண்கள் பின்புறம் உள்ளது. சிகையும் இட, வலக் காதுகளும் ஆகும். இறைவன் எழுந்தருளும் கேடய பீடம் முகம்.

    குதிரைகள், சூரிய, சந்திர கலைகள் சாரதி அக்னி கனல் இவை நாசி (மூக்கு) ஆகும். அடுத்த கீழ் அடுக்கு கண்ட ஸ்தானம். அதையடுத்த கீழடுக்கு இருதய ஸ்தானம். அதற்கடுத்தது நாபி ஸ்தானம், அதை அடுத்து குண்டலி ஸ்தானம், சக்கரங்கள் தசவாயுக்கள், இறைவி இதற்கு கர்த்தா தான் ஒருத்தியே என்று வாயுக்கள் இறைவி இதற்கு கர்த்தா தான் ஒருத்தியே என்று உணர்த்தி இவ்வாறு அமைந்த பிண்டதத்வ சரீரமாகிய இரதத்தில் தசவாயுக்களாகிய சக்கரங்களை நிறுத்தி அசைவற்ற மனதை உந்தி குண்டலினியில் இருந்து நாபிக்கும், நாபியிலிருந்து கண்டத்திற்கும் அதில் இருந்து வாய்க்கும் முறையே இரத குதிரையாம் நாசிக்கும் அங்கிருந்து கண்கள் வழியாகவும் நடு வழியாகவும் மேல் நோக்கி ஆறாம் அடுக்காகிய புருவத்திற்கும் ஏற்றி வயப்பட்டு சும்மாயிருந்தபடி இருக்கும் நித்ய சுகியாய் இருந்திடல் வேண்டுமென்று லயக்கிரமத்தைக் காட்டுகிறது.

    மேலும் தேரானது திரிபுராதிகளை சிவன் சிரித்து எரித்து ஆன்ம கோடிகளைக் காப்பாற்றிய காத்தல் தொழிலுக்கு அறிகுறியாகவுள்ளது. இவ்வளவு தத்துவமுள்ள தேரில் அன்னை ஸ்ரீ காளிகாம்பாள் வருவதை தரிசிப்பது அஷ்டலட்சுமி கடாட்சமும் கோடி புண்ணியங்களும் உண்டு.

    • கும்ப கலசம் மூன்று நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
    • தேரின் கலசம் தங்க முலாம் பூசியது.

    ஆண்டு தோறும் பிரம்மோற்சவத்தின்போது 7-ம் நாளன்று காலையில் ரதோற்சவம் பூந்தேராகவும் 9-ம் நாள் இரவில் கிண்ணித் தேர் என்னும் அற்புத ஸ்ரீ சக்ர ரதம், வெண்கலக் கிண்ணிகளால் அலங்கரிக்கப்பட்டு, அருள்மிகு காளிகாம்பாள் பவனி வருவது கண்கொள்ளக் காட்சியாக இருந்து வந்தது என்று ஆங்கிலேயே வரலாற்று ஆசிரியர் எச்.டி.லவ் என்பவர் தனது சென்னை நகர வரலாறு என்னும் நூலில் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    15-ம் நூற்றாண்டுகளுக்கு மன்பெ ஸ்தாபிதமான இத்தொன்மை வாய்ந்த விஸ்வகர்ம சமூகத்தினரின் திருக்கோவிலுக்கு ஆண்டு தோறும் பிரம்ம உற்சவம் நடைபெறும்போது பூந்தேரிலும் இரவில் கிண்ணிகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சக்ர ரதத்தில் பவனி செல்லும் ரதமானது காலத்தால் பழுதுபட்டு 1940-க்கு பிறகு தடைப்பட்டு விட்டது. சான்றோர்களின் முயற்சியால் புதிய ரதம் ஒன்று செய்யப்பட்டு ஸ்ரீ பிரபவ வருடம் வைகாசி மாதம் முதல் ஸ்ரீ அம்பாள் பவனி வருகிறாள்.

