search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "subramaniyan"

    பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல், 40 வீரர்களின் தியாகத்திற்கு கிடைத்த பரிசு என்று கயத்தாறு வீரரின் மனைவி தெரிவித்துள்ளார். #PulwamaAttack #Surgicalstrike2 #Subramaniyan
    கயத்தாறு:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த வீரர் சுப்பிரமணியனும் பலியானார். இதையடுத்து சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி, தந்தை கணபதி மற்றும் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர். அவர்களை பல்வேறு கட்சியினர், அமைப்பினர் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.



    இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தன. இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு தலைவர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

    இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு சுப்பிரமணியனின் கிராமமான சவலாப்பேரி மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ராணுவ வீரர் சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி மற்றும் தந்தை கணபதி ஆகியோர் சுப்பிரமணியன் படத்திற்கு இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கையால் எங்கள் கிராமமே சந்தோ‌ஷம் அடைந்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இது 40 வீரர்களின் தியாகத்திற்கு கிடைத்த பரிசு ஆகும். இதற்கு இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுப்பிரமணியனின் தந்தை கணபதி கூறுகையில், ‘பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பது வரவேற்க கூடியது. இதில் அப்பாவி மக்கள் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது’ என்றார். இதனிடையே சவலாப்பேரி முழுவதும் ஆங்காங்கே இளைஞர்கள், பொதுமக்கள் கூடிநின்று ராணுவ நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர். #PulwamaAttack #Surgicalstrike2 #Subramaniyan
    புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த கயத்தாறு வீரர் குடும்பத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். #PulwamaAttack #CRPF #Subramaniyan #MKStalin
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

    அவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து அவர் வல்லநாடு, கே.டி.சி.நகர், சங்கர்நகர், கங்கைகொண்டான் வழியாக கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரிக்கு சென்றார். அங்கு காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பாக ரூ.2 லட்சம் நிதி வழங்கினார். இதை தொடர்ந்து அவர் தூத்துக்குடி அருகே உள்ள மேலக்கூட்டுடன் காடு பகுதியில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்றார். பின்பு மங்களகிரி விலக்கில் நடைபெறும் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.



    மாலை 4 மணிக்கு தெற்கு வேம்பார் ஊராட்சி சபை கூட்டத்திலும், 6 மணிக்கு விளாத்திகுளம், மதுரை ரோட்டில் நடைபெறும் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இரவு 7 மணிக்கு நாகலாபுரம், பந்தல்குடி வழியாக மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அவர் வரும் வழியில் வரவேற்பு வளைவுகள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. வழியெங்கும் அவருக்கு தி.மு.க. தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தார்கள். #PulwamaAttack #CRPF #Subramaniyan #MKStalin
    காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் 2 பேரின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. #PulwamaAttack
    திருச்சி:

    காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    இதில் தமிழகத்தை சேர்ந்த சிவசந்திரன், சுப்ரமணியன் ஆகியோர் பலியானார்கள்.

    சிவசந்திரன் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடியை சேர்ந்தவர்.

    சுப்ரமணியன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவலப்பேரியை சேர்ந்தவர் ஆவார்.

    பலியான துணை ராணுவ வீரர்களின் உடல்களுக்கு டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய மந்திரிகள், முப்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் ராணுவ வீரர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அந்த வகையில் டெல்லியில் இருந்து நேற்று காலை தனி விமானத்தில் அரியலூர் சிவசந்திரன், தூத்துக்குடி சுப்ரமணியன் ஆகியோரது உடல்களும், கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவரது உடலும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் உடலும் ஆக மொத்தம் 4 துணை ராணுவ வீரர்களின் உடல்கள் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது.



    உடல்களுடன் வந்த விமானம் திருச்சிக்கு நேற்று பகல் 11.10 மணி அளவில் வந்தடைந்தது. இதில் அரியலூர் சிவசந்திரன் உடல் மட்டும் தனியாக இறக்கப்பட்டது. தூத்துக்குடி சுப்ரமணியனின் உடல், கேரள மாநிலத்தை சேர்ந்தவரின் உடல் அதே விமானத்தில் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வீரரின் உடல் மற்றொரு தனி விமானத்தில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அரியலூர் சிவசந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய மந்திரி சீதாராமன் பாதுகாப்பு துறை விமானத்தில் நேற்று காலை 10.35 மணி அளவில் திருச்சி வந்தார். பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவதற்காக விமானநிலைய முனையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    தனி விமானத்தில் வந்த வீரர் சிவசந்திரன் உடலை பகல் 11.45 மணி அளவில் விமானநிலையத்தின் உள்ளே இருந்து துணை ராணுவ வீரர்கள் சுமந்து வெளியே வந்தனர். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியின் மீது வெள்ளை துணியும், தேசிய கொடியும் போர்த்தப்பட்டிருந்தன. அவரது உடலை அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்த இடத்தில் வைத்தனர்.

