search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pandalam"

    • மார்கழி மாதங்களில ஐயப்ப பூஜைகளும், பஜனைகளும் நடைபெறும்.
    • கோவிலுக்கு அருகே பாலருவியும், அச்சன்கோவில் ஆறும் உள்ளது.

    கோவில் தோற்றம்

    கார்த்திகை மாதம் பிறந்தாலே 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்ற சரண கோஷம் ஊர் தோறும், வீடு தோறும் கேட்கும். அனைத்து ஊர்களிலும் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்த பக்தர்கள், கருப்பு மற்றும் காவி உடை அணிந்து செல்வதையும் அதிக அளவில் காணலாம். கார்த்திகை, மார்கழி மாதங்களில் எங்கு பார்த்தாலும் ஐயப்ப பூஜைகளும், பஜனைகளும் நடைபெறும். அந்த அளவிற்கு சுவாமி ஐயப்பன் மீது பக்தர்கள் பக்தி கொண்டு மாலை அணிந்து, சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபட்டு வருகிறார்கள்.

     தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை, திருத்தணி என்று அறுபடை வீடுகள் இருப்பது போல், ஐயப்ப சுவாமிக்கும் கேரளாவில் ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, பந்தளம், எரிமேலி, சபரிமலை என அறுபடை வீடுகள் உள்ளன. குளத்துப்புழாவில் பாலகனாகவும், ஆரியங்காவில் பூரண-புஷ்கலையுடன் அய்யனாகவும், அச்சன்கோவிலில் அரசனாகவும், எரிமேலியில் சாஸ்தாவாகவும், சபரிமலையில் ஐயப்பனாகவும் இருந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    சபரிமலைக்கு மாலை அணிந்து செல்கின்ற பக்தர்கள், ஐயப்பனின் இந்த ஆறு கோவில்களுக்கும், தமிழகத்தில் பாபநாசம் மலையில் காரையாற்றில் உள்ள சொரிமுத்து அய்யனார் உள்ளிட்ட பல்வேறு கோவிலுக்கும் சென்று விட்டு சபரிமலை செல்வது வழக்கம்.

    ஐயப்பனின் அறுபடை வீடுகளில் அரசனாக இருந்து ஆட்சி செய்வது, அச்சன்கோவில் திருத்தலமாகும். இந்த அச்சன் கோவில் தர்மசாஸ்தா, மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒருவரான பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். அச்சன் கோவில் திருக்கோவிலானது, தமிழக எல்லையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது.

    செங்கோட்டை, பண்பொழி, மேக்கரை வழியாக காட்டுப்பகுதியில் சென்றால் அச்சன்கோவில் செல்லும் வழியில் கோட்டைவாசல் கருப்பசாமி கோவில் உள்ளது. அச்சன்கோவில் செல்லும் பக்தர்கள் இந்த கோவிலில் வழிபட்ட பின்னரே அச்சன்கோவில் செல்வார்கள். கோவிலுக்கு அருகே பாலருவியும், அச்சன்கோவில் ஆறும் உள்ளது.

    அச்சன்கோவிலில் பூரண - புஷ்கலையுடன் தர்மசாஸ்தா மூலவராக உள்ளார். விநாயகர், முருகர், நாகராஜன், நாகக்கன்னி, குருவாயூரப்பன், வனதேவதைகளும் உள்ளன. கோவிலுக்கு எதிரே கருப்பசாமி கோவில் இருக்கிறது. தர்மதாஸ்தா சுவாமிக்குரிய நகைகள் எல்லாம் புனலூரில் அரசு கருவூலத்தில் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும், மண்டல பூஜையின் போது கோவிலுக்கு கொண்டு வந்து சுவாமிக்கு அணிவிக்கப்படும்.

    இந்த தர்மசாஸ்தா கோவிலுக்கு ஒரு வாள் உண்டு. காந்த மலைப்பகுதியில் இருந்து இறைவனே இதை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த வாள் இடத்துக்கு இடம், நிறம், எடை மாறும் அதிசயவாள் என்று சொல்லப்படுகிறது.

