என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைந்தகரை"

    • விருகம்பாக்கம் கால்வாயில் உள்ள பல பாலங்கள் நீரோட்டத்துக்கு தடையாக உள்ளன
    • வெள்ள அபாயத்தை தடுக்க இந்த பாலங்களை சீரமைக்க வேண்டிய நிலை உள்ளது.

    சென்னை:

    சென்னையில் வெள்ள பாதிப்பை தடுப்பதற்காக விருகம்பாக்கம் கால்வாயை, அமைந்தகரைக்கு அருகே கூவம் ஆற்றுடன் இணைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    விருகம்பாக்கம் கால்வாய் நெற்குன்றம் அருகே புவனேசுவரி நகரில் இருந்து உற்பத்தியாகி சின்மயாநகர், சாலிகிராமம், எம்.எம்.டி.ஏ. காலனி, சூளைமேடு, ஆசாத் நகர், திருவள்ளுவர் புரம் வழியாக மொத்தம் 6.36 கி.மீ தொலைவுக்கு செல்கிறது. இது சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலை அருகே கூவம் ஆற்றில் இணைகிறது. விருகம்பாக்கம் கால்வாயில் மழை காலங்களில் அதிகபட்சமாக 2.50 மீட்டர் உயரம் வரை தண்ணீர் செல்வதற்கான வசதி உள்ளது. அதாவது வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீரை விருகம்பாக்கம் கால்வாய் வழியாக அனுப்ப முடியும். தற்போது விருகம்பாக்கம் கால்வாயில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது.

    மேலும் இதன் உள்கட்டமைப்பும் மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த கால்வாயில் தண்ணீர் சரியாக செல்ல முடிவதில்லை. தற்போது 800 கனஅடி தண்ணீரே செல்லும் நிலை உள்ளது.

    ஃபெஞ்ஜல் புயல் மழை காரணமாக சென்னையில் 10 செ.மீ. அளவுக்கு மழை பெய்ததால், விருகம்பாக்கம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு நுங்கம்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, விருகம்பாக்கம் போன்ற முக்கிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருகம்பாக்கம் கால்வாயில் உள்ள பல பாலங்கள் நீரோட்டத்துக்கு தடையாக உள்ளன. இந்த கால்வாயில் மொத்தம் 24 பாலங்கள் உள்ளன. இதில் 10 பாலங்கள் முக்கியமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. வெள்ள அபாயத்தை தடுக்க இந்த பாலங்களை சீரமைக்க வேண்டிய நிலை உள்ளது.

    இதையடுத்து இந்த கால் வாயை சீரமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக நீர்வளத்துறையிடம் இருந்து இந்த கால்வாயை சென்னை மாநகராட்சி கையகப்படுத்த உள்ளது. இதில் குறைவான உயரமுள்ள 11 பாலங்கள் இடிக்கப்பட உள்ளன.

    சாய்நகர், 100 அடி சாலை, காமராஜர் நகர், திருவள்ளுவர் புரம் ஆகிய பகுதிகளில் உள்ள பாலங்கள் இடிக்கப்பட உள்ளன. புதிதாக அமைக்கப்படும் பாலங்கள் வழியாக குறைந்தபட்சம் 1,300 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் கனரக வாகனங்கள் செல்லும் அளவுக்கு இந்த பாலங்கள் வலுவாக இருக்கும். நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம், நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, நெல்சன் மாணிக்கம் சாலை போன்ற வெள்ளம் அதிகம் உள்ள இடங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

    மேலும் வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் விருகம்பாக்கம் கால்வாய், கூவம் ஆற்றுடன் இணைக்கப்பட உள்ளது. அமைந்தகரை பகுதியில் இந்த இணைப்பு அமைய உள்ளது. இதற்காக 2.5 கி.மீ தூரத்துக்கு வடிகால் அமைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக நெல்சன் மாணிக்கம் சாலையில் விருகம்பாக்கம் கால்வாயில் வெள்ளத்தின் பாதிப்பு தடுக்கப்படும்.

    அமைந்தகரையில் போலீஸ் என்று கூறி பணம் கேட்டு மிரட்டிய 2 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலை ரெயில்வே காலனி 1-வது தெருவில் டீக்கடை நடத்தி வருபவர் ஞானவேல்.

    இவரது டீக்கடைக்கு நேற்று முன்தினம் மாலை வந்த 2 பேர் நாங்கள் போலீஸ் என்று கூறினர். இங்கு கடை நடத்த வேண்டும் என்றால் எங்களுக்கு ரூ.40ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்று ஞானவேலை மிரட்டினர்.

