search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohamed Salah"

    பார்சிலோனா அணிக்காக கடந்த சீசனில் 68 போட்டியில் 34 கோல்கள் அடித்த மெஸ்சி, ஐந்தாவது முறையாக தங்க ஷூவை தட்டிச் சென்றார். #Messi
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளில் விளையாடும் வீரர்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக கோல்கள் அடிக்கும் வீரர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் தங்க ஷூ வழங்கப்படும். 2017-18 சீசனில் பார்சிலோனாவின் மெஸ்சி, லிவர்பூல் அணியின் முகமது சாலா, டோட்டன்ஹாம் அணியின் ஹாரி கேன் ஆகியோருக்கிடையே தங்க ஷூவை பெற கடும் போட்டி நிலவியது.

    இறுதியில் 68 போட்டிகளில் 34 கோல்கள் அடித்த மெஸ்சி தங்க ஷூவை தட்டிச் சென்றார். மெஸ்சி இந்த விருதை ஐந்தாவது முறையாக வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்கு முறை வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 52 போட்டிகளில் 26 கோல்கள் அடித்திருந்தார்.

    தங்க ஷூவை வென்ற மெஸ்சி இதுபற்றி கூறுகையில் ‘‘உண்மையிலேயே நான் கால்பந்து போட்டியை தொடங்கும்போது இது நடக்கும் என்று நினைக்கவே இல்லை. நான் இந்த போட்டியை மிகவும் விரும்புகிறேன். இந்த விருதை மீண்டும் பெறுவேன் என்று நினைத்தது கிடையாது’’ என்றார்.
    பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச்செல்ல ரொனால்டோ, முகமது சலா, லூகா மோட்ரிச் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரராக லூகா மோட்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #FIFA #LukaModric
    லண்டன் :

    2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிபா சிறந்த வீரர் விருதுக்கு, குரோசியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்து சிறந்த வீரருக்கான விருதை வழங்கி வருகிறது.

    அதன்படி, 2018-ம் ஆண்டிற்கான விருதை வழங்குவதற்காக 5 முறை பிபாவின் சிறந்த வீரர் விருது பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, லிவபர்பூல் அணிக்காக 43 கோல்கள் அடித்துள்ள முகமது சலா மற்றும் லூகா மோட்ரிச் ஆகிய மூவரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், ரொனால்டோ மற்றும் முகமது சலா ஆகியோரை பின்னுக்கு தள்ளி 33 வயதான லூகா மோட்ரிச் 2018-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ரஷியாவில் நடைபெற்ற உலக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல்முறையாக குரோசியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதற்கு கேப்டன் மோட்ரிச்சின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தங்க கால்பந்து விருதும் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பிரேசிலை சேர்ந்த மார்டா என்பவருக்கு சிறந்த பெண் வீராங்கனைக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #FIFA #LukaModric
    ஐரோப்பிய சம்மேளனத்தின் 2017-18-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருதை பெற்ற மோட்ரிச்சிற்கு ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார். #Ronaldo #LukaModric
    கிளப் அணிகளுக்கு இடையிலான 2017-18 கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச், முகமது சாலா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    பெரும்பாலான விருதிற்கு இவர்கள் மூன்று பேரும் பரிந்துரைக்க பட்டுள்ளனர். ஆனால் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் குரோசியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் சில விருதுகளை தட்டிச் செல்லும் நிலையில் உள்ளார்.

    கடந்த வாரம் ஐரோப்பா கால்பந்து சம்மேளனத்தின் 2017-18-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது. ரொனால்டோ, முகமது சலா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி மோட்ரிச் விருதை கைப்பற்றினார்.



