என் மலர்tooltip icon

    கோவில்கள்

    வேறு எங்கும் காண முடியாத வகையில் பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி 12 அடி உயரத்தில் 5 முகங்களுடன் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பூம்புகார் சாலையில் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது திருவிசநல்லூர் என்னும் கிராமம். இந்த கிராமத்தில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது பஞ்சமுக மகா மங்கல பிரத்யங்கிராதேவி கோவில்.

    வேறு எங்கும் காண முடியாத வகையில் பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி 12 அடி உயரத்தில் 5 முகங்களுடன் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள். இத்தலத்தில் அமைந்துள்ள சுவாமி பெயர் சிதம்பரேஸ்வரர். அம்மன் பெயர் சிவகாம சுந்தரி. இந்த ஆலயம் மேற்கு திசையை பார்த்து அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஐப்பசி கடைமுகம் அன்று பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்து காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும். மாதந்தோறும் பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை போன்ற விசேஷமான நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    மிளகாய் யாகம்

    மாதந்தோறும் அமாவாசை அன்று காலை 10 மணி முதல் நிகும்பலா யாகம் நடைபெறும். யாக குண்டத்தில் பட்டுப்புடவை, மிளகாய் வற்றல் ஆகியவை போடப்பட்டு இந்த யாகம் நடைபெறும். இந்த மிளகாய் யாகத்தில் கலந்து கொண்டு பிரத்யங்கிரா தேவியை மன முக தரிசனம் செய்பவர்களுக்கு பகை, கடன், நோய் அகலும். சகலவித நன்மைகள் உண்டாகும். தீவினைகள் அடியோடு விலகும். பொன், பொருள் வாங்கும் யோகம் அதிகரிக்கும். தொழில், வேலை, உத்தியோகம் அபிவிருத்தி அடைந்து பணம் வரவு அதிகரித்து வளம் உண்டாகும்.

    திருமணத்தடை நீக்கி விரைவில் திருமணம் நடைபெற பிரத்யங்கிராதேவி கோவிலில் சிறப்பு யாகம் நடக்கிறது. இதில் கலந்து கொள்பவர் களுக்கு திருமணத்தடை நீங்குகிறது என இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தீபாவளி அமாவாசை அன்று இனிப்பு பலகாரம், 1008 லட்டு யாகமும் இங்கு நடைபெறுகிறது.

    இந்த கோவிலின் பல்வேறு சிறப்புகள் குறித்து பிரத்யங்கிரா தேவி கோவில் பரம்பரை அறங்காவலர் டி.கணேஷ் குமார் சிவாச்சாரியார் கூறியதாவது:-

    சிங்க முகங்கள் பூட்டிய ரதத்தில்...

    சக்தியின் உக்கிரமான வடிவம்தான் பிரத்யங்கிராதேவி. இந்த பிரத்யங்கிராதேவி 5 சிங்க முகங்கள் பூட்டிய ரதத்தில் மிக கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காட்சி தருகிறார். இங்கு ஒவ்வொரு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் ஹோமம் நடக்கிறது. அந்த ஹோமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

    பணம் படைத்தவர்களால், அதிக உடல் பலம் படைத்தவர்களால் நல்லோர்கள் ஏமாற்றப்படுதலும், வதைபடுதலும், அதிகம் நடக்கிறது. அப்படி வதைபடுபவர்களால் பதிலுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அதிகாரத்தை, உடல் பலத்தை, பண பலத்தை எதிர்க்க சக்தி இல்லை.

    அப்படி சக்தி இல்லாதவர்கள் தங்களுடைய குறைகளை தெய்வத்திடம் முறையிடுகிறார்கள். அப்படி முறையிடுகிற கோவில்களில் மிக முக்கியமானது திருவிசநல்லூரில் வீற்றியிருக்கும் மகாமங்கல பிரத்யங்கிராதேவி கோவில்.

    கைமேல் பலன் கிடைக்கும்


    வந்தாரை வாழவைக்கும் இந்த மகாமங்கல பிரத்யங்கிரா தேவி கைமேல் பலன் தருவாள். உங்களை அழிக்க எவர் நினைத்தாலும், உங்களை வதைக்க எவர் முயன்றாலும் இங்கு வந்து ஒரு நிமிடம் மனமுருகி தேவியின் பெயரை சொல்லி அழைத்து, எனக்கு இந்த துன்பம் இருக்கிறது. அதை தயவு செய்து நீக்கிவிடு என்று சொன்னால் போதும். உங்கள் எதிரிகளை வெகுநிச்சயமாக அவள் துவம்சம் செய்வாள். அதே நேரத்தில் உங்கள் கோரிக்கையில் நியாயம் இருக்க வேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியம்.

    ஒவ்வொரு அமாவாசையன்றும், பவுர்ணமியன்றும் நடக்கும் யாகத்தின் உச்ச கட்டமாக வட மிளகாயை அம்பாளுக்கு நிவேதனம் செய்வார்கள். மூட்டை, மூட்டையாய் மிளகாயை கொட்டுவார்கள். ஆனாலும் ஒரு சிறு கமறல் கூட அங்கு எழாது. சகலமும் அவள் உள்வாங்கிக்கொண்டு விடுகிறாள். இந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். தீயசக்திகள் விலகி, செல்வ வளம் பெருகும். வெளிநாடு செல்லும் எண்ணம் நிறைவேறும். எதிரிகள் தொல்லை நீங்கி சகல நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    திருமணத்தடை நீக்கும் ராகு கால பூஜை

    இந்த கோவிலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ராகுகாலத்தில் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும் ராகு கால பூஜையில் பங்கேற்பதால் திருமணத்தடை நீங்கும். புது வீடு வாங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு உடன் கை கூடும், வேலையில் நிரந்தரம் எதிர்பார்ப்பவர்களின் எண்ணம் ஈடேறும், வெளிநாட்டு உத்தியோகம் எதிர்பார்ப்பவர்களின் எண்ணம் 11 வாரத்தில் ஈடேறும். அரசு உத்தியோகம் எதிர்பார்ப்பவர்களுக்கு அதிவிரைவில் நிரந்தர உத்தியோகம் கிடைக்கும்.

    மங்கள பிரத்யங்கிராவாகிய இவ்வாலயத்தில் 11 செவ்வாய்க்கிழமை உங்கள் வேண்டுதல்கள் எதுவாயினும் அதனை நினைத்து 9 எலுமிச்சம்பழம் மாலை சாற்றி ஒரு எலுமிச்சம்பழம் தீபம் ஏற்றி 11 வாரம் பூஜையில் பங்கு பெற்று 12-வது வாரம் ஸ்ரீ எந்திரம் ஆலயத்தில் இருந்து பெற்று வீட்டில் வைத்து வழிபட நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்.

    ஆடி அமாவாசையையொட்டி இன்று நண்பகல் 12 மணிக்கு மிளகாய் யாகம்

    உலக நலன் வேண்டியும், கொரோனா வைரஸ் உலகத்தை விட்டு செல்ல வேண்டியும் அடுத்த மாதம்(ஆவணி)பவுர்ணமி அன்று ஆகஸ்டு 22-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு 108 சுமங்கலி பூஜை நடைபெறுகிறது நேரில் வந்து தரிசனம் செய்தால் ஒரே நேரத்தில் 108 சுமங்கலி பெண்களின் ஆசிகள் கிடைக்கப்பெற்று நலம் பெறலாம்.

    நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையையொட்டி நண்பகல் 12 மணிக்கு மிளகாய் யாகம் நடைபெற்றது. இவ்வாலய யாகத்தில் பங்கு பெற்றால் ஸ்ரீ பஞ்சமுக மகா மங்கள பிரத்யங்கிராதேவி தங்கள் வேண்டுதல்கள் எதுவாகினும் அதனை நிறைவேற்றி தாங்கள் நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    கோவில் நடை திறக்கும் நேரம்

    இந்த கோவில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ் வசதி உள்ளது.

    மிளகாய் அரைத்து சாற்றி வழிபாடு

    தமிழகத்திலேயே தனிச்சிறப்பாக இவ்வாலயத்தில் உள்ள அனுமன் நேரெதிர் சனி பகவானை பார்க்கிறார். ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனி, கண்டக சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் வழிபட கிரக தோஷங்கள் அறவே விலகும்.

    இவ்வாலயத்தில் உள்ள திரிசூலத்தில் பில்லி, சூனியம், உடல் வியாதி, தீராத மன நோய், குடும்ப கஷ்டம், போட்டிகள், பெரும்பகை இவற்றினை களைய பக்தர்கள் மிளகாய் அரைத்து தாங்களே சாற்றி பலன் பெறலாம்.
    பூமிநீளா உடனாய வைகுண்டவாசப் பெருமாள் கோவில் பல்லவர் மற்றும் சோழர்களின் ஆட்சி காலத்திற்கு முன்பிருந்தே இருந்ததாக வரலாற்று சான்றுகள் சொல்கின்றன.
    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து 5 மைல் தூரத்தில் உள்ளது, இளங்காடு என்ற சிற்றூர். இங்கு பூமிநீளா உடனாய வைகுண்டவாசப் பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த ஆலயம் பல்லவர் மற்றும் சோழர்களின் ஆட்சி காலத்திற்கு முன்பிருந்தே இருந்ததாக வரலாற்று சான்றுகள் சொல்கின்றன.

    அந்த காலத்தில் இக்கோவில் ஷேத்திர விசேஷமாகத் திகழ்ந்திருக்கிறது. இத்தலம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளாக வழிபாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் வைகுண்டவாசப் பெருமாள், அமர்ந்த கோலத்தில் 7½ அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறார். அருகில் பூமிநீளா தாயார் இருக்கிறார்கள்.

    ஆரம்ப காலத்தில் சமணம், சாக்கியம் மற்றும் சைவ மதங்களை பின்பற்றி, பின்னர் வைணவத்தின் பால் ஈர்க்கப்பட்ட திருமழிசை ஆழ்வார், இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்திருக்கிறார். அதே போல் அகோபில மடத்தின் 7-வது பட்டம் ஜீயரான மகாதேசிகன், இந்த ஊரில் பிறந்து இத்தலப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார்.

    செஞ்சி அரசவையின் ராஜகுருவாக விளங்கிய சேஷாத்திரியாச்சாரியார், இங்கு அக்ர ஹாரம் அமைத்து தன் வாரிசுகளை குடியமர்த்தியுள்ளார். அப்போதிருந்த அரசர், வைகுண்டவாசப் பெருமாளின் கோவில் நிர்வாகத்தையும், கோவில் முதல் மரியாதை யையும் சேஷாத்திரியாச்சாரியாரிடம் ஒப்படைத்துள்ளார். இன்றளவும் அந்த பரம்பரையினரே நிர்வாகம் செய்து வருகின்றனர்.

    ஒரு காலத்தில் இந்த ஊர் அக்ரஹாரத்தில் பெரிய மகான்கள் வாழ்ந்திருக்கின்றனர். அப் போதெல்லாம் இங்கு எந்நேரமும் வேதகோஷங் களும், யாக முழக்கங்களும் கேட்டபடியே இருக்குமாம். இந்த ஊர் அந்த காலத்தில் பிரசித்தி பெற்ற நகரமாகவும் இருந்துள்ளது.

    இந்தக் கோவிலில் பார்வேட்டை, தேசிகன் சாற்றுமுறை, நவராத்திரி உற்சவம், வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாத பாராயணம், கிருஷ்ண ஜெயந்தி போன்ற உற்சவங்கள் கோலாகலமாக நடைபெற்று வந்திருக்கின்றன. தற்போது போதிய புனரமைப்பு இல்லாத காரணத்தால், தினசரி தீபாராதனை ஒரு வேளை மட்டும் நடைபெற்று வருகிறது.

    இத்தல பெருமாளை வழிபாடு செய்வதன் மூலமாக நினைத்த காரியங்கள் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.
    இங்குள்ள இறைவனை வேண்டுபவர்களுக்கு நினைத்தது நிறைவேறும். அப்படி வேண்டுல் நிறைவேறியவர்கள், சுவாமிக்கும், தாயாருக்கும் புதிய வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.
    தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோவில், தென்னிந்தியாவில் மிகவும் வித்தியாசமான முறையில் அமைந்த ஆலயங்களில் ஒன்று. இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்...

    ஒரிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோவில் வடிவமைப்பை போன்றே, இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது.

    கிழக்கு நோக்கிய ராஜகோபுரம், பலிபீடத்தை தாண்டி சென்றால் 16 தூண்கள் கொண்ட மண்டபம் உள்ளது. இதன் நடுவில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார்.

    மூலவரான பாண்டுரங்கப் பெருமாள், 12 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த சிலை, சாளக்கிராம கல்லால் செய்யப்பட்டது. அருகே ரகுமாயீ தாயார் வீற்றிருக்கிறார்.

    120 அடி உயர கோபுரமும், அதன் மீது 9½ அடி உயரத்தில் தங்கக் கலசமும், அதன் மேலே சுதர்சன சக்கரமும், கொடியும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும்.

    இத்தல பாண்டுரங்கப் பெருமாள், ஞாயிற்றுக்கிழமை மதுராபுரி மன்னன் அலங்காரத்திலும், வியாழக்கிழமை பாத தரிசனத்திற்காக எளிய அலங்காரத்திலும், வெள்ளி அன்று வெள்ளிக் கவச அலங்காரத்திலும், சனிக்கிழமை கல்யாண வெங்கடாஜலபதி அலங்காரத்திலும் அருள்பாலிக்கிறார்.

    மகாமண்டபத்தில் உள்ள கோவிந்தராஜப் பெருமாள், திருப்பதியைப் போல சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் கல்யாண உற்சவம் கண்டு அருள்கிறார்.

    பொதுவாக மூலவர் சன்னிதிக்கு முன்பாக உள்ள துவாரபாலகர்கள், கற்சிலைகளால் செய்யப்பட்டதாக இருக்கும். ஆனால் இங்குள்ள துவாரபாலகர்கள் பஞ்சலோகத்தால் ஆனவர்கள்.

    தல விருட்சம் ‘தமால மரம்.’ துவாபர யுகத்தில் இந்த மரத்தின் கீழ் நின்றுதான், கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைத்ததாகவும், அந்த இசைக்கு ராதை உள்ளிட்ட கோபியரும், பசுக்களும் மயங்கியதாகவும் புராணங்கள் சொல்கின்றன.

