search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Player"

    சாதாரண பின்னணியை கொண்டவர்கள் சாதிக்க முடியாது என்பதை தவிடு பொடியாக்கி தோகாவில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய தங்க மங்கை கோமதி, சாதிக்க துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு ஊக்க மருந்தாக உள்ளார். #AsianAthleticChampionship #Gomati
    திருச்சி:

    ஏழ்மையை மட்டுமே பின்னணியாக கொண்ட பலரும் அதனை துச்சமென தூக்கி எறிந்து லட்சியத்தை எட்டிப் பிடித்து எல்லையில்லா இந்த உலகில் தனி முத்திரை பதித்துள்ளனர். அந்த வரிசையில் புதிய விருட்சமாய் இணைந்துள்ளார் மலைக்கோட்டை மாநகரின் தங்க மங்கையாக அடையாளம் காணப்பட்டுள்ள கோமதி.

    சற்றும் மனம் தளராத தன்னம்பிக்கையை உந்து சக்தியாக கொண்டு எள்ளி நகையாடுபவர்களுக்கு முன்பு சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு வறுமையை தோற்கடித்து தடகள விளையாட்டில் தங்கம் வென்ற கோமதி தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார்.

    இந்த சாதனைக்கு சொந்தக்காரர், கத்தாரில் நடைபெற்று வரும் 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள திருச்சி வீராங்கனை கோமதி தான். 30 வயதான கோமதி மகளிர் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் முதல் சுற்றில் முதல் இடம் பிடித்து, பைனலில் அபாரமாக செயல்பட்டு (2 நிமிடம், 2.70 விநாடி) தங்கப்பதக்கத்தை பெற்றார்.

    இதற்கு முன் பாட்டியாலாவில் நடந்த பெடரே‌ஷன் கோப்பை தடகள போட்டியில் 800 மீட்டர் தொலைவை 2 நிமிடம் 3.21 விநாடிகளில் கடந்ததே அவரது முந்தைய சாதனையாக இருந்தது. அதை ஆசிய தொடரில் முறியடித்து அசத்தியுள்ளார்.

    சர்வதேச அளவில் கோமதி வெல்லும் முதல் தங்க பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் கூறுகையில், தொடக்கத்தில் வாழ்க்கை எனக்கு மிகவும் சவாலாகவே இருந்தது. ஆனாலும் என் திறமை மீது எந்த சந்தேகமும், எப்போதுமே இருந்ததில்லை. தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் என்னை இங்கே கொண்டு வந்திருக்கிறது.

    இந்த போட்டியில் கடைசி 150 மீட்டர் வரை பின் தங்கி இருந்தேன். அதன்பிறகுதான் வேகமெடுத்தேன். வெற்றிக் கோட்டை கடந்த பிறகு சிறிது நேரம் கழித்துதான் தங்கம் வென்றதை உணர்ந்தேன் என்றார்.

    கோமதியின் சொந்த ஊர் திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள முடிகண்டம் என்ற கிராமம். தந்தை மாரிமுத்து, விவசாயி. தாய் ராசாத்தி. சகோதரிகள் லதா, திலகவதி. இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சகோதரர் சுப்பிரமணி. கோமதிதான் இளைய மகள். திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் படிக்கும் போது அவரது தோழி சுருதியை பார்த்து ஓட்டப்பந்தயத்தில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 20 வயதில் தான் பயிற்சியை தொடங்கினார்.

    புனேவில் 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் 7-வது இடம், 2015-ல் சீனாவில் நடந்த போட்டியில் 4-வது இடம் பிடித்தார். தந்தை மாரிமுத்து, புற்றுநோய் பாதிப்பாலும், பயிற்சியாளர் காந்தி மாரடைப்பு ஏற்பட்டும் இறந்தது கோமதியின் தடகள வாழ்க்கையை வெகுவாக புரட்டிப்போட்டது.

    பயிற்சியின் போது கோமதிக்கும் இடுப்பில் காயம் ஏற்பட்டது. இது அவருக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. இப்படி தொடர்ந்த பிரச்சனைகளால் 2 ஆண்டுகள் பயிற்சி பெறாமல் இருந்தார். அதனால் ஆசிய விளையாட்டு போட்டி உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பயிற்சியை தொடங்கியவர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றார். இப்போது பல்வேறு தடைகளை தாண்டி ஆசிய போட்டியில் இந்தியாவுக்காக முதல் தங்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பெங்களூரில் வருமான வரித்துறையில் பணியாற்றி வருகிறார். விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அவர் அப்பணியில் சேர்ந்துள்ளார்.


