search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராமநகரா மாவட்ட சர்ச்சை: தீவிரமாகும் டி.கே.எஸ். - ஹெச்.டி.கே. மோதல்
    X

    ராமநகரா மாவட்ட சர்ச்சை: தீவிரமாகும் டி.கே.எஸ். - ஹெச்.டி.கே. மோதல்

    • 2023 மே மாதம் இந்திய தேசிய காங்கிரஸ், ஆட்சி பொறுப்பில் அமர்ந்தது
    • சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக குமாரசாமி அறிவித்தார்

    2007ல் ஜனதா தள் மற்றும் பா.ஜ.க. கூட்டணியின் சார்பாக கர்நாடகா முதல்வராக ஹெச்.டி. குமாரசாமி இருந்த போது ராமநகரா மாவட்டம் உருவாக்கப்பட்டது. பெங்களூரூவிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் ராமநகரா உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவ்வருடம் மே மாதம் முதல் கர்நாடகாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி, ராமநகராவை பெங்களூரூவுடன் இணைத்து "பெங்களூரூ தெற்கு" (Bangaluru South) என புது மாவட்டத்தை உருவாக்க முயன்று வருகிறது.

    உருவாக்கப்பட உள்ள இந்த தெற்கு பெங்களூரூ மாவட்டம், ராமநகரா, சென்னபட்டனா, மாகடி, கனகபுரா மற்றும் ஹரோஹல்லி ஆகிய 5 தாலுக்காக்களை உள்ளடக்கி உருவாக்கப்படும் என்றும் கனகபுரா, எதிர்காலத்தில் பெங்களூரூவின் ஒரு பகுதியாகும் என அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியிருந்தார்.

    இது குறித்து சிவகுமார் பொதுமக்களிடம் தெரிவித்ததாவது:

    நீங்கள் பெங்களூரூ மாவட்டத்தை சேர்ந்தவர்கள்; ராமநகரா அல்ல. அதை முதலில் மனதில் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். தேவையின்றி நம்மை ராமநகரா மாவட்டத்தில் இணைத்தனர். நீங்கள் பிறர் சொல்வதை கேட்காதீர்கள். மீண்டும் பெங்களூரூவை பழையபடி மாற்றுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    குமாரசாமி இது குறித்து தெரிவித்ததாவது:

    ராமநகராவுடன் எனக்கு உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிற்கு சொந்தமான சொத்துக்களை காக்கும் முயற்சிதான் காங்கிரஸின் இந்த நடவடிக்கை. நான் சிவகுமாருக்கு சவால் விடுகிறேன். ராமநகராவின் பெயர் மாற்றப்பட்டாலோ, அல்லது அதனை பெங்களூரூவுடன் இணைக்க முயன்றாலோ, நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். ராமநகராவின் மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×