என் மலர்tooltip icon

    கோவில்கள்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கோவில் ‘மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்’ என்றே அழைக்கப்படுகின்றது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கோவில் ‘மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்’ என்றே அழைக்கப்படுகின்றது.

    மீனாட்சி அம்மன், மதுரையில் பிறந்ததாகக் கருதப்படுவதால், அம்பாளின் சன்னிதியே முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.

    பாண்டிய மன்னன் குலசேகரபாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால், அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும், இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது.

    மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் ‘நான்மாடக் கூடல்’ என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோவில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், ‘இந்திர விமானம்’ என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.

    மீனாட்சி அம்மன் திருக்கோவிலில், நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. கிழக்கு கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்கு கோபுரம் கி.பி. 1323-ம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559-ம் ஆண்டிலும், வடக்கு கோபுரம் கி.பி. 1564 முதல் 1572-ம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878-ம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்கு கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி ஆக இருக்கிறது.

    இக்கோவிலுக்குள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    மீனாட்சி ஆலயம் பல உள்ளக மண்டபங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது. 600 வருடங்களின் மேலான கட்டுமானத்தில் உருவாகியதும், மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
    திருச்சி அருகே அமைந்துள்ளது திருப்பட்டூர் திருத்தலம். இங்குள்ள பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக திகழ்கிறது. இந்தக் கோவிலைப் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம்.
    திருச்சி அருகே உள்ள சமயபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், சிறுகனூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது, திருப்பட்டூர் திருத்தலம். இங்குள்ள பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக திகழ்கிறது. இங்கு பிரம்மனுக்கு தனிச் சன்னிதி அமைந்திருப்பது மேலும் சிறப்புக்குரியதாகும். இந்தக் கோவிலைப் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம்.

    இங்கு அனுதினமும் வேதம் ஓதுபவர்கள், வேதங்களை பாராயணம் செய்து வந்தனர். அதனால் ஏற்பட்ட அதிர்வலைகள் இந்த ஊர் முழுவதும் பரவிக் கிடந்ததால், ‘திருப்பிடவூர்’ என்ற பெயர் வந்தது. அதுவே காலப்போக்கில் ‘திருப்பட்டூர்’ என்று ஆனதாக சொல்கிறார்கள்.

    வியாக்ரபாதர் என்ற முனிவர், சிவபெருமானை நோக்கி தவம் செய்வதற்காக தேர்வு செய்த திருத்தல மாக திருப்பட்டூர் திகழ்கிறது.

    இந்தக் கோவிலில் உள்ள தீர்த்தக் குளத்தின் நீரில் எவர் ஒருவர் நீராடினாலும், அது கங்கையில் நீராடிய பலனைக் கொடுக்கும்.

    இந்த ஆலயம் காசிக்கு நிகரான தலமாக விளங்குகிறது. திருக்கயிலாயத்திற்கு நிகரான தலமாகவும் இதைச் சொல்கிறார்கள்.

    இந்தக் கோவிலில் வழிபட்ட ஆதிசேஷன், மறுகணமே பதஞ்சலி முனிவராக மாறினார் என்று கூறப்படுகிறது.

    பிரம்மனின் ஆணவம் காரணமாக அவரது ஐந்து தலைகளில் ஒன்றை, சிவபெருமான் கிள்ளி எறிந்த தலம் திருக்கண்டியூர். இதையடுத்து பிரம்மன் பரிகாரம் தேடிக்கொண்டது, திருப்பட்டூர் திருத்தலம். பிரம்மன் வழிபட்டதாலேயே இத்தல இறைவன் ‘பிரம்மபுரீஸ்வரர்’ ஆனார்.

    பிரம்மன் உருவாக்கிய தீர்த்தக் குளமும், சிவலிங்கச் சன்னிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்குச் சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

    இந்தக் கோவிலில் ‘பிரம்ம சம்பத் கவுரி’ என்ற திருநாமத்துடன், அம்பாள் காட்சி தருகிறாள். இந்த அன்னைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புடவை சாத்தி வேண்டிக் கொண்டால் தடைபட்ட திருமணம் இனிதே நடைபெறும்.

    பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.

    குரு பகவானுக்கு அதி தேவதையான பிரம்மா, இந்த ஆலயத்தில் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். பிரம்மாவை வணங்கும் போதே, குரு தட்சிணாமூர்த்தியையும் கண்டு தரிசிக்கலாம்.

    இங்குள்ள சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

    தேய்பிறை அஷ்டமியில், ராகு கால வேளையில் இங்குள்ள காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்க வேண்டும். அதற்காகத் தான் இந்த காலபைரவரின் வலது காது வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    இத்தலத்திற்கு வந்து காசி விஸ்வநாதரையும், பிரம்மபுரீஸ்வரரையும் வழிபட்டுச் சென்றால், நிம்மதியான வாழ்வு அமையும்.

    வெள்ளைத் தாமரை சாத்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும். 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும். அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் சேரும்.
    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் திருத்தலத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வனமுலை நாயகி உடனாய கேடிலியப்பர் திருக்கோவில் உள்ளது.
    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் திருத்தலத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கீழ்வேளூர். இதனை பேச்சுவழக்கில் கீவளூர் என்று அழைக்கிறார்கள். இங்கு வனமுலை நாயகி உடனாய கேடிலியப்பர் திருக்கோவில் உள்ளது. இத்தல இறைவனை அப்பர், சம்பந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோவில்களுள் இதுவும் ஒன்றாகும். இத்தலத்தில்தான் அகத்தியருக்கு, நடராஜப்பெருமான் தமது வலதுபாத தரிசனம் தந்தருளினார். குபேரனுக்கும் இத்தலத்தில் தனி சன்னிதி இருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.

    திருச்செந்தூரில் சூரபத்மனை அழித்து, அவனை ஆட்கொண்டு தேவர்களை காத்து அபயம் அளித்து அருளினார், முருகப்பெருமான். சூரபத்மனை அழித்ததால் முருகப்பெருமானை கொலை பாவம் சூழ்ந்தது. இதனால் முருகப்பெருமானின் மனம், ஒரு நிலையில் இல்லாமல் இருந்துவந்தது. இதனை விலக்க முருகப்பெருமான் சிவாலயங்களில் சிவபூஜை செய்து வழிபட்டு வந்தார். ஆனால் எந்த இடத்திலும் அவரது சிவபூஜை நிறைவுபெறாதபடி, முருகப்பெருமானின் மனதை அந்த பாவமானது வாட்டி வதைத்து வந்தது. அதுமட்டுமின்றி, முருகப்பெருமான் சிவபூஜை செய்யும் இடங்களில் எல்லாம், கெட்ட சக்திகள் சிவபூஜையை நிறைவேற விடாமல் தடுத்தன. முருகப்பெருமானைச் சுற்றிப் பல பயங்கர முகங்கள் தாண்டவ மாடின. எல்லாம் பார்க்க முடியாதபடி கோர உருவங்கள்.

    இதையடுத்து முருகப்பெருமான், சிவபெருமானிடம் “ஐயனே.. சிவபூஜையை நிறைவேற்றிட துணை புரிய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். உடனே சிவபெருமான் தோன்றி, “முருகா.. சிக்கல் திருத்தலம் அருகில் உள்ள இலந்தை வனத்திற்கு சென்று சிவ பூஜை செய். உன் தாயின் அருளால் உன்னை சூழ்ந்த கெட்ட சக்திகள் விலகும்” என்று அருளினார்.

    சிவபெருமான் சொன்னபடியே இலந்தை வனம் வந்து, அங்கு சுயம்புவாக இருந்த சிவலிங்கத்திற்கு சிவபூஜை செய்தார், முருகப்பெருமான். அபிஷேகத்துக்கு தீர்த்தம் வேண்டி அருகில் பூமியில் தன் வேலை ஊன்ற, அதிலிருந்து தீர்த்த நீர் வெளிப்பட்டது. அந்த தீர்த்தமே இத்தல சரவண பொய்கையாக திகழ்கிறது. இப்போதும் முருகப்பெருமானைச் சுற்றி, கெட்ட சக்திகள் தோன்றி பூஜைக்கு இடையூறு செய்தன. இதனைக் கண்ட பார்வதிதேவி, தன்னில் இருந்து காளியை தோற்றுவித்தாள். காளி தேவி, முருகப்பெருமான் பூஜை செய்த இடத்தைச் சுற்றி நான்கு புறமும் கவசம் உண்டாக்கி, கெட்ட சக்திகளை தடுத்து நிறுத்தினாள். இதையடுத்து முருகப்பெருமானின் சிவ பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது.