    1. தொன்மையாக இருந்த ரதத்தின் உயரம் 33 அடி, அகலம் 12 அடி. புதிதாக செய்யப்பட்ட தேரின் உயரம் 22 அடி, அகலம் 10 அடி, 4 சக்கரங்கள் கொண்டது.

    2. கும்ப கலசம் மற்றும் மூன்று நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. தேரின் கலசம் தங்க முலாம் பூசியது. பழைய தேரினுடையது. குடை வெள்ளியினால் ஆனது.

    3. குண்டலி ஸ்தானம், நாடி, இருதய ஸ்தானம், கண்ட ஸ்தானம், கும்ப பீடம், ஸ்ரீ அம்பாள் பீடம், மூன்றடுக்கு விமான நிலைகள் யாவும் தேக்கு மரத்தால் செய்யப்பட்டுள்ளது. 201-766 கன அடி தேக்கு உபயோகப்படுத்தப்பட்டள்ளது. அதன் கிரயம் 1,04,794.85 ஆகின்றது.

    4. தேர் சக்கரங்களுக்கும் இருசு அச்சு மரங்களுக்கும் வாகை மரம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. கிரயம் ரூ.13,745.55.

    5. தேரின் இரும்பு இருசுகளின் நீளம் 10 அடி, கனம் 5 அங்கும்.

    6. தேர் மையங்கள் 40 செம்மரத்தாலும் மேல் நிலைகள் தேக்கு மரச்சட்டங்களால் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 150 கன அடி மரம் அடங்கியுள்ளது.

    7. இருசுகள், இரும்பு தளவாடங்கள், புஷ்கள், இரும்பு பட்டைகள், போல்ட் ஆணிகள் முதலானவைக்கு விலை மதிப்பு ரூ.27,075.80.

    8. தேரில் ஸ்ரீ அம்பாள் மற்ற தெய்வங்களின் அவதார திரு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூலி வகைக்கு ரூ. 70 ஆயிரம்.

    9. வெண்கல கிண்ணிகள் பழைய தேரினுடையது. நல்ல நிலையிலுள்ளது. 800 கிண்ணிகள்தான் புதிய தேரில் பொருத்தப்பட்டுள்ளது.

    இத்தேரினை அமைக்க 1985-ல் அறநிலையத் துறை மதிப்பீட்டின் அங்கீகாரம் ரூ.1 லட்சத்து70 ஆயிரம். ஆனால் தற்போதுள்ள அகவிலையினால் உபகரணங்கள் இரும்பு, மரம் உயர்வினாலும் இதன் மதிப்பீடு ரு.2 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இத்தேரினை காலம் சென்ற திருவண்ணாமலை ஸ்தபதியார் டி.சண்முகாச்சாரியாரால் எஸ்டிமேட்டுகள் வரைபடங்கள் அமைக்கப்பட்டு பிறகு சுவாமிமலை ஸ்தபதிகள் பிரம்மஸ்ரீ நடராஜ ஸ்தபதி பிரம்மஸ்ரீ கே.வேலு ஸ்தபதியின் சீறிய முயற்சியால் நல்ல முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    • தேவியின் ஸ்ரீசக்கரத்தை குறிப்பதே வெண்கல கிண்ணித்தேர்.
    • அம்பாள் கிண்ணித்தேரில் வீதியுலா

    தேர், திருவீதி உலா வருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் கிண்ணித் தேரின் பவனியைப் பார்த்திருக்கிறோமா? இந்தியாவிலேயே வேறெங்குமில்லாத புகழ் பெற்ற கிண்ணித் தேரினை அருள்மிகு ஸ்ரீகாளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோவிலில்தான் காண முடியும். எதற்கும் ஒரு வரலாறு உண்டு. அதைப் போல இந்தக் கிண்ணித் தேருக்கும் வரலாறு உண்டு.

