search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரவு உணவு"

    • சேப்பாக்கம் மைதானம் அருகே உள்ள ஆதரவற்றோர் சிறுவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்.
    • இரவில் பசியுடன் தூங்கச் செல்பவர்களின் பசியை போக்கும் விதத்திலேயே இதனை 2 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம்.

    சென்னை:

    சென்னையில் சாலை யோரம் வசிக்கும் ஆதர வற்றோர்களுக்கு பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட விசேஷமான தினங்களில் சாப்பாடு வாங்கி கொடுக்கும் பழக்கத்தை பலர் வைத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் காலை உணவு மற்றும் மதிய உணவுகளையே வழங்குவார்கள். இரவு நேரங்களை கணக்கிட்டு பலரும் உணவு வழங்குவதில்லை.

    இந்நிலையில் சென்னையில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் பசியை போக்கும் வகையில் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து 'சென்னை ரொட்டி பேங்க்' என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி தினமும் இரவு உணவை வழங்கி வருகிறார்.

    2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் லத்திகாசரணுடன் சுஜாதா விஸ்வநாத், மகாதேவன், நிசாத் பசீர், ராஜீவ் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

    சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மெண்டல் ஹெல்த் (ஐ.எம்.எச்) மையத்தில் சேர்த்து சிகிச்சை பெறும் பெரும்பாலானோர் வறுமையில் வாடுபவர்களாகவே உள்ளனர். இதுபோன்ற நபர்களை சிகிச்சைக்காக அழைத்து வருபவர்கள் தங்களது கூலி வேலையை விட்டுவிட்டே அவர்களோடு வந்து தங்குகிறார்கள்.

    இப்படி ஐ.எம்.எச்.சில் இரவில் தங்குபவர்களுக்கு இரவு உணவை வழங்க வேண்டும் என்கிற நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட இந்த உணவு வழங்கும் திட்டத்தை பின்னர் படிப்படியாக விரிவுபடுத்த இருக்கிறோம் என்றார் முன்னாள் டி.ஜி.பி. லத்திகா சரண்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, ஐ.எம்.எச். மையத்தில் உணவு வழங்கி விட்டு சேத்பட்டில் 25 திருநங்கைகளுக்கு உணவு வழங்கப்படும். சேப்பாக்கம் மைதானம் அருகே உள்ள ஆதரவற்றோர் சிறுவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம் என்றார்.

    மும்பையில் எனது 'பேட்ஜ்மேட்' ஆன சிவானந்தன் என்பவர் அங்கு 'ரொட்டி பேங்க்' என்ற பெயரில் மும்பை வாசிகளுக்கு இரவு உணவை ரொட்டியாக வழங்கி வருகிறார். அதுவே எங்களது இரவு சாப்பாடு வழங்கும் திட்டத்துக்கு முன்னோடியாகும்' என்று கூறிய லத்திகா சரண் தினமும் 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் இரவில் பசியுடன் தூங்கச் செல்பவர்களின் பசியை போக்கும் விதத்திலேயே இதனை 2 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார். தமிழக காவல் துறையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் பதவிகளை வகித்த லத்திகா சரண் பணி காலத்தில் பல்வேறு உதவிகளை பலருக்கும் செய்து உள்ளார். ஓய்வுக்கு பிறகும் அதுபோன்ற பணியை அவர் தொடர்ந்து பசியாற்றி வருவது பாராட்டுக்குரியது தான்.

    ×