search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "srinivasa perumal temple"

    • கும்பாபிஷேக விழா கடந்த 29-ந்தேதி தொடங்கியது.
    • நேற்று காலை 4 மணிக்கு கோபூஜை, 5-ம் கால ஹோமம் நடைபெற்றது.

    உடன்குடி:

    புன்னைநகர் வனத்திருப்பதி சீனிவாசப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 29-ந்தேதி தொடங்கியது.

    மறுநாள் காலை புண்யாஹ வாசனம், ரஷாபந்தனம், யாகசாலப் பிரவேசம், முதல் கால ஹோமம், இரவு பூர்ணாகுதி சாற்றுமுறை, 31-ந் தேதி காலை சதுஸ்தான ஆராதனம், 3-ம் கால ஹோமம், காலை சீனிவாச பெருமாள், பரிவார மூர்த்திகளுக்கும் அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல், பூர்ணாகுதி சாற்றுமுறை தீர்த்த ப்ரஸாத விநியோகம், மூலவர் உத்ஸவர் 81 கலச திருமஞ்சனம், சதுஸ்நான ஆராதனம், 4-ம் கால யாகசாலை ஹோமங்கள், தத்வநாஸ ஹோமம், உத்ஸவர் சயணாதிவாஸம், சாற்றுமுறை நடந்தது.

    நேற்று காலை 4 மணிக்கு கோபூஜை, 5-ம் கால ஹோமம் மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், கும்பபுறப்பாடு, காலை 5.20 மணிக்கு சீனிவாச பெருமாள், பத்மாவதி தாயார், பரிவார மூர்த்திகள், ராஜகோபுரம், விமானங்கள் கும்பாபிஷேகம் நடந்தது.

    மாலை 4.30 மணிக்கு பரதநாட்டியம், இரவு 7.30-க்கு கருட வாகனத்தில் சீனிவாச பெருமாள் திருவீதி உலா, வாண வேடிக்கை நடந்தது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆனிப் பெருந்திருவிழாவும் ஒன்றாகும்.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆனிப் பெருந்திருவிழாவும் ஒன்றாகும். இவ்வருடத்துக்கான திருவிழா நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

    இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. இதற்காக கொடி படத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், சீனிவாச பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இன்று இரவு அன்னவாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தினந்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஜூலை 3-ந் தேதி மாலை திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு முத்துப்பல்லக்கில் சுவாமி நகர்வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    ஜூலை 10ந் தேதி திருத்தேர் நகர் வலம் வருதலும், 7ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. 8-ந் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் ஆனிப் பெருந்திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாங்குநேரியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வானமாமலை பெருமாள் கோவில் உள்ளது.

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள வானமாமலை பெருமாள் சுயம்பாக தோன்றியவர் ஆவார். பிரசித்திப் பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் தெப்பத் திருவிழா நடப்பது வழக்கம். இதன் படி இந்தாண்டு தெப்பத் திருவிழா நேற்று இரவில் நடைபெற்றது.

    இதையொட்டி வான மாமலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து இரவில் பெருமாள் தெப்ப உற்சவத்திற்கு புறப்பட்டார். ரதவீதிகள் வழியாக தெப்ப குளத்திற்கு வந்தார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வானமாமலை பெருமாள் வரமங்கை நாச்சியாருடன் எழுந்தருளி சுற்றி வந்தார். விழாவை மதுரகவி வானமாமலை மடத்தின் ஜீயர் தொடங்கி வைத்தார்.

    விழாவை முன்னிட்டு தெப்பம் பல வண்ண மின் விளக்குகளாலும், மலர் களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இதில் நாங்குநேரி மற்றும் சுற்றுபுற பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் முக்கோடி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் பிரசித்தி பெற்ற வஞ்சுளவல்லி தாயார் சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் உலக பிரசித்திபெற்ற கல்கருடசேவை ஆண்டுக்கு இரு முறை நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலில் ஆண்டுக்கான முக்கோடி தெப்பத்திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. முன்னதாக சீனிவாச பெருமாள், வஞ்சுள வல்லி தாயார் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளும், தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகங்களும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. வருகிற 14-ந் தேதி(வெள்ளிக்கிழமை) கல்கருடன் வாகன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் வசந்த மாளிகை நெல்லை ரமேஷ் கண்ணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாசப்பெருமாள் கோவிலில் இந்த வருட ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாசப்பெருமாள் கோவிலில் வருடந்தோறும் ஆனித்திருவிழா சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருட ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணியளவில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதன்பிறகு 10.30 மணியளவில் நவக்கலச பூஜை, பாராயணம், கருடாழ்வார் பூஜை நடைபெற்று, கொடிமரம் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது.

