search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Renovation"

    மதுரையை அடுத்த அழகர்மலை நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்காக பாலாலய பூஜையுடன் திருப்பணி தொடங்கியது.
    மதுரையை அடுத்த அழகர்மலை உச்சியில் கள்ளழகர் கோவிலின் உபகோவிலான பிரசித்தி பெற்ற ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வற்றாத நீரூற்றாக வழிந்து கொண்டிருப்பது நூபுர கங்கை எனும் புனித தீர்த்தமாகும். ராக்காயி அம்மன் திருப்பாதம் பகுதியில் மேற்கு திசைபார்த்து வழிந்து கொண்டிருக்கும் தீர்த்தம் அபூர்வமானது. இந்த திருத்தலத்தில் கும்பாபிஷேகம் நடத்த அரசும், அறநிலையத் துறையும் முடிவு செய்தது. அதன்படி பல ஆண்டு காலத்திற்கு பின்பு நேற்று முன்தினம் இந்த கோவிலில் பூர்வாங்க பூஜைகள் நடந்தன.

    இதை தொடர்ந்து நேற்று காலையில் புண்யாகவாசனம், மகாபூர்ணாகுதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், வேத மந்திரங்கள், மேள தாளம் முழங்க தொடங்கியது, மேலும் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த நூபுர கங்கை புனித தீர்த்த குடங்களை கோவில் உள் பிரகாரத்திலே ஊர்வலமாக பட்டர்கள் எடுத்து சென்றனர். பின்னர் பாலாலய பூஜைகள், முகூர்த்தக்கால் நடும் பணியும் நடந்தது. இதை தொடர்ந்து திருப்பணி தொடங்கியது. இந்த பூஜைகள் நிகழ்வின்போது பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் காலை 11 மணிக்கு பிறகு காத்திருந்த ஏராளமான பக்தர்கள் நூபுர கங்கையில் நீராட ேகாவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    நீண்ட வரிசையில் சென்று நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராடி, பாலாலய பூஜைகள் நடைபெற்ற யாகசாலையையும் பார்த்து தரிசனம் செய்து சென்றனர். விழாவில் முன்னதாக துணை ஆணையர் ராமசாமி, நகை சரிபார்க்கும் அலுவலர் சுவாமிநாதன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதிபா, அருள்செல்வன், மற்றும் உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    வாலாந்தூர் அங்காள பரமேசுவரி கோவில் ராஜ கோபுரத்திற்கு ரூ. 35 லட்சத்தில் கதவு தயார் செய்யப்பட்டு உள்ளது. இதனை ஊர்வலமாக எடுத்துச்சென்று பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வாலாந்தூர். இந்த ஊரில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அங்காளபரமேசுவரி கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக அந்த கோவிலில் கட்டப்பட்ட ராஜ கோபுரத்திற்கு ரூ.35 லட்சம் ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்ட கதவை நாட்டாமங்கலத்தில் இருந்து ஆதிகால வழக்கப்படி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அப்போது பெண்கள் கையில் வேப்பிலையுடன் ஆடி வந்தனர்.

    மேலும் கொண்டுவரப்பட்ட கதவிற்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மஞ்சள் நீரை தெளித்து வரவேற்றனர். அதன் பின்னர் ராஜகோபுரத்தில் அந்த கதவை பொருத்தி ஏராளமான பக்தர்கள் வணங்கி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    ×