    விருதை வாங்கிய மோட்ரிச்சிற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மொட்ரிச் கூறுகையில் ‘‘ரொனால்டோ எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார். அதில் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த ரொனால்டோ, தான் மகிழ்ச்சியடைவதாகவும், இந்த விருதிற்கு நான் தகுதியுடைவன் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் நாம் விளையாட்டில் மோதிக்கொள்ள காத்திருக்க முடியாது என்றார்’’ என தெரிவித்துள்ளார்.
    பலோன் டி'ஆர் விருதை பிரான்ஸ் வீரர்கள் அல்லது மோட்ரிச் வெல்ல வேண்டும் என்று ஆலிவர் ஜெரார்ட் வலியுறுத்தியுள்ளார். #FIFA
    ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் மற்றும் குரோசியா வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இரு அணிகள்தான் இறுதிப் போட்டியில் மோதின. இதில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.

    பிபா சமீபத்தில் சிறந்த வீரர் விருதிற்கான கடைசி மூன்று பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இதில் மெஸ்சி, பிரான்ஸ் வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோ, முகமது சாலா, லூகா மோட்ரிச் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் உள்ள கிலியான் மப்பே, கிரிஸ்மான் ஆகியோர் பெயர் இடம் பெறாதது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    இந்நிலையில் பிரான்ஸ் வீரர் ஆலிவர் ஜிரார்டு பிபா விருதிற்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பலோன் டி'ஆர் விருதுதான் முக்கியமானது. இதை பிரான்ஸ் வீரர்களில் ஒருவர் அல்லது மோட்ரிச் வெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஆலிவர் ஜெரார்டு கூறுகையில் ‘‘பிபா விருதுக்கான பட்டியலில் பிரான்ஸ் வீரர் இடம் பெறாதது ஆச்சர்யம் அளித்தது. ஆனால், உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் பிபா விருதிற்கு அதிக அளவில் முக்கியத்தும் கொடுப்பது கிடையாது.

    பலோன் டி'ஆர் விருதை பிரான்ஸ் வீரர் அல்லது மோட்ரிச் வெல்ல வேண்டும். நான் வாக்கு அளித்தால், நான் எனது பார்ட்னரைத்தான் தேர்வு செய்வான். ஆனால், அதை உங்களுக்குச் சொல்ல மாட்டேன்’’ என்றார்.
    உலகக்கோப்பை உள்பட மூன்று டிராபிகளை கைப்பற்றிய பின்னரும் பதக்க பிபா விருது பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என கிரிஸ்மான் கவலை தெரிவித்துள்ளார்.
    பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி வீரர் கிரிஸ்மான். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிபாவின் சிறந்த வீரருக்கான கடைசி 3 பேர் பட்டியலில் இடமபிடித்திருந்தார். இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விருதை தட்டிச் சென்றார். மெஸ்சி 2-வது இடம் பிடித்தார். கிரிஸ்மானுக்கு 3-வது இடமே கிடைத்தது.

    அப்போது கிரிஸ்மான் விளையாடிய அணி எந்தவித கோப்பைகளையும் கைப்பற்றவில்லை. யூரோ 2016 தொடரில் பிரான்ஸ் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. அதன்பின் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணி தோல்வியை சந்தித்தது.

    தற்போது கிரிஸ்மான் இடம் பிடித்துள்ள அணி மூன்று கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை பிரான்ஸ் அணி கைப்பற்றியுள்ளது. அட்லெடிகோ மாட்ரிட் யூரோப்பா லீக், யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பையை கைப்பற்றியுள்ளது.



    ஆனால் இந்த வருடத்திற்கான பிபா விருதிற்கான கடைசி மூன்று பேர் பட்டியலில் ரொனால்டோ, லூகா மோட்ரிச், முகமது சாலா ஆகியோர் பெயர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளது. இதனால் கிரிஸ்மான் கவலையடைந்துள்ளார்.

    ஒரு கோப்பையையும் வாங்காத போது இறுதிப் பட்டியலில் பெயர் இருந்தது. தற்போது மூன்று கோப்பைகளையும் வென்ற பிறகு தனது இடம் இல்லையே என்று தனது அதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
    பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச்செல்ல ரொனால்டோ, முகமது சலா, லூகா மோட்ரிச் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. #FIFA #Ronaldo
    சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்து சிறந்த வீரருக்கான விருதை வழங்கி வருகிறது. 2018-ம் ஆண்டிற்கான விருதை வழங்குவதற்காக பல்வேறு கட்டங்களாக வீரர்கள் பட்டியலை வடிகட்டி தற்போது மூன்று பேரை இறுதியாக பிபா தேர்வு செய்துள்ளது.

