search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drink water"

    • மோசமான கொழுப்பு நிரம்பிய உணவுகளை தூரமாய் ஒதுக்குங்கள்.
    • உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

    உடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும்.

    தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்வதல்ல, தினசரி அலுவல்களுக்கு இடையே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம். படிகளில் ஏறி இறங்குவது, அடிக்கடி நடப்பது, கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப்பயிற்சி என எவ்வளவோ செய்யலாம்.

    தினமும் மூன்று வேளை மூக்கு முட்ட அசைவப் பொருட்களை உடலுக்குள் திணிப்பதை கொஞ்சம் ஒத்தி வையுங்கள். எல்லாம் அளவாய் ஒருப்பதே ஆரோக்கியமானது. தினமும் ஐந்து முறை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள். பெரும்பாலானவை வேக வைக்காததாக இருக்க வேண்டியது முக்கியம். சில காய்கறிகள் பாதி வேக வைத்து உண்ணலாம்.

    சோர்வாக இருக்கிறது என்று ஒரு காபி குடிப்போம், போரடிக்கிறது என்று ஒரு காபி குடிப்போம், நண்பர் வந்து விட்டார் ஒரு காபி குடிப்போம் என எதெற்கெடுத்தாலும் காபி அருந்துவதற்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள். தூய்மையான தண்ணீர், எலுமிச்சை சாறு, செயற்கை இனிப்பு கலக்காத பழச்சாறு, கிரீன் டீ போன்றவற்றை அதற்கு மாற்றாக அருந்தப் பழகுங்கள்.

    நல்ல பழக்கங்களைக் கொண்டிருப்பது முக்கியம். குறிப்பாக புகைபிடித்தலை முழுமையாக விட்டு விடுங்கள். மது அருந்துதல், எதிர்மறை எண்ணங்களை வளர்த்தல் போன்ற அனைத்துமே உடலுக்கு ஊறு விளைவிப்பவை. எனவே நல்ல பழக்கங்கள், நல்ல சிந்தனைகள் இவை முக்கியம்.

     மோசமான கொழுப்பு நிரம்பிய உணவுகளை தூரமாய் ஒதுக்குங்கள். குறிப்பாக, சீஸ், சிப்ஸ், பிரன்ச் பிரைஸ், பீட்சா போன்ற அதிக கொழுப்பு உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். நலமான வாழ்வுக்கு உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம், அதற்கு தேவையற்ற கொழுப்பு பொருட்களை ஒதுக்குவது மிக மிக அவசியம்.

    உணவில் உப்பு சேர்ப்பதை மட்டுப்படுத்துங்கள். அளவுக்கு அதிகமான உப்பு உடலில் பல்வேறு நோய்களைக் கொண்டு வரும். அதிகம் உப்பை உட்கொள்ளும் போது உடலில் சோடியம் அளவு அதிகரிக்கிறது, இது மினரல்களின் சமநிலையை பாதிக்கிறது. உயர் குருதி அழுத்தத்துக்குக் கூட இது காரணமாகி விடுகிறது. அதிக உப்பு ரொம்ப ரொம்ப தப்பு என மனதுக்குள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

    உண்பதை நன்றாக மென்று உண்ணுங்கள். அதிக நேரம் மென்று உண்ணும் பொருள் உங்கள் உடலுக்கு அதிக பயனளிக்கும். தேவையற்ற கொழுப்பு சேர்வதில் இருந்தும், வாயுத் தொல்லை, செரிமானப் பிரச்சினை போன்ற அனைத்தில் இருந்தும் அது உங்களைத் தப்புவிக்கும்.

     நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்ற அது உதவும். முக்கியமாக, உணவு உண்டபின்னர் குளிர்ந்த நீரைக் குடிக்கவே குடிக்காதீர்கள். மிதமான சூடுள்ள தண்ணீரையே அருந்துங்கள்.

    இனிப்பு பொருட்களை உண்பதை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது கொழுப்பு, இன்சுலின், டிரைகிளைசெரிட்ஸ் போன்றவற்றின் அளவு உடலில் அதிகரித்து உடலின் எதிர்ப்புச் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழக்கச் செய்யும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வாங்கும் பொருளில் குளுகோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ், கார்ன் சுகர் என எழுதப்பட்டிருப்பவை எல்லாம் இனிப்புப் பொருட்களே!

    எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டியது உடலின் மிக முக்கியமான தேவை. இல்லையேல் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு உடைவு நோய் வந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி விடும். எனவே உடலுக்குக் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கக் கூடிய உணவுகளை தவறாமல் உண்ணுங்கள்.

    எலும்பின் உறுதியை நீர்த்துப் போகச் செய்யும் குளிர்பானங்களை (கோக், பெப்ஸி வகையறாக்கள்) முழுமையாய் ஒதுங்குங்கள். காலை வெயிலிலும் கொஞ்ச நேரம் நடப்பதினால் வைட்டமின் டி இலவசமாக கிடைக்கும்.