    சிவசந்திரனின் உடலை பெறுவதற்காக அவரது மைத்துனர் அருண், சித்தப்பா கண்ணன், மற்றும் உறவினர்கள் ஜெயபால், குணவேல் ஆகியோர் வந்திருந்தனர். சிவசந்திரன் உடல் வந்து இறக்கப்பட்டதும், அவர்கள் 4 பேரும் கதறி அழுதபடி கண்ணீர் மல்க ஓடி வந்து சவப்பெட்டியின் மீது விழுந்து அழுதனர்.

    அப்போது திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி, அவர்களை ஆசுவாசப்படுத்தி ஆறுதல் கூறினார். இருப்பினும் அவர்கள் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். சிறிது நேரம் அவர்கள் அஞ்சலி செலுத்தியபின் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பலியான சிவசந்திரனின் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சிவசந்திரன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அதனைதொடர்ந்து கர் நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். ராணுவ வீரரின் உடல் வந்தபோது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உணர்ச்சி பொங்க முழக்கமிட்டனர். பழிக்குப்பழி வாங்க வேண்டும் என இளைஞர்கள் கோஷமிட்டனர்.

    ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் பலர் நேற்று காலை 9 மணிக்கு விமான நிலையம் வரத்தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகமானது. பலர் கையில் தேசிய கொடியுடன் வந்திருந்தனர். பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின்னர் சிவசந்திரனின் உடல், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    கார்குடி கிராமம் காலனி தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு மாலை 4 மணி அளவில் உடல் கொண்டு வரப்பட்டது. ராணுவ மரியாதையுடன் சிவசந்திரன் உடல் இருந்த சவப்பெட்டியை இறக்கி அவரது வீட்டு முன்பு வைத்தனர்.

    அப்போது அவரது உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அங்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அப்போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், சிவசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் சிவசந்திரன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    இதேபோல மத்திய இணை மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., கோவை மத்திய ராணுவ படை டி.ஐ.ஜி. சோனல் மிஸ்ரா, திருச்சி மத்திய மண்டல டி.ஐ.ஜி. லலிதா, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

    நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ரூ.20 லட்சத்திற்கான காசோலையை சிவசந்திரன் குடும்பத்தினரிடம் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வழங்கினர்.

    21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

    பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பின் மாலை 4.45 மணி அளவில் சிவசந்திரனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது.

    தொடர்ந்து 8 ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க, சிவசந்திரனின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே துணை ராணுவ வீரர் சுப்ரமணியனின் உடல் மதுரை விமான நிலையத்துக்கு நேற்று மதியம் கொண்டு வரப்பட்டது. அவரது உடலை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பெற்று கொண்டார். பின்னர் சுப்ரமணியனின் உடலுக்கு அரசு அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து உடல், ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு அவரது சொந்த ஊரான சவலாப்பேரிக்கு இறுதி யாத்திரையாக புறப்பட்டது.

    மதுரை, விருதுநகர் மாவட்டங்களின் வழியாக வந்த சுப்பிரமணியனின் உடலுக்கு ஆங்காங்கே அரசு சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏராளமானவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், தேசிய கொடி ஏந்தியும், ‘பாரத மாதாவுக்கு ஜே’ என்று முழக்கமிட்டபடி சுப்ரமணியனின் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

    மாலை 4.20 மணிக்கு சுப்ரமணியனின் உடல் அவரது சொந்த ஊரான சவலாப்பேரியை வந்தடைந்தது. தொடர்ந்து ராணுவ வாகனத்தில் இருந்து சுப்ரமணியனின் உடலை ராணுவ வீரர்கள் இறக்கி, அவரது வீட்டின் முன்பு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைத்தனர். அப்போது சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி, தாயார் மருதம் அம்மாள், தந்தை கணபதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், கிராமமக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    சுப்ரமணியனின் உடல் இருந்த பெட்டியின் மீது ராணுவ வீரர்கள் தேசிய கொடி போர்த்தினர். தொடர்ந்து பல ஆயிரக்கணக்கானவர்கள் நீண்ட வரிசையில் நின்று சுப்ரமணியனின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    வீரமரணம் அடைந்த சுப்ரமணியனின் உடலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் முரளி ரம்பா (தூத்துக்குடி), அருண் சக்திகுமார் (நெல்லை), நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் சுகுணா சிங், பெரோஸ் கான் அப்துல்லா, எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், வசந்தகுமார் உள்பட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதையடுத்து தமிழக அரசு நிவாரணமாக அறிவித்த ரூ.20 லட்சத்துக்கான காசோலையை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணியிடம் வழங்கினார். மாலை 5 மணி அளவில் சுப்ரமணியனின் உடலை வீரர்கள் ராணுவ வாகனத்தில் ஏற்றினர். தொடர்ந்து சுப்ரமணியனின் உடலை சுமந்தவாறு ராணுவ வாகனம் இறுதி ஊர்வலமாக புறப்பட்டது.