    இதையடுத்து முருகப்பெருமான், தம்மை சுற்றி நான்கு திசை மற்றும் ஆகாயம் என ஐந்து கோணத்திலும் கவசம் ஏற்படுத்தி அருளிய தமது அன்னையை ‘அஞ்சுவட்டத்தம்மா’ எனப்போற்றித் துதித்தார். முருகப்பெருமானை காத்த காளி அன்னை இத்தலத்தில் ‘அஞ்சு வட்டத்தம்மன்’ என்னும் திருநாமத்திலேயே அருள்பாலிக்கிறாள். அஞ்சு வட்டத்தம்மன் இங்கு சுதை வடிவில் பெரிய திருஉருவுடன் பத்து திருக்கரங்களுடன் வடக்கு திசை நோக்கி இருக்கிறாள். இங்கு அமாவாசை மற்றும் ராகு காலங்களில் எலுமிச்சை தீபம் ஏற்றி, கருவறை தீபத்தில் எள் எண்ணெய் சேர்த்து, 9 உதிரி எலுமிச்சை பழங்களை சமர்ப்பித்து, குங்குமார்ச்சனை செய்து அஞ்சுவட்டத்துக் காளி அம்மனை வழிபட்டு வந்தால், நம்மை பிடித்த தீராத நோய்கள், வறுமை, பில்லி சூனியம் போன்ற தீவினைகள் அனைத்தும் விலகிவிடும்.

    இந்த ஆலயத்தின் மூலவர் கேடிலியப்பர், சுயம்பு மூர்த்தி ஆவார். இவருக்கு புனுகுசட்டம், சாம்பிராணி தைலம் மட்டுமே சார்த்தப்படுகிறது. இவர் தம்மை அண்டியவர்களின் தீவினைகள், கெடுதல்கள், கிரக தோஷங்கள், கர்மவினைகள் போன்றவற்றை அகற்றி இன்பம் அருள்வதால் ‘கேடிலியப்பர்’ என்று பெயர் பெற்றார். திருஞானசம்பந்தர் தமது பதிகத்தில், இத்தல அம்மையப்பனை வழிபட்டால் துன்பங்களும், வினைகளும், பிணிகளும் அகன்றோடும் என்கிறார்.
    வட சென்னை பகுதியிலுள்ள வியாசர்பாடியில் சூரிய தலமான ரவீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    வட சென்னை பகுதியிலுள்ள வியாசர்பாடியில் சூரிய தலமான ரவீஸ்வரர் ஆலயம் உள்ளது. முலவர் ரவீஸ்வரர் மரகதாம்பாளுடன் அருள, உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தராக அருள்கிறார். தல விருட்சமாக வன்னிமரமும், தல தீர்த்தமாக சூரிய தீர்த்தமும் உள்ள இத்தலத்தில் காமீக ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. சிவன் சந்நதிக்கு மேலேயுள்ள இந்திர விமானம், நடுவில் எந்த ஆதாரமும் இல்லாமல் கூடு போன்று கட்டப்பட்டிருக்கிறது. சிவன் மூலஸ்தானத்திலிருந்து பார்த்தால், இந்த அமைப்பு தெரியும். தினமும் சூரியபூஜை நடைபெறும் திருத்தலம் இது.

    இக்கோயிலில் சிவன், கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவரது சந்நதி எதிரில் வாசல் கிடையாது. தென்திசையில் உள்ள வாசல் வழியாக நுழைந்துதான், இவரைத் தரிசிக்க முடியும். சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில், சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைத்துள்ளனர். இதற்கு நேரே நந்தி இருக்கிறது. தினமும் காலையில் சூரியனின் ஒளி, சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது. தினமும் இங்கு சூரியனே, முதலில் சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். இதன் பிறகுதான் காலசந்தி பூஜை செய்கின்றனர். சிவன் சந்நதி முன்மண்டபத்தில் சூரியன், இருக்கிறார்.

    ஞாயிற்றுக்கி ழமை, உத்தராயண, தட்சிணாயண புண்ணிய கால துவக்கம், மகரசங்கராந்தி (தைப்பொங்கல்), ரதசப்தமி ஆகிய நாட்களில் சிவன் மற்றும் சூரியன் இருவருக்கும் விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கின்றன. ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். சூரியபகவானின் மனைவியான சம்ஞ்யா தேவி, அவரது உக்கிரம் தாங்காமல், தனது நிழல் வடிவை பெண்ணாக்கி சூரியனிடம் விட்டுச் சென்று விட்டாள். சாயா (நிழல்) தேவி எனப்பட்ட அவள், சம்ஞ்யாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டாள்.

    இதை அறிந்த சூரியன் அவளிடம் கேட்டபோது, சம்ஞ்யாதேவி தன்னை பிரிந்து சென்றதை அறிந்தார். கோபம் கொண்ட சூரியன், சம்ஞ்யா தேவியைத் தேடிச் சென்றார். வழியில் பிரம்மா, ஒரு யாகம் நடத்திக் கொண்டிருந்தார். மனைவியைத் தேடிச் சென்ற கோப அவசரத்தில் சூரியன் பிரம்மாவைக் கவனிக்கவில்லை. தன்னை சூரியன், அவமரியாதை செய்ததாக எண்ணிய பிரம்மா, அவரை மானிடனாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார். இந்த சாபம் நீங்க, நாரதரின் ஆலோசனைப்படி பூலோகம் வந்த சூரியன் இத்தலத்தில் ஒரு வன்னி மரத்தடியில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டார்.

    அவருக்குக் காட்சி தந்த சிவன், சாப விமோசனம் கொடுத்த ருளினார். சூரியனின் வேண்டுதலுக்காக சிவன், அந்த லிங்கத்தில் ஐக்கியமானார். சூரியனுக்கு விமோசனம் கொடுத்தவர் என்பதால், ‘ரவீஸ்வரர்’ (ரவி என்பது சூரியனின் ஒரு பெயர்) என்றும் பெயர் பெற்றார்.முற்காலத்தில் இங்கு சிவன் சந்நதி மட்டும் இருந்தது. இப்பகுதியை ஆண்ட வீச்சாவரன் என்னும் மன்னனுக்கு புத்திரப்பேறு இல்லை. தனக்கு அப்பாக்கியம் தரும்படி இங்கு சிவனை வேண்டினான். சிவன், அம்பிகையிடம் மன்னனின் மகளாகப் பிறக்கும்படி அருளினார்.

    அதன்படி, மன்னனின் அரண்மனை நந்தவனத்திலுள்ள ஒரு மகிழ மரத்தினடியில் அம்பிகை குழந்தை வடிவில் தவழ்ந்தாள். அவளைக் கண்ட மன்னன், மரகதாம்பிகை என பெயர் சூட்டி வளர்த்தான். அவளும் இத்தல த்து இறைவன் மீது பக்தி கொண்டாள். அவளது திருமண வயதில் சிவன், அவளை மணந்து, தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். இதன் பி ன்பு, இங்கு அம்பிகைக்கு சந்நதி எழுப்பப்பட்டது. இவ்விழாவின் பத்தாம் நாளில் மகிஷன் வதம் வைபவம் நடக்கும்.

    அப்போது அம்பாள் சந்நதி எதிரில் ஒரு வாழை மரம் கட்டி, (வாழை மரத்தின் வடிவில் மகிஷன் இருப்பதாகக் கருதி), அதில் வன்னி இலையையும் சேர்த்துக் கட்டிவிட்டு,  அம்பாள் சார்பாக வெட்டி விடுகின்றனர். இந்த வைபவம் இங்கு விசேஷமாக நடக்கும். சிவன் சந்நதிக்கு பின்புறத்தில் வன்னி மரம் இருக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள், இம்மரத்திற்கு கீழேயுள்ள நாகருக்கு மஞ்சள்பொடி, பால் அபிஷேகம் செய்தும், பெண்கள் சுமங்கலிகளாக இருக்க தாலி  கட்டியும் வேண்டிக்கொள்கிறார்கள்.
    மகாராஷ்டிராவில் ‘விட்டல் மந்திர்’ என்ற பாண்டுரங்கன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள பாண்டுரங்கன் சிலை, சுயம்புவாக தோன்றியதாகும். கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாக உள்ளது.
    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, டாப்பாவாடா என்ற ஊர். இங்கு ‘விட்டல் மந்திர்’ என்ற பாண்டுரங்கன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை ‘சோட்டா பண்டர்பூர்’ என்றும் அழைப்பார்கள். இந்த ஆலயத்தில் உள்ள பாண்டுரங்கன் சிலை, சுயம்புவாக தோன்றியதாகும். கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாக உள்ளது.