    இங்குள்ள இறைவனை வேண்டுபவர்களுக்கு நினைத்தது நிறைவேறும். அப்படி வேண்டுல் நிறைவேறியவர்கள், சுவாமிக்கும், தாயாருக்கும் புதிய வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த திருத்தலம்.
    நினைத்த காரியம் நடக்குமா?, திருமண யோகம் எப்போது?, குழந்தை பாக்கியம் கிடைக்குமா?, வேலைவாய்ப்புகள் அமையுமா? உள்ளிட்ட பக்தர்களின் பல்வேறு கேள்விகளுக்கு, இங்கே அருள்வந்து ஆடுபவர்கள் குறி சொல்வார்கள்.
    தமிழ்நாட்டில் பல சிறப்புகளைக் கொண்ட ஆலயங்கள் இருக்கின்றன. அந்த வகையில் முக்கியமான திருத்தலமாக விளங்குவது, மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில்.

    தல வரலாறு

    தொடக்க காலத்தில் சிவனைப்போல பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவபெருமானுக்கு நிகரானவர் என்று பிரம்மன் ஆணவம் கொண்டார். இதையடுத்து அவருடைய ஒரு தலையை கிள்ளி எடுத்தார், ஈசன். இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது.

    ஈசன் கிள்ளிய பிரம்மனின் தலை, சிவபெருமானின் கையில் மண்டை ஓடாக மாறி ஒட்டிக்கொண்டது. அவர் ஒரு கையில் கபால திருவோடு, மற்றொரு கையில் சூலாயுதம் தாங்கியபடி, உடலெங்கும் சாம்பலை பூசிக்கொண்டு ஊர், ஊராக அலைந்து திரிந்தார். அதன் ஒரு பகுதியாக மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் குடிகொண்டிருக்கும் இத்தலத்துக்கு வந்தார். அங்காள பரமேஸ்வரி அம்மன், சிவன் கையில் இருந்த கபாலத்துக்கு உணவிட்டு, சாதத்தை கீழே சிதறிபோகும் படி செய்தார். அப்போது சிவன் கையில் இருந்த கபாலம் கீழே இறங்கி சாதத்தை பொறுக்கியது. உடனே அங்காள பரமேஸ்வரி அம்மன் விஸ்வரூபம் எடுத்து கபாலத்தை காலால் மிதித்து அதை அடக்கினார். இதையடுத்து சிவனை பிடித்து இருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது.

    கபாலத்தை அடக்கிய பிறகும், அங்காளம்மனின் கோபம் தணியவில்லை. அவளது கோபத்தை தணிக்க தேவர்கள் அனைவரும் தேர்த் திருவிழா நடத்த முடிவு செய்தனர். தேவர்களும், முனிவர்களும் அந்த ரதத்துக்கு சக்கரமாகவும், அச்சாணியாகவும், மாடங்களாகவும், மரப்பலகை களாகவும், சிம்மாசன மேடையாகவும் மாறி நின்றனர். அங்காள பரமேஸ்வரி கோபம் தணிந்து அந்த தேரில் ஏறி அமர்ந்து வீதி வலம் வந்தாள். தேரோட்டம் முடிந்ததும் தேவர்களும், முனிவர்களும் தேரைவிட்டு அகன்று சுயரூபம் பெற்று மறைந்தனர் என்பது கோவில் வரலாறு.

    இந்த ஆலயம் அமாவாசைக்கு பிரசித்தி பெற்றது. அந்த நாட்களில் ஆலயத்தில் குறி சொல்லப்படும். நினைத்த காரியம் நடக்குமா?, திருமண யோகம் எப்போது?, குழந்தை பாக்கியம் கிடைக்குமா?, வேலைவாய்ப்புகள் அமையுமா? உள்ளிட்ட பக்தர்களின் பல்வேறு கேள்விகளுக்கு, இங்கே அருள்வந்து ஆடுபவர்கள் குறி சொல்வார்கள். இதைக் கேட்பதற்காகவே இங்கே வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.

    இந்தக் கோவிலில் பேய் பிடித்தவர்களுக்கு பேய் விரட்டப்படுகிறது. பேய் பிடித்த பெண்கள் இந்த கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டு ஈரச் சேலையுடன் கோவிலுக்கு வருகிறார்கள். கோவில் பூசாரி அந்த பெண்ணின் தலையில் கபால தீர்த்தத்தை தெளிப்பார். பின்னர் கற்பூரத்தை கொளுத்தி, அதை பேய் பிடித்தவர்களிடம் கொடுப்பார். அதை வாயில் போட்டுக்கொண்ட சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்டவரின் உடலும், மனதும் அமைதியாகிவிடும்.

    அமைவிடம்

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்குதிசையில் 20 கிலோமீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு திசையில் 20 கிலோமீட்டர் தொலைவிலும் மேல்மலையனூர் திருத்தலம் உள்ளது.
    இங்கிருக்கும் பெருமாளை வழிபட்டால், திருப்பதி சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவேதான் இந்தத் தலம் சின்னத் திருப்பதி என்று பெயர் பெற்றுத் திகழ்கிறது.
    கொங்கு நாட்டில் உள்ள வைணவத் தலங்களில் புகழ் பெற்றது நைனாமலை வரதராஜ பெருமாள்கோவில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் காளப்ப நாயக்கன் பட்டிக்கு அருகில் உள்ள செங்குத்து வடிவிலான மலை மீது வாசம் செய்யும் பெருமாள் இப்பகுதியில் புகழ் பெற்றவர்.

    பார்ப்பதற்கு சாய்வாகத் தோன்றும் இம்மலையின் உயரம் 3 கிலோ மீட்டர். ஆனால் மிகவும் செங்குத்தான, குறைந்த அகலமே கொண்ட சுமார் 3,700 படிகள் உள்ளன. மற்றொரு சிறப்பம்சமாக மலையின் முகட்டில், உச்சி முழுவதையும் உள்ளடக்கி, கோவில் கட்டப்பட்டுள்ளது. மலை உச்சியில் உள்ள, 120 அடி உயரம் கொண்ட ஒரே பாறை மீது, இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இம்மலை மீது 108 தீர்த்தங்கள் இருந்தன. தற்போது கடும்பஞ்சத்திலும் என்றென்றும் வற்றாத அமையா தீர்த்தம், அரிவாள் பாழி, பெரிய பாழி என மூன்று தீர்த்தங்கள் மட்டும் உள்ளன.

    மலை முடியும் இடத்துக்குப் பத்துப் படிகள் கீழே நமக்கு அருள்தரும் வண்ணம் காட்சி தருகிறார் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை வணங்கிய பின்பு சில படிகள் ஏறினாலே இறைவனின் சந்நதி வந்துவிடும்.  பெருமாளின் சந்நதிக்கு எதிரே கொடிமரத்துக்கு அருகில் பெரிய திருவடி கருடாழ்வார் இறைவனைக் கைகூப்பித் தொழுதவராகக் காட்சிகொடுக்கிறார். கர்ப்பக் கிருகத்தின் உள்ளே ஶ்ரீ வரதராஜப் பெருமாள் பூதேவி, ஶ்ரீதேவியரோடு பக்தர்களுக்கு ஏற்படும் இன்னல்களை விரட்ட கையில் தண்டம் தரித்து தரிசனம் அளிக்கிறார். அவரை கண்குளிர தரிசித்து வழிபட நாம் படிகளேறி வந்த களைப்பு நீங்கிப் புத்துணர்வு பெறும் அதிசயம் நிகழும்.