     தேவையான ஓய்வு, தேவையான தூக்கம், மனதை இலகுவாக்குதல் இவையெல்லாம் மிக மிக முக்கியம். வேலை வேலை என எந்நேரமும் அலையாமல் உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செயல்களை தினமும் சற்று நேரம் செய்யுங்கள்.

    குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அன்பாகவும், இனிமையாகவும் செலவிடும் நிமிடங்கள் ஆரோக்கிய உடலுக்கும் வழிவகுக்கும்.

    • 40 வயதை கடந்தது முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயற்கையான விசயம் தான்.
    • முகம் நன்றாக இருக்கனும் என்றால் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    இளமையை விரும்பாதவர்கள் யார் தான் இருக்கிறார்கள் இந்த உலகில். 40 வயதை கடந்ததும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது என்பது இயற்கையான விசயம் தான். ஆனால் இப்போது 30 வயது, 20 வயதிலேயும் பலருக்கு முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால் சிலர் அறுபது வயதில் கூட முகத்தை இளமையாக சின்ன குழந்தை மாதிரி வைத்திருப்பார்கள். இதற்கு என்ன காரணம் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

    முகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அதனால் முகத்தை நல்லா வைத்திருக்க நினைப்பவர்கள் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். அதற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். நன்றாக உறங்க வேண்டும்.

    அதேபோல் நம் முகத்தில் ஒரு இருக்கம், பரபரப்பு, டென்ஷன் எது இருந்தாலும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். அதேபோல் தசைகள் தளர்வுறும்போதும் சுருக்கங்கள் ஏற்படும். அதற்கு அடிக்கடி சிரித்துக்கொண்டு இருந்தாலே முகத்திற்கு நல்ல பயிற்சி. ஆனால் நாம் சிரிப்பை மறந்து திரிகிறோம்.

    அடுத்ததாக நாம் முகத்திற்கு போடும் மேக்கப். இந்த மேக்கப்பில் உள்ள கெமிக்கல்ஸ். இதனால் நம் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டும். மேக்கப் ரிமூவரை பயன்படுத்தும் போது அதில் உள்ள கெமிக்கல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    அந்த காலத்தில் மேக்கப்பை அழிப்பதற்கு தேங்காய் எண்ணெய், அல்லது ஆலிவ் ஆயில் தான் தேய்ப்பார்கள். அதற்கு தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் கொடுத்து முகத்தில் உள்ள தசைகளை இறுகச்செய்து இன்னும் முகத்திற்கு பொலிவை கொடுக்கிறது. அதன்பிறகு காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு மற்றும் பழங்களான பப்பாளி, தக்காளி, வாழைப்பழம் இவற்றை பேஸ்ட் செய்தும் பயன்படுத்தலாம். மற்றும் பழவகைகளையும் முகத்திற்கு ஃபேஷியலாக பயன்படுத்தலாம். அல்லது கடலைமாவு, பால் சேர்த்து கலந்து அந்த பேஸ்டையும் வாரத்திற்கு இரண்டுமுறை முகத்திற்கு தடவி வர முகத்தில் உள்ள தசைகள் இறுக்கமாகி சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

    அதுமட்டுமல்லாமல் குளிர்ந்த தண்ணீரில் அடிக்கடி முகத்தை கழுவவேண்டும். இல்லையென்றால் ஐஸ்கியூப்பை கூட முகத்தில் தேய்த்து கழுவலாம். புதினா இலைகளை அரைத்து ஒரு ஐஸ்கியூப் பாக்சில் ஊற்றி எடுத்து தேவைப்படும் போது அதனை பயன்படுத்தலாம். நீங்க எப்போதெல்லாம் பிரஷ்சாக இருக்க நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் இந்த கியூப்களை எடுத்து முகம் முழுக்க தடவினால் சுருக்கங்களில் இருந்து விடுபடலாம்.

    இதோட இல்லாம பாசிபயிறு, கோதுமை, கடலைமாவு, ஓட்ஸ் இப்படி நம்ம வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு வாரத்திற்கு ஒருநாள் இந்த பொருளுடன் பன்னீர் அல்லது பாலில் குளைத்து பேக் போட்டு வந்தாலே முகம் இறுக்கமாக மாறும். மனம் தான் இறுக்கமாக இருக்க கூடாது. முகம் இறுக்கமாக இருந்தால் தான் வயதான தோற்றம் அவ்வளவு சீக்கிரமாக நமக்கு வராது.

    • தென்னை சாகுபடி கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
    • திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெருமளவில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை:

    தென்னை சாகுபடி கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக, தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.அதே வேளையில் ஆண்டுதோறும், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தென்னை சாகுபடி பரப்பு அதிகரித்தவாறே உள்ளது.பிரதான சாகுபடியான தென்னையை பாதுகாக்க தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்துவது அவசியமாகியுள்ளது.