    இந்த மூன்று பேர் பட்டியலில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச், லிவர்பூல் அணிக்காக விளையாடிய முகமது சலா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் ஒருவர் சிறந்த வீரராக அறிவிக்கப்படுவார்.

    கடந்த 11 ஆண்டுகளில் முதன் முறையாக மெஸ்சி கடைசி மூன்று பேர் பட்டியலில் இடம்பெறவில்லை. அவர் பார்சிலோனா அணிக்காக 44 கோல்கள் அடித்துள்ளார். லா லிகா, கோபா டெல் ரே ஆகிய கோப்பைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். என்றாலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. மெஸ்சி 2007 மற்றும் 2008-ல் 2-வது இடம் பிடித்தார். அதன்பின் ஐந்து முறை சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.



    முகமது சலா லிவபர்பூல் அணிக்காக 43 கோல்கள் அடித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச் ஆகியோர் ரியல் மாட்ரிட் அணிக்கு ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் டிராபியை வாங்கிக் கொடுத்துள்ளனர். மோட்ரிச் தலைமையிலான குரோசியா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் இடம் தோல்வியடைந்து 2-வது இடம்பிடித்தது.
    2017-18-ம் ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் யூனியன் சார்பில் வழங்கப்படும் விருதிற்கான பட்டியலில் மெஸ்சி பெயர் இல்லை. #Messi #Ronaldo
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து சங்கங்களின் யூனியன் சார்பில் 2017-18 சீசனின் சிறந்த வீரரை தேர்வு செய்து விருது வழங்கும். பல வீரர்களை தேர்வு செய்து அதில் இருந்து மூன்று பேரை இறுதியாக தேர்வு செய்வார்கள். இதில் ஒருவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவார்.



    கடைசி மூன்று பேரை தேர்வு செய்து இன்று முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி பெயர் இடம்பெறவில்லை.



    யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.



    இறுதிப் போட்டிக்கு முன்னேறிய லிவர்பூல் அணியின் முகமது சாலாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதன்முறையாக மூன்று பேர் கொண்ட பட்டியலில் சாலா இடம்பிடித்துள்ளார்.
    எகிப்து கால்பந்து அணியின் முன்னணி வீரரான முகமது சாலா லிவர்பூல் அணி உடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார். #Salah #Liverpool
    எகிப்து கால்பந்து அணியின் முன்னணி வீரரான முகமது சாலா 2016-17 சீசனில் இத்தாலி கிளப்பான ரோமாவிற்காக விளையாடி வந்தார். அந்த அணிக்காக 31 போட்டிகளில் பங்கேற்று 15 கோல்கள் அடித்திருந்தார்.

    அவரை விற்க ரோமா முடிவு செய்தது இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான லிவர்பூல் சுமார் 42 மில்லியன் யூரோ கொடுத்து 5 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்தது. ரோமாவில் சரியாக விளையாடாத முகமது சாலா, லிவர்பூல் அணிக்காக நம்பமுடியாத வகையில் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2017-2018 சீசனில் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் 32 கோல்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். ஒட்டு மொத்தமாக 44 கோல்கள் அடித்துள்ளார்.



    சிறப்பான ஆட்டத்தால் சிறந்த ஆப்பிரிக்கா வீரர், கால்பந்து எழுத்தாளர்கள் சங்கங்களின் சிறந்த வீரர் விருது ஆகியவற்றை தட்டிச் சென்றார். 26 வயதான முகமது சாலாவின் துடிப்பான ஆட்டத்தை பார்த்து அசந்துபோன ரியல் மாட்ரிட் உள்ளிட்ட முன்னணி கிளப்புகள் இவரை ஒப்பந்தம் செய்ய விரும்பின. அதேவேளையில் லிவர்பூல் அணி அவரை வெளியிட விரும்பவில்லை.