    சந்நிதிக்கு வெளியே உள்ள மண்டபத்தில் உள்ள தூணில் நயன மகரிஷி தவம் செய்வதுபோன்ற சிற்பம் ஒன்றும் உள்ளது. பெருமாளை தரிசித்து வெளியே வர அன்னையின் சந்நிதி வரவேற்கிறது. குவலயவல்லித் தாயார் கருணையே உருவான திருவுருவம் கொண்டு அந்தச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். அதே போல தமிழ் மறை பாடிப் பெருமாளைச் சேவித்த ஆண்டாளுக்கும் இங்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது. சுவாமி சந்நிதியை அடுத்த மகாமண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணர் சமேதராகவும், நவநீதகிருஷ்ணரும், ராதா, ருக்மணி சமேதராகக் காட்சி கொடுக்கும் ஶ்ரீ வேணுகோபாலரும் தனித் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர்.

    ஆலயத்துக்கு வெளியில் இருக்கும் கல்மண்டபமும் மிகப் பழைமையானது. மண்டபத்துத் தூண்களில் படுக்கை ஜடாமுடி சித்தர், பிராண தீபிகை சித்தர், குரு லிங்க சித்தர் போன்ற சித்த புருஷர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. இன்றளவும் இங்குச் சித்தர்கள் வந்து இறைவனை வழிபட்டுச் செல்வதாக நம்பப்படுகிறது. இந்த ஆலயத்து இறைவனைச் சூரியன் வழிபட்டு வரம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அதற்கேற்ப வருடத்தில் உத்ராயண புண்யகாலமான தை முதலான ஆனி மாதம் வரையிலான ஆறுமாதமும் சூரியனின் ஒளி மூலவரின் முகத்தில் படுவதுபோல் கோவிலின் அமைப்பு அமைந்துள்ளது. இதைக் காணும் பக்தர்களுக்குச் சூரிய நாராயணர், வரதராஜப் பெருமானை தன் கிரணங்களால் ஸ்பரிசித்து வழிபடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதேபோல  இந்திரனும் இங்கு இடி ரூபமாக வந்து இறைவனை வழிபடுவதாகவும் ஐதீகம்.

    நயன மகரிஷி இந்த மலையில் தவம் செய்து பெருமாளின் தரிசனம் பெற்ற தலம் ஆகையால் இது நைனாமலை என்று பெயர் பெற்றது என்றும், தெலுங்கு பேசும் நாயக்கர்கள் இந்தத் தலத்து இறைவனைத் தங்கள் தந்தையாகப் பாவித்த காரணத்தினால் நைனாமலை என்று பெயர் பெற்றதாகவும் இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இங்கிருக்கும் பெருமாளை வழிபட்டால், திருப்பதி சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவேதான் இந்தத் தலம் சின்னத் திருப்பதி என்று பெயர் பெற்றுத் திகழ்கிறது.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி உற்சவ திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. சர்வபாவங்களையும் நீக்கி நற்கதியும், நல்வாழ்வும் அருளும் திருத்தலங்களுள் ஒன்றுதான் நைனாமலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில். பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமைகளிலும், புதன்கிழமைகளிலும் இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்வது உகந்தது. குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமை மிகவும் விசேஷமானது. இந்த நாட்களில் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானோர் அலுப்பின்றிப் படியேறி இறைவனை வழிபட்டுப் பயனடைகின்றனர்.
    கிட்டத்தட்ட 600 ஆண்டுகால பழமை வாய்ந்த வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள வரலாற்று அற்புதங்களை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.
    வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் ஆனது விஜயநகர பேரரசின் கீழ் வேலூர் இருந்தபோது கட்டப்பட்ட திருகோவில் ஆகும். கிட்டத்தட்ட 600 ஆண்டுகால பழமை வாய்ந்தது இக்கோவில்.  இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை வேலூர்க்கோட்டை மட்டுமே ஆகும். இதன் எழிலார்ந்த அமைப்பு கண்ணையும் கருத்தையும் கவர்வதாக அமைந்துள்ளது.

    இத்தலத்து சிவன் பத்ம விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதியின் பின்புறம் திருப்பதி அமைப்பில் வேங்கடேசப்பெருமாள் காட்சி தருகிறார்.புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு மகாபிஷேகம் நடைபெறும்.

    சூரியன், சந்திரனை விழுங்கும் ராகு, கேது மற்றும் தங்க, வெள்ளி பல்லிகள் பிரகாரத்தில் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்களும், பல்லி தொடர்பான தோஷம் இருப்பவர்களும் சிவனை வணங்கி இவற்றையும் வணங்கிச் செல்கிறார்கள். ஆதிசங்கரர், பிரகாரத்தில் இருக்கிறார். சித்திரையில் இவருக்கு சங்கர ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இத்தலத்து விநாயகர் செல்வ விநாயகர் எனப்படுகிறார்.

    பிரம்மா, திருமால் இருவரின் அகந்தையை அடக்குவதற்காக சிவன், ஜோதி சொரூபனாக காட்சி தந்த நாள் கார்த்திகை. இந்நாளில் மும்மூர்த்திகளும் ஒன்றாக காட்சி தந்ததன் அடிப்படையில், இங்கு மும்மூர்த்திகளும் ஒரே பல்லக்கில் எழுந்தருளுகின்றனர்.

    அன்று மாலையில் ராஜகோபுரத்தில் தீபமேற்றி, மும்மூர்த்திகளுக்கும் விசேஷ அபிஷேகம் செய்து, பின்பு வீதியுலா செல்கின்றனர். இந்த ஒருநாளில் மட்டுமே மும்மூர்த்திகளையும் ஒரு சேர தரிசிக்க முடியும். கார்த்திகை கடைசி சோமவாரத்தன்று  சிவனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

    அம்பாள் அகிலாண்டேஸ்வரி சன்னதி எதிரில்,அணையா நவசக்தி ஜோதி தீபம் அமைந்துள்ளது. அம்பிகை தீபத்தின் வடிவில் நவசக்திகளாக அருளுகிறாள். வெள்ளிக்கிழமைகளில் இந்த விளக்கிற்கு மேளதாளத்துடன்,சுத்தமான நைவேத்யம் படைத்து விசேஷ பூஜை நடைபெறுகிறது. அம்பாள் சன்னதி முன்மண்டபத்தில் சரஸ்வதி, மகாலட்சுமியாக காட்சி தருகின்றனர்.

    மும்மூர்த்திகளைப் போல முப்பெரும் தேவியரையும் இங்கு தரிசிக்கலாம் என்பது மேலும் விசேஷம். இஙகுள்ள நந்தியின் முன்பு, பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற, தீபம் ஏற்றாத அகல்விளக்கை வைப்பது வித்தியாசமான பிரார்த்தனை.

    இவருக்கு மாட்டுப்பொங்கலன்று விசேஷ பூஜை உண்டு. ஜுரகண்டேஸ்வரர் ஆகிய சிவன் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். நோய் நீக்குபவராக அருளுவதால் ஜுரகண்டேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க, அவர்கள் அணிந்திருக்கும் திருமாங்கல்யத்தை காணிக்கையாக செலுத்தி வணங்கும் வழக்கமும் இக்கோவிலில் இருக்கிறது.

