search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellaiappar Temple"

    • ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நெல்லைக்கு வருகை தருவார்கள்.
    • திருநீர் பூசியும், நெற்றில் குங்குமத்தை இட்டும் வழிபட்டனர்.

    நெல்லை:

    உலக புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர்-காந்திமதி கோவிலின் பெருமைகளை அறிந்து கொள்வதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நெல்லைக்கு வருகை தருவார்கள்.

    அதன்படி ஐரோப்பா கண்டத்தில் உள்ள எஸ்டோனியா நாட்டினை சேர்ந்த 32 பேர் ஒரு குழுவாக வந்து நெல்லையப்பர் கோவிலை இன்று சுற்றி பார்த்ததோடு அங்கு மூலவரான நெல்லையப்பர், காந்திமதி அம்பாளையும் மனம் உருகி வழிபட்டனர். அதன்பின் ஆண்கள் நெற்றியில் திருநீர் பூசியும் மற்றும் பெண்கள் நெற்றில் குங்குமத்தை இட்டும் வழிபட்டனர்.

    தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் கலாச்சாரம், மொழி, பழக்க வழக்கங்கள் என அனைத்தும் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. நெல்லையப்பர் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தது மன அமைதியாகவும், உற்சாகத்தை அளிப்பதாகவும் உள்ளது.

    இந்த கோவிலின் வரலாறு, கட்டிடக்கலை, சிற்பங்கள் என அனைத்தும் வியப்பாக அமைந்துள்ளது. நாங்கள் தமிழ் சித்த மருத்துவமுறை குறித்து தெரிந்துகொள்ளவும், அகஸ்தியர் வழிபாட்டினை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளோம். சிவனின் மீதுள்ள பற்றினால் எங்கள் நாட்டில் சிவன் கோவில் கட்டி வருகிறோம்.

    தொடர்ந்து முருக கடவுள் மீது அதிக பற்று உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருத்தணி, சுவாமி மலை, திருப்பரங்குன்றம் என முருகன் தலங்களில் சென்று சுவாமி தரிசனம் செய்தோம். தொடர்ந்து இந்தியாவிலுள்ள புகழ் பெற்ற கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இன்று மாலை சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • பரணி தீபத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு சொக்கப்பனை தீபம் என்ற ழைக்கப்படும் ருத்ர தீபம் ஏற்றப்பட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை யொட்டி இன்று மாலை சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    சொக்கப்பனை தீபம்

    நேற்று மகா மண்டபத்தில் நந்தி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பரணி தீபத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு நெல்லையப்பர் மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    இந்நிலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி இன்று காலையில் மூலவர் மற்றும் உற்சவர்கள், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இன்று மாலையில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி டவுன் ஆர்ச்சுக்கு அடுத்தப்படியாக பாரதியார் தெரு திரும்பும் சாலையில் உள்ள சொக்கப்பனை முக்கு பகுதியில் சொக்கப்பனை தீபம் ஏற்றும் வைபம் நடக்க உள்ளது.

    மாற்றுப்பாதை

    இதற்காக டவுன் சொக்கப்பனை முக்கு பகுதியில் பனை மரங்கள் மற்றும் பனை ஓலைகள் கொண்டு சொக்கப்பனை அமைக்கப்பட்டு வருகிறது. இன்று மாலையில் பரணி தீபத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு சொக்கப்பனை தீபம் என்ற ழைக்கப்படும் ருத்ர தீபம் ஏற்றப்பட உள்ளது.

    இதற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வா கத்தினர் செய்து வருகின்ற னர். இதனை காண ஏரா ளமான பக்தர்கள் வருவார்கள். இதனையொட்டி அந்த வழியாக செல்லும் வாகனங்களை மாற்றுபாதையில் இயக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடு களை போக்குவரத்து போலீ சார் செய்து வருகின்றனர்.

    • நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது.
    • மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பரணி மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    நெல்லை:

    பிரசித்தி பெற்ற நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதில், கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும். கார்த்திகை தீப திருவிழா 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் பரணி தீபம் ஏற்றப்படும். அதன்படி இன்று மாலை நெல்லை யப்பர் கோவிலில் சாயரட்சை பூஜைகள் முடி வடைந்ததும் சுவாமி நெல்லையப்பர் சன்னதி மகா மண்டபத்தில் ஹோமங்கள் நடைபெறு கிறது.

    தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பரணி தீபத்திற்கு பூஜைகள் செய்து சுவாமி மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பரணி மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    அதனைத்தொடர்ந்து தீபத்திற்கு சிறப்பு தீபாரா தனைகள் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். நாளை இந்த பரணி தீபம் ஊர்வலமாக எடுத்து வரப் பட்டு சுவாமி சன்னதி முன்பு வைக்கப்படும். தொடர்ந்து மகா ருத்ர தீபம் எனப்படும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.

    • நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது.
    • 3 நாட்கள் காந்திமதி அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருக்கல்யாணம்

    15 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி கடந்த 9-ந் தேதி, கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 3 நாட்கள் காந்திமதி அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    திருவிழாவின் 15-ம் நாளான நேற்று காலை பூமாலையால் சுவாமி பல்லக்கை இணைத்து அம்பாள் பல்லக்கு செல்லும் அபூர்வ காட்சி நடைபெற்றது. பின்னா் சுவாமி, அம்பாளுக்கு பொற்றாமரை குளத்தில் தீா்த்தவாாி நடைபெற்றது.

    மறுவீடு பட்டினப்பிரவேச நிகழ்ச்சி

    இரவில் சுவாமி நெல்லை யப்பர் அன்னை காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்பாள் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு எழுந்தருளும் மறுவீடு பட்டினப்பிரவேச நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நடைபெறும்.

    அம்பாள் சன்னதியில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள மகா தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் குடவருவாயில் தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து நான்கு ரத வீதியில் சுவாமி, அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து சுவாமி சன்னதியில் எழுந்தருளிய சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு மறுவீட்டு பலகாரங்கள் சீர் பரத்தல் செய்யப்பட்டு நலுங்கு இட்டு மாலை மாற்றி சோடச உபசரனைகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி, அம்பாள் அனவரததானநாத மண்டபத்தில் சேர்க்கை யுடன் இந்த வருட ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நிறைவுபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.

    • இன்று முதல் 3 நாட்களுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் நாயன்மாா்களால் பாடப்பட்ட பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும்.

    இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதத்திலும் திருவிழாக்கள் நடைபெறும். அதில் குறிப்பாக சுவாமிக்கு ஆனித்தேரோட்டமும், அம்பாளுக்கு ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 29-ந்தேதி அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் தினமும் காலை, மாலை வேளைகளில் காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகம், பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று மதியம் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதற்காக நெல்லை கோவிந்தராஜா் நெல்லையப்பரை ஆயிரங்கால் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தாா். அப்போது மண்டப வாயிலில் நெல்லையப்பருக்கு பாத பூஜை நடைபெற்றது. விழா மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமங்கள் நடைபெற்றன.

    தொடா்ந்து சுவாமி -அம்பாள் காப்பு கட்டும் நிகழ்ச்சி, மாலை மாற்றும் வைபவம், பாலும்-பழமும் கொடுத்தல் என சடங்குகள் நடைபெற்றன. அதன்பின் சுவாமி நெல்லையப்பருக்கு காந்திமதி அம்பாளை தாரைவார்த்து கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சுவாமி-அம்பாள் ஆகியோருக்கு புது வஸ்திரங்கள் அணிவித்த பின் திருமாங்கல்ய தாரண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து சப்தபதி போன்றவை நடைபெற்று வேதியா்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவா மூா்த்திகள் திராவிட வேதம் பாட மகா தீபாராதனை நடைபெற்றது.

    இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் பக்தர் பேரவை சார்பில் திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்று முதல் 3 நாட்களுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.