    இந்நிலையில் சாலா உடனான ஒப்பந்ததை லிவர்பூல் அணி ஐந்தாண்டிற்கு நீட்டித்துள்ளது. இதன்மூலம் 2024 வரை அவர் இதே அணியில் தொடர்வார். இவருக்கான டிரான்ஸ்பர் தொகை எவ்வளவு என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், வாரத்திற்கு 2 மில்லியன் பவுண்டு சம்பளம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.
    100 கிலோ எடைகொண்ட பிறந்த நாள் கேக்கை தயார் செய்து முகமது சாலா முகத்தில் ரசிகர்கள் சிரிப்பை வரவழைத்து உற்சாக மூட்டினார்கள். #MohamedSalah
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் எகிப்து அணி சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட தகுதிப் பெற்றுள்ளது. அதற்கு அந்த அணியின் முகமது சாலாதான் முக்கிய காரணம். அப்படிபட்டவர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உருகுவே அணிக்கெதிரான ஆட்டத்தில் காயம் காரணமாக அவரால் விளையாட முடியவில்லை.

    அன்று (15-ந்தேதி) சாலாவிற்கு பிறந்தநாள். ஆனால் வீரர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் சோகமான முகத்துடனே இருந்து வந்தார். உருகுவே அணிக்கெதிராக எகிப்பு டிரா செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் உருகுவே 1-0 என வெற்றி பெற்றது.

    இந்த தோல்வியை சாலாவால் ஜீரணிக்க முடியவில்லை. பிறந்த நாளை கருத்தில் கொள்ளாமல் சோகமாகவே காட்சியளித்தார். எகிப்து அடுத்த போட்டியில் ரஷியாவை வருகிற செவ்வாய்க்கிழமை எதிர்கொள்கிறது. இதற்காக எகிப்து அணி கிரோஸ்னி சென்றடைந்தது.



    அப்போது சாலா ரசிகர்கள் இரண்டு அடுக்குக் கொண்ட 100 கிலோ எடையுள்ள பிறந்தநாள் கேக்கை வைத்து, சாலாவை கட் செய்ய சொன்னார்கள். எகிப்து அணியின் சக வீரர்கள் ஆங்கிலத்திலும், அரேபிக் மொழியிலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூற, அவர் கேக்கை வெட்டி தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.

    லிவர்பூல் அணிக்காக இந்த சீசனில் முகமது சாலா 44 கோல்கள் அடித்திருந்தார். அதை பாராட்டும் வகையில் கேக்கிற்கு மேல் தங்க நிறத்திலான ஷூ அலங்கரித்தது.
    மெஸ்சி மற்றும் என்னை பின்னுக்குத் தள்ளி முகமது சாலாவால் பலோன் டிஆர் விருதை வெல்ல முடியும் என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார். #Ronaldo
    ஆண்டுதோறும் கால்பந்து விளையாட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு பலோன் டிஆர் என்ற உயரிய விருது வழங்கப்படும். 2008-ல் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகியோர் தலா ஐந்து முறை இந்த விருதை பெற்றுள்ளனர்.

    இந்த விருதை இவர்கள் இருவரையும் தவிர மற்ற வீரர்கள் நெருங்க முடியாத நிலை உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், முகமது சாலாவால் இந்த விருதை வெல்ல முடியும் என்ற ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில் ‘‘இந்த வருடத்தின் வெளிப்பாடுகளில் ஒருவர் சாலா. ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான யூரோப்பா சாம்பியன்ஷிப் போட்டியில் ஏற்பட்ட காயம் அவரை வெளியேற்றாது என்று நம்புகிறேன்.



    பலோன் டிஆர் விருதிற்கு எனக்கும், மெஸ்சிக்கும் இடையில்தான் போட்டி என்று பெரும்பாலான நபர்கள் பேசிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், மற்ற வீரர்களும் இந்த ரேஸில் நுழைய வாய்ப்புள்ளது. அதில் உறுதியாக சாலாவும் ஒருவர்’’ என்றார்.

