search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mudumalai forest"

    • 5 இடங்களில் கரடியை பிடிக்க கூண்டும் வைத்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • வனத்துறையினர் கூண்டில் சிக்கிய கரடியை லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர், உப்பட்டி, அத்திகுன்னா, பந்தலூர் இரும்பு பாலம், இன்கோ நகர், காலனி அட்டி, நெல்லியாளம் டேன்டீ உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக கரடி ஒன்று சுற்றி திரிந்து வந்தது.

    குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் கரடி, வீடுகள் மற்றும் கோவில்களுக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை சேதப்படுத்தி வந்தது. குறிப்பாக வீட்டில் உள்ள எண்ணை உள்ளிட்டவற்றை உடைத்து குடித்து வந்தது.

    தொடர்ந்து இதுபோன்று கரடி அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் எனவும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் கூடலூர் மாவட்ட வன அலுவலர் ஓம்கார், உதவி வனபாதுகாவலர் கருப்பையா, தேவாலா வனசரகர் சஞ்சிவி, பிதர்காடு வனசரகர் ரவி மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து, கரடி நடமாட்டம் உள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    மேலும் கரடி நடமாட்டம் அதிகமாக உள்ள அத்திகுன்னா, அத்திமாநகர், புவலம்புழா உள்பட 5 இடங்களில் கரடியை பிடிக்க கூண்டும் வைத்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில், அத்திமாநகர் பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில், கரடி சிக்கியது. கரடி சிக்கிய தகவலை வன ஊழியர்கள் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் கால்நடை டாக்டர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார். பின்னர் பிடிபட்ட கரடியின் உடல் நிலை பரிசோதிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து வனத்துறையினர் கூண்டில் சிக்கிய கரடியை லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர். இன்று அதிகாலை முதுமலை வனப்பகுதியில் உள்ள அடர் வனப்பகுதியில் கரடியை விடுவித்தனர்.

    கடந்த 2 மாதங்களாக அத்திகுன்னா, நெல்லியாளம் டேன்டீ, பந்தலூர் இரும்பு பாலம் பகுதியில் சுற்றி திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    முதுமலையில் யானை சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    மசினகுடி:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றி பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் வாகன சவாரி மற்றும் யானை சவாரி செய்து, இயற்கை எழில் காட்சிகள் மற்றும் வனவிலங்குகளை கண்டு ரசிக்கின்றனர்.

    முதுமலையில் கும்கி யானைகள் மூலம் காலை மற்றும் மாலை நேரங்களில் சவாரி நடத்தப்படுகிறது. தற்போது யானை சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். முதுமலையில் ஆரம்பத்தில் 2 கும்கி யானைகள் மூலம் யானை சவாரி நடத்தப்பட்டு வந்தது. இதனால் யானை சவாரி செய்ய வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கால தாமதத்தால் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளுக்காக முதல் முறையாக 6 கும்கி யானைகள் மூலம் சவாரி நடத்த புலிகள் காப்பக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக சங்கர், உதயன், விஜய், இந்தர், சுமங்கலா, பொம்மன் ஆகிய யானைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கபட்டது.

    பயிற்சி முடிந்ததை அடுத்து கடந்த ஒரு வார காலமாக யானை சவாரி தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 24 முறை யானை சவாரி நடத்தப்படுகிறது. கூடுதல் யானைகளை கொண்டு சவாரி நடத்தப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து தெப்பக்காடு முன்பதிவு மைய வனச்சரகர் விஜய் கூறும்போது, முதுமலையில் இதுவரை 2 யானைகள் மூலம் காலை 2 முறை மாலை 2 முறை என 4 முறை சவாரி நடத்தப்பட்டு வந்தது. இதனால் யானை சவாரி செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் கால தாமதம் காரணமாக ஏமாற்றம் அடையும் நிலை இருந்தது.

    ஆனால் தற்போது 6 யானைகள் மூலம் சவாரி அனுப்புகிறோம். இதற்கு சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதற்காக ரூ.1,120 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்றார்.
    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வனப்பகுதியை குட்டி விமானம் மூலம் படம் பிடித்தவருக்கு வனத்துறையினர் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். #MudumalaiForest
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் பொதுமக்கள் அத்துமீறி செல்லவும், வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யவும் வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். மேலும் அத்து மீறி நுழைபவர்களை கண்காணித்தும் வருகின்றனர்.