    இவரை வேண்டி அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணங்கள் செய்து கொள்கிறார்கள்.ஐப்பசி பௌர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகம், அம்பிகைக்கு காய்கறி, பழங்களால் அலங்கரிக்கும் சாகம்பரம் உற்சவமும் நடைபெறுகிறது. இவ்வேளையில் சிவன், அம்பிகையை தரிசித்தால் அன்னத்திற்கும், விளைபொருட்களுக்கும் குறையில்லாத நிலை ஏற்படும் என்பர்.

    சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி இத்தலத்தில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். பிற்காலத்தில் லிங்கம் இருந்த பகுதி வேலமரக் காடானது. லிங்கத்தை புற்று மூடிவிட்டது.பொம்மி என்னும் சிற்றரசர் இப்பகுதியை ஆண்டபோது, அவரது கனவில் தோன்றிய சிவன், புற்றால் மூடப்பட்டுள்ள லிங்கத்தை சுட்டிக்காட்டி கோவில் எழுப்பும்படி கூறினார்.

    பொம்மியும் பயபக்தியுடன் கோவில் எழுப்பினார். இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே சுவாமிக்கு ஜலகண்டேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. வேலூரில் காசி பிரகாரத்தில் கங்கை நதி, கிணறு வடிவில் இருக்கிறது. இதற்கு அருகில் சிவன்,கங்கா பாலாறு ஈஸ்வரர் என்ற பெயரில் காட்சி தருகிறார்.

    இவர் இந்த கிணற்றில் கிடைக்கப்பெற்ற மூர்த்தியாவார். கங்கை நதியே இங்கு பொங்கியதாகச் சொல்கிறார்கள். இந்த லிங்கம், சற்றே கூம்பு போல காட்சியளிக்கிறது. இந்த சிவனுக்கு பின்புறத்தில் பைரவர் இருக்கிறார்.

    இந்த கோவில் பராமரிப்பு பணிகளை தற்பொழுது தொல்பொருள் ஆராய்ச்சியாளர் செய்துவருகின்றனர்.இக்கோவிலின் விமானம் ஆகமவிதிப்படி செய்யப்பட்டுள்ளது . இந்த விமானமானது பத்ம விமானம் என்று அழைக்கபடுகிறது .

    மகுடேஸ்வரரின் திருக்கல்யாணத்தைக் காண்பதற்காக, படைப்புக் கடவுளான பிரம்மதேவனும், காக்கும் கடவுளான திருமாலும் இந்தத் திருத்தலத்திற்கு வந்ததாக தல வரலாறு சொல்கிறது.
    ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் புண்ணிய தலமாக கொடுமுடி திருத்தலம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் சிவன், பிரம்மா, திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டிருக்கும் ஒரே ஆலயமாக இது விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக இருப்பதாக ஐதீகம். அதுபோல இங்கு மலையின் முடியே சிவலிங்கமாக காட்சியளிப்பதால், இது ‘கொடுமுடி’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை ‘மகுடேஸ்வரர்’ என்று அழைக்கிறார்கள். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். மகுடேஸ்வரரின் திருக்கல்யாணத்தைக் காண்பதற்காக, படைப்புக் கடவுளான பிரம்மதேவனும், காக்கும் கடவுளான திருமாலும் இந்தத் திருத்தலத்திற்கு வந்ததாக தல வரலாறு சொல்கிறது.

    ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும், தங்களில் யார் பெரியவர்? என்ற போட்டி எழுந்தது. அவர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க மேரு மலையை கையாண்டனர். ஆதிசேஷன் மேரு மலையை சுற்றி வளைத்துக் கொள்ள, வாயு பகவான் தனது வேகத்தால் ஆதிசேஷனை விடுவிக்க முயற்சித்தார். இந்த போட்டியில் மேரு மலை சிறு சிறு துண்டுகளாகி, நாலா பக்கமும் சிதறியது. அவை ஒவ்வொன்றும் சிவலிங்கமாக மாறியது. அப்படி உருவானதே கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் என்று சொல்லப்படுகிறது.

    பிரம்மன் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டதால் ‘பிரம்மபுரி’ என்றும், திருமால் பூஜித்ததால் ‘அரிகரபுரம்’ என்றும், கருடன் இத்தல இறைவனை பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் ‘அமுதபுரி’ என்றும் இந்த தலத்துக்கு பல பெயர்கள் உள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 பேராலும் பாடப்பட்ட இந்த ஆலயம், தேவாரப் பாடல்கள் பெற்ற 274 சிவாலயங்களில், 210-வது திருத்தலமாகத் திகழ்கிறது.

    கோவிலின் முன்பு காவிரி ஆறு செல்கிறது. கொடுமுடியில் இருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்பி பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியபின் கோவிலுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. தோஷங்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள வன்னிமரம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிலர் இந்த மரம் அதையும் விட பழமையானது, இதன் வயதை கணக்கிட முடியவில்லை என்றும் சொல்கிறார்கள். கல்கோவில், அழகான சிற்பங்கள், அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளது.

    இந்த ஆலயத்தின் மூன்று முகம் கொண்ட பிரம்மதேவனை தரிசனம் செய்யலாம். வன்னி மரத்தின் அடியில் இவர் தரிசனம் தருகிறார். ஆதிசேஷனால் உருவான ஆலயம் என்பதால், இங்கு நாகர் வழிபாடு மிகவும் விசேஷம். இந்த ஆலயத்தைச் சுற்றிலும் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது தற்போதும் நடைபெற்று வருகிறது. வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக பக்தர்கள் இதுபோன்று செய்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் ராகு-கேதுவால் பாதிககப்பட்டவர்கள் வழிபாடு செய்தால், அந்த தோஷங்கள் விரைவில் நீங்கும். மேலும் திருமணத் தடை உள்ளவர்களும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். குழந்தைப் பேறு கிடைக்கவும் வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். நாக தோஷம் இருப்பவர்கள், வன்னி மரத்தடியில் கல்லால் செய்யப்பட்ட நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    இந்தக் கோவிலில் வேப்பமரமும், அரசமரமும் இணைந்துள்ள மரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார். இவருக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண வரமும், குழந்தை வரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    ஈரோட்டில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் கொடுமுடி உள்ளது. கோவிலின் அருகிலேயே ரெயில் நிலையம் அமைந்து உள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக உள்ளது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்தலத்தில் முருகப்பெருமான் தன் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருப்பதுடன் இங்கு வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் தந்தருள்கின்றார்.

    அமைவிடம் :

    திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து மும்பை செல்லும் ரயில்பாதை வழியில், அரக்கோணத்திற்கு வடக்கே 13 கிலோ மீட்டரிலும், சென்னையில் இருந்து வடமேற்கே 84 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருத்தணி. “தொண்டை நாடு” என்று அழைக்கப்படும் பகுதியில் திருத்தணி அமைந்திருப்பதாக தமிழ் நூல்கள் கூறுகின்றன.