    அதனை தொடா்ந்து சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • விஜயதசமி தினத்தன்று தொடங்கும் செயல் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    • நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கலந்து கொண்டு கல்வி கற்றலை தொடங்கினர்.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் புதியதாக கல்வி தொடங்கும் நூற்றுக்கணக்கான குழந்தை கள் பச்சரிசியில் 'ஹரி ஓம்' என எழுதி கல்வி கற்றலை தொடங்கினர்.

    நவராத்திரியின் 9 நாள் ஸ்ரீதேவி கொழுவிருந்து10-ம் நாளான விஜயதசமி அன்று மகிசனை போரிட்டு சம்ஹாரம் செய்து வெற்றி பெற்றதாக ஐதீகம்.அதன் காரணமாக விஜயதசமி தினத்தன்று செய்யும் செயலும் தொடங்கும் செயல் அனைத்தும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.அதன் அடிப்படையில் விஜயதசமி தினத்தன்று, புதிய தொழில் தொடங்குவது புதிய செயல்களை செய்வது, கல்வி கற்றலை தொடங்குவது போன்ற ஐதீகங்களை வாடிக்கையாக பொது மக்கள் வைத்துள்ளனர். அதன்படி விஜயதசமியான இன்றைய தினம் நெல்லை நெல்லையப்பர் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நெல்லையப்பர் கோவில் ஆறுமுக நயினார் சன்னதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டு கற்றல் நிகழ்ச்சியை தொடங்கினர். புதிதாக கல்வி கற்கும் குழந்தைகள் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டியுடன் கோவிலுக்கு வருகை தந்து ஆறுமுக நயினார் சன்னதியில் நடைபெற்ற கூட்டு வழிபாட்டில் பங்கேற்றனர். தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை செய்து பச்சரிசியில் விரலி மஞ்சள் கொண்டு ஹரி ஓம் என எழுதியும், உயிர் எழுத்தின் முதல் எழுத்தான 'அ' எழுதியும் தங்களது கல்வி கற்றலை தொடங்கினர்.

    நெல்லையப்பர் கோவில் உழவர் பணி கமிட்டி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கல்வி கற்றலை தொடங்கினர். இதே போல் நெல்லை டவுன் பகுதியில் உள்ள சரஸ்வதி அம்மன் கோவில் மற்றும் நெல்லை நகர் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி மூலம் குழந்தைகள் கல்வி கற்றலை தொடங்கினர்.

    • ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கால்நடுதல் விழா இன்று நடைபெற்றது.
    • திருக்கால் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அலுப்பு மண்டபத்தில் நாட்டப்பட்டது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவில் ஒன்றாகும்.

    இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கால்நடுதல் விழா இன்று நடைபெற்றது. விழாவிற்காக கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது தொடர்ந்து அம்பாள் சன்னதியில் அமைந்துள்ள விநாயகரிடம் சிறப்பு பிரார்த்தனை வைக்க ப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் கால் நடுதலுக்கு பயன்படுத்தப்படும் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்று திருக்கால் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள அலுப்பு மண்டபத்தில் திருக்கால் நாட்டப்பட்டது.

    தொடர்ந்து திருக்காலுக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக திரவி யங்கள் கொண்டு சிறப்பு அபிசேகமும், அதனைத் தொடர்ந்து பக்தர்களால் நவதானியம் போடப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. தொடர்ந்து திருக்காலுக்கு மகா தீபாராதனை நடத்தப்பட்டது.

    அப்போது கோவில் யானை காந்திமதி பிளிறி மரியாதை செய்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சைவத் திருமுறை நேர்முக பயிற்சி மையத்தின் 7-வது தொகுப்பு நிறைவு விழா நெல்லையில் நடைபெறுகிறது
    • பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பேரணியாக சென்றனர்.

