search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அச்சன்கோவில்"

    • மார்கழி மாதங்களில ஐயப்ப பூஜைகளும், பஜனைகளும் நடைபெறும்.
    • கோவிலுக்கு அருகே பாலருவியும், அச்சன்கோவில் ஆறும் உள்ளது.

    கோவில் தோற்றம்

    கார்த்திகை மாதம் பிறந்தாலே 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்ற சரண கோஷம் ஊர் தோறும், வீடு தோறும் கேட்கும். அனைத்து ஊர்களிலும் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்த பக்தர்கள், கருப்பு மற்றும் காவி உடை அணிந்து செல்வதையும் அதிக அளவில் காணலாம். கார்த்திகை, மார்கழி மாதங்களில் எங்கு பார்த்தாலும் ஐயப்ப பூஜைகளும், பஜனைகளும் நடைபெறும். அந்த அளவிற்கு சுவாமி ஐயப்பன் மீது பக்தர்கள் பக்தி கொண்டு மாலை அணிந்து, சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபட்டு வருகிறார்கள்.

     தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை, திருத்தணி என்று அறுபடை வீடுகள் இருப்பது போல், ஐயப்ப சுவாமிக்கும் கேரளாவில் ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, பந்தளம், எரிமேலி, சபரிமலை என அறுபடை வீடுகள் உள்ளன. குளத்துப்புழாவில் பாலகனாகவும், ஆரியங்காவில் பூரண-புஷ்கலையுடன் அய்யனாகவும், அச்சன்கோவிலில் அரசனாகவும், எரிமேலியில் சாஸ்தாவாகவும், சபரிமலையில் ஐயப்பனாகவும் இருந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    சபரிமலைக்கு மாலை அணிந்து செல்கின்ற பக்தர்கள், ஐயப்பனின் இந்த ஆறு கோவில்களுக்கும், தமிழகத்தில் பாபநாசம் மலையில் காரையாற்றில் உள்ள சொரிமுத்து அய்யனார் உள்ளிட்ட பல்வேறு கோவிலுக்கும் சென்று விட்டு சபரிமலை செல்வது வழக்கம்.

    ஐயப்பனின் அறுபடை வீடுகளில் அரசனாக இருந்து ஆட்சி செய்வது, அச்சன்கோவில் திருத்தலமாகும். இந்த அச்சன் கோவில் தர்மசாஸ்தா, மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒருவரான பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். அச்சன் கோவில் திருக்கோவிலானது, தமிழக எல்லையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது.

    செங்கோட்டை, பண்பொழி, மேக்கரை வழியாக காட்டுப்பகுதியில் சென்றால் அச்சன்கோவில் செல்லும் வழியில் கோட்டைவாசல் கருப்பசாமி கோவில் உள்ளது. அச்சன்கோவில் செல்லும் பக்தர்கள் இந்த கோவிலில் வழிபட்ட பின்னரே அச்சன்கோவில் செல்வார்கள். கோவிலுக்கு அருகே பாலருவியும், அச்சன்கோவில் ஆறும் உள்ளது.

    அச்சன்கோவிலில் பூரண - புஷ்கலையுடன் தர்மசாஸ்தா மூலவராக உள்ளார். விநாயகர், முருகர், நாகராஜன், நாகக்கன்னி, குருவாயூரப்பன், வனதேவதைகளும் உள்ளன. கோவிலுக்கு எதிரே கருப்பசாமி கோவில் இருக்கிறது. தர்மதாஸ்தா சுவாமிக்குரிய நகைகள் எல்லாம் புனலூரில் அரசு கருவூலத்தில் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும், மண்டல பூஜையின் போது கோவிலுக்கு கொண்டு வந்து சுவாமிக்கு அணிவிக்கப்படும்.

    இந்த தர்மசாஸ்தா கோவிலுக்கு ஒரு வாள் உண்டு. காந்த மலைப்பகுதியில் இருந்து இறைவனே இதை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த வாள் இடத்துக்கு இடம், நிறம், எடை மாறும் அதிசயவாள் என்று சொல்லப்படுகிறது.

    சுவாமி தர்மசாஸ்தா இங்கே அரசனாகவும், ஆண்டவனாகவும் இருப்பதால், அவரிடம் வைக்கின்ற கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

    குழந்தை இல்லாத தம்பதியர்கள் சுவாமியை வழிபட்டு நாகராஜா கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் முந்தானை சேலையை கிழித்து தொட்டில் கட்டி ஆட்டினால், மறு ஆண்டுக்குள் குழந்தை பாக்கியம் கிடைத்து வீட்டில் தொட்டிலாடும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.