    குறிப்பாக விடுமுறை நாட்களில் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் யாரேனும் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்குகிறார்களா? வனப்பகுதியில் சமையல் செய்கிறார்களா? வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக முதுமலையை சுற்றி பார்க்க கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவ்வாறு வந்த சுற்றுலா பயணிகள் மசின குடியில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கி சுற்றிப்பார்த்து சென்றனர்.

    முதுமலையை சுற்றி பார்க்க வந்த பெங்களுருவை சேர்ந்த அனிஸ் சதாநந்தன் (வயது 39) என்பவர் வாழைத்தோட்டத்தில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டில் கடந்த 2 நாட்களாக தங்கி இருந்தார். அவர் தன்னிடம் இருந்த குட்டி விமானத்தை பறக்கவிட்டு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனபகுதியை படம் பிடித்துள்ளார்.

    அப்போது அந்த வழியாக சென்ற சிங்காரா வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் பறப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும், விமானத்தை பறக்கவிட்ட அனிஸ் சதாநந்தனை மடக்கி பிடித்து குட்டி விமானத்தையும் பறிமுதல் செய்தனர்.

    அதனை தொடர்ந்து அவரை மசினகுடியில் உள்ள சிங்காரா வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் ஆளில்லா குட்டி விமானத்தை பறக்கவிட்டு வனப்பகுதியை படம் பிடித்ததற்காக அனிஸ் சதாநந்தனுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை கள இயக்குனர் புஷ்பாகரன் உத்தரவிட்டார். அந்த அபராத தொகையை அனிஸ் சதாநந்தன் செலுத்திய பின்னர் அவரை எச்சரித்து வனத்துறையினர் விடுவித்தனர். #MudumalaiForest
    முதுமலையில் 2 காட்டு யானைகள் ஆக்ரோஷமாக சண்டை போட்டதால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.
    நீலகிரி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தை புலிகள் என வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனவிலங்குகளை கண்டு ரசிப்பதற்காக வனத்துறையினர் தங்களது வாகனங்களில் சுற்றுலா பயணிகளை வனத்துக்குள் காலை மற்றும் மாலை வேளைகளில் அழைத்து செல்கின்றனர். இதுதவிர கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூரூ, பெங்களூருவுக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

    முதுமலை தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வழியாக ஊட்டிக்கு செங்குத்தான மலைப்பாதை செல்கிறது.

    இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் மசினகுடி மற்றும் கூடலூர் வழியாக ஊட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். இதேபோல் கூடலூரில் இருந்து மைசூருக்கு ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது கூடலூர் தொரப்பள்ளிக்கும் முதுமலை கார்குடிக்கும் இடையே சாலையோரம் 2 காட்டு யானைகள் வந்தன. திடீரென அவைகள் ஆக்ரோஷமாக ஒன்றுக்கொன்று முட்டி மோதியவாறு சண்டையிட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.

    காட்டு யானைகளுக்கு இடையே சண்டை தொடர்ந்து நீடித்ததால் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. ஏனெனில் எந்த நேரத்திலும் காட்டு யானைகள் சாலைக்கு வந்து விடும் என்ற அச்சத்தால் அந்த வழியாக சாலையை கடக்க டிரைவர்கள் முன்வர வில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக 2 யானைகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. பின்னர் ஒரு யானை பின்வாங்கியது.அதை மற்றொரு யானை பின்புறத்தில் முட்டியபடி தள்ளிக்கொண்டே வந்தது. இதனால் வெற்றி பெற்றதாக கருதிக்கொண்ட அந்த யானை, பின்னர் கோபம் தணிந்த நிலையில் வனத்துக்குள் சென்றது. பின்னர் சாலையில் வந்து நின்ற யானையும் சிறிது நேரத்தில் வனத்துக்குள் சென்றது. அதன் பின்னரே அந்த பகுதியில் வாகன போக்குவரத்து சீரடைந்தது. #tamilnews
    ×