    அதனைத்தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில் கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி, கோவில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் சீனிவாசப்பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித் தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இந்த திருவிழாவில் நாள்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடக்கிறது. வருகிற 14-ந் தேதி கருட வாகனத்தில் சுவாமி நாகல்நகர் புறப்பாடும், 16-ந் தேதி திருக்கல்யாணமும், 18-ந் தேதி திருத்தேர் நகர்வலம் வருதலும், 20-ந் தேதி தெப்ப உற்சவமும், 21-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நரசிம்மன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர். 
    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள காடாளப் பெருமாளின் வைப்புத்தலம் ஒன்று இருக்கிறது. அந்தத் தலத்தின் பெயர் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவில்.
    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள காடாளப் பெருமாளின் வைப்புத்தலம் ஒன்று இருக்கிறது. அந்தத் தலத்தின் பெயர் ஸ்ரீனிவாசபுரம். இங்குள்ளது ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவில். கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்த அழகான ஆலயம். இந்தக் கோவிலின் முகப்பை கடந்தவுடன் கருடாழ்வார் தனி சன்னிதியில் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள மகாமண்டப நுழைவு வாசலின் இடதுபுறம் விநாயகர், வலதுபுறம் கிருஷ்ணன் திருமேனிகள் உள்ளன.

    மகா மண்டபத்தின் உள்ளே வலதுபுறம் நிகமாந்த மகாதேசிகர், உடையவர், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் திருமேனிகள் தனி மண்டபத்தில் உள்ளன. இடதுபுறம் சுதர்சன பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வார் தனி சன்னிதிகளில் ஒரு சேர அருள்பாலிக்கின்றனர். அர்த்த மண்டபத்தின் நுழைவு வாசலில் இடதுபுறம் மணிகள் மற்றும் வலதுபுறம் பிரபந்தன் என்ற இரு துவாரபாலகர்கள் கம்பீரமாக காவல் நிற்கின்றனர்.

    பொதுவாக ஆலயங்களில் துவாரபாலகர்களின் திருமேனிகள் சுதையில் செய்யப்பட்டவையாக இருக்கும். ஆனால் இங்கு இந்த இரண்டு துவாரபாலகர்கள் திருமேனிகள் கருங்கற்களில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இருவருக்கும் பிற பரிவார தெய்வங்களுக்கு நடைபெறுவது போல் தினசரி பூஜைகள் உண்டு. இது இந்த ஆலயத்தின் தனி சிறப்பு.

    அடுத்துள்ள கருவறையில் பெருமாள் ‘ஸ்ரீனிவாசன்’ என்ற திருநாமம் தாங்கி, நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாளுக்கு இங்கு நான்கு கரங்கள். வலது மேல் கரத்தில் சுதர்சன சக்கரமும் இடது மேல் கரத்தில் வாஞ்ச ஜன்ய சங்கும், வலது கீழ் கரத்தில் வரத முத்திரையுடன் சேவை சாதிக்கும் பெருமாளின் இடது கரம் பூமியை நோக்கி தாழ்ந்துள்ளது. பெருமாளின் இருபுறமும் ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவி காட்சி தருகின்றனர்.

    காளியம்மன் :

    பெருமாளின் பெயரான ஸ்ரீனிவாசன் என்ற பெயரிலேயே இந்த தலம் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் இத்தலம் தற்போது காளி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அதற்கு காரணமும் உண்டு. இந்த ஊரில் மந்தகரை காளியம்மன் என்ற காளியை ஊர் மக்கள் சிலர் ஓர் நதியில் கண்டெடுத்தனர். அந்த காளியை ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்து வைத்தனர். ஊருக்கு புதிதாக வந்த அம்மன்தானே என எண்ணிய ஊர்மக்கள் அந்த காளியை வழிபடாமல், ஊரின் வடபால் இருந்த மாரியம்மனை மட்டும் வழிபட்டு வந்தனர்.