    நாக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகராஜா கோவிலில் வந்து வழிபடுவார்கள். அங்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த வீணை வாசிப்போர் தங்கள் கையில் வைத்திருக்கும் வீணையை இசைத்து நாகராஜன் பற்றி பாடல்களை பாடினாலும், தோஷம் உள்ளவர்களின் ராசி, நட்சத்திரம் பற்றி பாடினாலும் தோஷம் நீங்குவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி பக்தர்கள் கூறுகையில், `அச்சன்கோவில் வனப்பகுதியாகும். இந்த கோவிலில் உள்ள தர்மசாஸ்தா அரசனாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களை பாதுகாத்து வருகிறார். அவருடைய கையில் வைத்துள்ள வெள்ளை சந்தனத்தையும், தண்ணீரையும் பாம்பு கடித்தவர்களுக்கு கொடுத்து உயிரை காப்பாற்றி வருகிறார். இந்த சிலை பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. '

    இந்த சிலையை வடித்த சிற்பி தர்மசாஸ்தாவின் கட்டளைப்படி அந்த மலைப்பகுதியில் உள்ள ராஜநாகத்தின் விஷத்தை போக்கும் மருந்தை எடுத்து வைத்து சிலையை செதுக்கி உள்ளார். சிலையை செதுக்கிய இரும்பு உளியை தண்ணீரில் தோய்த்து அடிப்பதற்கு பதிலாக அந்த மருந்தில் நனைத்து செதுக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் சிலையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த தண்ணீரும், வெள்ளை சந்தனமும் அப்படியே இருக்கும். பாம்பு கடித்தவருக்கு அந்த தண்ணீரையும், சந்தனத்தையும் கொடுத்தவுடன் குணம் கிடைத்து விடுகிறது. நடை மூடிய பிறகும் எந்த நேரமாக இருந்தாலும் கோவில் மணியை அடித்த உடனே பூசாரி வந்து நடையை திறந்து பரிகாரமாய் இந்த சிகிச்சை அளிக்கிறார்' என்றார்கள்.

    இத்தனை சிறப்பு மிக்க அச்சன்கோவிலில் மார்கழி மாதம் நடைபெறுகின்ற மண்டல பூஜை வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினமே ஆபரணப்பெட்டி ஊர்வலம் நடைபெறும். தொடர்ந்து 17-ந் தேதி கொடியேற்றம், 25-ந் தேதி காலை 11 மணிக்கு தேரோட்டம், 26-ந் தேதி ஆராட்டும் நடக்கிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் `நிறைப் புத்தரிசி பூஜை' நடைபெறும். இந்த பூஜையில் பல்வேறு இடங்களில் இருந்து வயல்களில் விளைந்த நெற்கதிர்களை கொண்டு வந்து கொடுத்து பூஜை நடத்தி அதனை பக்தர்களுக்கு கோவிலிலிருந்து வழங்குவார்கள். இதனைப் பெற்று வீட்டில் வைத்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

    இதேபோல் அச்சன்கோவிலுக்கு சொந்தமான வயல்களில் தனியாக நெல் பயிரிடப்பட்டு அந்த நெற்கதிர்களை அறுவடை செய்து அச்சன்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் சபரிமலையில் நடைபெறும் நிறைப்புத்தரிசி விழாவிற்காக விரதம் இருந்த 51 பக்தர் களுடன், 51 நெற்கதிர் கட்டுகளை சபரிமலை கோவில் நிர்வாகத்தினா் சபரிமலைக்கு எடுத்துச் செல்வார்கள்.

    அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து பூஜைகள் நடக்கும். மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் திறந்திருக்கும். ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் மண்டல பூஜை தேரோட்டம் நடைபெறும். ஐயப்பன் கோவில்களில் தேரோட்டம் நடைபெறும் ஒரே கோவில் இந்த அச்சன்கோவில் ஆகும்.

    ஒவ்வொரு கோவிலிலும் தேரை பக்தர்கள் வடம் (கயிறு), இரும்புச் சங்கிலி ஆகியவற்றால் இழுப்பார்கள். ஆனால் தர்மசாஸ்தா தேரை மட்டும் மூங்கில் பிரம்புகள் வைத்து தான் பக்தர்கள் இழுப்பார்கள். இந்த அதிசயம் இந்தக் கோவிலில் மட்டும் தான் நடைபெறுகிறது.

    தேரோட்டத்தின் போது தமிழக மக்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். தேரோட்டத்தின் போது கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடக்கும். இதேபோல் மண்டல பூஜை நாட்களிலும் இந்த கருப்பன் துள்ளல் (அதாவது கருப்பசாமி வல்லயம் அரிவாள் வைத்து ஆடுவது) சிறப்பு வாய்ந்ததாகும்.