    கோவிலின் முகப்பில் விநாயகர், சிவபெருமான், பார்வதிதேவி ஆகியோர் சிறுசிறு சன்னிதிகளில் தனித் தனியாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றனர். அவர்களை வணங்கியபடி படிக்கட்டுக்களில் ஏறி கோவிலுக்குச் செல்ல வேண்டும். வழியில் ஞானேஸ்வரர், துக்காராம், ஷீரடி சாயிபாபா ஆகிய மகான்கள் வரிசையாக இருபுறமும் தரிசனம் தருகின்றனர். மூலவர் சன்னிதிக்கு முன்பாக உள்ள மண்டபத்தில் விநாயகர், பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார், சிறிய திருவடி எனப்படும் ஆஞ்சநேயர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.

    இவர்களுக்கு நேர் எதிரில் உள்ள கருவறையில் பாண்டுரங்கன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். பாண்டு ரங்கன் நின்ற நிலையில், இரு கரங்களையும் இடுப்பில் வைத்தபடி சேவை சாதிக்கிறார். பாண்டுரங்கனுக்கு இடதுபுறம் ரகுமாயி என்னும் ருக்மணி தாயார் நின்றபடி அருள்புரிகிறார். பண்டரிபுரத்தில் உள்ள இறைவனைப்போலவே, இத்தல பாண்டுரங்கனையும் பக்தர்கள் தொட்டு வணங்கலாம். பாண்டுரங்கனின் தலைப் பகுதியில் மல்லிகார்ஜூனர் (சிவன்) இருக்கிறார். இடுப்பில் கைவைத்தபடி இருந்தாலும், ஒரு கையில் தாமரைப் பூவையும், மற்றொன்றில் சங்கையும் இறுக்கிப் பிடித்திருக்கிறார், பாண்டுரங்கன். பக்தர்கள் எந்த திசையில் இருந்து பார்த்தாலும், நம்மை பார்த்து சிரிப்பதுபோல் இந்த சிலை அமைந்திருப்பது மேலும் சிறப்பு வாய்ந்தது.

    தல வரலாறு

    பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கனின் மீது அதிக பக்தி கொண்ட ஒருவர், அடிக்கடி பண்டரிபுரம் சென்று இறைவனை தரிசித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அவருக்கு வயதான நிலையில், முதுமை காரணமாக அவரால் பண்டரிபுரம் செல்ல முடியாத நிலை உருவானது. ஒருநாள் அந்த பக்தனின் கனவில் தோன்றிய பாண்டுரங்கன், “உன் ஊரின் நதிக்கரையில் உள்ள கிணற்றில் நான் இருக்கிறேன். என்னை எடுத்து தரிசித்து வா” என்றாராம்.

    இதையடுத்து சிலரின் உதவியுடன், குறிப்பிட்ட கிணற்றில் தேடியபோது, இறைவனின் சிலை கிடைத்தது. அதை ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைக்கப்பட்டது. தானாக கிடைத்த விக்கிரகம் என்பதால் இந்தக் கோவில் ‘சோட்டா பண்டர்பூர்’ என்றும், அருகில் ஓடும் நதி ‘சந்திர பாகா’ என்றும் பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தக் கோவில் பிரகாரத்தில் இயற்கையான மூலிகைச் சாறுகளின் வண்ணங்களைக் கொண்டு, பாண்டுரங்கனின் வரலாறு முழுவதும் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. கோவிலில் ஒரு பிரகாரம் முழுவதும் இத்தல பாண்டுரங்கனின் வரலாறுதான் சித்திரமாக காட்சியளிக்கின்றன. இத்தல இறைவனுக்கு சர்க்கரை பாகு கட்டிகளை, தேங்காய், பழத்துடன் நைவேத்தியமாக படைத்து, பின்னர் அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.

    இந்த ஆலயம் பழமை மாறாமல், ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. இந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் பாண்டுரங்கனை வழிபட்டால், நம் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்கிறார்கள்.
    தசாவதாரம் என்று சொல்லப்படுவதில் முதல் அவதாரமான மச்ச அவதாரத்தோடு தொடர்புடைய ஆலயமாக, கும்பகோணம் அருகே உள்ள தேவராயன்பேட்டையில் அமைந்திருக்கும் மச்சபுரீஸ்வரர் கோவில் திகழ்கிறது.
    மகாவிஷ்ணு எடுத்த முக்கியமான 10 அவதாரங்களில் நரசிம்மர், ராமர், கிருஷ்ணர் ஆகியோருக்கே அதிகமான வழிபாடுகள் நடைபெறுகின்றன. தசாவதாரம் என்று சொல்லப்படுவதில் முதல் அவதாரமான ‘மச்ச அவதாரம்’ என்பது பெரிய அளவில் ஆலய வழிபாட்டில் இல்லை. ‘மச்சம்’ என்றால் ‘மீன்’ என்று பொருள். வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த அசுரனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரம் இது. இந்த அவதாரத்தோடு தொடர்புடைய ஆலயமாக, கும்பகோணம் அருகே உள்ள தேவராயன்பேட்டையில் அமைந்திருக்கும் மச்சபுரீஸ்வரர் கோவில் திகழ்கிறது. இந்தக் கோவிலின் மூலவர் பெயர் ‘மச்சபுரீஸ்வரர்’ என்பதாகும். இறைவியின் திருநாமம் ‘சுகந்த குந்தலாம்பிகை.’ மீன் உருவில் இருந்த மகாவிஷ்ணு, சுய உருவத்தை அடைய இங்குள்ள இறைவனை வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது.

    தல வரலாறு

    ஒரு முறை படைப்புக் கடவுளான பிரம்மதேவன், நித்திரையில் ஆழ்ந்துவிட்டார். அப்போது ஒரு அசுரன், படைப்புத் தொழிலுக்கு ஆதாரமான வேதங்களை திருடிச் சென்று விட்டான். இதனால் உலக படைப்பு நின்று போனது. பிரம்மன் செய்வதறியாது திகைத்தார். அவருக்கு உதவ மகாவிஷ்ணு முடிவு செய்தார். அதன்படி அவர் சிறிய மீன் வடிவம் எடுத்து ஒரு ஆற்றில் தங்கியிருந்தார்.

    அந்த காலகட்டத்தில், மகாவிஷ்ணுவை நோக்கி சத்யவிரதன் என்ற மன்னன் நீரையே உணவாக கொண்டு கடும் தவம் செய்து வந்தான். அவன் ஒருநாள், தன்னுடைய தினசரி கடமைகளைச் செய்து, ஆற்றில் நீராடினான். அப்போது தன் இரு கௌாலும் ஆற்றில் இருந்து நீரை அள்ளினான். என்ன அதிசயம்.. அவன் கையில் இருந்த நீரில் ஒரு சிறிய மீன் குஞ்சு வந்தது.

    அந்த மீன் அவனிடம் பேசவும் செய்தது. “மன்னா.. என்னை மீண்டும் நீரில் விட்டுவிடாதீர்கள். பெரிய மீன்கள் என்னை விழுங்கி விடும்” என்றது.

    மீன் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், அந்த மீனை தன் கமண்டலத்தில் போட்டுக்கொண்டு அரண்மனை நோக்கி புறப்பட்டான். அங்கு சென்றதும் கமண்டலத்தில் கிடந்த அந்த சின்னஞ்சிறிய மீன், கமண்டலம் அளவுக்கு வளர்ந்து விட்டது. எனவே அந்த மீனை எடுத்து அங்கிருந்த பெரிய பாத்திரத்தில் விட்டான். என்ன ஆச்சரியம், சற்று நேரத்தில் அந்த பாத்திரம் அளவுக்கு அந்த மீன் வளர்ச்சியடைந்தது. இதையடுத்து மன்னன், அந்த மீனை அரண்மனையில் இருந்த நீராடும் குளத்தில் விட்டான். சற்று நேரத்தில் அந்த குளத்தை அடைத்தபடி வளர்ந்துவிட்டது அந்த மீன்.

    எனவே மீனை எடுத்துச் சென்று, ஊர் குளத்தில் விட்டான். சிறிது நேரத்தில் குளம் அளவுக்கு மீன் வளர்ந்து விட்டது. இறுதியில் படைவீரர்கள் உதவியுடன் மீனை தூக்கிக் கொண்டு போய் கடலில் விட்டான். மீன் கடலளவு வளர்ந்து பிரமாண்டமாய் நின்றது. இதைக் கண்ட மன்னன், தான் வழிபடும் திருமாலே இதுபோன்ற திருவிளையாடலை நடத்துவதாக அறிந்துகொண்டான்.

    உடனே, “பரந்தாமா.. தாங்கள் இந்த உருவம் பெற்றதற்கும், என்னிடம் வந்ததற்கும் காரணம் என்ன?” என்று கேட்டான்.