    சவலாப்பேரியில் உள்ள சுப்ரமணியனுக்கு சொந்தமான தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ராணுவ வாகனத்தை பின்தொடர்ந்தவாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல ஆயிரக்கணக்கானவர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றனர்.

    மக்கள் வெள்ளத்தின் இடையே ராணுவ வாகனம் ஊர்ந்து வந்தது. சுப்ரமணியனின் தோட்டத்துக்கு ராணுவ வாகனம் வந்ததும், அவரது உடலை ராணுவ வீரர்கள் இறக்கி வந்தனர். தொடர்ந்து சுப்ரமணியனின் உடல் மீது போர்த்தப்பட்டு இருந்த தேசிய கொடி அகற்றப்பட்டு, அவருடைய மனைவி கிருஷ்ணவேணியிடம் வழங்கப்பட்டது.

    பின்னர் சுப்ரமணியனின் உடலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயகுமார், ராஜலட்சுமி மற்றும் அரசு அதிகாரிகள், முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் சுப்ரமணியனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சுப்ரமணியனின் உடல் அடக்கத்தையொட்டி அந்த கிராமமே சோகக்கடலில் மூழ்கி இருந்தது.
    காஷ்மீரில் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் உயிரிழந்த கயத்தாறு வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார். #PulwamaAttack #Subramanian
    கயத்தாறு:

    காஷ்மீரில் பயங்கரவாதி தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரி மேல தெருவை சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன் (வயது30) வீரமரணம் அடைந்தார்.

    இவர் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வீரராக பணியாற்றினார். இவருக்கு கிருஷ்ணவேணி (23) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

    சுப்பிரமணியன் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் 10-ந்தேதி காலையில் மீண்டும் பணிக்கு புறப்பட்டு சென்றார்.

    நேற்று முன்தினம் சுப்பிரமணியன் ஸ்ரீநகர் சென்று மீண்டும் பணியில் சேர்ந்ததாக தன்னுடைய மனைவியிடம் செல்போனில் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பயங்கரவாதி நடத்திய திடீர் தாக்குதலில் சகவீரர்களுடன் அவர் பரிதாபமாக உயிரிழந் தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் சவலாப்பேரி கிராமமே சோகத்தில் மூழ்கியது.



    சுப்பிரமணியன் உடல் இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் மற்ற வீரர்கள் உடல்களுடன் திருச்சி வந்தது.

    அங்கு அரியலூர் வீரர் சிவச்சந்திரன் உடலை இறக்கிய பிறகு கயத்தாறு வீரர் சுப்பிரமணியன் மற்றும் கேரளா, கர்நாடகா வீரர்களின் உடல்களுடன் தனி விமானம் மதுரை சென்றது.

    பகல் 12.40 மணிக்கு இந்த விமானம் மதுரை வந்தடைந்தது. அங்கு கயத்தாறு வீரர் சுப்பிரமணியனின் உடல் இறக்கப்பட்டது. அவரது உடலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கலெக்டர் நடராஜன், போலீஸ் ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. பிரதீப்குமார், போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அஞ்சலி செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியனின் உடல் தனி வாகனத்தில் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு சுப்பிரமணியன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்துகிறார்.  இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, இன்று மதியம் மதுரை போய்ச் சேர்ந்தார்.  

    அங்கிருந்து காரில் சவலாப்பேரி சென்று அஞ்சலி செலுத்துகிறார். மாலையில் சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்.

    மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகளும் சுப்பிரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

    சவலாப்பேரி கிராமத்தை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சவலாப்பேரி கிராமத்திற்கு திரண்டு வந்து சுப்பிரமணியன் படத்தை அலங்கரித்து வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். #PulwamaAttack #Subramanian
    புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் திருச்சி வந்து சேர்ந்தது. பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் திருச்சி விமான நிலையம் வந்து சிவச்சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். #PulwamaAttack
    திருச்சி:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனத்தின் மீது பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், பயங்கரவாதிகளுக்கு எதிராக மக்களிடம் ஆவேசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகிய 2 வீரர்கள் பலியானார்கள்.

    சிவச்சந்திரன் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். சுப்பிரமணியனுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு.