    நெல்லை:

    திருவாடுதுறை ஆதீனத்தின் சார்பில் நடத்தப்படும் சைவத் திருமுறை நேர்முக பயிற்சி மையத்தின் 7-வது தொகுப்பு நிறைவு விழா நெல்லையில் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பிருந்து தொடங்கி 4 ரத வீதிகளிலும் வலம் வரும் வகையில் திருக்கயிலாய பேரணிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணியை திருவாடுதுறை ஆதீன 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் தொடங்கி வைத்து 2 குதிரை பூட்டிய சாரட் வண்டியில் பேரணிக்கு முன்பாக சென்றார்.

    அதனைத் தொடர்ந்து நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, கடலூர், சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் சிவ வாத்தியங்கள் இசைத்தும், சங்கு நாதம் ஊதியம், கோலாட்டம் ஆடியும் பேரணியில் கலந்து கொண்டனர்.

    பேரணி நெல்லையப்பர் கோவில் முன்பு தொடங்கி வாகையடி முனை தெற்கு ரத வீதி, சந்தி பிள்ளையார் கோவில், மேலரத வீதி, லாலா சத்திர முக்கு, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் நெல்லையப்பர் கோவில் முன்பு வந்து அடைந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் திருமுறை பதிகங்கள் பாடி ஊர்வலமாக சென்றனர்.

    இந்த பேரணியில் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சரவணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து நெல்லை பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் சைவத் திருமுறை நேர்முக பயிற்சி மையத்தின் 7-ம் வகுப்பு நிறைவு விழா மாநாடு நடைபெறுகிறது.

    • கோவிலில் இன்று சுவர்கள் கற்சிலைகள் -பிரகாரங்களை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
    • தண்ணீரை பீய்ச்சி அடித்து சுவர்களில் இருந்த எண்ணைய் பிசுக்கு சுத்தப் படுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோவிலில் இன்று சுவர்கள் கற்சிலைகள் மற்றும் பிரகாரங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. நவீன ஏர் கம்ப்ரசர் பைப் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தூண்கள், சுவர்களில் இருந்த எண்ணைய் பிசுக்கு உள்ளிட்ட அழுக்குகளை நீக்கி சுத்தப் படுத்தினர்.

    இதனால் பிசுக்குகள் நீங்கி சுவர்கள் கல் தூண்கள் 'பளிச்' என காணப்பட்டது.

    • ஒரு வருட பூஜைகளின் பலன் கிடைக்குமாறு வேண்டி நடத்தப்படும் விழா பவித்ரோட்சவம் திருவிழா என்று அழைக்கப்படுகிறது.
    • இரவு 7 மணி அளவில் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் ஆகியோர் வெள்ளி ரிஷப வாகனத்தில் டவுன் 4 ரதவீதிகளிலும் வீதி உலா சென்று வருவார்கள்.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டில் 12 மாதமும் திருவிழாக்கள் மிக சிறப்பாக நடைபெறும். இவ்வாறு நடைபெறும் விழாக்களில் எந்தவித குறைபாடுகள் இருந்தாலும் அதனை நீக்கி ஒரு வருட பூஜைகளின் பலன் கிடைக்குமாறு வேண்டி நடத்தப்படும் விழா பவித்ரோட்சவம் திருவிழா என்று அழைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டும் பவித்ரோட்சவ திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடை பெற உள்ளது. அன்றைய தினம் இரவு 7 மணி அளவில் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் ஆகியோர் வெள்ளி ரிஷப வாகனத்தி லும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிர மணியர் மர மயில் வாகனத்திலும் என பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி நெல்லையப்பர் டவுன் 4 ரதவீதிகளிலும் வீதி உலா சென்று வருவார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • தனது தவப்பயனால், சிவ தலங்களில் தாம் அழைத்தவுடன் இறைவன் நேரில் காட்சி கொடுக்கும் பேறு பெற்று விளங்கியவர் கருவூர் சித்தர்.
    • 9-ம் திருநாளனன்று கருவூர் சித்தர், நெல்லையில் உள்ள ரத வீதிகளில் உலா வந்து, நள்ளிரவு மானூர் அம்பலவாணர் கோவிலை வந்தடைந்தார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆவணி மூலத்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.