    தொண்டை நாட்டின் தலைநகரமாகிய காஞ்சிபுரம் தெற்கிலும்; விரிஞ்சிபுரம் – வள்ளிமலை – சோளிங்கபுரம் ஆகியவை மேற்கிலும்; திருவாலங்காடு கிழக்கிலும்; திருக்காளத்தி – திருப்பதி வடக்கிலும் சூழ்ந்திருக்க, அவற்றிற்கு மத்தியில் நடுநாயகமாகத் திருத்தணிகைத் தலம் அமைந்துள்ளது.

    தணிகை :

    முருகப்பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் என்பதால் தணிகை எனப் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.

    தேவர்களின் அச்சம் தணிந்த இடம். முனிவர்கள் காம வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம். அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும், இதற்குத் தணிகை என்று பெயரமைந்ததாகவும் கூறப்படுகிறது.

    தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் (பொறை) என்பதும் ஒரு பொருளாதலின், “அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம், திருத்தணிகை” என்று கொள்ளுதலும் பொருந்தும்.

    திருத்தணிகை மலை :

    இத்தலத்தில், முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி வீற்றிருக்கின்றார். ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், கோயில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முருகன் எழுந்தருளி விளங்கும் மலையின் இருபுறங்களிலும், மலைத் தொடர்ச்சிகள் பரவிப் படர்ந்துள்ளன. வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிறமாக இருப்பதனால் “பச்சரிசி மலை” என்றும், தெற்கே உள்ள மலை கருநிறம் வாய்ந்திருப்பதனால் “பிண்ணாக்கு மலை” என்றும் கூறப்படுகின்றன.

    ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் மலையடிவாரம் உள்ளது. “சரவணப் பொய்கை” என வழங்கும் புகழ்மிக்க “குமார தீர்த்தம்” என்னும் பெரிய திருக்குளம், மலையடிவாரத்தில் உள்ளது. யாத்திரீகர்களும், பக்தர்களும் இதிலேயே பெரும்பாலும் நீராடுவது வழக்கம். இத்தீர்த்தத்தை சுற்றிப் பல மடங்கள் உள்ளன. அதனால் இப்பகுதிக்கு “மடம் கிராமம்” என்று பெயர் வழங்குகிறது. திருக்குளத்தின் தென்மேற்கு மூலையில், மலையடிவாரம் இருக்கின்றது.

    திருக்குளத்தின் கிழக்குக் கரையினின்று மலையைப் பார்த்தால், வளைவாக இடம்பெற்ற ஒரு மாலை போலவும், மூவுருவம் எடுத்த ஒரு பரம்பொருள் போலவும்; மூன்று மலைகள் விளங்கும். அவற்றின் மத்தியில் திருமுருகன் திருக்கோயில் நடுநாயகமாகச் சிறந்தோங்கி விளங்குவது மிகவும் அழகு நிறைந்த காட்சியாகும்.

    அருணகிரிநாதர் தனது பாடலில் “அழகுத் திருத்தணிமலை” என்று புகழ்ந்து போற்றியிருக்கின்றார். திருமுருகனுக்கு இணையான தெய்வங்கள் எதுவும் இல்லை என்பது போலவே, திருத்தணிகைக்குச் சமமான தலமும் வேறெந்த தலமும் இல்லை எனலாம்.

    தணிகைக்கோயிலின் தொன்மைச்சிறப்பு :

    திருத்தணிகை முருகன் திருக்கோயில், மிகவும் தொன்மை வாய்ந்தது. முருக பக்தரான அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றித் துதித்துள்ளார். அதனால் 600 ஆண்டுகளுக்கு முன்பே, இத்தலமும் கோயிலும் புகழோங்கித் திகழ்ந்திருந்தன என்பது திண்ணம்.

    தவிர, சுமார் 900 ஆண்டுகளுக்கும் முன்பே வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில் “மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சிபுரம் போலவும், மலைகளிலெல்லாம் சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே” என்று பாடியுள்ளார்.

    சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருப்புறம்பயம் தலத்துத் திருத்தாண்டகத்தில் “கல் மலிந்தோங்கும் கழுநீர்க் குன்றம்” என்று திருத்தணிகையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தேவேந்திரன் இங்கு முருகப் பெருமானை நீலோற்பலம் என்னும் கழுநீர் மலர்கொண்டு பூசித்தான் என்பது தலவரலாறு.

    தலச்சிறப்பு :

    சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த நக்கீரர் என்னும் நல்லிசைப் புலவர் பெருமான், முருகனைப் பற்றித் திருமுருகாற்றுப்படை என்னும் சிறந்த துதி நூலைப் பாடியிருக்கின்றார். அதன்கண் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்ச்சோலை என்னும் ஆறு திருத்தலங்களும், முருகனின் ஆறுபடை வீடுகள் என்று சிறப்பாகப் போற்றப்பெறும்.

    இவைகளுள் குன்றுதோறாடல் என்பது, முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத் தலங்கள் எல்லாவற்றையுமே குறிக்குமாயினும், திருத்தணிகை தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

    முருகப்பெருமான், தன் கிரியா சக்தியாகிய தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டாற்போல், திருத்தணிகையில் தன் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருந்தருள்கின்றார். திருத்தணிகையின் சிறப்பிற்கு இதுவே சிறந்த பெருங்காரணமாகும்.

    பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், கந்தப்ப தேசிகர், கச்சியப்பமுனிவர், கச்சியப்ப சிவாசாரியர், அருணகிரிநாதர் ஆகிய அருட்பெருஞ் சான்றோர்கள் பலரும், திருத்தணிகை முருகனைப் பெரிதும் புகழ்ந்துப் பாடியுள்ளனர்.

    வள்ளலார் பெற்ற அருள் :

    19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வடலூர் இராமலிங்க அடிகளார், திருத்தணி முருகப்பெருமானை நினைந்து உருகி அப்பெருமானையே ஞான குருவாகக் கொண்டார். வள்ளலார் இளம் வயதிலேயே கண்ணாடியில் திருத்தணி முருகப்பெருமானின் காட்சி கிடைக்கப் பெற்றவர். இதனால், பிரார்த்தனை மாலையில் திருத்தணி முருகனை போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.

    பல லட்சக்கணக்கான மக்கள், திருத்தணிகை முருகனைத் தம் குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு நலம் பெற்று வருகின்றனர்…
    இந்த மலையில் கோயிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது. கோட்டையின் வாயிலாக பாழடைந்த கல்மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
    பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை.

    பர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றால் மலைகளுக்கெல்லாம் மலை, மலைகளின் அரசன் என்று பொருள். பர்வதமலைக்கு நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை, என்ற வேறுபெயர்களும் உண்டு.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களைப்பற்றியும், அப்பகுதி மக்களைப்பற்றியும் குறிப்பிடும் ஒரே சங்க நூல் மலைபடுகடாம் ஆகும். பத்துப்பாட்டின் இறுதியாக அமைந்துள்ள மலைபடுகடாம் நன்னன்சேய் நன்னன் என்ற குறுநில மன்னனைப்பற்றி பெருங்கௌசிகனார் பாடியது ஆகும். இந்நூலில் குறிப்பிடப்படும் நவிரமலை என்பதே தற்போது பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. நவிரம் என்றால் மலை. மூங்கில் செழித்து வளரும் மலை எனப் பாடலில் குறிப்பிடப்படுகிறது. இந்நூலில் சிவனை காரியுண்டிக்கடவுள் என்று வழங்கப்படுகிறது.

