search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    துறையூர் பெருமாள்மலை கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு
    X

    கோவிலின் கோபுரத்தில் உள்ள கலசம் சேதமடைந்து சரிந்த நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.

    துறையூர் பெருமாள்மலை கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

    • துறையூர் பெருமாள்மலை கோவிலில் கோபுர கலசம் சாய்ந்த நிலையில் உள்ளது.
    • கோவிலுக்கு செல்லும் சாலையும் சேதமடைந்து, பாறைகள் சாலையில் உருண்டு கிடக்கிறது.

    துறையூரை அடுத்துள்ள பெருமாள் மலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் பக்தர்கள் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து மலைக்கு சென்று வரும் பாதை மிகவும் சேதமடைந்தும், பாறைகள் சாலையில் உருண்டு கிடக்கும் நிலையிலும் உள்ளது. இதுவரை சாலையை சரி செய்வதற்காக எந்த முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. வாகனங்கள் சென்று வர முடியாத அளவிற்கு சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மலையில் இருந்து பாறைகள் உருண்டு சாலையின் குறுக்கே கிடக்கின்றன. மீண்டும் மழை பெய்தால் அந்த பாறைகள் உருண்டு சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகனங்கள் அல்லது கார்களின் மீது விழக்கூடிய அபாய நிலை உள்ளது. மேலும் கோவிலின் ராஜகோபுரத்தில் உள்ள கலசங்கள் சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாக பழுதடைந்து சாய்ந்து, கீழே விழும் நிலையில் உள்ளது. இது பற்றி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் இது பற்றி கூறுகையில், கலசம் ஒரு கோவிலுக்கு மிகவும் முக்கியமானது ஆகும். கலசம் சாய்ந்த நிலையில் இருக்கும் போது கோவிலில் தினமும் அர்ச்சனைகள் உள்ளிட்டவை செய்து வருகிறார்கள். கோவிலில் திருவிழாக்கள் மட்டும் நடத்துவது போதாது. கோவிலை பராமரிக்கவும் வேண்டும். கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆனபோதும், மீண்டும் பராமரிப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.

    குரங்குகள் குடிநீர் தொட்டியில் குளித்து அசிங்கம் செய்து வருகிறது. பக்தர்கள் யாரும் குடிநீர் மற்றும் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் அன்னதான திட்டம் தற்போது அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு மாற்றப்பட்டுள்ளது. மலை உச்சிக்கு ஒரு நாளைக்கு குறைந்த அளவே பக்தர்கள் சென்று வருகின்றனர். இதனால் பலர் உணவருந்த முடியாத நிலை உள்ளது. ஏனெனில் பக்தர்கள் சென்று வருவதற்கு போதிய போக்குவரத்து வசதி கிடையாது. பக்தர்கள் செல்ல வேண்டுமென்றால் படிக்கட்டுகளிலோ அல்லது இருசக்கர வாகனங்களில் மட்டுமே கோவிலுக்கு செல்ல முடியும். புரட்டாசி மாதத்தில் மட்டும் தனியார் வேன்கள் இயக்கப்படுகின்றன.

    திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள் அனைவரும் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த பெருமாள் மலைக்கு வந்துதான், தங்களது காணிக்கையை செலுத்துகிறார்கள். அதிக அளவில் வருமானமுள்ள கோவிலாக இருந்தும், இந்த கோவிலுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. ராஜகோபுரத்தில் உள்ள கலசங்கள் சாய்ந்த நிலையில் இருக்கும்போது, கும்பாபிஷேகத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து அவற்றை புனரமைக்காமல் திருவிழா நடத்துவது வருத்தம் அளிக்கிறது.பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டும், ஆகம விதியை கடைப்பிடித்தும் அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும். அன்னதானத்தை மீண்டும் அடிவாரத்திலேயே செயல்படுத்த வேண்டும். மேலும் கோவில் கோபுரத்தை சரி செய்து, புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×