    அப்போது மீன் வடிவில் இருந்த மகாவிஷ்ணு, “மன்னா.. வருகிற ஏழாவது நாளில் பிரளயம் ஏற்பட்டு உலகமே வெள்ளத்தில் மூழ்கப்போகிறது. அந்த சமயம் பெரிய படகு ஒன்று இங்கே வரும். அதில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் ஒரு ஜோடியை ஏற்றிவிடு. பிரளய வெள்ளத்தில் அந்த படகு மிதக்கும். நான் தற்போது இருக்கும் மச்ச அவதாரத்திலேயே, படகை சுமந்து அது கவிழ்ந்து விடாதவாறு காப்பாற்றுவேன். அப்போது நீங்கள் அதன் காரணத்தையும், என் மகிமையையும் அறிவீர்கள்” என்று கூறிவிட்டு மறைந்தார்.

    மகாவிஷ்ணு கூறியபடி ஏழாவது நாளில் பெரிய பிரளயம் ஏற்பட்டு வெள்ளம் சூழ்ந்தது. அப்போது பெரிய படகு ஒன்று அங்கே வந்தது. மன்னனும் உயிர்களை காப்பாற்ற அவற்றை படகில் ஏற்றிக்கொண்டு சென்றான். பலத்த காற்றால் படகு தடுமாறியது. அப்போது மகாவிஷ்ணு மச்ச அவதாரத்தில் தோன்றி படகை சுமந்து சென்று பிரளயம் முடிந்ததும் நிலத்தில் விட்டு, அனைத்து உயிர்களையும் காப்பாற்றினார். மகாவிஷ்ணு, மன்னனுக்கு மச்ச புராணத்தை உபதேசித்தார். பின்னர் பரந்தாமன் வேகமாக வெள்ளத்தினுள் சென்று, அசுரனுடன் போரிட்டு அவனை அழித்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் ஒப்படைத்தார்.

    இப்படி மகாவிஷ்ணு மீன் வடிவம் தாங்கி, உலகையும் காத்து, வேதங்களையும் மீட்ட பெருமை உடையது மச்சபுரீஸ்வரர் திருக்கோவில். மச்ச அவதாரத்தில் இருந்து சுய உருவம் அடைய பரந்தாமன் முயற்சித்தபோது, அசுரனை கொன்ற தோஷம் காரணமாக அவரால் சுய உருவத்தை அடைய முடியவில்லை. இதனால் அவர் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சிவனருளால் மகாவிஷ்ணு சுயஉருவம் அடைந்ததாக தலபுராணம் கூறுகிறது. மகாவிஷ்ணுவுடன் தேவர்கள், பிரம்மா ஆகியோரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

    மச்சபுரீஸ்வரர் ஆலயம் வேதங்களை மீட்ட தலம் என்பதால், கல்வி கற்று வரும் மாணவர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய தலம் இது. மாணவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து மச்சபுரீஸ்வரரையும், சுகந்த குந்தலாம்பிகையையும் வணங்கி தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். குலதெய்வ வழிபாடு செய்யாமல் விட்டவர்கள், இங்கு வந்து வழிபட்டு மீண்டும் தங்கள் குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்தால் குலதெய்வத்தை வழிபடாததால் வந்த தோஷம் விலகும்.

    அமைவிடம்

    தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்தில் பண்டாரவாடை என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் மச்சபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பாபநாசத்தில் இருந்தும், பண்டாரவாடையில் இருந்தும் பஸ், ஆட்டோ வசதி உண்டு.
    முற்காலத்தில் இக்கோவில் குளத்தில் அல்லி மலர்கள் நிறைந்திருந்ததால், இந்த ஊர் ‘திரு அல்லிக் கேணி’ என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அதுவே காலப்போக்கில் மருவி ‘திருவல்லிக்கேணி’ என்று ஆகியிருப்பதாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன.
    இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கும், அவர்களின் வாழ்க்கையில் செய்வதற்கு உரிய கடமைகள் கையளிக்கப்படுகின்றன. சிலர் அதனை கச்சிதமாக செய்து முடிக்கிறார்கள். பலரும் அதில் இருந்து விலகி, ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று போய்விடுகிறார்கள். ஆனால் நமக்கு அளிக்கப்பட்ட கடமைகளில் இருந்து எந்த பக்கமும் விலகாமல் நின்று, கடமையாற்றுவதே இறைவனுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் ஆகும். அப்படித்தான் மகாபாரதம் நடைபெற்ற காலத்தில், தர்மத்தைக் காத்து நிற்கும் பொருட்டு, தன் உறவுகளை எதிர்த்து சண்டையிட வேண்டிய கடமை அர்ச்சுனனுக்கு ஏற்பட்டது. ஆனால் அவன் உறவுகளை மேற்கோள்காட்டி அந்தப் போரில் இருந்து விலகிச் செல்ல நினைத்தான். அப்போது வாழ்வின் யதார்த்தங்களையும், கடமைகளையும் அர்ச்சுனனுக்கு, கிருஷ்ணர் எடுத்துரைத்தார். அதுவே ‘பகவத் கீதை’ என்ற புனித நூலாக விளங்கிக்கொண்டிருக்கிறது.

    குருசேத்திரப்போரில் அர்ச்சுனனின் தேருக்கு சாரதியாக இருந்து, அவன் கடமை உணர்வில் இருந்து வழுவாத நிலையில் வழிநடத்தியவர் கிருஷ்ண பகவான். இதனால் அவர் ‘பார்த்தசாரதி’ என்றும் அழைக்கப்படுகிறார். இந்த தேர் ஓட்டும் சாரதி தோற்றத்திலேயே இறைவன் கோவில் கொண்டுள்ள அற்புதத் தலம்தான், சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஆகும். எங்கும் இல்லாத வகையில் இங்கு இறைவன் முறுக்கு மீசையுடன் காணப்படுகிறார்.

    பார்த்தசாரதி திருக்கோவிலானது, புராண காலத்தில் ‘பிருந்தாரண்ய ஷேத்திரம்’ என அழைக்கப்பட்டது. ‘கேணி’ என்றால் ‘குளம்’ என்றும் ஒரு பொருள் உண்டு. முற்காலத்தில் இக்கோவில் குளத்தில் அல்லி மலர்கள் நிறைந்திருந்ததால், இந்த ஊர் ‘திரு அல்லிக் கேணி’ என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அதுவே காலப்போக்கில் மருவி ‘திருவல்லிக்கேணி’ என்று ஆகியிருப்பதாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக, இந்த பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் திகழ்கிறது. இருப்பினும் இதனை 7-ம் நூற்றாண்டில் ஆலயமாக வடிவமைத்துக் கட்டியவர்கள் பல்லவ கால மன்னர்கள் என்று சொல்லப்படுகிறது.

    பின்னர் வந்த சோழர்களும், விஜயநகர பேரரசர்களும் இந்தக் கோவிலுக்கு மேலும் பல திருப்பணிகளைச் செய்து ஆலயத்தை மேம்படுத்தினார்கள். பெருமாளைப் பற்றி தமிழில் பாடல் பாடிய 12 பேர் ‘ஆழ்வார்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த பன்னிரண்டு ஆழ்வார்களில், ‘திருமழிசை ஆழ்வார், பேயாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார்’ ஆகியோரால் மங்களாசாசனம் செய்யபட்ட திருத்தலம் இதுவாகும். வைணவ கோவில்களில் 108 திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் முக்கியமான திருத்தலங்களில், பிரசித்திப் பெற்ற திருக்கோவிலாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவில் திகழ்கிறது.

    புகழ் பெற்ற மனிதர்களான சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார், கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் போன்றோர், அவர்களின் காலத்தில் இக்கோவிலில் வந்து வழிபட்டுள்ளனர். இக்கோவிலின் மூலவரான பார்த்தசாரதிப் பெருமாளின் சிலை 9 அடி உயரம் கொண்டது. அனேகமாக பாரதத்தில் இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் பெருமாள் மட்டுமே, முகத்தில் மீசையுடன் காட்சி தருகிறார் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். இங்கு பார்த்தசாரதிப் பெருமாள் தன் மனைவி மற்றும் சகோதரர் என குடும்பம் சகிதமாக இருக்கிறார். பொதுவாக எல்லா பெருமாள் விக்கிரகங்களும் கையில் ஏதேனும் ஒரு ஆயுதம் ஏந்தியிருப்பதை காணலாம். ஆனால் இத்தல கடவுளான பார்த்தசாரதிப் பெருமாள் தனது கையில் ஆயுதம் ஏதும் இன்றி இருப்பது கூடுதல் சிறப்பு.