    இம்மலைக்கோயிலுக்குச் செல்ல தென்மகாதேவமங்கலம் வழி, கடலாடிவழி என இருவழிகள் உள்ளன. எந்த வழியில் சென்றாலும் பாதிமலையில் இரண்டும் ஒன்றாக இணைந்துவிடுகின்றன. தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும்போது சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்து மலையடிவாரத்தை அடையலாம். இம்மலைக்குச் செல்வோர் வழியில் பச்சையம்மன் ஆலயத்தையும், சப்த முனிகளையும் வணங்கி, மலையடிவாரத்தில் உள்ள வீரபத்திர ஆலயத்தை வணங்கி மலையேறத்தொடங்குவர். மலைஏறும் வழி ஓரளவிற்கே வசதியான வழியாக அமைந்துள்ளது. பாதி மலையை அடைந்ததும் இங்கு கடலாடியிலிருந்து வரும் பாதையும் தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும் பாதையும் ஒன்று சேர்கின்றன. இங்கிருந்து மேல்நோக்கி செல்லும் பகுதி நெட்டாக காணப்படும் இதற்கு குமரி நெட்டு என்று பெயர்.

    இந்த இடத்தில் இயற்கையாய் அமைந்த சுனை (நீர் ஊற்று) உள்ளது, நீர் எடுப்பதற்கு கீழே செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து உள்ளது கடப்பாறை நெட்டு. இம்மலையின் சிறப்பம்சமாக விளங்குவதே இந்த கடப்பாறை நெட்டாகும். ஆழமான பள்ளத்தாக்கிற்கு மேலே அமைந்துள்ள பாறைப் பாதையைக் கடக்க இந்த கடப்பாறை நெட்டு வழியாக ஏறிச் செல்லவேண்டும். இந்தக் கடப்பாறை நெட்டை ஏறியவுடன் இதற்கு அப்பால் இரண்டு பெரிய பாறைகள் காணப்படுகின்றன.

    அதில் ஒன்றில் (மல்லிகார்ஜுனர்) சிவன் உடனுறை பிரமராம்பிகை கோயில் உள்ளது. இந்த கோயிலின் மூலஸ்தானத்தில் உள்ள இலிங்கம்,சிலைகளுக்கு பக்தர்களே நேரடியாக அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யலாம். மேலும் இக்கோயிலில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகனும் உள்ளார். இயற்கையான சூழலில் சுமார் 4560 அடி உயர மலையில் காணப்படும் இயற்கைக் காட்சிகளுக்காகவும், மூலிகைக் காற்றை சுவாசிக்கவுமே தற்போது அதிக அளவில் பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.

    இம்மலைக்கு வர வருடத்தின் அனைத்து நாட்களுமே உகந்த நாட்கள் என்றாலும் முழு நிலவன்று மலையேறுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மாலை வேளையில் மலையேறத்தொடங்கி இரவில் மலைக்கு வந்து இரவு முழுவதும் தங்கி மறுநாள் காலையில் மலையிலிருந்து இறங்கி விடுவது ஒரு வழக்கமாக இருந்துவருகிறது. மலையேறுபவர்கள் தங்களுக்கு தேவையான உணவு, நீர் போன்றவற்றை எடுத்துச் செல்வது வழக்கம். மற்றும் மலை பாதையில் வழி துணையாக நாய்கள் (பைரவர்) வருகிறது என்பது சிறப்பம்சமாகும். இந்த நாய்கள் இந்த மலையில் வாழும் சித்தர்கள் என்று கூறப்படுகிறார்கள்.

    இந்த மலையில் கோயிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது. கோட்டையின் வாயிலாக பாழடைந்த கல்மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது என்றும் சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. இவற்றில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்கள் உள்ளன. மழைநீரை சேமித்து வைக்கும்விதமாக சிறிய குளமும் அமைந்துள்ளது.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலுக்கு வந்து அன்னையின் திருமுகம் பார்த்து மனமுருகி வேண்டினால் பாவ விமோசனம் கிடைக்கும்.
    தேவி தரிசனம் பாவ விமோசனம் என்பார்கள். மனித வாழ்க்கையில் தெரிந்தும், தெரியாமலும் பாவங்கள் செய்து வருகிறோம். அதிலிருந்து விடுபட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலுக்கு வந்து அன்னையின் திருமுகம் பார்த்து மனமுருகி வேண்டினால் விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இந்த அன்னையின் திருத்தல வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. ராமாயண காலத்தில் சீதாதேவியை, ராவணன் சிறைபிடித்து சென்றான். சீதாதேவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ராமனுக்கு வானரங்கள் உதவின. இலங்கைக்கு செல்ல ராமபிரான் தன் வானரச் சேனையை அணிவகுத்து நிற்கச் செய்த இடம். குரங்குகள் அணிவகுத்து நின்றதால் இவ்வூர் ‘குரங்கணி’ என பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது.

    முத்துமாலை அம்மன் :

    ராவணன் சீதாதேவியை கடத்திச் சென்றபோது, சீதா தேவி ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையை கழற்றி வீசினாள். புஷ்பக விமானத்தில் இருந்து வீசப்பட்ட முத்து மாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரங்கணியில் விழுந்தது. தரையில் விழுந்த முத்துமாலை ஜோதியாக ஒளி வீசியது.

    அப்போது அந்த வழியாக வந்த பனையடியான் என்பவர், முத்து மாலையின் ஒளி வீச்சை காண முடியாமல் கண்கள் கூச, அருகில் கிடந்த மண் சட்டியை எடுத்து அந்த முத்துமாலையை மூடினார். பின்பு ஊர் மக்கள் கூடி முத்துமாலை கிடந்த இடத்தில் சீதா தேவியின் பெயரால் வழிபாடு நடத்தினர். முத்துமாலை கிடந்த இடமானதால் இங்கு சீதா தேவி தங்கி இருப்பதாக நினைத்து அதற்கு முத்துமாலை அம்மன் என பெயரிட்டனர்.

    செவிவழி செய்தியாக கூறப்பட்டு வரும் அதிசய சம்பவம் அம்மனின் மகிமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

    நவாப் ஆட்சி செய்த காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையை நேராக அமைக்க எண்ணினார். அதற்கு கோவிலின் சுற்றுச்சுவர் இடையூறாக இருப்பதாக நினைத்த அவர், அதிகாரி ஒருவரை அனுப்பி கோவில் சுற்றுச்சுவரை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி ஒரு அதிகாரி குதிரையில் வந்தார். அவருடைய செயலை அவ்வூரை சேர்ந்த நான்கு சகோதரர்கள் வம்சா வழியினர் தடுத்தனர். அப்போது அந்த அதிகாரி ‘இந்த அம்மனுக்கு சக்தி இருக்குமானால், நான் கூப்பிடுகிறேன், அது பதில் சப்தம் தருமா?’ என கேட்க, அதற்கு அவர்கள் ‘நிச்சயம் தரும்’ என்றனர்.

