search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pattukkottai"

    பட்டுக்கோட்டை அருகே அரசு பஸ் மோதி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கிஷோர் (வயது19). இவர் டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்தார்.

    இந்நிலையில் இவர் நேற்று மாலை பட்டுக்கோட்டை அருகே உதயசூரிபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் கிஷோர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தடுமாறி கீழே விழுந்த கிஷோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை போலீசார் கிஷோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    பட்டுக்கோட்டை அருகே புயலால் விழுந்து கிடந்த மின்கம்பி அறுந்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள வாட்டாக்குடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 60). விவசாயி. இவரது மனைவி தங்கம். 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று வாட்டாக்குடி தெற்கு மெயின் ரோட்டில் திருநாவுக்கரசு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த பகுதியில் கஜா புயலால் சேதமாகி சாய்ந்து கிடந்த மின்கம்பத்தில் இருந்து தாழ்வாக மின்கம்பி தொங்கி கொண்டிருந்தது.

    இதை கவனிக்காமல் திருநாவுக்கரசு மோட்டார் சைக்கிளில் வந்த போது, மின்கம்பி அவரது கழுத்தை அறுத்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மதுக்கூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து திருநாவுக்கரசு உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டுக்கோட்டை பகுதியில் புயலால் சேதமான மின்கம்பங்கள் பல இடங்களில் அப்படியே கிடக்கிறது. இந்த நிலையில் மின்கம்பி அறுத்து விவசாயி பலியான சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரிக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
    தஞ்சாவூர்:

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரிக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், துணை தலைவர் வக்கீல் அன்பரசன் ஆகியோர் இணைந்து மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயலுக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    பட்டுக்கோட்டை- காரைக் குடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் போக்குவரத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி மற்றும் காரைக் குடி பகுதிகளை சேர்ந்த ரெயில் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    எனவே நிறுத்தப்பட்ட ரெயில்போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும். பட்டுக்கோட்டை முதல் காரைக்குடி வரையில் உள்ள ரெயில்வே கேட்டுகளில் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

    பட்டுக்கோட்டையில் இருந்து திருவாரூர் வரையிலான அகல ரெயில் பாதை பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும். அதுவரையில் தற்காலிகமாக பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி, திருச்சி, தஞ்சை வழியாக சென்னைக்கு ஒரு விரைவு ரெயில் இயக்க வேண்டும்.

    மேலும் கிடப்பில் போடப்பட்டுள்ள மன்னார்குடி-பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை-தஞ்சாவூர், தஞ்சை-அரியலூர், கும்பகோணம்-விருத்தாச்சலம் அகல ரெயில் பாதை பணிகளுக்கு உடனடியாக தேவையான அளவு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    காரைக்குடி-பட்டுக்கோட்டை ரெயில் மதுரை வரை நீட்டிக்கப்படும் என்றும், இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் கொடுப்பேன் என்றும் செந்தில்நாதன் எம்.பி. கூறினார்.
    காரைக்குடி:

    காரைக்குடியை அடுத்த குன்றக்குடியில், குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் விழா செய்தி-மக்கள் தொடர்பு துறையின் சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு செந்தில்நாதன் எம்.பி., கலெக்டர் லதா, கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ., குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மணி மண்டபத்தில் குன்றக்குடி அடிகளார், முக்கிய பிரமுகர்களுடன் அரசு விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. அதனை எம்.பி., கலெக்டர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    இந்த விழாவில் செய்தி-மக்கள் தொடர்பு துறை அலுவலர் பாண்டி, திருப்பத்தூர் தாசில்தார் தங்கமணி, முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் அசோகன், குன்றக்குடி ஆதீன மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழா முடிந்தபின்பு நிருபர்களுக்கு பேட்டியளித்த செந்தில்நாதன் எம்.பி. கூறும்போது, காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான ரெயில் வழித்தடத்தில் ஆளில்லாத ரெயில்வே கேட்டுகளில் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையிலான ரெயில் பயண நேரத்தை மேலும் குறைக்க முயற்சி எடுக்கப்படும். இத்துடன் அந்த ரெயிலை மதுரை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகத்திடம் முறையிடப்படும். மேலும் வாரம் இருமுறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்படும். இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்துவேன் என்றார். 
    ×