    பலியான மற்ற வீரர்கள் உடலுடன் தமிழக வீரர்களின் உடல்களும் டெல்லி கொண்டு வரப்பட்டு பிரதமர் மோடி , உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் அஞ்சலிக்கு பின் சொந்த ஊர்களுக்கு உடல்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.

    தமிழக வீரர்கள் சுப்பிரமணியன், சிவச்சந்திரன் உடல்களுடன் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த 2 வீரர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


    இந்த விமானம் இன்று காலை 11.10 மணியளவில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அரியலூர் வீரர் சிவச்சந்திரன் உடல் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு அஞ்சலிக்காக விமான நிலையத்தில் வைக்கப்பட்டது.

    தேசியக்கொடி போர்த்தப்பட்ட பெட்டியில் சிவச்சந்திரன் உடல் வைக்கப்பட்டிருந்தது. உடலுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் திருச்சி விமான நிலையம் வந்து சிவச்சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது சிவச்சந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அவர்களுக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறினார்.


    மத்திய மந்திரி ஆனந்த குமார் ஹெட், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, குமார் எம்.பி., தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கலெக்டர்கள் ராஜாமணி (திருச்சி), விஜயலட்சுமி (அரியலூர்), திருச்சி போலீஸ் கமி‌ஷனர் அமல் ராஜ், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து சிவச்சந்திரனின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டது.

    சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனும் அரியலூர் சென்று சிவச்சந்திரனின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கிறார்.

    இன்று மாலை 4 மணிக்கு சிவச்சந்திரன் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. இதில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்.

    இதேபோல் தூத்துக்குடி வீரர் சுப்பிரமணியன் உடல் தனி வாகனத்தில் சொந்த ஊரான கயத்தாறு கொண்டு செல்லப்படுகிறது. கேரளா, கர்நாடகா வீரர்களின் உடல்களும் தனித்தனியாக சொந்த ஊர்களுக்கு திருச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

    முன்னதாக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை கார்குடி கிராமத்துக்கு சென்று சிவச்சந்திரன் மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். #PulwamaAttack #CRPFAttack #SivaChandran #Subramaniyan
    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 2 வீரர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். #PulwamaAttack #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், மத்திய ரிசர்வ் காவல் படையினர் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

    இத்தாக்குதலில், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் மகன் சி. சிவசந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது.

    இந்திய திருநாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், தனது இன்னுயிரை தியாகம் செய்த, மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் நேற்று உத்தரவிட்டேன்.



    மேலும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் சுப்ரமணியனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

    அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் சிவசந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும், அரசு கொறடா ராஜேந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

    மறைந்த சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PulwamaAttack #CRPF #EdappadiPalaniswami
    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சுப்பிரமணியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கயத்தாறு சவலாப்பேரிக்கு வருகிறார். #PulwamaAttack #Subramaniyan #CRPF
    கயத்தாறு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது நேற்று முன்தினம் வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு பயங்கரவாதி நடத்திய திடீர் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.

    இவர்களில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரி மேல தெருவை சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன் (வயது30) வீரமரணம் அடைந்தார். சுப்பிரமணியன் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரராக பணியாற்றினார். இவருக்கு கிருஷ்ணவேணி (23) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    சுப்பிரமணியன் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் கடந்த 10-ந்தேதி காலையில் மீண்டும் பணிக்கு புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் சுப்பிரமணியன் ஸ்ரீநகர் சென்று மீண்டும் பணியில் சேர்ந்ததாக தன்னுடைய மனைவியிடம் செல்போனில் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பயங்கரவாதி நடத்திய திடீர் தாக்குதலில் சகவீரர்களுடன் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் சவலாப்பேரி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

    வீரமரணமடைந்த சுப்பிரமணியன் உடல் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் அவரது சொந்த ஊரான சவலாப்பேரிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக அவருக்கு சொந்தமான இடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.



    வீரமரணமடைந்த சுப்பிரமணியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதியம் விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் கயத்தாறு சவலாப்பேரி செல்லும் அவர் சுப்பிரமணியன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்.

    மேலும் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகளும் சுப்பிரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

    சுப்பிரமணியன் உடலுக்கு ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். இதையடுத்து முழு அரசு மரியாதையுடன் சுப்பிரமணியன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதனிடையே சவலாப்பேரி கிராமத்தை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உறவினர், நண்பர்கள் வசிக்கின்றனர். அவர்கள் ஏராளமானோர் சவலாப்பேரி கிராமத்திற்கு திரண்டு வந்து சுப்பிரமணியன் படத்தை அலங்கரித்து வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். #PulwamaAttack #Subramaniyan #CRPF
    ×