    இக்கோவிலில் உள்ள நரசிம்மர் சன்னிதியில் வழிபட்டு, அந்த நரசிம்மருக்கு உரிய சங்கு தீர்த்தத்தை நமது முகத்தில் தெளித்து, அத்தீர்த்தத்தை அருந்தினால், நம்மை பீடித்திருக்கும் துஷ்ட ஆவிகள், செய்வினை, பில்லி, சூனியம், ஏவல், தேவையற்ற பயங்கள் போன்ற பாதிப்புகள் நீங்கும். இக்கோவிலின் பெருமாளை வணங்குவதால் ஒருவரின் ஆளுமை திறனும் மேம்படும். மேலும் கல்வியில் சிறக்க, நல்ல இல்வாழ்க்கை துணை அமைய இக்கோவிலில் வேண்டிக்கொள்கின்றனர் பக்தர்கள். வேண்டுதல் நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கலை நிவேதனமாக அளித்து வழிபடுகின்றனர்.

    அமைவிடம்

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் திருவல்லிக்கேணி என்ற பகுதியில் அமைந்துள்ளது. திருவல்லிக்கேணி பகுதிக்கு செல்ல சென்னை நகருக்குள் குறைந்த கால இடைவெளியில் பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புறநகர் ரெயில் மூலமாகவும் திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்தில் இறங்கி நடந்து இக்கோவிலை அடையலாம்.
    அருள்மிகு வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சிவகாசியிலிருந்து கழுகுமலைக்கு செல்வதற்கு முன்னர் 17 கி.மீ தொலைவில் உள்ள வெம்பக் கோட்டை அடுத்த துலுக்கன்குறிச்சி என்னும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது.
    கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படிப்பட்ட பெரியோர்கள் வாக்கை மெய்பிக்கும் வகையில் இறைவனே தேடி வந்து குடியிருந்த ஒரு கிராமம் தான் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துலுக்கன்குறிச்சி எனும் சிறிய கிராமம். குடியமர்ந்த இறைவன் எம்பெருமான் சிவனின் மைந்தன் முருகப்பெருமான். அப்படிப்பட்ட இறைவன் தேடிவர காரணமாயிருந்தவர் “முருக பக்தர் வேலாயுதம்”

    அருள்மிகு வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சிவகாசியிலிருந்து கழுகுமலைக்கு செல்வதற்கு முன்னர் 17 கி.மீ தொலைவில் உள்ள வெம்பக் கோட்டை அடுத்த துலுக்கன்குறிச்சி என்னும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது.

    சுமார் 150 வருடங்களுக்கு முன், தேரியப்பர் - வீரம்மாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்த முருகபக்தர் வேலாயுதம் துலுக்கன் குறிச்சி கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அவர் இளம் வயதிலிருந்தே கடவுள் மீது பக்தி கொண்டவர். அவர் பல வித்தைகளையும் கலைகளையும் கற்றுத்தேர்ந்தவர். முருக பக்தர் வேலாயுதம் தன்னுடைய வயலின் அருகில் வாழை மரங்களை வைத்து பராமரித்து வந்தார். அவரின் கனவில் இறைவன் காட்சி தந்து, “ வேலாயுதம்! நீ பராமரிக்கும் வாழை மரங்களில் இப்பொழுது எந்த வாழை மரத்தில் குலை தள்ளியிருக்கிறதோ அம்மரத்தில்தான் நான் இருக்கிறேன்.“ என்று கூறி மறைந்தார். திடீரென்று விழித்தெழுந்த வேலாயுதம் தன் கனவில் இறைவன் வந்து காட்சி தந்ததை பக்த பெருக்கோடு அகம் மகிழ்ந்தார்.

    மறுநாள் வேலாயுதம் தனது வயலுக்கு அருகில் பராமரித்து வந்த வாழை மரங்களைச் சென்று பார்த்தபோது ஒரே ஒரு மரத்தில் மட்டுமே வாழை குலை தள்ளியிருந்தது. இறைவன் அம்மரத்தில் தான் தங்கியிருக்கிறான் என்பதனை உணர்ந்த முருகபக்தர் வேலாயுதம் அம்மரத்தை முருகனாக வணங்கி வந்தார். இதனைக் கேள்விபட்ட அக்கிராம மக்கள் அதனை வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி என்று அழைத்து வந்தனர்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் இக்கிராமத்திற்கு அருகாமையில் உள்ள செவல்பட்டி, ஜமீனில் கணக்குப்பிள்ளை மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. திருமண வாசலில் வைக்க குலை தள்ளிய வாழைமரம் தேவைப்பட்டது. அதற்காக பணியாட்கள் பல ஊர்களில் தேடி அலைந்தனர். ஆனால் எங்குமே கிடைக்கவில்லை. துலுக்கன்குறிச்சி கிராமத்தில் மட்டுமே குலைதள்ளிய வாழைமரம் இருப்பதை ஜமீனிடம் கூறினர்.

    ஜமீனும், “அப்படியானால் அதனை கொண்டு வாருங்கள்” என்றார் மாப்பிள்ளையான கணக்குப்பிள்ளையின் மகனும் தானே சென்று அதனைக் கொண்டு வருவதாகக் கூறிக்சென்றான். அவன் நேராக முருகபக்தர் வேலாயுதத்திடம் வந்து குலைதள்ளிய வாழைமரம் எங்கும் கிடைக்கவில்லை என்றும், அதனால் தங்களிடம் உள்ள குலைதள்ளிய வாழைமரத்தை தனக்கு அளிக்க வேண்டும். இது ஜமீனின் கட்டளை என்றும் தெரிவித்தான்.

    ஆனால் வேலாயுதமோ, “அது மரமல்ல நான் வணங்கும் தெய்வம் முருகப்பெருமாள் குடியிருக்கும் கோவில் அதனை வெட்டக்கூடாது. அதற்குமேல் உங்கள் விருப்பம்” என்றார் இவரின் பேச்சைக் கேட்காமல் கணக்குப் பிள்ளையின் மகன் அரிவாள் எடுத்து முருகப்பெருமாள் குடிகொண்டிருந்த வாழைமரத்தை வெட்டினான். வாழை மரத்தில் இருந்து இரத்தம் வந்தது. அது மட்டுமல்லாமல் அதிலிருந்து நாகம் ஒன்று வந்து அரிவாளால் வெட்டிய கணக்கு பிள்ளையின் மகனை தீண்டியது. நாகம் தீண்டியதால் நுரைகக்கி கணக்குப் பிள்ளையின் மகன் இறந்தான்.

    இச்செய்தி காட்டுத் தீ போல அப்பகுதி முழுவதும் பரவியது. அதேபோல் ஜமீனுக்கும், கணக்குப்பிள்ளைக்கும் இச்செய்தி எட்ட அவர்கள் நேராக வேலாயுதம் உள்ள வாழை மரத்தருகே வந்தனர். அங்கே கணக்குபிள்ளையின் மகன் இறந்து கிடந்தைக் கண்டு துடித்தனர். கணக்கு பிள்ளை தன் மகனைப்பார்த்து, “மணக் கோலத்தில் பார்ப்பேன் என்று நினைத்த என்மகனை பிணக்கோலத்தில் பார்க்கும் நிலை ஏற்பட்டதே” என்று கதறி அழுதார்.

    கணக்குபிள்ளை முருகபக்தர் வேலாயுதமிடம் வந்து, “ஐயா! என் மகன் வாழைமர சுப்பிரமணிய சுவாமி குறித்து தெரியாமல் தவறு செய்து விட்டான். அதனால் அவன் உயிரையே இழக்க நேரிட்டது. தயவு கூர்ந்து என் பிள்ளையை காப்பாற்றித் தாருங்கள். அவனின் செயலுக்காக எங்கள் குடும்பமே மன்னிப்பு கேட்டுகிறோம்” என்று வேண்டினார். முருக பக்தர் வேலாயுதம் கணக்குபிள்ளையிடம். என் இறைவன் அறியாமல் செய்த பிழையை பொறுத்து காத்து அருள்வான். உங்கள் மகன் உயிர்தெழச் செய்ய என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்கிறேன். இறைவனும் நிச்சயம் காப்பாற்றுவான் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று கூறி வாழைமர சுப்பிரமணி முன்பு அமர்ந்து மன முருக வேண்டினார்.

    சில நிமிடங்கள் கழித்து வேலாயுதம் எழுந்து இறந்த கிடந்த கணக்குபிள்ளை மகனின் அருகில் வந்தார். ஒரு பிரம்புக் குச்சியை எடுத்து இறைவனின் நாமமான “முருகா” “முருகா” “முருகா” என்று மூன்று முறை சொல்லி அவனின் மீது மூன்றுமுறை தடவினார். அப்பொழுது ‘திடீரென்று‘ இறந்து கிடந்த கணக்குப் பிள்ளையின் மகன் மெல்ல விழித்து எழுந்தான். கூடியிருந்த மக்கள் ஜமீன்தார் மற்றும் கணக்கு பிள்ளையின் குடும்பம் மொத்தபேரும் இந்த அதிசயத்தைக் கண்டு மெய்சிலிர்த்து “முருகா“ “முருகா“ என்று முருகனின் நாமத்தைச் சொன்னார்கள்.