    தென்னை விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான, நீரா உற்பத்திக்கு தமிழக அரசு 2018ல் அனுமதியளித்து தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாயிலாக இப்பானம் உற்பத்தி துவங்கியது.தென்னை மரங்களில் மலராத தென்னம்பாளையில் இருந்து பெறப்படும் நீரா பானம் பல்வேறு சத்துகளை உள்ளடக்கியது. மரத்தில் இருந்து 5 டிகிரி செல்சியஸ் குளுமையில் இந்த பானம் வடித்து எடுக்கப்படும்.தொடர்ந்து இப்பானத்தை அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன், எலும்புக்கும் வலு கிடைக்கும். சர்க்கரை நோயாளிகளும், பானத்தை அருந்தலாம் என அரசால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நீரா பானத்திலிருந்து தென்னஞ்சக்கரை, சாக்லேட் உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டுப்பொருட்களை தயாரிக்க முடியும்.ஆனால் சில நடைமுறை சிக்கல்களால் நீரா பானத்தை நேரடியாக சந்தைப்படுத்த முடியவில்லை. இந்த பானத்தில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க வழிகாட்டுதல் கிடைக்கவில்லை. இவ்வாறு படிப்படியாக குறைந்த நீரா உற்பத்தி தற்போது முற்றிலுமாக முடங்கி விட்டது.

    இது குறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது:-

    பல்வேறு சத்துகளை உள்ளடக்கிய நீரா பானம் அருந்துவது குறித்து அரசு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இதனால் மக்களும் உற்பத்தியாளர்களும் பயன்பெறுவார்கள்.இப்பானம் உற்பத்தி மற்றும் விற்பனையிலுள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்க விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தலாம்.

    இதில் பெறப்படும் விபரங்கள் அடிப்படையில், நிபுணர் குழு வாயிலாக பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதுடன் தென்னை வளர்ச்சி வாரிய உதவியுடன் மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்புக்கும் பயிற்சி வழங்க வேண்டும்.இத்தகைய நடவடிக்கைகளை, தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டால் மட்டுமே தென்னை விவசாயம் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியும்.

    இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    தேங்காய் விலை வீழ்ச்சியால் விரக்தியடைந்துள்ள தென்னை விவசாயிகளுக்கு உரம் விலை கடும் உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெருமளவில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேங்காய்க்கு 7 - 9 ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு விலை கிடைக்கிறது. இதனால் பெரும் வருவாய் இழப்பை எதிர்கொண்டு, தென்னந்தோப்புகளை பராமரிக்க ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.இந்த சூழலில், பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது.இரண்டாண்டுக்கு முன் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை பொட்டாஷ் 900 - 950 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் 6 மாதமாக 90 சதவீதம் உயர்ந்து 1,750 ரூபாய் வரை தனியார் உரக்கடைகளில் விற்கப்படுகிறது.வேளாண் துறை சார்பில், வட்டார அளவில் வழங்கப்படும் நுண்ணூட்டங்களின் விலையும், கணிசமாக உயர்ந்து உள்ளது.

    மூன்றாண்டுகளுக்கு முன் வேளாண் துறையினர் சார்பில் கிலோ 55 - 60 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டநுண்ணூட்ட உரங்களின் விலை தற்போது 60 - 90 ரூபாய் என உயர்ந்துள்ளது.

    • நீரா உற்பத்தி செய்ய விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
    • பெரியளவில் உற்பத்தியை மேற்கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.

    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது. இப்பகுதியில் நீண்ட கால பயிராக பல லட்சம் தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.கடந்த சில மாதங்களாக தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சியால் தென்னை சாகுபடி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னை சாகுபடி பரப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில் நிரந்தர தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தென்னை மரங்களிலிருந்து இயற்கை பானமான நீரா உற்பத்தி செய்ய விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து நீரா பானம் இறக்கி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்தது.தென்னை வளர்ச்சி வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாயிலாக இறக்குவதற்கான அனுமதியை வழங்கியது.

    ஆனால் இயற்கை பானமான நீரா உற்பத்தியிலும், சந்தைப்படுத்துவதிலும் பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொண்டனர். இதனால் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது.தற்போது பல மாதங்களாக, தேங்காய், கொப்பரை வர்த்தகம் பாதிப்பில் உள்ளதால், மீண்டும் நீரா உற்பத்தியும் அதிலிருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு குறித்த கோரிக்கைகள் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

    இது குறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது:-

    தென்னை மரங்களில் இருந்து, நீரா பானம் 'ஐஸ்பாக்ஸ்' முறையில் மரங்களிலிருந்து இறக்கப்பட்டு பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது.ரசாயன கலப்பில்லாத இயற்கை முறையில் இறக்கப்படும் நீரா பானம் ஒரு வாரத்துக்குமேல் பயன்படுத்த முடியாது. இதனால் பெரியளவில் உற்பத்தியை மேற்கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.இந்த பானத்தில் இருந்து தென்னை ,சர்க்கரை, வெல்லப்பாகு, தேன், மிட்டாய் உள்ளிட்ட பலவகையான மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க முடியும். இதற்கான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில் நீரா பானம் இறக்குவதற்கு அனுமதியளித்தும் விவசாயிகளுக்கு பயனில்லாத நிலையே தொடரும் என்றனர்.

    ×