    சென்னம்மன் குப்பம், மதராசி குப்பம், ஆறு குப்பம், மேல்பட்டு என்னும் பகுதிகளே இன்றுள்ள சென்னப்பட்டினம் ஆகும். சென்ன - அழகிய அம்மாள் - தாய். இச்சென்னம்மனே இன்றுள்ள காளிகாம்பாளது முதற் பெயர். இவளது பெயரால் முன்னைய சென்னை ராஜ்யமும் தலைநகரும் உண்டாயின.

    எச்.டி.லோவ் எழுதிய மதராஸ் வரலாற்றில் சென்னம்மன் கோவில் மூலவரை கல்யாணி என்றும் கவுரிம்மன் என்றும் பக்தர்கள் அழைத்தனர் என்று குறிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிகப்பழைய கோவில் காளிகாம்பாள் கோவிலே என்றும் காலம் காண முடியவில்லை. காலங்கடந்தது என்றும் சரித்திர ஆசிரியர் கூறுவர். கி.பி. 1640-ல் காளத்தீஸ்வரர் கோவிலும் கி.பி. 1725-ல் கச்சாலீஸ்வரர் கோவிலும் கட்டப்பட்டன.

    400 ஆண்டுகளுக்கு முன்பெ சீரும் சிறப்புமுற்று ஸ்ரீ காளிகாம்பாள் கோவிலில் நடந்த பெருவிழாவில் வெண்கலக் கிண்ணித் தேர் ஓடிற்று. அயல் நாட்டினரும் இத்தேரின் ஓசை கேட்டு மயங்கினர். 24-9-1641ல் சென்னை ஆட்சி ஆங்கில ஏஜென்சியிடமிருந்த போது வலக்கை இடக்கை ஜாதியினர் ஊர்வலம் வரும் விதிகளுக்காகப் பூசலிட்டனர். கி.பி. 1643 கிரீன் ஹில்ஸ் சமாதானம் செய்தார். உடன் பாட்டால் கிண்ணித் தேர் ஓடியது. தேவியின் ஸ்ரீசக்கரத்தைக் குறிப்பதே வெண்கலக் கிண்ணித்தேர் ஆகும்.

    கி.பி. 1655 வலக்கையர் இடக்கையர் அறியாமையால் சண்டையிட்டனர். ஆங்கிலேயர் இந்த இரு திறத்தாரையும் கூட்டிக்கொண்டு போய் காஞ்சி காமகோட்டத்தில் காமாட்சியின் வலப்பக்கத்தில் வலக்கை ஜாதியினரையும் இடப்பக்கத்தில் இடக்கை ஜாதியினரையும் நிற்க வைத்து ஊர்வலத்தில் சண்டையிடக்கூடாது என உடன்படிக்கையில் கையெழுத்திடச் செய்தனர். ஸ்ரீ காஞ்சி காமாட்சியின் பெரில் ஜாதியினர் சத்தியம் செய்தனர். மறுபடியும் கிண்ணித் தேர் மராட்டியர் டவுனில் (முத்தியாலுப்பெட்டை, பகடாலுப்பெட்டை) உலா வந்தது.

    கிண்ணித் தேர் விழா, முதல் கவனர் பிட் நிறுத்தினார் சென்னை இரண்டாம் கவர்னர் சாண்டர்ஸ் காளிகாம்பாள் கோவிலுக்கு விஜயம் செய்து 21-9-1790ல் தாமும் தேரின் வடத்தைக் கையால் பற்றி இழுத்து பக்தர்களோடு பரசவப்பட்டார். அம்பாள் கிண்ணித்தேரில் வீதியுலா கண்கொள்ளாக் காட்சியாகும். அடியேனும் சிறு வயதில் கண்டும் கேட்டும் களித்துள்ளேன். வெண்கலத் தட்டுகளின் ஓசையும் ஒலியும் பக்தர்களை மெய்மறக்கச் செய்யும் என்பது உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை.