    தனது தவப்பயனால், சிவ தலங்களில் தாம் அழைத்தவுடன் இறைவன் நேரில் காட்சி கொடுக்கும் பேறு பெற்று விளங்கியவர் கருவூர் சித்தர். இவர் ஒரு சமயம், நெல்லையப்பர் கோவில் முன்பாக வந்து வேண்டி அழைக்கவே, இறைவன் பதில் தராததால் சினமடைந்த சித்தர் சாபமிட்டு மானூர் செல்ல முற்பட்டார். இதனையறிந்த நெல்லையப்பர், சிவத்தொண்டராக வேடம் தாங்கி சித்தரை தடுத்து, பணிந்து அழைத்தார். அந்த இடமே தற்போதும் தொண்டர் நயினார் கோவில் எனப்படுகிறது.

    தொடர்ந்து சித்தர் மானூர் வந்து சேருகிறார். இதனால் நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் முறையே, சந்திரசேகரராகவும், பவானி அம்மனாகவும் மாறி பாண்டியராஜன், அகத்தியர், குங்கிலிய நாயனார், தாமிரபரணி மற்றும் சண்டி கேஸ்வரர் ஆகியோருடன் மானூர் சென்று, அங்குள்ள அம்பலவாணர் கோவிலில் வைத்து ஜோதிமயமாய் காட்சியளித்து சித்தரின் கோபத்தை தணியச் செய்கின்றனர். பின்னர் கருவூர் சித்தரையும் அழைத்துக்கொண்டு நெல்லைக்கு வருகின்றனர்.

    இந்நிகழ்வுகள் ஆவணி மாதம் மூலம் நட்சத்திர நாளில் நடைபெற்றதால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழாவாக மானூர் அம்பலவாணர் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் மானூர் வந்து வழிபடுவோருக்கு, முக்தி கிடைக்கும், மூலநோய் பிரச்சினை தீரும் என்பது ஐதீகம்.

    இந்த ஆண்டு ஆவணி மூலத் திருவிழாவானது, நெல்லையப்பர் கோவிலில் கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகளுடன் வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

    9-ம் திருநாளனன்று கருவூர் சித்தர், நெல்லையில் உள்ள ரத வீதிகளில் உலா வந்து, நள்ளிரவு மானூர் அம்பலவாணர் கோவிலை வந்தடைந்தார். தொடர்ந்து நேற்று நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் மற்றும் பரிவாரங்களுடன் வீதியுலா வந்து, நள்ளிரவு புறப்பட்டு இன்று அதிகாலை மானூர் சென்றனர். அங்கு இன்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கருவூர் சித்தருக்கு ஜோதிமயமாய் காட்சி அளித்தனர். தொடர்ந்து சாபவிமோசனம் பெறும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, செயல் அலுவலர் அய்யர் சிவமணி, தக்கார் பரமசிவன் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
    • சுமங்கலிப் பெண்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த கலசத்திற்கு அா்ச்சனை செய்து சுமங்கலி பூஜை வழிபாடு நடத்தினர்.

    நெல்லை:

    பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

    அதன் ஒரு நிகழ்ச்சியாக வரலெட்சுமி விரதத்தை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபத்தில், இன்று 1008 சுமங்கலி பூஜை நடைபெற்றது. பெண்கள் மாங்கல்ய பலன் அமையவும், குழந்தை பேறு கிடைக்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவும், இல்லங்களில் சுபகாரியம் நடைபெறவும் வரலெட்சுமி பூஜை நடைபெற்றது.

    ஆயிரங்கால் மண்டபத்தில் காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு எழுந்தருள சுவாமி -அம்பா ளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு மாலை மாற்றும் வைபவம் நடந்தது. தொடா்ந்து சுமங்கலிப் பெண்கள் முன்பு வைக்கப்ப ட்டிருந்த கலசத்திற்கு அா்ச்சனை செய்து சுமங்கலி பூஜை வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சியில் ஆயிரக்க ணக்கான பெண்கள் கலந்து கொண்டு புதிய மஞ்சள் கயிறு அணிவித்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் உடன் வழிபாடு நடத்தினர்.

    ×