search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka state"

    • 2023 மே மாதம் இந்திய தேசிய காங்கிரஸ், ஆட்சி பொறுப்பில் அமர்ந்தது
    • சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக குமாரசாமி அறிவித்தார்

    2007ல் ஜனதா தள் மற்றும் பா.ஜ.க. கூட்டணியின் சார்பாக கர்நாடகா முதல்வராக ஹெச்.டி. குமாரசாமி இருந்த போது ராமநகரா மாவட்டம் உருவாக்கப்பட்டது. பெங்களூரூவிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் ராமநகரா உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவ்வருடம் மே மாதம் முதல் கர்நாடகாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி, ராமநகராவை பெங்களூரூவுடன் இணைத்து "பெங்களூரூ தெற்கு" (Bangaluru South) என புது மாவட்டத்தை உருவாக்க முயன்று வருகிறது.

    உருவாக்கப்பட உள்ள இந்த தெற்கு பெங்களூரூ மாவட்டம், ராமநகரா, சென்னபட்டனா, மாகடி, கனகபுரா மற்றும் ஹரோஹல்லி ஆகிய 5 தாலுக்காக்களை உள்ளடக்கி உருவாக்கப்படும் என்றும் கனகபுரா, எதிர்காலத்தில் பெங்களூரூவின் ஒரு பகுதியாகும் என அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியிருந்தார்.

    இது குறித்து சிவகுமார் பொதுமக்களிடம் தெரிவித்ததாவது:

    நீங்கள் பெங்களூரூ மாவட்டத்தை சேர்ந்தவர்கள்; ராமநகரா அல்ல. அதை முதலில் மனதில் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். தேவையின்றி நம்மை ராமநகரா மாவட்டத்தில் இணைத்தனர். நீங்கள் பிறர் சொல்வதை கேட்காதீர்கள். மீண்டும் பெங்களூரூவை பழையபடி மாற்றுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    குமாரசாமி இது குறித்து தெரிவித்ததாவது:

    ராமநகராவுடன் எனக்கு உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிற்கு சொந்தமான சொத்துக்களை காக்கும் முயற்சிதான் காங்கிரஸின் இந்த நடவடிக்கை. நான் சிவகுமாருக்கு சவால் விடுகிறேன். ராமநகராவின் பெயர் மாற்றப்பட்டாலோ, அல்லது அதனை பெங்களூரூவுடன் இணைக்க முயன்றாலோ, நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். ராமநகராவின் மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யூடியூப் சேனலை பகிர்ந்து கொண்டு அனைவரும் குழுவில் சேரும்படி கேட்டு கொண்டார்.
    • ரோஹித் குமார் கூறிய புகார்கள் உண்மையா என்றும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மெல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரோஹித் குமார். இவர் பிரதமர் மோடியை புகழ்ந்து ஒரு பாடலை இயற்றியுள்ளார். இந்த பாடலை தனது யூடியூப்பில் பகிர்ந்து உள்ளார். மேலும் அந்த யூடியூப் சேனலை பகிர்ந்து கொண்டு அனைவரும் குழுவில் சேரும்படி கேட்டு கொண்டார். அப்போது அவரை தொடர்பு கொண்ட ஒரு நபரிடம் பாடலை பகிரவும், யூடியூப் சேனல் குழுவில் சேரவும் கேட்டு கொண்டார்.

    ரோஹித் குமார் பாடிய பாடலை பாராட்டிய அந்த நபர் தனது நண்பர்களை சந்திக்கலாம் என்று கூறி அழைத்து சென்று உள்ளார். பின்னர் அங்கு ஒரு கும்பல் அறைக்குள் வைத்து ரோஹித் குமாரை சரமாரியமாக அடித்து உதைத்து உள்ளனர். பின்னர் அந்த நபர்கள் ரோஹித் குமார் மீது சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது.

    அவர்களிடம் இருந்து தப்பி வந்த ரோஹித் குமார் இது குறித்து மைசூரு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரோஹித் குமார் தாக்கப்பட்ட இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், ரோஹித் குமார் கூறிய புகார்கள் உண்மையா என்றும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி உடல்நிலை குறைவு காரணமாக இவர் மரணமடைந்தார்.
    • இறுதி சடங்கில் அவருடன் பணியாற்றிய நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் திக்காவன் கிராமத்தை சேர்ந்தவர் அசோகா பீமாராய புடபக் (54). இவர் சேடம் நகராட்சியல் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி உடல்நலக் குறைவு காரணமாக இவர் மரணமடைந்தார்.