    இந்தியாவில் மிகப்பெரிய வெண்கலக் கிண்ணித் தேர் சென்னைபுரி ஸ்ரீகாளிகாம்பாள் கோவிலில் உள்ளதே, கடலூரிலும் பாண்டியன் சேரியிலும் (புதுச்சேரி) கிண்ணித் தேர்கள் உள்ளது. இத்தேரினை ஸ்ரீ சக்கர ரதம் என்பர் பெரியோர். கி.பி. பதினோறாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தனி அம்மன் கோவில்கள் உண்டாயின.

    பின்னரே சாமி, அம்மன் கோவில்கள் சிவசக்தி தத்துவம் கண்டன. காமேஸ்வரர் அல்லது கமடேஸ்வர் (சிவன்) பிரகாசத்தை காமேஸ்வரி, சிவகாமி, காமகோடி, வனிதா, திரிபுரசுந்தரி விமர்ஸா இவை இரண்டினையும் சேர்த்தே ஸ்ரீசக்கரம் தோன்றியது. ஸ்ரீசக்கரம் இரு வகை முக்கோணங்களையுடையது.

    ஒரு வகை ஆண்பால் (சிவன்) குறிக்கும் நான்கு முக்கோணங்களாம். மற்றொரு வகை பெண்பால் குறிக்கும் ஐந்து முக்கோணங்களாம். இவைகளின் உச்சியே பிந்து ஸ்தானம் எனப்படும். அந்த நடுவண் வீற்றிருப்பவர்களே என்றும் பிரியாத காமேஸ்வரர் வனிதா எனப்படுவோர். இத்தகைய ஸ்ரீ சக்கரத்தை ஆதிசங்கரர் முக்கிய சக்தி ஆலயங்களில் ஸ்தாபித்தார். காஞ்சி காமாட்சி முன்னர், குற்றாலத்தில் ஸ்ரீ சங்கர பீடம் ஆவுடையார் கோவில் மூலத்தில், சென்னை காளிகாம்பாள் கோவில் காளியம்மன் முன்னர் இன்றும் அவைகளைக் காணலாம்.

    • சித்ரா பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை
    • வைகாசியில் ஸ்ரீ அம்பாளுக்கு பிரம்மோற்சவம்

    காளிகாம்பாள் கோவிலில் ஒவ்வொரு மாதமும் விழாக் காலங்களே.

    சித்திரையில் சித்ரா பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெறுகின்றது.

    வைகாசியில் ஸ்ரீ அம்பாளுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. பிரம்மோற்சவத்தின் முந்தைய நாள் மூஞ்சுறு வாகனத்தில் ஸ்ரீ விநாயகபெருமான் வீதி உலா நடைபெற்று, இத்திருக்கோவிலின் அருகிலுள்ள அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று புதுமண் கொண்டு வந்து மறுநாள் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் ஆரம்பமாகிறது.

    முதல் நாள் இரவு அம்பாள் வீதி உலாவும், 2-ம் நாள் இரவு காமதேனு வாகனத்திலும், மூன்றாம் நாள் காலை பூதகி வாகனத்திலும், நான்காம் நாள் இரவு ரிஷப வாகனத்திலும், ஐந்தாம் நாள் இரவு சிம்ம வாகனத்திலும், ஆறாம் நாள் இரவு யானை வாகனத்திலும், ஏழாம் நாள் காலை தேரோட்டமும், எட்டாம் நாள் இரவு குதிரை வாகனத்திலும், ஒன்பதாம் நாள் இரவு கிண்ணித் தேர் என வழங்கும் ஸ்ரீ சக்ர ரதாரோஹனத்தில் ஸ்ரீ அம்பாள் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

    பத்தாம் நாள் காலை ஸ்ரீ நடராஜர் உற்சவமும், பின்பு தீர்த்தவாரி உற்சவமும், அன்று இரவு விசாகத்தை முன்னிட்டு ஆறுமுக சாமி உற்சவமும், கொடி இறக்கமும் நடைபெறுகின்றது. அடுத்து பந்தம்பறி உற்சவமும், அதற்கு மறுநாள் ஸ்ரீ உற்சவமூர்த்தி ஸ்ரீ அம்பாளுக்கும் மற்றுமுள்ள உற்சவ மூர்த்திகளுக்கு சாந்தி அபிஷேகம் நடைபெறுகின்றது.

