search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சூரியனார் கோவிலில் நவக்கிரக நாயகர்களுக்கு கருங்கல் தளம் அமைக்கும் பணி
    X

    சூரியனார் கோவிலில் நவக்கிரக நாயகர்களுக்கு கருங்கல் தளம் அமைக்கும் பணி

    • பழமையான கோவில்களை பாதுகாக்கும் வகையில் திருப்பணி செய்வது அவசியம்.
    • திருப்பணிகள் விரைந்து மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

    கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மருத்துவக்குடி காசிவிஸ்வநாதர் கோவி்லில் வருகிற 20-ந்தேதி குடமுழுக்கு நடக்கிறது.

    இக்கோவில் திருப்பணிகளை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து 45 நதிகளின் புனித தீர்த்தங்களுக்கு வழிபாடு செய்து, யாகசாலை மண்டபம் மற்றும் புனித நீர் ஊர்வலத்திற்கான 500 குடங்கள், புடவைகள்- கோவில் விமானத்தில் வைக்கப்படும் கலசங்களையும் பார்வையிட்டு குடமுழுக்கு ஏற்பாடுகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பழமையான கோவில்களை புராதானத்தை பாதுகாக்கும் வகையில் திருப்பணி செய்வது அவசியம். மருத்துவக்குடியில் 84 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாமல் சிதலமடைந்து காணப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலை மிகவும் சிறப்பாக திருப்பணி செய்திருப்பது பாராட்டுக்குரியது.

    கோவில்களில் இறைவழிபாட்டிற்கு இடையூறு தரக்கூடிய எந்த ஒரு செயலையும் அனுமதிக்க கூடாது. அத்தகைய வகையில் கோவில்களில் சிவாச்சாரியார்கள், பணியாளர்கள், பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்ற ஐகோர்ட்டின் யோசனை வரவேற்கத்தக்கது. அதனை அரசு முழுமையாக செயல்படுத்த முன்வர வேண்டும். மேலும் கூட்டம் அதிகமாக உள்ளதால் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் கோவில்களில் கட்டண தரிசனம் இருப்பது தடுக்கப்பட வேண்டும். நமது பண்பாடு, கலாச்சார உடை அணிந்து கோவில்களில் வழிபாடு செய்வது மிக அவசியமானது.

    திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோவிலில் திருப்பணி நடக்கிறது. சூரியனார் கோவிலில் நவக்கிரக நாயகர்களுக்கு கருங்கல் தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. திருப்பணிகள் விரைந்து மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது திருப்பணி கமிட்டி பொறுப்பாளர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், நாட்டான்மைகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×