    மகள் கோமதி வென்ற பதக்கங்களை தாங்கி அழகு பார்க்கும் தாய் ராசாத்தி.

    கோமதியின் சாதனை குறித்து அவரது தாய் ராசாத்தி கூறியதாவது:-

    சிறு வயது முதலே விளையாட்டில் குறிப்பாக ஓட்டப் பந்தயத்தில் கோமதி ஆர்வம் மிக்கவராக இருந்தார். தினமும் காலையில் எழுந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு சென்று பயிற்சி பெற்று வந்தார். அர்ப்பணிப்புமிக்க ஆர்வம் தான் அவரை இந்தளவுக்கு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் கிராமத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

    சிறுவயது முதல் வறுமை, கஷ்டங்களை மட்டுமே பார்த்து வளர்ந்த கோமதி பலமுறை அவரது அப்பாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் படிக்க வைக்க முடியாத சூழ்நிலையில் தவித்தபோது, என்னுடைய வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள் என்று கதறி அழுது இருக்கிறார்.

    அதன்பிறகு தான் கோமதியை கல்லூரியில் படிக்க வைத்தோம். ஓட்டப்பந்தயத்தில் பயிற்சி பெற்று அவ்வப்போது போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கத்தை கொண்டு வருவார். அதன் பிறகு எங்களுக்கே ஆர்வம் வந்தது. இதையடுத்து கோமதியின் விருப்பப்படி விட்டு விட்டோம்.

    தற்போது பட்டிக்காட்டில் பிறந்து எங்கேயோ நடந்த போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றதை எண்ணி பெருமைப்படுகிறோம். ஆனால் ஒரே ஒரு குறை, இதையெல்லாம் பார்க்க அவரை கஷ்டப்பட்டு படிக்க வைத்த அவரது அப்பா இல்லை என்பதுதான் என்று கூறி ஆனந்த கண்ணீர் வடித்தார்.

    கோமதியின் தாய் ராசாத்தி, சகோதரர் சுப்பிரமணி.

    கோமதியின் சகோதரர் சுப்பிரமணி கூறியதாவது:-

    பெண் பிள்ளை என்பதால் விளையாட்டுக்கு அனுப்பக்கூடாது என்று என் தந்தையிடம் நான் கூறினேன். ஆனால் கோமதியின் ஆர்வத்தை கண்டு கொண்ட என் தந்தை குடும்பம் வறுமையில் இருந்த நிலையிலும் தேவையான உதவிகளை செய்து கோமதியை ஊக்கப்படுத்தினார். அவருக்கு பக்க பலமாக இருந்தார்.

    அதற்கேற்ப கோமதி தினமும் அதிகாலையிலும், மாலையில் பள்ளி முடிந்த பிறகும் தவறாமல் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டார். எப்போதும் பயிற்சி என்றே இருந்ததால் கிராமத்தில் அவருக்கு தோழிகள் கூட கிடையாது. பள்ளி நேரத்தை தாண்டி அவரது எண்ணம், செயல் எல்லாமே ஓட்டம் என்பதாகவே இருந்தது.

    அவரது ஆர்வத்தை பார்த்த அப்போதைய கிராம நிர்வாக அலுவலர் கணேசன், பயிற்சியாளர் ஒருவரிடம் அறிமுகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து கல்லூரியில் சேர்ந்த பிறகு அவருக்கு ஓட்டத்தில் நல்ல பயிற்சி கிடைத்தது. முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு என் தங்கை கோமதியும் உதாரணம் என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது என்றார்.