    சுவாமி தர்மசாஸ்தா இங்கே அரசனாகவும், ஆண்டவனாகவும் இருப்பதால், அவரிடம் வைக்கின்ற கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

    குழந்தை இல்லாத தம்பதியர்கள் சுவாமியை வழிபட்டு நாகராஜா கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் முந்தானை சேலையை கிழித்து தொட்டில் கட்டி ஆட்டினால், மறு ஆண்டுக்குள் குழந்தை பாக்கியம் கிடைத்து வீட்டில் தொட்டிலாடும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.

    நாக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகராஜா கோவிலில் வந்து வழிபடுவார்கள். அங்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த வீணை வாசிப்போர் தங்கள் கையில் வைத்திருக்கும் வீணையை இசைத்து நாகராஜன் பற்றி பாடல்களை பாடினாலும், தோஷம் உள்ளவர்களின் ராசி, நட்சத்திரம் பற்றி பாடினாலும் தோஷம் நீங்குவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி பக்தர்கள் கூறுகையில், `அச்சன்கோவில் வனப்பகுதியாகும். இந்த கோவிலில் உள்ள தர்மசாஸ்தா அரசனாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களை பாதுகாத்து வருகிறார். அவருடைய கையில் வைத்துள்ள வெள்ளை சந்தனத்தையும், தண்ணீரையும் பாம்பு கடித்தவர்களுக்கு கொடுத்து உயிரை காப்பாற்றி வருகிறார். இந்த சிலை பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. '

    இந்த சிலையை வடித்த சிற்பி தர்மசாஸ்தாவின் கட்டளைப்படி அந்த மலைப்பகுதியில் உள்ள ராஜநாகத்தின் விஷத்தை போக்கும் மருந்தை எடுத்து வைத்து சிலையை செதுக்கி உள்ளார். சிலையை செதுக்கிய இரும்பு உளியை தண்ணீரில் தோய்த்து அடிப்பதற்கு பதிலாக அந்த மருந்தில் நனைத்து செதுக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் சிலையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த தண்ணீரும், வெள்ளை சந்தனமும் அப்படியே இருக்கும். பாம்பு கடித்தவருக்கு அந்த தண்ணீரையும், சந்தனத்தையும் கொடுத்தவுடன் குணம் கிடைத்து விடுகிறது. நடை மூடிய பிறகும் எந்த நேரமாக இருந்தாலும் கோவில் மணியை அடித்த உடனே பூசாரி வந்து நடையை திறந்து பரிகாரமாய் இந்த சிகிச்சை அளிக்கிறார்' என்றார்கள்.

    இத்தனை சிறப்பு மிக்க அச்சன்கோவிலில் மார்கழி மாதம் நடைபெறுகின்ற மண்டல பூஜை வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினமே ஆபரணப்பெட்டி ஊர்வலம் நடைபெறும். தொடர்ந்து 17-ந் தேதி கொடியேற்றம், 25-ந் தேதி காலை 11 மணிக்கு தேரோட்டம், 26-ந் தேதி ஆராட்டும் நடக்கிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் `நிறைப் புத்தரிசி பூஜை' நடைபெறும். இந்த பூஜையில் பல்வேறு இடங்களில் இருந்து வயல்களில் விளைந்த நெற்கதிர்களை கொண்டு வந்து கொடுத்து பூஜை நடத்தி அதனை பக்தர்களுக்கு கோவிலிலிருந்து வழங்குவார்கள். இதனைப் பெற்று வீட்டில் வைத்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

    இதேபோல் அச்சன்கோவிலுக்கு சொந்தமான வயல்களில் தனியாக நெல் பயிரிடப்பட்டு அந்த நெற்கதிர்களை அறுவடை செய்து அச்சன்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் சபரிமலையில் நடைபெறும் நிறைப்புத்தரிசி விழாவிற்காக விரதம் இருந்த 51 பக்தர் களுடன், 51 நெற்கதிர் கட்டுகளை சபரிமலை கோவில் நிர்வாகத்தினா் சபரிமலைக்கு எடுத்துச் செல்வார்கள்.

    அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து பூஜைகள் நடக்கும். மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் திறந்திருக்கும். ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் மண்டல பூஜை தேரோட்டம் நடைபெறும். ஐயப்பன் கோவில்களில் தேரோட்டம் நடைபெறும் ஒரே கோவில் இந்த அச்சன்கோவில் ஆகும்.