    அச்சன்கோவில் பகுதியில் யாருக்கு பாம்பு கடித்தாலும், உடனே கோவிலுக்கு அந்த நபரை கொண்டு வருவார்கள். அவரை கொடிமரத்தின் அருகில் படுக்க வைத்து விட்டு கோவில் மணி அடித்தவுடன் கோவில் பூசாரி வந்து கோவிலைத் திறந்து சுவாமியின் சிலையில் உள்ள சந்தனத்தையும், தீர்த்தத்தையும் (தண்ணீர்) எடுத்து மருந்தாக கொடுக்கிறார். அதை குடித்த உடன் பாம்பின் விஷம் இறங்கி அந்த நபர் உயிர் பிழைத்து விடுவார். அந்த அதிசயம் இன்றும் இங்கு நடைபெறுகிறது.

    கோவில் உள்ள இடம் அடர்ந்த வனப்பகுதியாகும். அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு வர வேண்டுமானால் செங்கோட்டை, புனலூருக்கு தான் செல்ல வேண்டும். அதற்குள் பாம்பு கடித்தவர் இறந்துவிட வாய்ப்புள்ளது. எனவே இந்த கோவிலில் சுவாமியின் சந்தனத்தையும், தீர்த்தத்தையும் கொடுத்தால் விஷம் இறங்கி விடுகிறது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

    • சுவாமி ஐயப்பன் தாம்பத்திய கோலத்தில் ஆரியங்காவில் அருள்பாலிக்கிறார்.
    • முதுகுத் தண்டுக்குள் கடைசியில் உள்ளது மூலாதாரம்.

    ஐயப்பனின் ஆறு ஆதாரத் தலங்கள்!

    ஐயப்பன் நம்மைப் போலவே வாழ்ந்தவர்.

    பால ரூபத்தில் குளத்துப் பிழையிலும்,

    கௌமார கோலத்தில் சபரி மலையிலும்,

    தாம்பத்திய கோலத்தில் ஆரியங்காவிலும்,

    வானப்பிரஸ்த நிலையில் அச்சன் கோவிலிலும்,

    ஜீவன் முக்த நிலையில் வான வெளியிலும்

    திருக்கோலம் கொண்டு அருள்பாலிக்கிறார்.

    ஐயப்பன் பக்தர்கள் சரணம் சொல்லும்போது இந்த தலங்களைக் குறிப்பிடுகிறார்கள்.

    ஐயப்பன் குளத்துப்புழையில் பாலகனாகவும், சபரி மலையில் கௌமார கோலத்திலும், ஆரியங்காவில் தாம்பத்திய கோலத்தில் பூர்ணா புஷ்பகலா சமேதனாகவும், அச்சன் கோவிலில் வானப்பிரஸ்த கோலத்தில் அரசனாகவும், காந்தமலையில் ஜோதியாகவும், வீற்றிருப்பதாக ஐதீகம்.

    இப்படி ஆராதிப்பதில் பெரும் தத்துவம் அடங்கியுள்ளது.

    நமது தேகத்தில் ஆறு ஆதாரங்கள் உள்ளன.

    முதுகுத் தண்டுக்குள் கடைசியில் உள்ளது மூலாதாரம்.

    பிருத்வி மயமான அதில் கணபதி வீற்றிருக்கிறார். நெல்லை மாவட்டத்தில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் மூலாதாரம்.

    தொப்புகளுக்கு கீழ்ப்பகுதி சுவாதிஷ்டானம்.

    ஜல மயமான அப்பகுதியில் நாராயணன் இருக்கிறார்.

    அச்சன் கோவில் சுவாதிஷ்டானம்.

    நாபி கமலத்திற்கு மணிபூரகம் என்று பெயர். அக்னி மயமான அப்பீடத்தில் இருப்பவர் சூரியன்.

    ஆரியங்காவு மணிபூரகமாக கருதப்படுகிறது. வாயுமயமான ஹிருதய ஸ்தானம் அநாகதம். அங்கு பராசக்தி வீற்றிருக்கிறாள். குளத்துபுழா அநாகதமாக கருதப்படுகிறது.

    ஆகாச மயமான கண்டத்திற்கு விசுத்தி என்று பெயர். அங்கே நீலகண்டனான பரமசிவன் வீற்றிருக்கிறார். பந்தனம் விசுத்தி என்ற பெயர் பெற்றுள்ளது.

    ஆறாவது ஸ்தானம் பஞ்ச பூதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஸ்தானம். நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள அந்த ஸ்தானத்தில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். அது ஆக்ஞை எனப்படுகிறது.

    "எங்கும் நிறைந்த ஜோதிஸ்வரூபன் ஐயன் மணிகண்டன்

    ஏகாந்தத்தில் இருப்பவராமே ஐயன் மணிகண்டன்

    ஐசுவரியத்தைத் தந்திடும் ஈசன் ஐயன் மணிகண்டன்

    ஒன்பது இரண்டு படிகள் மேலமர்ந்தவன் ஐயன் மணிகண்டன்

    ஓங்காரத்தின் உருவாய் வந்தார் ஐயன் மணிகண்டன்"

    ×