    சாதனை படைத்த கோமதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி. வி.தினகரன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ச.ம.க. தலைவர் சரத்குமார், கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், கனிமொழி எம்.பி. உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    சாதாரண பின்னணியை கொண்டவர்கள் சாதிக்க முடியாது என்பதை தவிடு பொடியாக்கி தோகாவில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய தங்க மங்கை கோமதி, சாதிக்க துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு ஊக்க மருந்தாக உள்ளார். #AsianAthleticChampionship #Gomati
    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை கோமதியின் சொந்த ஊரில் கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். #AsianAthleticChampionship #Gomti
    திருச்சி:

    கத்தார் நாட்டில் தோகாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

    சாதனை படைத்த கோமதியின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள முடிகண்டம் ஆகும். இவரது தந்தை மாரி முத்து, தாய் ராஜாத்தி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். லதா, திலகா என்ற இரண்டு சகோதரிகளும், சுப்பிரமணி என்ற சகோதரரும் உள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் நாசரேத்தில் பள்ளி படிப்பை முடித்த கோமதி பின்னர் திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மற்றும் சென்னை செயிண்ட் ஜோசப் கல்லூரியில் உயர்கல்வி படிப்பை முடித்தார். பின்னர் வருமான வரித்துறையில் வேலை கிடைத்து பெங்களூருவில் பணியாற்றி வருகிறார்.

    சிறுவயதில் இருந்தே விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட கோமதி கடந்த 2013-ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார். தற்போது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இதனை கோமதியின் சொந்த ஊரான முடிகண்டம் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். இதுபற்றி அவரது சகோதரர் சுப்பிரமணி கூறுகையில், எனது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கோமதியின் பயிற்சியாளரும் இறந்து விட்டார்.

    இருந்த போதிலும் மனம் தளராமல் சிறந்த பயிற்சி பெற்று தற்போது கோமதி சாதனை படைத்துள்ளார். இது அவரது தன்னம்பிக்கைக்கும், பயிற்சிக்கும் கிடைத்த வெற்றி. எங்கள் ஊருக்கு சரியான பஸ் வசதி கிடையாது. ஆனாலும் கோமதி பயிற்சிக்காக தினமும் 15 கி.மீ. தூரம் வரை நடந்தே செல்வார். அதுவே அவரது உடற்பயிற்சிக்கு உந்து சக்தியாக இருந்தது.

    அவரது சாதனை இந்தியாவிற்கு மட்டுமல்ல, திருச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க கூடியதாகும். #AsianAthleticChampionship #Gomti
    ஒடிசா மாநிலத்தில் நடந்துவரும் 58-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 2-வது நாளான நேற்று பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சி.கனிமொழி தங்கப்பதக்கத்தை வென்றார். #NationalOpenAthletics
    புவனேஸ்வரம்:

    58-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சி.கனிமொழி (13.71 வினாடி) தங்கப்பதக்கத்தை வென்றார்.

    சிறப்பு அழைப்பு மூலம் கலந்து கொண்ட ஜப்பான் வீராங்கனை சிமோரா (13.74 வினாடி) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீராங்கனை ஆர்.நித்யா (13.99 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

    கனிமொழி சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தலைமை பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார். #NationalOpenAthletics
    ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். GKVasan #DharunAyyasamy #AsianGames2018
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹரியானா வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றிருப்பதும், தமிழக வீரர் தருண் அய்யாச்சாமி வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பதும் வாழ்த்துக்குரியது. பாராட்டுக்குரியது.

    தருண் அய்யாச்சாமி 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அதுவும் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 49 வினாடிக்கும் குறைவாக ஓடி, தேசிய சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் நமது தமிழக வீரர் தருண் அய்யாச்சாமி என்பது பெரிதும் பாராட்டுக்குரியது.


    உலக அளவில் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக வெற்றி பெற்றிருப்பதும், சாதனை நிகழ்த்தியிருப்பதும் தமிழர்களுக்கும், இந்திய நாட்டிற்கும் பெருமையாக இருக்கிறது.

    மத்திய மாநில அரசுகள் பதக்கங்கள் பெறும் விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை செய்வதும், ஊக்கத் தொகை கொடுப்பதும், விருதுகள் வழங்குவதும், பாராட்டுவதும் சாலச்சிறந்தது.

    தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, வெள்ளிப்பதக்கம் வென்ற தருண் அய்யாச்சாமி தொடர்ந்து விளையாட்டில் ஈடுபட்டு உலக அளவில் மென்மேலும் பல்வேறு விருதுகளை பெற்று சிறந்து விளங்கி தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #GKVasan #DharunAyyasamy #AsianGames2018
    ×