    பொறுத்துப் பார்த்தாள் காளி. காளியின் மனம் உக்கிரமடைந்ததால் ஊர் மக்களில் பலருக்கு நோய் வந்தது. பயந்துபோன மக்கள் ஸ்ரீனிவாசப் பெருமாளை சேவித்து காரணம் கேட்டனர். பெருமாள் தனது தங்கையான காளியம்மனை சாந்தமாகும்படி கூற அவள் உக்கிரம் தணிந்தது. ‘இனி இந்த ஊர் உன் பெயரால் அழைக்கப்படும்’ என பெருமாள் அவளுக்கு வரம் அளித்தார். அதுமுதல் ‘ஸ்ரீனிவாசபுரம்’ எனும் இந்த ஊர், ‘காளி’ என அழைக்கப்படலாயிற்று.


    ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள்.

    தினசரி இரண்டு கால பூஜைகள் நடக்கும் இந்த ஆலயம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள ஆஞ்சநேயர் சக்தி உள்ளவர் என பக்தர்கள் நம்புகின்றனர். அமாவாசை தோறும் இங்கு மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.

    தங்கள் வேண்டுதல்களை ஒரு சீட்டில் எழுதி, ஒரு தேங்காயையும் அதனுடன் இணைத்து ஒரு துணியில் கட்டுகின்றனர். பின்னர் ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்து, அந்த துணி முடிப்பை ஆஞ்சநேயருக்கு அருகே உள்ள விட்டத்தில் கட்டுகின்றனர். அவர்கள் பிரார்த்தனை பலிக்கிறது. பின்னர் திரும்ப வந்து தாங்கள் கட்டிய துணி முடிச்சியை அவிழ்த்துவிட்டு, ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி, தயிர்சாதம் படைத்து பக்தர்களுக்கு விநியோகம் செய்து நிம்மதி பெறுகின்றனர்.

    திருவிழாக்கள் :

    இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை. வைகாசி திருவோணத்தில் கருடசேவை நடைபெறும். அப்போது பெருமாளின் திருக்கல்யாணம் உற்சவமும், கருட வாகனத்தில் வீதியுலா காட்சியும் உண்டு. ஆனி மாத திருவோண நட்சத்திரத்தில் புஷ்ப விமானத்தில் பெருமாள் தன் தேவியர்களுடன் வீதியுலா வருவர். தைமாதம் மாட்டுப்பொங்கலன்று பாரிவேட்டை என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று பெருமாளும், தேவியர்களும் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். மார்கழி மாதம் திருமஞ்சனமும் வைகுண்ட ஏகாதசியில் இறைவனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகளும் நடைபெறுகின்றன.

    ஆவணி மாத ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணஜெயந்தி திருவிழாவில் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மார்கழி மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் உண்டு. ஆவணி சுவாதியில் கருடாழ்வாருக்கும் வைகாசி விசாகத்தில் நம்மாழ்வாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சித்திரையில் வரும் சக்கரத்தாழ்வார் ஜெயந்தியில் சக்கரத்தாழ்வாருக்கு பிரத்யேக சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

    பிரதோஷ நாட்களில் இங்குள்ள சுதர்சன பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு வெல்லம், பானகம் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர். இங்குள்ள சுதர்சன பெருமாள் வெளியே புறப்பட தயாராக இருக்கும் நிலையில் அவரது பாத அமைப்பு உள்ளது. தவிர அவரது கோலமும் சற்றே உக்கிரமாக இருப்பதும் நிஜம். இவரை பிரார்த்தனை செய்தால் பில்லி, சூனியம், பகை விலகி வாழ்வில் நிம்மதி நிலவும் என பக்தர்கள் நம்புகிறார்கள். கேட்டதை கொடுக்கும் பெருமாளை நாமும் ஒரு முறை காளிக்கு சென்று தரிசித்து வரலாமே.

    நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு தென்மேற்கே 13 கிலோமீட்டர் உள்ளது காளி என்ற இந்த தலம். இந்த ஆலயம் செல்ல மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதியும், மினிபஸ் வசதியும், ஆட்டோ வசதியும் உண்டு.
    ×