    பிரம்மோற்சவத்தினை முன்னிட்டு அலங்கார ஸ்ரீ நடராஜர் மண்டபத்திற்கு வருகை புரிந்த உற்சவமூர்த்தி அம்பாள் அமாவாசை அன்று தன் ஆஸ்தானத்திற்கு செல்லும் ஆஸ்தான பிரவேச உற்சவமும் நடைபெறும். அதற்கு மறுநாள் அம்பாளின் விஸ்வரூப தரிசனமும் நடைபெறுகின்றது.

    ஆனி மாதம் ஸ்ரீ அம்பாளுக்கு வசந்த உற்சவமும் ஆடியில் ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் இரவு வெள்ளி தொட்டிலில் ஊஞ்சல் உற்சவமும் பத்து ஞாயிற்றுக்கிழமைகள் பகல் 11 மணியளவில் முறையே 108 குடம் பாலபிஷேகம், 108 குடம் இளநீர் அபிஷேகம், 108 குடம் தயிர் அபிஷேகம், 108 குடம் மஞ்சள் அபிஷேகம், 108 குடம் சந்தன அபிஷேகம், 108 குடம் விபூதி அபிஷேகம், 108 குடம் பன்னீர் அபிஷேகம், 108 குடும் பஞ்சாமிர்த அபிஷேகம், 108 பூக்கூடையால் புஷ்பாஞ்சலியும் நடைபெறுகின்றது.

    மேலும் ஆடி மாதத்தில் ஆடிக் கிருத்திகையில் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேகமும, மயில் வாகனத்தில் ஸ்ரீ முருகப்பெருமான் வீதி உலாவும் நடைபெறுகின்றது. ஆடிப்பூரத்தன்று ஸ்ரீ அம்பாளுக்கு விசேஷ அபிஷேகமும் சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகின்றது. ஆவணியில் விநாயகர் சதுர்த்தி உற்சவம் நடைபெறுகின்றது. புரட்டாசியில் பத்து நாட்கள் சாரதா நவராத்திரி விழா நடைபெறுகின்றது.

    நவராத்திரியில் முதல் மூன்று தினங்கள் துன்பங்களை நீக்கும் துர்க்கா பரமேஸ்வரியாகவும், இரண்டாவது மூன்று நாட்களில் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ மகாலட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்களில் ஞானபாக்கியத்தைத் தரும் ஸ்ரீ சரஸ்வதியாகவும் அருள்பாளிக்கிறாள்.

    இந்த நவராத்திரியின் ஏழாம் நாளன்று ஸ்ரீ அம்பாளுக்கு நவவர்ண பூஜை நடைபெறுகின்றது. மேலும் இந்த நவராத்திரி தினங்களில் குழந்தைகளை அம்பாளாக பாவித்து பூஜை செய்வது சிறப்பு அம்சமாகும். மேலும் இந்த நவராத்திரி தினங்களில் மாலையில் இன்னிசை, சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    ஐப்பசி பவுர்ணமியில் அருள்மிகு கமடேஸ்வரர் அருள்மிகு அருணாச்சலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கந்த சஷ்டி உற்சவமும், லட்சார்ச்சனையும், சூரசம்ஹார உற்சவமும் நடைபெறுகின்றது.

    சூரசம்ஹாரத்தின் மறுநாள் ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று மயில் வாகனத்தில் ஸ்ரீ முருகப்பெருமான் வீதி உலாவும் நடைபெறுகின்றன. ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாண உற்சவத்தின் போது பெண்களுக்கு மஞ்சள் குங்குமத்துடன் திருமாங்கல்ய சரடுகள் வழங்கப்படுகின்றன.