    சந்தேகமடைந்த கடை ஊழியர் பாண்டியன் உடனடியாக அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் மற்றும் போலீசார் பணம் கேட்டு மிரட்டிய இருவரையும் பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் இருவரும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பூந்தமல்லியைச் சேர்ந்த சதீஷ் என்கிற கல்லறை சதீஷ் (29) சூளைமேட்டைச் சேர்ந்த மதிவாணன் (33) என்பது தெரியவந்தது. அமைந்தகரை பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் மிரட்டி பணம் வசூல் செய்து சொகுசு வாழ்க்கை அனுபவித்து வந்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட கல்லறை சதீஷ் மீது திருவேற்காடு, பூந்தமல்லி, கே.கே.நகர், அமைந்தகரை, குன்றத்தூர் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

    அமைந்தகரையில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    அமைந்தகரை அரும்பாக்கம் டி.பி சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலிசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இந்தநிலையில் அமைந்தகரையில் உள்ள பிரபல வணிக வளாகம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 4 பேரை இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ராவணன், அமைந்தகரையைச் சேர்ந்த கருணாகரன், ராஜேஷ், டி.பி சத்திரம் ரகு குமார் என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் புளியந்தோப்பு பகுதியில் இருந்து கஞ்சாபொருட்களை வாங்கி வந்து அதை சிறிய பொட்டலங்கள் மூலம் கல்லூரி மாணவர்கள் உள்பட பலருக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

    சென்னை அமைந்தகரையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    சென்னை:

    கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சசிகாந்த் ரெட்டி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சைலஜா ரெட்டி.

    கணவன்-மனைவி இருவரும் கடந்த மூன்று மாதங்களாக சென்னை அமைந்தகரை வெற்றி விநாயகர் கோவில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குழந்தையின்மைக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு இருவரும் மருத்துவமனைக்கு சென்றனர். மாலையில் திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10சவரன் நகை, லேப்டாப் மற்றும் 4ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அமைந்தகரையில் அழகு நிலையத்தை நடத்தி வரும் பெண்ணை தாக்கி நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    சென்னை:

    அமைந்தகரை மேத்தா நகர் ராஜேஸ்வரி தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கேஸ்வரி. அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு 10.30 மணிக்கு அழகு நிலையத்தை பூட்டிவிட்டு மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மேத்தா நகர் மெயின் ரோட்டில் சென்ற போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராமலிங்கேஸ்வரி வந்த மொபட்டின் மீது மோதினர்.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராமலிங்கேஸ்வரியிடம் இருந்த கைப்பையை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு சென்றனர். அந்த பையில் 6 சவரன் நகை 14ஆயிரம் பணம் மற்றும் 2 விலை உயர்ந்த ஐபோன் ஆகியவை இருந்தது.

    கொள்ளையர்கள் தள்ளி விட்டதில் ராமலிங்கேஸ்வரிக்கு முகம் மற்றும் உதடு பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    அமைந்தகரையில் கை நரம்பு அறுக்கப்பட்டு பெண் இறந்து கிடந்த வழக்கில், அவரது உறவினரான 10-ம் வகுப்பு மாணவரை போலீசார் கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவில் வசித்து வருபவர் சங்கரசுப்பு (வயது 40). அந்த பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (35). இவர் வீட்டின் அருகேயே மற்றொரு மளிகை கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த 2-ந் தேதி மதியம் கடையில் இருந்து சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த சங்கரசுப்பு, படுக்கை அறையில் தமிழ்ச்செல்வி, கை மணிக்கட்டு நரம்பு அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அமைந்தகரை போலீசார், தமிழ்ச்செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி மர்மச் சாவாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர்.

    அண்ணாநகர் துணை கமிஷனர் குணசேகரன், இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தமிழ்ச்செல்வி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். தமிழ்ச்செல்வி வீட்டில் இருந்த பொருட்கள் எதுவும் கொள்ளைபோகவில்லை. எனவே நகை, பணத்துக்காக இந்த சம்பவம் நடக்கவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

    குடும்பத்தகராறு காரணமாக தமிழ்ச்செல்வியே தனது கை மணிக்கட்டு நரம்பை அறுத்து தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் தமிழ்ச்செல்வியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர், கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறி இறந்துள்ளதாக தெரியவந்தது. இதனால் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.

    கொலையாளிகள் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பட்டப்பகலிலேயே கொலை நடந்து உள்ளதால், நன்கு தெரிந்த நபர்களே இதில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதினார்கள்.

    தமிழ்ச்செல்வி வீட்டுக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், கொலை நடந்த அன்று, அதே தெருவில் வசித்து வரும் சங்கரசுப்புவின் தங்கை மகனான, 15 வயது நிரம்பிய 10-ம் வகுப்பு மாணவர் காலை 11.02 மணியளவில் தமிழ்ச்செல்வி வீட்டுக்கு சென்றுவிட்டு, 11.38 மணியளவில் தனது வீட்டுக்கு திரும்பிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    அந்த மாணவரிடம் போலீசார் விசாரித்தபோது, முதலில் தனது அத்தை வீட்டுக்கு சுத்தியல் வாங்கச்சென்றதாக கூறிய அவர், அதன்பிறகு வீட்டின் மாடியில் இருந்ததாக முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் போலீசாருக்கு அவர் மீதான சந்தேகம் அதிகரித்தது.

    போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், தனது மகளை காதலிக்க அத்தை தமிழ்ச்செலவி எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து மாணவரை போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரிடம், மாணவர் அளித்து உள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    எனது மாமா சங்கரசுப்பு குடும்பத்தினர் வசித்துவரும் அதே தெருவில்தான் எங்கள் வீடும் உள்ளது. சிறு வயது முதலே நானும், எனது தம்பியும் மாமா வீட்டுக்கு சென்று விளையாடுவோம். அப்போது எனது மாமா மகளுடன் நான் பழகினேன். மாமா மகள் என்ற முறையில் அவள் மீது எனக்கு ஒருதலையாக காதல் ஏற்பட்டது.

    அவள் பெரியவள் ஆனதும், அவளுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது என்று எனது அத்தை தமிழ்ச்செல்வி என்னை கண்டித்தார். இதனால் மாமா மகளை பார்க்க முடியாமல், பேச முடியாமல் தவித்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது தம்பியின் பிறந்தநாளுக்கு வீட்டுக்கு வரும்படி மாமா மகளை அழைத்து இருந்தேன். ஆனால் அவள் வரவில்லை.

    இதுபற்றி அவளை நேரில் சந்தித்து கேட்டேன். இதை பார்த்துவிட்ட எனது அத்தை, என்னை கண்டித்ததுடன், கையாலும் அடித்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனது அத்தை இருக்கும் வரையில் எனது காதலுக்கு எதிர்ப்பு வந்துகொண்டே இருக்கும் என்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

    சம்பவத்தன்று மாமா கடைக்கு சென்று விட்டார். அவரது மகன், மகள் இருவரும் பள்ளிக்கு சென்று விட்டனர். வீட்டில் அத்தை மட்டும் தனியாக இருப்பதை அறிந்து அவரது வீட்டுக்கு சென்றேன். கதவு பூட்டாமல் லேசாக சாத்தப்பட்டு இருந்தது. உள்ளே சென்றபோது, படுக்கை அறையில் அத்தை அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.

    படுக்கை அறைக்குள் நைசாக நுழைந்த நான், அத்தை தமிழ்ச்செல்வி மீது ஏறி அமர்ந்துகொண்டு அவரது கழுத்தை நெரித்தேன். அவர், என்னிடம் இருந்து தப்பிக்க முயன்றார். உடனே அருகில் இருந்த கரடி பொம்மையை எடுத்து அவரது முகத்தில் வைத்து அழுத்தினேன். இதில் அவர், மூச்சுத்திணறி இறந்து விட்டார்.

    அவரே தற்கொலை செய்துகொண்டதுபோல் அனைவரையும் நம்ப வைக்க சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து அவரது கை மணிக்கட்டு நரம்பை அறுத்து துண்டித்தேன்.

    மனித உடலில் எது உயிர் நாடி. எந்த பகுதியில் அறுத்தால் உயிர்போகும் என பள்ளியில் சொல்லிக்கொடுத்து உள்ளனர். அதை வைத்தே இவ்வாறு கை மணிக்கட்டு நரம்பை அறுத்தேன். பின்னர் எதுவும் தெரியாததுபோல் வீட்டுக்கு சென்று விட்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    தமிழ்ச்செல்வியின் உறவினர் மகன் என்பதால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த சங்கரசுப்பு, தனது மனைவி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அலறினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது தனக்கும், அந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் மாணவரும் மருத்துவமனைக்கு சென்றார். கொலை செய்த குற்ற உணர்வு எதுவும் இல்லாமல் அத்தையின் இறுதிச் சடங்கிலும் கலந்து கொண்டு உள்ளார்.

    கைதான மாணவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார், அவரை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். ஒருதலை காதலால் சொந்த அத்தையையே 10-ம் வகுப்பு மாணவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை அமைந்தகரையில் வீட்டின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்து அண்ணன்-தங்கை பரிதாபமாக இறந்தனர்.
    கோயம்பேடு:

    சென்னை அமைந்தகரை கக்கன் நகரைச் சேர்ந்தவர் அன்சார். இவர், தனது தந்தை அன்வர் பாஷா, தனது சகோதரர் பரோசின் ஆகியோருடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். அன்சாரின் மகன் தயான் (வயது 8), பரோசின் மகள் முஸ்கான் (4½).

    இவர்களது வீட்டின் முன்பக்க சுவரையொட்டி பெரிய மரம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் அந்த பகுதியில் நல்ல மழை பெய்ததால், வீட்டின் சுவர் ஈரப்பதமாக இருந்தது.

    நேற்று மாலை தயான், அவருடைய தங்கை முஸ்கான் இருவரும் வீட்டின் முன்புறம் இருந்த மரத்தின் அருகில் தங்களது தாத்தா அன்வர் பாஷாவுடன் அமர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது பலத்த காற்று வீசியது. காற்றின் வேகத்தால் மரம் அங்கும், இங்குமாக வேகமாக அசைந்தது. இதனால் ஏற்கனவே மழையில் ஊறி இருந்த வீட்டின் முன்பக்க சுவர், திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

    இதில் சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தயான், அவனுடைய தங்கை முஸ்கான் இருவர் மீதும் கட்டிட இடிபாடுகள் விழுந்தது. இதில் இருவரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 2 பேரின் உடல்களை பார்த்து அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதறி அழுதனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த அமைந்தகரை போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுவர் இடிந்து விழுந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    ×