    இத்திருதலத்தில் தினமும் உலக நன்மைக்காக யாகம் செய்யப்படுகிறது. குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், திருமண பாக்கியம் மற்றும் தங்கள் குறைகள் தீர விரும்பும் பக்தர்கள் தங்கள் கையால் யாகம் செய்யும் அரிய வாய்ப்பும் இக்கோவிலில் வழங்கப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு வி.டி.பாஸ்கரன் 98405 45860.
    சென்னை பாரிமுனையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது பாடி என்ற ஊர். இங்கு திருவல்லீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
    சென்னை பாரிமுனையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது பாடி என்ற ஊர். இது தேவாரம் பாடிய சமயக் குரவர்களின் காலத்தில் ‘திருவலிதாயம்’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இங்கு வல்லீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மூலவரின் பெயர் ‘திருவல்லீஸ்வரர்’, ‘திருவலிதமுடையநாயனார்’ என்பதாகும். அம்மனின் பெயர் ‘ஜெகதாம்பிகை’, ‘தாயம்மை’. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 254-வது தலம் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 21-வது தலம்.

    பரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து, இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் ‘திருவலிதாயம்’ என்றும், இறைவன் ‘வலிதாயநாதர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவில் சுமார் 1000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் முதலியோரால் பாடல் பெற்ற தலமாக இது உள்ளது. மூலவர் சுயம்பு மூர்த்தி. இவருக்கு மேல் உள்ள விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின்புறம்) அமைப்புடையது.

    வியாழ பகவான் எனப்படும் குரு, தான் செய்த தவறால் தனது சகோதரனின் மனைவி மேனகையின் சாபத்தைப் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால், பாவம் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்று வழிகாட்டினார். அதன்படி இங்கு வந்த வியாழ பகவான், இத்தல புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார். இதனால், இது குரு தலம் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது. குரு பகவானுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. குரு பரிகார தலங்களாக சொல்லப்படும் தலங்களில், திருவலிதாயமும் ஒன்றாகும்.

    இத்தலத்தில் முருகப்பெருமான் நான்கு கரங்களுடன் வள்ளி-தெய்வானை சமேதராக எழுந்தருளியுள்ளார். வெளிப் பிரகாரத்தில் இருந்து உள் மண்டபத்தில் நுழைந்தவுடன், மூலவர் திருவலிதாயநாதர் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. உள்பிரகாரத்தின் வலது புறம் தெற்கு நோக்கியபடி அம்பாள் சன்னிதி இருக்கிறது. அம்பாளின் திருநாமம் ‘தாயம்மை’ என்பதாகும். அம்பாள் சன்னிதிக்கு நேர் எதிரே தெற்கு வெளிப் பிரகாரத்தில் சிம்ம வாகனம் அம்பாளை நோக்கியவாறு உள்ளது.

    ஒரு நாட்டைச் சார்ந்த மன்னன், மற்றொரு நாட்டு மன்னனோடு போர் தொடுத்துச் செல்லும் போது, தமது படைகள் தங்குவதற்கென்று ஓர் இடத்தை ஏற்பாடு செய்து அங்கு தங்கியிருப்பது வழக்கம். இந்த மாதிரி இடங்களை ‘பாடிவீடு’ என்று குறிப்பிடுவார்கள். மேற்கூறியவற்றுள் இந்த பாடி என்ற ஊரின் பெயர், போர்க்கால பாடி வீட்டின் அடிப்படையில் அமைந்திருக்கலாம். சோழ மன்னர்களும், விஜய நகர மன்னர்களும் இவ்வூரை பாடிவீடாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

    இத்தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கிட தோஷங்கள் நீங்கும். இத்தல குருபகவானை வணங்கினால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. பிரம்மபுத்திரிகளான கமலி, வல்லி ஆகிய இருவரையும், விநாயகர் இத்தலத்தில்தான் திருமணம் செய்து கொண்டார் என வரலாறு கூறுகிறது. இதற்கு சான்றாக இங்கு கமலை, வல்லிகளுடன் இருக்கும்படியான விநாயகரின் உற்சவர் சிலை உள்ளது. திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கோவில் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
    தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆதி வீரமாகாளியம்மன் கோவில். இந்தக் கோவிலை அங்குள்ள மக்கள் ‘பவுர்ணமி கோவில்’ என்றும் அழைப்பது உண்டு.
    தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பள்ளியூர். இந்த ஊருக்கு தஞ்சையில் இருந்து திருவாரூர் செல்லும் வழித்தடத்தில், சாலியமங்கலத்தில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். இந்த தடத்தில் களஞ் சேரியில் இருந்து பள்ளியூருக்கு சாலை பிரிகிறது. இந்த ஊரின் கிழக்கு பகுதியில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது, ஆதி வீரமாகாளியம்மன் கோவில். இந்தக் கோவிலை அங்குள்ள மக்கள் ‘பவுர்ணமி கோவில்’ என்றும் அழைப்பது உண்டு.

    காரணம் ஒவ்வொரு பர்வுணமி அன்றும் இந்தக் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும். பவுர்ணமி அன்று பகல் 12 மணி முதல் 2 மணிக்குள் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். பால், மஞ்சள், தயிர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படும். இந்த ஆதி வீரமாகாளியம்மன் கோவில் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இருந்துள்ளது. அந்தப் பகுதியில் குடியிருந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அதனை வழிபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் இடத்தை காலி செய்து விட்டு சென்ற பின்னர், அந்தப் பகுதி முழுவதும் கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்டது. அதில் ஒரு புற்று ஒன்றும் இருந்துள்ளது.

    இதனை அந்தப் பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். ஒரு நாள் திடீரென மழை பெய்த போது புற்றின் மேல்பகுதியில் இருந்த மண் கரைந்து கருப்பு நிறத்தில் ஒரு பொருள் வெளியே தெரிந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் பிறகு தண்ணீரை அதிக அளவில் ஊற்றிய போது, அந்தப் புற்றில் இருந்து அம்மன் சிலை தென்பட்டது. அது வீரமாகாளியம்மன் சிலை. இதையடுத்து அந்த சிலை காணப்பட்ட இடத்திலேயே அதற்கு கோவில்கட்டி உள்ளனர். அந்த சிலை 1½ உயர கருங்கல் சிலை ஆகும். இந்த சிலை 1996-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அதற்கு கோவில் கட்டி 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு மீண்டும் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்தக் கோவில் பஞ்சபூதங்களையும் தன்னகத்தே கொண்டது. கோவில் முன்பு குளம் உள்ளது. குளத்தின் கரையில் விநாயகர் சன்னிதியும் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் எண்ணங்கள் ஈடேறும் என்கிறார்கள். குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் குழந்தை பேறு கிட்டும். திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு 3 பவுர்ணமி வந்து தரிசனம் செய்ய வேண்டும். தேங்காய், வெற்றிலை பாக்கு போன்றவை எடுத்து வர வேண்டும். 3-வது பவுர்ணமி அன்று அவர்கள் கோவிலுக்கு வரும் போது ஆண், பெண் உருவம் கொண்ட 2 மரப்பாச்சி (மரத்தினால் செய்யப்பட்டது) பொம்மைகளை எடுத்து வர வேண்டும். அதில் ஒரு பொம்மையை கோவிலில் வைத்து விட்டு ஒரு பொம்மை, கொண்டு வந்தவர்களிடம் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு கிட்டுகிறது.

    இதே போல் திருமணம் ஆகாதவர்கள், தங்கள் ஜாதகத்தின் நகல்களின் 2 பிரதிகளை இந்த கோவிலுக்கு கொண்டு வர வேண்டும். அதனை அம்மன் பாதத்தில் வைத்த விட்டு ஒன்றை அங்கு வைக்கப்பட்டுள்ள ஜாதக உண்டியலில் போட வேண்டும். மற்றொன்று கொண்டு வந்தவர்களிடமே கொடுக்கப்படும். அதன்படி இதுவரை இந்த கோவிலுக்கு வந்த 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு 90 நாளில் திருமணம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    நோய் நீங்க வேண்டும், இன்னும் பல்வேறு காரியங்களை நினைத்துக்கொண்டு வருபவர்களுக்கும், அவர்களின் எண்ணங்கள் ஈடேறி வருவதாக இங்கு வரும் பக்தர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

    இந்தக் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்று பூஜைகள் நடைபெற்றாலும் ஆடி மாத பவுர்ணமி மாதம் நடைபெறும் பூஜை தான் திருவிழா போல கொண்டாடப்படுகிறது.
    கல்விக்கு அதிபதி என்று சொல்லப்படும் சரஸ்வதி தேவியை, சிறப்பு பூஜைகளுடன் வழிபடும் நாள் ‘சரஸ்வதி பூஜை’ ஆகும். இங்கே சரஸ்வதி அருளும் சில திருத்தலங்களைப் பற்றி பார்க்கலாம்.
    கல்விக்கு அதிபதி என்று சொல்லப்படும் சரஸ்வதி தேவியை, சிறப்பு பூஜைகளுடன் வழிபடும் நாள் ‘சரஸ்வதி பூஜை’ ஆகும். இந்த நாளில் சரஸ்வதியை வழிபாடு செய்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கே சரஸ்வதி அருளும் சில திருத்தலங்களைப் பற்றி பார்க்கலாம்.