    கார்த்திகை மாதத்தில் சோம வாரங்களில் ஸ்ரீ அம்பாளுக்கு விசேஷ அபிஷேகமும் இரவு வெள்ளித் தொட்டியில் ஸ்ரீ அம்பாள் அலங்காரத்துடன் கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வருவாள்.

    கார்த்திகை தீபத்தன்று ஒன்பது பெரிய அகலில் தீபமேற்றி அம்பாள் எதிரில் மஹா தீபாராதனை நடைபெற்று ஒவ்வொரு சன்னதியில் மேற்படி அகல் தீபம் ஏற்றப்பட்டு ராஜகோபுரத்தில் மகாதீபம் ஏற்றப்படும். பின்பு, அலங்காரம் செய்யப்பட்ட அம்பாள் கோவிலில் வெளியில் வந்து நிற்க சொக்கப்பனை கொளுத்தப்படும்.

    சிறப்பு வாய்ந்த மார்கழி மாதம் முழுவதும் தினசரி விடியற்காலை 4.30 மணியளவில் கோவில் திறக்கப்படுகிறது. சிறுவர், சிறுமியர் உள்பட பக்தர்கள் அனைவரும் விடியற்காலையில் எழுந்து பக்தி பரவசத்துடன் திருக்கோவிலுக்கு வருகை தந்து கூட்டு வழிபாடு நடத்துவது சிறப்பு அம்சமாகும்.

    மார்கழி மாதத்தில் ஸ்ரீ மாணிக்கவாசகர் உற்சவமும் பத்து நாட்கள் நடைபெறுகின்றது. பத்தாம் நாள் ஸ்ரீ நடராஜருக்கு விசேஷ அபிஷேகமும் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகின்றது.

    தை மாதத்தில் பொங்கல் திருநாள் மாலையில் ஸ்ரீ அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி விழாவும், தை மாதம் வெள்ளிக்கிழமை மாலையில் அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவமும் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை மாலையில் ஸ்ரீ அம்பாளுக்கு மகுடாபிஷேகமும் நடைபெறுகின்றது. அருகிலுள்ள அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு ஸ்ரீ அம்பாள் தெப்ப உற்சவத்திற்காக எழுந்தருளுவார்.

    மாசி மாதம் மாசி மகத்தன்று ஸ்ரீ அம்பாள் சென்னை கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்று மாசி மக உற்சவம் நடைபெறுகின்றது. மாசி கிருத்திகையன்று ஸ்ரீ முருகபெருமானுக்கு விசேஷ அபிஷேகமும், இரவு மயில் வாகனத்தில் ஸ்ரீ முருகபெருமான் வீதி உலாவும் நடைபெறுகின்றது.

    பங்குனி மாதத்தில் ஸ்ரீ அம்பாளுக்கு வசந்த நவராத்திரி விழாவும் குங்கும லட்சார்ச்சனை விழாவும் நடைபெறுகின்றது.

    ஆகஸ்டு மாதம் 15-ம் நாள் சுதந்திர தினத்தன்று இத்திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், சமபந்தி உணவு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. பொதுவாக இத்திருக்கோவிலில் நாள் தோறும் மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன.

    • பொதுவாகவே எல்லா சுபகாரியங்களிலும் மஞ்சளும், குங்குமமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
    • ஆலயங்களில் குங்குமம் முதல் இடம் பெற்றிருக்கும்.

    மஞ்சளும், குங்குமமும் மகத்துவம் நிறைந்தது என்று நமது இந்து மத சாஸ்திரங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

    பொதுவாகவே எல்லா சுபகாரியங்களிலும் மஞ்சளும், குங்குமமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டும் இல்லாமல் எந்த மங்கள செய்கைகளும் மகத்துவம் பெற முடியாது.

