முதுமலை வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ: 100 ஏக்கருக்கு மேல் எரிந்து நாசம்

கடுமையான வெயில் நிலவி வருவதால் அவ்வப்போது வனப்பகுதிகளில் காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது.60க்கும் அதிகமான வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
முதுமலை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ.
முதுமலை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ.
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும்.

இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது மழை இல்லாத காரணத்தால் வனத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது.

இதன் காரணமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி, அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது. கடும் வறட்சி நிலவுவதால் வனத்தில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் என அனைத்திலும் இலைகள் உதிர்ந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது.

கடுமையான வெயில் நிலவி வருவதால் அவ்வப்போது வனப்பகுதிகளில் காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது. இதனை வனத்துறையினர் தண்ணீரை கொண்டு அணைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல வனப்பகுதியில் உள்ள சீகூர் முதல் பெள்ளிமலை வரை உள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.

100 ஏக்கருக்கும் மேல் காட்டுத்தீ பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

70க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

இதேபோல் பெந்தட்டி வனப்பகுதியிலும் காட்டு தீ ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட காட்டுத்தீ முதுமலை மசினகுடி வனக்கோட்டம், சிங்காரா வனச்சரகம், ஆணிக்கல் கோவில் அருகே கல்லஸ்கொம்பை வனப்பகுதிக்கு பரவி அங்கு தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. 60க்கும் அதிகமான வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சரிவான அந்த பகுதியில் புற்கள் காய்ந்து இருப்பதால் வனத்தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. எனினும் வன ஊழியர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com