    ராஜமாதங்கி

    சேலம் மன்னார்பாளையத்தில் சரஸ்வதி அம்சமான ராஜமாதங்கி அருள்பாலித்து வருகிறாள். கையில் வீணையுடன் அருளும் இந்த அன்னையின் இருபுறமும், சிவந்த அலகுகளுடன் பச்சைக்கிளிகள் காணப்படுகின்றன. சிம்மாசனமாய் கருவறையின் முன்புறம் கிளியாசனம் இருக்க, அதில் அழகாக அமர்ந்து அருளாட்சி செய்கிறாள் ராஜமாதங்கி தேவி. அன்னை பராசக்தியின் மந்திரியாக இருக்கும் இவள், இந்தத் திருத்தலத்தில் அறிவு வடிவமாக நின்று, தன்னை வழிபடும் பக்தர்களுக்கும் அறிவை குறைவில்லாமல் வாரி வழங்குகிறாள்.

    பிரம்ம வித்யாம்பிகை

    திருவெண்காடு தலத்தில் மூலவராக சுவேதாரண்யேஸ்வரர் மற்றும் பிரம்ம வித்யாம்பிகை ஆகியோர் அருள் செய்கிறார்கள். அம்பாள் அங்கே சரஸ்வதி தேவியாகவே வழிபடப்படுகிறாள். நவக்கிரகங்களில் மனிதர்களது புத்தியை இயக்கும் முக்கிய கிரகம் புதன். ஜாதக ரீதியாக புதன் அமைந்திருப்பதைப் பொறுத்தே கல்வி மற்றும் ஞாபக சக்தி மற்றும் கற்பனை வளம் ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன. திருவெண்காடு தலத்தில் புத பகவானுக்கு தனிச் சன்னிதி உள்ளது. இக்கோவில் கல்வி வளம் அளிப்பதுடன் புத்தியையும் வலுவாக மாற்றுகிறது. சீர்காழியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.

    கல்வி வரம் அருளும் ஞான வாணி

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் இருக்கிறது திருக்கண்டியூர். இங்கு பிரம்ம சிரகண் டீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பிரம்மாவுக்கு தனிச் சன்னிதி உண்டு. அற்புதச் சிலா ரூபமாக சரஸ்வதி தேவி தனது கணவனோடு, நான்கு கரங்களுடன் கல்வியும், ஞானமும் தரும் ‘ஞான வாணி’யாக அருள்பாலிக்கிறாள். பிரம்மனின் படைப்பில் தம் சக்தியைச் செலுத்தி கலைச்செல்வம் வழங்கும் வெள்ளாடை நாயகி மற்றும் பிரம்மனை தரிசிப்பது சிறந்த பலன்களை அளிக்கும் என்பது நம்பிக்கை. இந்தக் கோவிலுக்கு எதிரில் ஹரசாபவிமோசனப் பெருமாள் ஆலயம் உள்ளது. பிரம்மாவின் தலையைக் கொய்ததால், ஈஸ்வரனுக்கு ஏற்பட்ட தோஷத்தை இந்தப் பெருமாள் அகற்றியதாக ஐதீகம். இந்த ஆலயத்தில், கல்விக் கடவுள் ஹயக்ரீவருக்கும் தனிச் சன்னிதி அமைந்துள்ளது.

    கபால கிண்ணத்தில் கலைமகள்

    சென்னையில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரியபாளையத்தில் ரேணுகாதேவி, பவானி பெரியபாளையத்து அம்மனாக வீற்றிருக்கிறாள். ஒரு கையில் சக்ராயுதமும், மற்றொரு கையில் கபாலக் கிண்ணமும் ஏந்தி நிற்கிறாள். இந்த கபால கிண்ணத்தில் மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய மூவரும் அடங்கி இருப்பதாக தத்துவார்த்தம் உண்டு. அதனால் உலக வாழ்க்கைக்கு தேவையான செல்வம், வீரம், கல்வி மூன்றையுமே அன்னை வழங்குகிறாள் என்பது நம்பிக்கை. பக்தர்கள் ஞானம், கல்வி ஆகியவற்றை வேண்டி வழிபட்டு அருள் பெறுகின்றனர்.

    கல்விக்கு அதிபதி

    திண்டுக்கல் - வேடசந்தூர் சாலையில் 9 கிலோமீட்டர் தொலைவில், சவுந்தரராஜப் பெரு மாள் அருள்பாலிக்கும் தாடிக்கொம்பு தலம் அமைந்துள்ளது. மண்டூக மகரிஷி தனது சாபம் அகல தவமிருந்த இடம் இதுவாகும். இங்கே கல்வி அருளும் தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி ஆகியோருக்கு தனித்தனியே சன்னிதிகள் உள்ளன. திருவோணம் நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேக பூஜையுடன், தேங்காய், நாட்டுச் சர்க்கரை, நெய் கலந்த நைவேத்தியம் படைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்வது வழக்கம். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதிதேவிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

    ஞான சரஸ்வதி

    திருச்சியின் புறநகர்ப்பகுதியில் உள்ள உத்தமர்கோவில் கிராமத்தில், பிச்சாடனராக வந்து சிவபெருமான் தோஷம் நீங்கப்பெற்ற ‘பிச்சாண்டார் கோவில்’ இருக்கிறது. பிரம்மா, பூவுலகிலேயே இருக்க வேண்டி பெருமாளை நோக்கி தவமிருந்த இடம் இது என்கிறார்கள். அப்போது பெருமாள் தோன்றி, அங்கேயே இருக்க அனுமதி அளித்ததுடன், தன்னை படைத்தவனை பார்க்க வேண்டுமென்று நிறைய பக்தர்கள் உன்னைக் காண இங்கே வருவார்கள் என்று ஆசீர்வதித்து, தன் அருகில் வைத்துக் கொண்டதாக தல வரலாறு சொல்கிறது. இங்கு பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் தனியாக சன்னிதிகள் உள்ளன. இத்தலத்தில் ஞான சரஸ்வதியாக வணங்கப்படுவதுடன், அவளது கரங்களில் வீணை இல்லாமல், ஓலைச் சுவடியோடும், ஜெபமாலையோடும் காட்சியளிக்கிறாள்.

    வேத சரஸ்வதி

    திருமறைகாடு எனப்படும் வேதாரண்யத்தில், வேதபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. நான்கு வேதங்களும் இத்தலத்து ஈஸ்வரனை வணங்கியதாக ஐதீகம். இக்கோவிலின் பிரகாரத்தில் மிகப்பெரிய சரஸ்வதி, தனது கைகளில் வீணை இல்லாமல், ஆனால் சுவடிகளை வைத்தபடி வீற்றிருக்கிறாள். இந்த தலத்து நாயகி அம்பிகையின் குரல் யாழைவிட இனிமையானது என்பதால், சரஸ்வதியின் கையில் வீணை இல்லை என்று சொல்லப்படுகிறது. இத்தலத்து அம்பிகையின் பெயர் ‘யாழைப் பழித்த மொழியம்மை’ என்பதாகும். திருத்துறைப்பூண்டியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

    பேச்சியம்மன்

    சரஸ்வதி என்ற வித்யா அம்சமாக, கிராமக் கோவில்களில் பேச்சியம்மன் அருள்புரிவதை பலரும் பார்த்திருப்போம். பேச்சு + ஆயி என்பதே ‘பேச்சாயி’ என்று சொல்லப்படும். பேச்சுத்திறன் குறைந்தவர்கள் இந்த பேச்சியம்மனை வேண்டிக்கொண்டால், குறைகள் தீர்ந்து பேச்சு திறம் பெறுவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக மதுரை பேச்சியம்மன் கோவில் பிரபலமானது. தமிழகத்தின் பல கிராமங்களில் பேச்சியம்மனுக்கு தனிச் சன்னிதிகள் இருக்கின்றன.
    ஈசன், பிட்சாடனர் உருவத்தில் வந்து முனிவர்களின் செருக்கை அழித்து அவர்களுக்கு அருள்புரிந்த திருத்தலம் திருப்பராய்த்துறை ஆகும்.
    கண்வ மகரிஷி என்பவர், கங்கையில் நீராடச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதி தேவதைகளும் வந்தனர். அவர்கள் மூவரும் கரிய நிறமாக காணப்பட்டனர். ‘எங்களிடம் நீராடிய மக்களின் பாவங்கள் அனைத்தும் படிந்து, மூவரும் இப்படி ஆகிவிட்டோம். எங்களுக்கு பாவ விமோசனம் கூறுங்கள்’ என்று கண்வ மகரிஷயிடம் அவர்கள் கேட்டனர்.