    லிவர்பூல் அணிக்காக சாலா ஒட்டுமொத்தமாக 44 கோல்கள் அடித்துள்ளார்.
    உலகக் கோப்பையில் விளையாடுவதற்காகவே ரஷியா வந்துள்ளேன் என்று எகிப்து அணியின் முன்னணி வீரர் முகமது சாலா கூறியுள்ளார். #FIFA2018
    எகிப்து கால்பந்து அணியின் முன்னணி வீரர் முகமது சாலா. இவர் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 27-ந்தேதி நடைபெற்ற ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான யூரோ சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் சாலாவிற்கு காயம் ஏற்பட்டது.

    இந்த காயத்திற்காக மூன்று வாரங்கள் முகமது சாலா ஓய்வு எடுக்க வேண்டியிருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவித்தனர். சனிக்கிழமை எகிப்து அணி ரஷியா சென்றடைந்தது. ரஷியா அணியுடன் முகமது சாலாவும் சென்றிருந்தார்.



    நான் ரஷியா வந்ததே உலகக் கோப்பையில் விளையாடுவதற்கே என்று முகமது சாலா கூறியுள்ளார். இதுகுறித்து சாலா கூறுகையில் ‘‘காயம் ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது. நான் ரஷியா வந்ததே உலகக் கோப்பையில் விளையாடுவதற்காகத்தான்.

    நாங்கள் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்ற பின்னர், நான் அணியில் இடம்பெறாவிடில், உண்மையிலேயே கடினமாக இருக்கும். கடவுள் உலகக் கோப்பையில் நான் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பை அளித்துள்ளார். கனவு நனவாகியுள்ளது’’ என்றார்.
    முகமது சாலாவின் உடற்தகுதி குறித்து உறுதியான நிலை தெரியாத போதிலும், நம்பிக்கையுடன் ரஷியா வந்தடைந்தது எகிப்பு அணி. #WorldCup2018
    பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எகிப்பு அணி கடைசியாக 1990-ம் ஆண்டு இடம்பிடித்திருந்தது. அதன்பின் தற்போதுதான் 28 ஆண்டுகள் கழித்து 3-வது முறையாக தகுதிப் பெற்றுள்ளது. இதற்கு முகமது சாலாவின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

    கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்ற யூரோப்பா சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின்போது முகமது சாலா தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய சுமார் மூன்று வாரங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

    அதன்படி பார்த்தால் வருகிற 15-ந்தேதி உருகுவே அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாட தகுதி பெறுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்நிலையில் சாலாவுடன் எகிப்பு அணி நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) ரஷிய வந்தடைந்துள்ளது. சாலா அணியில் இடம்பிடித்திருந்தாலும் அவர் உருகுவே அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் பங்கேற்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் வெளிவரவில்லை.



    இதுகுறித்து எகிப்பு அணி டாக்டர் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த வாரம் தொடக்கத்தில் முகமது சாலாவின் காயம் குறித்து மதிப்பீடு செய்வோம். இரண்டு நாட்களுக்குப் பிறகும் எங்களால் உறுதியாக சொல்ல முடியாது. அவர் முழுவதும் குணமடையும் முன்பு, விளையாட அனுமதிக்கமாட்டோம்’’ என்றார்.

    எகிப்து அணியின் மானேஜர் கூறுகையில் ‘‘எங்கள் அணி போட்டியில் களம் இறங்க தயாராக இருக்கிறது. மனஉறுதியைில் அதிகமாக உள்ளது’’ என்றார்.

    ‘ஏ’ பிரவில் இடம்பிடித்துள்ள எகிப்பு 15-ந்தேதி உருகுவே அணியை எதிர்கொள்கிறது. 19-ந்தேதி ரஷியாவையும், 25-ந்தேதி சவுதி அரேபியாவையும் எதிர்கொள்கிறது.
    ×