    மறுநாள் 13-ந் தேதி அவரது கிராமத்தில் நடைபெற்ற இறுதி சடங்கில் அவருடன் பணியாற்றிய நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் அவர் இறந்து 6 மாதம் ஆன நிலையில் கடந்த 9-ந் தேதி அவரை குடகு மாவட்டம் மடிக்கேரி நகராட்சிக்கு இடமாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரி இறந்து 6 மாதம் கழித்து அவருக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்ட சம்பவம் நகராட்சி ஊழியர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.
    • ஒகேனக்கல்லுக்கு நாளை வந்தடையும் என்பதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    தருமபுரி:

    தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான வயநாடு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    இந்த நிலையில் கிருஷ்ணராஜ சாகர், கபினி இரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 20 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 5000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை அதே அளவில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நீரானது ஒகேனக்கல்லுக்கு நாளை வந்தடையும் என்பதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தான் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும். 124.80 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 116.60 அடியாக இருந்தது.

    அணை நிரம்ப இன்னும் 8 அடியே பாக்கி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 44,617 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவை மற்றும் பாசனத்துக்காக வினாடிக்கு 2,566 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு தொடர்ந்து சீராக தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படாததாலும், இன்னும் 3 நாட்களுக்குள் கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காவிரி படுகையில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் அந்த அணையில் இருந்து தமிழகத்துக்கு நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை தண்ணீர் திறப்பு அளவு சற்று குறைக்கப்பட்டு வினாடிக்கு 61,316 கன அடி வீதம் நீர் கபிலா ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 49,334 கன அடியாக உள்ளது.

    இதனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த தண்ணீர் நஞ்சன்கூடு அருகே திருமாகூடலுவில் காவிரியுடன் சங்கமித்து தமிழகம் நோக்கி பாய்ந்தோடுகிறது.

    கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் காரணமாக தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 45 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 21,520 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று இரவு 35,000 கன அடியாக அதிகரித்தது. மேலும் இன்று காலையில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 40,018 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று முன்தினம் மாலை 47.78 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 51.38 அடியாக உயர்ந்தது. நீர்வரத்தை விட அணையில் இருந்து நீர் திறப்பு குறைவாக உள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 55.12 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்திருப்பதும், நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரே நாளில் நீர்மட்டம் 4 அடி உயிருந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். நீர் இருப்பு 21.18 டி.எம்.சி.யாக உள்ளது.

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தமிழக எல்லையான பிலிகுண்டு முதல் மேட்டூர் வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிப்பவர்கள் மற்றும் கரையோர தாழ்வான இடங்களில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், காவிரி ஆற்றை கடக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ரவுடி ஷீட்டர் முத்துராஜ் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களுரு:

    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மாவள்ளி தாலுகா சிக்முலகுடு பகுதியை சேர்நதவர் ஷீட்டர் முத்துராஜ் என்கிற டக்கா. இவர் மீது 3 கொலைகள், 3 கொலை முயற்சி, 2 கொள்ளை வழக்குகள் உள்பட 11-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    இந்த வழக்கில் சிக்காமல் அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவரை கைது செய்ய ஹலகுரு பகுதியை சேர்ந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் போலீசாருடன் சென்றார். அப்போது ரவுடி ஷீட்டர் முத்துராஜ் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றார். இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு சரணடையுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர் போலீசாரை மீண்டும் தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்றார்.

    இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக ரவுடி ஷீட்டர் முத்துராஜை காலில் துப்பாக்கியால் சுட்டு மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் துப்பாக்கி சூட்டில் குண்டு காயம் அடைந்த அவரை மாண்டியாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஹலகுரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கர்நாடகா மாநிலத்தில் விளையும் பொன்னி ரக அரிசிகளின் விற்பனை சந்தையாக தமிழகம் முற்றிலும் மாறி விட்டது. டெல்டா மாவட்டங்களில் வறட்சி காரணமாக 75 சதவீத விவசாயிகள் வேலையின்றி தவிக்கின்றனர். #TNfarmers #delta
    தஞ்சாவூர்:

    உலகின் முதல் தொழில் விவசாயம். இந்த தொழிலில் தமிழனே தலைசிறந்து விளங்குகிறான்.

    தமிழகத்தில் ஒரு காலத்தில் முப்போகம் விளைந்த நெல்ரகங்கள் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இயற்கை விவசாயத்தை தமிழக விவசாயிகள் கடைபிடித்து வந்தனர். இதனால் மண் வளம் பாதுகாக்கப்பட்டது.

    இந்தநிலையில் வெளிநாட்டு வேளாண் முறைகள் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு குட்டை நெல் ரகங்கள் அதிகமாக பயிரிடப்பட்டன. இதனால் கால்நடைகளுக்கு தீவனங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் திகழ்ந்தன. லட்சக்கணக்கான ஏக்கரில் சம்பா சாகுபடி செய்து வந்தன. காவிரி நீர் பாசனத்தில் முப்போகம் விளைச்சல் கண்ட டெல்டா மாவட்டங்கள் செல்வச் செழிப்போடு திகழ்ந்தன.

    கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து விட்டதால் டெல்டா மாவட்டங்களில் ஒரு போக சாகுபடி கூடசெய்வது அரியதாகி விட்டது. வறட்சியின் காரணமாக வயல்வெளிகள் பாலைவனம் போல காட்சி தருகின்றன.

    தமிழகத்தில் நெல் சாகுபடி வீழ்ச்சியை சந்தித்த நிலையில் கர்நாடகாவில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. அங்கு ஒரு போகம் விளைந்த இடங்களில் தற்போது முப்போகம் சாகுபடி நடைபெற்று வருகின்றன.

    இதனால் அங்கு விளையும் நெல் அரவை செய்யப்பட்டு தமிழகத்திற்கு அதிகளவில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

    தமிழகத்தில் விளையும் நெல் அரசு மூலம் கொள்முதல் செய்யப்பட்டு பொது வினியோக திட்டத்திற்கு அரிசி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலைமை ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கர்நாடகா பொன்னி அரிசி பெரும் அளவில் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அரிசி கிலோ ரூ.45 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்படுகிறது. சுருக்கமான சொன்னால் கர்நாடகா மாநிலத்தில் விளையும் பொன்னி ரக அரிசிகளின் விற்பனை சந்தையாக தமிழகம் முற்றிலும் மாறி விட்டது.

    இதனால் கர்நாடக விவசாயிகளிடம் நல்ல விலை கொடுத்து வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக கர்நாடகா விவசாயிகள் நல்ல பொருளாதார நிலையை எட்டி உள்ளனர். அவர்கள் கால்நடைகளுக்கு குளிர்சாதன வசதி செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.



    தமிழகத்தில் வறட்சி காரணமாக வேலை இல்லாத நிலை ஏற்பட்டதால் டெல்டா விவசாயிகள் கேரளாவிற்கு சென்று கட்டிட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய நகரங்களில் செயல்படும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு குடும்ப செலவுகளை செய்து வருகின்றனர்.

    டெல்டா மாவட்டங்களில் தற்போது 75 சதவீத விவசாயிகள் வேலையின்றி தவிக்கின்றனர். கிராம புறங்களில் வசிப்பவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதன் எதிரொலியாக 25 சதவீத விவசாய பணிகளுக்கும் ஆட்கள் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாற்று நடவு முதல் அறுவடை வரை எந்திரங்களை கொண்டே செய்து வருகின்றனர். வயல்களில் ரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தியதால் மண் வளம் குறைந்து விட்டது.

    இதுமட்டுமின்றி மணல் கடத்தல் அதிகளவில் நடந்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் இருந்து கடத்தப்படும் மணல்கள் சென்னை, கோவை, கேரளா உள்பட பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. ஒரு மாட்டு வண்டி அளவிலான மணல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. வருமானம் இல்லாத விவசாயிகள் மாட்டு வண்டியில் மணல் எடுத்து விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    விவசாயத்தில் கர்நாடகா முன்னேறி வரும் நிலையில் தமிழகம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுபவர்கள் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி வீட்டு மனைகளாக்கி வருகின்றனர். இதன்காரணமாக எதிர்கால தலைமுறைக்கு அரிசி கிடைக்காத நிலை ஏற்படும். அரிசிக்காக வெளி மாநிலங்களையும், வெளி நாடுகளையும் எதிர்பார்க்கும் கட்டாயம் ஏற்படும். எனவே எதிர்கால நலனை கருத்தில் கொண்டு விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி தண்ணீரை வழங்காத கர்நாடகாவின் அரிசியை தமிழ்நாட்டில் வாங்குவதை புறக்கணிக்க வேண்டும்.

    தமிழகம் மற்றும் கேரளாவில் தான் அரிசியை அதிகமாக பயன்படுத்துகின்றனர். வட மாநிலங்களில் வசிக்கும் மக்கள் கோதுமையை தான் முக்கிய உணவாக கொண்டுள்ளனர். தமிழகத்தில் கர்நாடகா அரிசியை வியாபாரிகளும், பொதுமக்களும் வாங்காமல் புறக்கணித்தால் கர்நாடகா அரிசி விலை வீழ்ச்சி அடையும். இதனால் கர்நாடகா விவசாயிகள் ஆர்வம் காட்டாத சூழ்நிலை ஏற்படும்.

    அப்போது தான் தமிழகத்துக்கு வழக்கம் போல் கர்நாடகா தண்ணீர் தரும் முடிவுக்கு வரும். இதற்கு தமிழர்களிடம் ஒற்றுமை உணர்வு ஏற்பட்டால் தான் சாத்தியமான சூழ்நிலை உருவாகும்.  #TNfarmers #delta
    ×