    ஒவ்வொரு கோவிலிலும் தேரை பக்தர்கள் வடம் (கயிறு), இரும்புச் சங்கிலி ஆகியவற்றால் இழுப்பார்கள். ஆனால் தர்மசாஸ்தா தேரை மட்டும் மூங்கில் பிரம்புகள் வைத்து தான் பக்தர்கள் இழுப்பார்கள். இந்த அதிசயம் இந்தக் கோவிலில் மட்டும் தான் நடைபெறுகிறது.

    தேரோட்டத்தின் போது தமிழக மக்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். தேரோட்டத்தின் போது கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடக்கும். இதேபோல் மண்டல பூஜை நாட்களிலும் இந்த கருப்பன் துள்ளல் (அதாவது கருப்பசாமி வல்லயம் அரிவாள் வைத்து ஆடுவது) சிறப்பு வாய்ந்ததாகும்.

    அச்சன்கோவில் பகுதியில் யாருக்கு பாம்பு கடித்தாலும், உடனே கோவிலுக்கு அந்த நபரை கொண்டு வருவார்கள். அவரை கொடிமரத்தின் அருகில் படுக்க வைத்து விட்டு கோவில் மணி அடித்தவுடன் கோவில் பூசாரி வந்து கோவிலைத் திறந்து சுவாமியின் சிலையில் உள்ள சந்தனத்தையும், தீர்த்தத்தையும் (தண்ணீர்) எடுத்து மருந்தாக கொடுக்கிறார். அதை குடித்த உடன் பாம்பின் விஷம் இறங்கி அந்த நபர் உயிர் பிழைத்து விடுவார். அந்த அதிசயம் இன்றும் இங்கு நடைபெறுகிறது.

    கோவில் உள்ள இடம் அடர்ந்த வனப்பகுதியாகும். அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு வர வேண்டுமானால் செங்கோட்டை, புனலூருக்கு தான் செல்ல வேண்டும். அதற்குள் பாம்பு கடித்தவர் இறந்துவிட வாய்ப்புள்ளது. எனவே இந்த கோவிலில் சுவாமியின் சந்தனத்தையும், தீர்த்தத்தையும் கொடுத்தால் விஷம் இறங்கி விடுகிறது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

    • ஐயப்பனுக்கும் அறுபடைவீடுகள் உள்ளன.
    • பதினெட்டு படிகளை ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடிமரம்.

    முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய

    அறுபடைவீடுகள் உள்ளன. அதுபோல விநாயகருக்கும் திருவண்ணாமலை, திருமுதுகுன்றம், திருக்கடவூர், திருச்சி, பிள்ளையார்பட்டி, திருநாரையூர் ஆகிய இடங்களில் அறுபடைவீடுகள் உண்டு. அந்தவகையில் சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பனுக்கும் அறுபடைவீடுகள் உள்ளன. அவை ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, எருமேலி, பந்தளம், சபரிமலை. அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.

    ஆரியங்காவு

    கேரளா-தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது ஆரியங்காவு, தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த ஊர். இங்குள்ள ஆலயத்தில் அரசராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் ஐயப்பன். இவருடன் புஷ்கலை தேவி இருப்பது விசேஷம். இவரை சாஸ்தாவான ஐயப்பன் திருமணம் செய்யும் காட்சியை ஒவ்வொரு டிசம்பர் மாதமும் நடத்துவார்கள். மதம் கொண்ட யானையை அடக்கி அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு இறைவன் காட்சி தருகிறார். இதனால் அவருக்கு 'மதகஜ வாகன ரூபன்' என்ற பெயரும் உண்டு. கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    செங்கோட்டையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஐயப்பன் வீற்றிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் விக்கிரகம் மாற்றம் கண்டுள்ளது. ஆனால் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் மட்டும், விக்கிரகம் பழமை மாறாமல் காட்சியளிக்கிறது. கையில் அமுத மும், காந்தமலை வாளும் ஏந்திய திருக்கோலத்தில் இத்தலத்தில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். இவருக்கு இருபுறமும் பூரண, புஷ்கலை தேவியர் காட்சி தருகின்றனர். இவரை 'கல்யாண சாஸ்தா' என்றும் அழைக்கிறார்கள். திருமண வரம் வேண்டுவோர் வழிபட வேண்டிய சிறப்புமிக்க தலம் இதுவாகும்.