    அதற்கு அந்த மகரிஷி, “நீங்கள் மூவரும் தென்திசை சென்று துலா மாதத்தில் காவிரியில் மூழ்கி நீராடுங்கள். அதுவும் துலா மாத முதல் நாளில் திருப்பராய்த்துறையிலும், பிற நாட்களிலும், கடைசி நாளிலும் மயிலாடுதுறையிலும் நீராடி அங்குள்ள சிவசக்தியை வழிபடுங்கள். நீங்கள் புனிதமடைந்து புதுப்பொலிவு பெறுவீர்கள்” என்று விமோசனம் கூறினார். அவரது வழிகாட்டல் படி கங்கை, யமுனை, சரஸ்வதி நதி தேவதைகளும் துலா மாதம் எனும் ஐப்பசியில் காவிரியில் நீராடி தங்கள் பாவங்கள் நீங்கி சுய உருவம் அடைந்தனர். எனவேதான் ஐப்பசி மாதத்தில் இங்கு நீராடுவது மிகவும் சிறப்புடையது என்கிறார்கள்.

    ‘காவிரி துலா நீராடல்’ என்றதும் நம் நினைவுக்கு வருவது இரண்டு திருத்தலங்கள்தான். ஐப்பசி முதல் நாள் திருப்பராய்த்துறையிலும், ஐப்பசி கடைசி நாள் மற்றும் கார்த்திகை முதல் நாளில் மயிலாடுதுறையிலும் அதிகாலை 4 மணி முதல் மாலை 6.30 மணிக்குள் காவிரியில் நீராடி ஈசனை வழிபடுவது தொன்று தொட்டு வரும் மரபாகும். அந்த வகையில் ஐப்பசி மாதம் முதல் தேதியில் திருப்பராய்த்துறை கோவிலின் காவிரிக் கரையில் ‘முதல் முழுக்கு’ நடைபெறுகிறது.

    இந்நாளில் திருப்பராய்த்துறை சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் அகண்டக் காவிரிக்கரையில் எழுந்தருள, உடன் அஸ்திர தேவருக்கு தீர்த்த அபிஷேகம் நடைபெறும். பின்னர் அம்மையப்பன் பக்தர்களுக்குத் தீர்த்தப் பிரசாதம் அளிப்பார். அப்போது அங்கு குழுமியிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் காவிரியில் நீராடி அம்மையப்பனை வழிபடுவர். இதில் நீராடுபவர்களின் பாவங்களும், தோஷங்களும் அகன்று வாழ்வில் நலமும் வளமும் கிட்டும்.

    ஈசன், பிட்சாடனர் உருவத்தில் வந்து முனிவர்களின் செருக்கை அழித்து அவர்களுக்கு அருள்புரிந்த திருத்தலம் இதுவாகும். மனிதர்களின் வாழ்க்கை முறை இல்லறம், துறவறம் எனும் இருமுறைகளைக் கொண்டது. ஒருவன் இல்லறத்தில் நிலம், செல்வம், பெண் போன்ற சிற்றின்பங்களுக்கு ஆட்பட்டும், வறுமை, போட்டி, பொறாமை, பயம் என பற்பல இன்னல்களுக்கு ஆட்பட்டு வருந்தினாலும் முறைப்படி இல்லற தர்மங்களை கடைப்பிடித்தால் மோட்சம் பெறலாம்.

    ஒரு முறை தாருகாவனத்தில் இருந்த முனிவர்களுக்கு, ‘இறைவனைக் காட்டிலும் தாங்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள்’ என்ற பெரும் ஆணவமும், அவர்களது மனைவிகளுக்கு, ‘அனைவரிலும் தாங்களே மிக அழகானவர்கள், கற்புக்கரசிகள்’ என்று அகங்காரமும் ஏற்பட்டது. அவர்களின் ஆணவத்திற்கு முடிவுகட்ட எண்ணிய சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் தாருகாவனம் வந்தனர். சிவபெருமான் காண்போரைக் கவரும் அதிபேரழகுடன் பிட்சாடனராக கையில் திருவோடு ஏந்தி வந்தார். மகாவிஷ்ணு அழகே வடிவாய் யாவரும் மயங்கும் மோகினி எனும் பெண் வடிவில் வந்தார்.

    அப்போது தாருகாவனத்தில் இருந்த முனிவர்கள், மோகினி வடிவில் வந்த மகாவிஷ்ணுவின் அழகில் மயங்கி அவரைப் பின் தொடர்ந்தனர். பிட்சாடனராக வந்த சிவபெருமானது பேரழகைக் கண்டு வியந்த முனிவர்களின் மனைவிகள், தங்கள் கற்பினையும் மறந்து அவர் பின்னே சென்றனர். தங்களது தவநெறியும், ஒழுக்கமும் மற்றும் தங்கள் மனைவியரின் கற்புநெறியும் கெடக் காரணமாயிருந்த பிட்சாடனர் மீது மிகுந்த கோபம் கொண்ட தாருகாவனத்து முனிவர்கள், ஒரு வேள்வியைச் செய்தனர்.

    அதிலிருந்து வெளிவந்த புலியை, பிட்சாடனர் வடிவில் இருந்த சிவனைக் கொல்வதற்காக ஏவினர். ஆனால் ஈசனோ அந்தப் புலியைக் கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்து கொண்டார். அடுத்து அந்த வேள்வியில் இருந்து வந்த மானை சிவபெருமான் தமது இடக் கரத்தில் வைத்தருளினார். பின்னர் வந்த மழுவை ஆயுதமாக வைத்துக் கொண்டார். தொடர்ந்து வந்த பாம்புகளைத் தமது ஆபரணமாகத் தரித்துக்கொண்டார். இவை தவிர முயலகன் என்ற அசுரன் வர அவனைக் கீழேத்தள்ளி முதுகில் ஏறி நின்று நடனமாடினார். முனிவர்கள் தொடர்ந்து மந்திரங்களை ஏவ, அவற்றை டமருக வடிவில் தமது திருக்கரத்தில் தாங்கிக்கொண்டார் பிட்சாடனர்.

    இறுதியாக தங்கள் தவ வலிமையால் வேள்வியில் இருந்து ஒரு மத யானையை முனிவர்கள் வரச் செய்தனர். தம்மைக் கொல்ல வந்த யானையின் வயிற்றுக்குள் சென்றார் பிட்சாடனர். அந்த வலியைத் தாங்க முடியாமல் யானை வீழ்ந்தது. ஈசன் யானையின் வயிற்றுக்குள் புகுந்ததால் உலகம் இருண்டது. இதனைக் கண்ட அன்னை உமையவள் முருகப் பெருமானை தம் கரத்தில் தாங்கியவாறு ஈசனைத் துதித்தாள். அதுசமயம் யானையின் வயிற்றினைக் கிழித்துக் கொண்டு ஈசன் வெளிப்பட்டார். கிழிந்த யானையின் தோலைத் தம் மீது போர்த்திக்கொண்டு வீர நடனம் புரிந்தருளினார்.

    அப்போது உமையவளின் திருக்கரத்தில் இருந்த குழந்தை முருகன் தம் தந்தையைச் சுட்டிக்காட்ட, முனிவர்கள் அறிவுமயக்கம் தெளிந்து சிவபெருமானின் காலடியில் வீழ்ந்து வணங்கினர். சிவபெருமான் அவர்களிடம் இரக்கம் கொண்டு, அவர்களுக்கு ஞானத்தை அளித்து அவர்களின் மன மயக்கத்தை அகற்றி அருளினார். இப்படி சிவபெருமான் தாருகாவனத்து முனிவர்களுக்குக் குருவாக இருந்து அருளினார். பின்னர் அந்த தாருகாவனத்திலேயே கிழக்கு நோக்கியவாறு சுயம்பு லிங்கமாக தாருகாவனேஸ்வரராக, பராய்த்துறை நாதர் எனும் பெயரில் எழுந்தருளினார். அவரது உடனுறை சக்தியான தெற்கு நோக்கிய அம்பிகையின் திருநாமம் ‘பசும்பொன் மயிலம்மை எனும் ஹேமவர்ணாம்பிகை’ என்பதாகும்.

    அமைவிடம்

    திருச்சியில் இருந்து கரூர் செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தூரத்தில் முக்கொம்பு அணை அமைந்துள்ளது. அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் திருப்பராய்த்துறை இருக்கிறது.
    ×