    கோவிலாக இருந்தாலும், வீடாக இருந்தாலும் சரி, அவசியம் வழிபாடுகளில் மஞ்சள், குங்குமம் இடம் பெற்றிருக்கும்.

    குறிப்பாக அம்பாள் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலயங்களில் குங்குமம் முதல் இடம் பெற்றிருக்கும். அந்த அளவுக்கு குங்குமம் முக்கியமானது.

    திருமணம், வீடு கிரகபிரவேசம் உள்ளிட்ட சடங்குகளில் நாம் உன்னிப்பாக கவனித்தால் முதலில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, அதில் குங்குமமிட்ட பிறகுதான் மற்ற செயல்கள் தொடங்குவதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். அது போலத்தான் ஒரு பெண்ணை மங்களகரமாக தோன்ற செய்வதும் மஞ்சள்-குங்குமம்தான்.

    ஒரு பெண் தன் நெற்றில் குங்குமம் வைத்துக் கொண்ட பிறகு பாருங்கள், அந்த பெண்ணுக்கும் குங்குமத்துக்கும் தனி மரியாதை உண்டு.

    பெண்கள் தங்கள் திருமாங்கல்யத்தில் குங்குமம் வைத்து கண்ணில் ஒற்றிக் கொள்வதுண்டு. இதுதான் சுமங்கலிக்கு ஆதாரமாகக் கருதப்படுகிறது.

    இதனால்தான் அம்பாள் தலங்களில் வழங்கப்படும் குங்குமத்தை பெண்கள் மிகப்பெரும் பாக்கியமாகக் கருதிப் பெற்றுக் கொள்வதுண்டு. அதிலும் சில அம்பாள் தலங்களில் வழங்கப்படும் குங்குமத்துக்கு இரட்டிப்பு சக்தி உண்டு.

    அந்த வகையில் பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் குங்குமத்துக்கு தனித்துவம் உண்டு.

    இத்தலத்தில் பக்தர்கள் அனைவருக்கும் பெரும்பாலும் குங்குமத்துடன் எலுமிச்சம் பழமும் சேர்த்துக் கொடுக்கிறார்கள்.

    காளிகாம்பாளை மனம் குளிர தரிசனம் செய்து விட்டு, முடிந்தால் அவள் முன் உள்ள சன்னதியில் சிறிது நேரம் அமர்ந்து அவளை வழிபட்டு தியானிக்கலாம். மனம் நிறைவு பெறும் வரை இந்த தரிசனத்தை மேற்கொள்ளலாம்.

    பிறகு அம்பாளிடம் விடை பெற்று, வலது புறம் உள்ள கமடேஸ்வரர் சன்னதிக்கு வந்து வழிபட வேண்டும். அந்த சன்னதி அருகில்தான் குங்கும பிரசாதம் வழங்குவார்கள்.

    அந்த குங்குமம் உங்கள் திருக்கரங்களில் பட்டதுமே நீங்கள் மெய்சிலிர்த்துப் போவீர்கள். அந்த குங்குமத்துக்கு அவ்வளவு சக்தி உண்டு.

    அத்தகைய குங்குமம் உங்கள் பரந்த நெற்றியை அலங்கரிக்கும் போது, மகத்துவம் அதிகரித்து விடும்.

    உங்களை எந்த பார்வையும், திருஷ்டியும், ஏவலும் அண்டவே அண்டாது. இது நிஜம்.

    ஆண்டாள் சன்னதியில் பாருங்கள், அவள் நெற்றிக் குங்குமம் இல்லாமல் இருப்பதே இல்லை. அந்த குங்குமம், அவள் கண்ணன் மீது கொண்டுள்ள அன்பை காட்டும்.

    அதுபோலவே காளிகாம்பாள் தலத்தில் தரும் குங்கும் இட்ட பெண்களைப் பாருங்கள், அவர்கள் அம்பாளின் நல்ல அருளை முழுமையாகப் பெற்றவர்களாகக் காட்சியளிப்பார்கள்.

    ×