    குளத்துப்புழா

    கேரளாவில் குளத்துப்புழா என்ற இடத்திலும் ஐயப்பன் அருளாட்சி செய்கிறார். இங்கு அவர் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். இதனால் அவரை 'பால சாஸ்தா' என்று அழைக்கின்றனர். இந்த ஆலயத்தின் கருவறை சிறுவர்கள் நுழையும் அளவிலான உயரத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு விஜயதசமி தினத்தன்று 'வித்யாரம்பம்' என்னும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது. அன்று பள்ளியில் சேரவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தரப்படும். குழந்தை வரம் வேண்டுவோரும் வழிபட ஏற்ற தலம் இது.

     எருமேலி

    எருமைத் தலையைக் கொண்ட மகிஷியை, ஐயப்பன் வதம் செய்த தலம் இது என்று கூறுகிறார்கள். இதனால் எருமைக்கொல்லி என அழைக்கப்பட்ட இந்த இடம், நாளடைவில் மருவி 'எருமேலி' என்றானது. மகிஷியை வதம் செய்த மணிகண்டன், அவளது உடல் மீது நர்த்தனம் செய்ததன் நினைவாகவே, பக்தர்கள் இன்றளவும் எருமேலியில் இருந்து நடனம் ஆடியபடியே சபரிமலைக்கு பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த நடனத்திற்கு 'பேட்டைத் துள்ளல்' என்று பெயர். இந்த ஆலயத்திற்கு அருகில் வாபரின் பள்ளிவாசல் இருக்கிறது. இங்கு விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    பந்தளம்

    பந்தனம் என்பது ஐயப்பன் வாழ்ந்ததாக கருதப்படும் அரண்மனை இருக்கும் இடமாகும். இங்கு பந்தன மன்னன் ராஜசேகரனால் கட்டப்பட்ட ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவில் அச்சன்கோவில் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ளது. சபரிமலை ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜையின் போது அணிவிக்கப்படும் திரு ஆபரணங்கள் அனைத்தும் இங்குதான் வைக்கப்பட்டிருக்கின்றன. செங்கனூர் ரெயில் நிலையத்தின் அருகில் இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது.

    சபரிமலை

    கேரளாவில் உள்ள இங்குதான் தர்மசாஸ்தா என்று அழைக்கப்படும் ஐயப்பன், தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரையுடன், குத்துகாலிட்டு அமர்ந்தபடி அருள்புரிந்து வருகிறார். பதினெட்டு படிகளை ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடிமரம். ஐயப்பனின் சன்னிதி வாசலில் 'தத்வமஸி' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த வார்த்தைக்கு நீ எதை நாடி வந்தாயோ. அது நியாகவே உள்ளாய்' என்பது பொருள். உனக்குள்ளேயே இறைவன் இருக்கிறான். 41 நாட்கள் இருக்கும் விரதத்தை நாளும் நீ மேற்கொண்டால், நீயும் கடவுளே என்பது - தான் இதன் உண்மையான அர்த்தம்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக நடை நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக நடை நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். நேற்று மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10.30 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நடை அடைக்கப்பட்டது.

    இன்று முதல், 17-ந்தேதி வரை அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை, படிபூஜை, உதயாஸ்தமன பூஜை போன்ற வழிபாடுகள் நடைபெறும்.

    அதன்பின்பு 17-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும். சபரிமலையில் இளம் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் சாமி தரிசனம் செய்ய இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் இலவுங்கல் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
    கார்த்திகை மாதங்களில் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் ஜோதி வடிவில் காட்சி தருவார் ஐயப்பன்.









    15-1-2019 அன்று மகர ஜோதி

    திருமால் மோகினியாக அவதாரம் எடுத்தபோது, அவர் மேல் சிவபெருமான் மோகம் கொண்டதால் அவதரித்தவர் ஐயப்பன். ஹரனுக்கும், ஹரிக்கும் பிறந்தவர் என்பதால் ‘ஹரிஹரசுதன்’ என்று அழைக்கப்பட்டார். இவரது அவதார நோக்கம் மகிஷி என்ற அரக்கியின் வதத்திற்காக உருவானதாகும். எனவே பம்பை நதிக்கரையோரத்தில் அந்த குழந்தையை திருமாலும், ஈசனும் விட்டுச் சென்றனர். அப்போது அந்தக் குழந்தையின் கழுத்தில் மணி ஒன்றை கட்டி விட்டனர்.

    அந்த நேரத்தில் காட்டுக்கு வேட்டையாட வந்தார், பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியன். மன்னனுக்கு பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாத வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் பம்பா நதிக்கரை பகுதியில் குழந்தை அழுகுரல் கேட்டு அங்கு விரைந்து சென்றான் பந்தள மகாராஜா. அங்கு அழகிய குழந்தை ஒன்று கேட்பாரற்று கிடந்தது கண்டு, அந்த குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்றார்.

    குழந்தையைப் பார்த்ததும் ராணிக்கு அளவில்லாத சந்தோஷம். கழுத்தில் மணியுடன் கண்டெடுக்கப்பட்டதால் குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயர் சூட்டி வளர்த்தனர். குழந்தைக்கே உரிய குறும்புகளுடனும், அபரிமிதமான அழகுடனும், அறிவார்ந்த கேள்வி ஞானத்துடனும், ஒப்பற்ற அரசகுமாரனாகவும் வளர்ந்து வந்தார் ஐயப்பன்.

    இதற்கிடையில் பந்தளத்து ராணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அப்படியிருந்தும் மணிகண்டனின் மீது ராஜசேகர பாண்டியனுக்கு இருந்த பாசம் இம்மியும் குறையவில்லை. தனக்குப் பின் ஐயப்பனுக்கே பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். இது மகாராணிக்கு பிடிக்கவில்லை. தனக்கென்று ஒரு பிள்ளை வந்ததும், இதுவரை இருந்த பிள்ளையை பிடிக்காமல் போய்விட்டது ராணிக்கு. இதனால் அவரது மனது வேறு கணக்கு போட்டது.

    அரசவையின் அமைச்சர்களில் ஒருவருக்கும் மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்படுவதில் விருப்பமில்லை. அந்த அமைச்சர், ராணியிடம் சென்று, ‘மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டால், நீங்கள் பெற்ற பிள்ளைக்கு எதுவும் கிடைக்காமல் போய்விடும்’ என்று தூபம் போட்டார். இதுவரை தனது எண்ணத்தை எப்படி நிறைவேற்றுவது என்று எண்ணிக்கொண்டிருந்த ராணிக்கு, அமைச்சரின் வார்த்தைகள் தேனை வார்ப்பது போல் இருந்தது. இருவரும் சேர்ந்து மணிகண்டனை மண்ணுலகை விட்டு அனுப்ப முடிவு செய்தனர். அதற்காக ஒரு நாடகத்தையும் அரங்கேற்றினர்.

    ராணி கடுமையான தலைவலியால் அவதிப்படுவது போல் நடித்தார். தலைவலி தீர அதற்கான மருந்தை புலிப்பாலில் கலந்து கொடுத்தால் தான் குணமாகும் என்று அரண்மனை வைத்தியர்கள் மூலமாக கூறவைத்தார் அமைச்சர். காட்டிற்கு சென்று புலிப்பால் கொண்டு வருவது என்பது யாரால் முடியும்?. அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றனர்.

    அப்போது, தாயின் தலைவலி தீர தானே காட்டிற்குச் சென்று புலிப்பால் கொண்டுவருவதாக கூறி புறப்பட்டார் மணிகண்டன். மன்னன் ராஜசேகரபாண்டியன் பதறிப்போனார். “வேண்டாம்! புலியின் பாலை கொண்டு வருவது எளிதானதல்ல. உனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது” என்றார்.

    எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்லாது, அவதாரத்தின் நோக்கம் இறுதி கட்டத்தை எட்டி விட்டதையும் உணர்ந்த மணிகண்டபிரபு, தானே சென்று வருவதாக கூறி காட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு தேவர்களை துன்புறுத்தி வந்த மகிஷியை அழுதா நதிக்கரை பகுதியில் சந்தித்தார். இருவருக்கும் கடுமையான போர் நடைபெற்றது. இறுதியில் ஐயப்பனின் வில்லுக்கு வீழ்ந்தாள் மகிஷி.

    இறந்த மகிஷி அழகிய பெண்ணாக வடிவெடுத்து ஐயப்பனிடம் வந்தாள். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினாள். ஆனால், ‘நான் சபரிமலையில் வசிக்க போகிறேன். என்னைத் தேடி ஆண்டுதோறும் பல கோடி பக்தர்கள் வருவார்கள். நாட்டில் சண்டை சச்சரவுகள் இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கமே என்னைத்தேடி வரும் பக்தர்களிடம் விதைக்கப்படும். இந்த அவதாரத்தில் நான் பிரம்மசாரியாகவே வாழ்வேன். எனவே நீ என்னருகில் மாளிகைப்புறத்து அம்மனாக வீற்றிருப்பாய்’ என்று கூறி அருளினார்.

    பின்னர் மகிஷியின் துன்பத்தில் இருந்து விடுபட்ட தேவர்கள் தேவேந்திரன் புடைசூழ காட்டிற்கு வந்தனர். அவர்களில் தேவேந்திரன் ஆண் புலியாக மாற, அதில் ஏறி ஐயப்பன் அமர்ந்து கொண்டார். தேவர்கள் அனைவரும் பெண் புலியாக மாறி ஐயப்பனை சூழ்ந்து கொண்டு பந்தளம் நோக்கி படையெடுத்தனர். ஐயப்பன் புலி மீது அமர்ந்து வருவதை பார்த்ததும் அனைவரும் அச்சத்தில் ஓரமாக ஒதுங்கி நின்றனர்.

    இதுபற்றி கேள்விபட்டதும் ராஜசேகரபாண்டியன், அமைச்சர், ராணி அனைவரும் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். புலி மீது அமர்ந்திருந்த ஐயனை பார்த்ததும் ராணியும், அமைச்சரும் தங்கள் பிழையை பொறுத்தருளும்படி வேண்டினர். ஐயப்பன் தனது அவதார நோக்கத்தை அனைவருக்கும் எடுத்துக் கூறி புறப்பட்டார்.

    ஐயப்பனை வணங்கிய ராஜசேகரபாண்டியன், ‘எனது ராஜ்ஜியத்திலேயே நிரந்தரமாக இருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அதனை தட்டமுடியாத ஐயப்பன், ‘பரிசுத்தமான சபரிமலையில் நிரந்தரமாக வாசம் செய்வேன். என்னை பார்க்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் அங்கு வந்து என்னை பார்த்துக் கொள்ளுங்கள். கார்த்திகை மாதங்களில் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து என்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு நான் ஆண்டுதோறும் ஜோதி வடிவில் காட்சி தருவேன்’ என்று கூறி மறைந்தார்.

    இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளான, மகர சங்கராந்தி அன்று நடைபெறுகிறது.
    மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரண ஊர்வலம் பந்தளத்தில் இருந்து இன்று தொடங்கியது.
    சபரிமலையில் உள்ள ஐ யப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு திரு விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. சபரிமலையில் கடந்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை விழா நிறைவடைந்தது. அடுத்து மகர விளக்கு பூஜைக்கான விழா தொடங்கியது.

    வருகிற 14-ந்தேதி மாலையில் மகர விளக்கு பூஜை நடக்கிறது. அன்று சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவார்கள்.

    சபரிமலையில் மகர விளக்கு பூஜை நடக்கும் போது ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திரு வாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருக்கும். விழாக்காலங்களில் திருவா பரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

    அதன்படி மகர விளக்கு பூஜைக்காக திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளத்தில் இருந்து இன்று தொடங்கியது. வலியகோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது.

    திருவாபரண ஊர்வலத்தில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் பங்கேற்பது வழக்கம். இந்த முறை சபரிமலையில் போராட்டங்கள் நடந்ததால் ஊர்வலத்திற்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித் துள்ளனர். சபரிமலை போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளனர். இதனால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
    ×