    ‘முத்துமாலை அம்மன், முத்துமாலை அம்மன்’ என 3 முறை கூப்பிட்டார் அந்த ஆங்கிலேய அதிகாரி. ‘என்ன?’ என்ற சப்தம் இடி போன்ற ஒலி கோவில் கருவறையில் இருந்து கேட்டது. சப்தத்தை கேட்ட அதிர்ச்சியில் அந்த அதிகாரி மயங்கி கீழே விழுந்தார். உடன் குதிரையும் மயங்கி விழுந்தது. கூடி இருந்தவர்கள் பயபக்தியுடன் நின்றார்கள். அம்மன் தீர்த்தம் தெளித்து எழுப்பியதும் அதிகாரிக்கும், குதிரைக்கும் சுய உணர்வு வந்தது. கோவிலை இடிக்காமல் விட்ட அதிகாரி 2 மண் குதிரைகள் செய்து கோவிலில் வைக்க உத்தரவிட்டார். அந்த குதிரைகளை இன்றும் கோவிலில் பெரிய சுவாமி சன்னிதியில் காணலாம்.

    பழங்காலத்தில் இத்திருக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடை திறக்கப்பட்டு மதியம் மற்றும் இரவு பூஜை மட்டும் நடந்து வந்தது. அப்போது அம்மனுடைய மண் ஓட்டு திருமேனிக்கு அபிஷேகம் மற்றும் நைவேத்தியங்கள் இல்லாமல் இருந்தது. இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதா தேவி உண்ணாமல் தவம் இருந்ததை நினைவு கூரும் வண்ணம் இவ்வாறு முன்னோர்கள் தீப, தூபம் மட்டும் காட்டி வழிபட்டு வந்தனர்.

    கோவிலில் 1957-ம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடந்த போது அம்மனின் முத்துமாலையை மூடி இருந்த ஒட்டு சீலை விலக்கப்பட்டு கல்லினால் ஆன திருமேனி சிலாசாசனம் செய்யப்பட்டது. அன்று முதல் தினமும் கோவில் நடை திறக்கப்பட்டு குட முழுக்காட்டு அபிஷேகம் மற்றும் நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு பகல், இரவு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    முத்துமாலையம்மன் சன்னிதியின் இடப்புறமும், வலப்புறமும் பரிவார மூர்த்திகளின் சன்னிதிகள் புடை சூழ அமைந்திருக்கின்றன. இதில் அம்மனுக்கு இடப்புறம் நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களின் கோபுரத்துடன் கூடிய சன்னிதி உள்ளது.

    சீதாதேவியை காணாமல் ராமரும், லட்சுமணனும் காட்டில் தேடி அலைந்தார்கள். அப்போது வெட்டுப்பட்டு கிடந்த ஜடாயு பறவை ராவணன் தான் சீதா தேவியை கடத்தி சென்றான் என கூறியது. அனுமனுடன் வானரப்படைகள் சீதா தேவியை தேடிச் சென்றபோது, ஒரு இடத்தில் ஏதோ மினுமினுப்பாக மிளிர்ந்தது. அனுமான் அதன் அருகே சென்று பார்த்தபோது அது சீதை தூக்கி எறிந்த முத்துமாலை என ராமர் கூறினார். அந்த முத்துமாலையை ராமன் கிழக்கே நின்று மேற்கு முகமாக பார்த்ததால் இங்கு நாராயணர் கோவில் மேற்கு முகமாக இருக்கிறது.

    முப்பிடாதி அம்மன், சப்த கன்னிகைகள், பார்வதி அம்மன், பிரம்ம சக்தி, மாரியம்மன், சந்தன மாரியம்மன், பைரவர், வீர பத்திரர் முதலியோருக்கு இங்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. மேலும் விநாயகர், காசிநாதர், விசாலாட்சி, நவக்கிரகங்கள் ஆகியோர் இங்கு அருள்பாலிக்க, மூலவராக முத்துமாலை அம்மன் கிழக்கு முகமாக அமர்ந்தபடி அருளாட்சி புரிந்து வருகிறாள்.

    திருவிழாக்கள் :
     
    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா, தைத் திருமாலை பூஜை விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். கோவிலின் முக்கியமான விழா ஆனி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை நடைபெறும். அப்போது முத்துமாலை அம்மனுக்கு சொக்கத் தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்படும்.

    ஆனி திருவிழாவிற்கு 15 நாட்களுக்கு முன்னால் திருக்கால் நாட்டு வைபவம் நடைபெறும். முத்துமாலையம்மன் சன்னிதியின் தென்புறம் முப்பிடாதி அம்மன் முன்னிலையில் அன்று மதியம் அம்மன் மற்றும் பரிவார மூர்த்தங்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தி கால் நடப்படும். அப்போது வானில் கருடன் வட்டமிடும் இந்த அதிசய காட்சி இன்றும் நடைபெற்று வரு கிறது.

    நோன்போ நோன்பு :

    ஆனி மாதம் விழாவையொட்டி திருக்கால் நடப்படும் அன்று இரவு அம்மன் கோவில் பணியாளர் ஒருவர் ஊருக்குள் செல்வார். அவர் சன்னிதியில் இருந்து புறப்பட்டு சென்று 15-ம் நாள் “அம்மன் கொடை நோன்போ, நோன்பு” என கூவி கொண்டு செல்வார். அந்த 15 நாட்கள் கோவிலில் பக்தர்கள் பக்தியுடன் விரதம் இருப்பர். விழாவிற்கு 8 நாட்கள் முன்பாக ஆண்கள் பெரிய சாமிக்கு கயிறு சுற்றி ஆடி நேர்த்திக்கடன் செலுத்துவர். பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து கோவிலை சுற்றி வருவர்.

    ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமைக்கு முன்னே திங்கட்கிழமை மாலையில் அம்மன் தங்கத்திருமேனி அலங்கார ஆபரணங்களுடன் எடுத்து சென்று அம்மன் திருநடை திறப்பு வைபவம் நடைபெறும். அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெறும். இரவு ஸ்ரீநாராயணர், சப்பரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன், அம்மன் கோட்டையை வலம் வந்து வீதி உலா வருவார். ஆனி திருவிழா முடிந்து 8-ம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். அன்று உற்சவர்கள் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வர்.

    ஆனி பெருந்திருவிழாவையொட்டி பக்கத்து கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டு வண்டிகளில் குடும்ப சகிதம் அம்மன் கோவிலுக்கு வந்து ஆடு வெட்டி பொங்கலிட்டு வழிபாடு செய்வர்.

    ஆற்றில் மிதந்து வந்த பெரியசாமி :

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில், அம்மனுக்கு தென்புறம் வடக்கு நோக்கி பெரியசாமி சன்னிதி உள்ளது. இந்த சன்னிதி அமைய தனிக்காரணம் உண்டு. கோவில் பூசாரி மற்றும் இவ்வூர் நான்கு சகோதரர்கள் கனவில் முத்துமாலை அம்மன் தோன்றினாள். கேரளாவில் இருந்து எனது காவல் வீரன் பெரியசாமி நாளை தாமிரபரணி வெள்ளப் பெருக்கில் சிலை வடிவில் மிதந்து வருகிறான். அவனை நல்ல முறையில் வரவேற்று எனது கோட்டைக்குள் எனக்கு வலது புறம் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அவனது திரு உருவை அமைத்து விடுங்கள் என அருளினாள். அம்மன் அருளாணையின்படி தாமிரபரணி வெள்ளத்தில் வந்த பெரியசாமியை வரவேற்று கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். பெரிய சாமி காவல் தெய்வமாக விளங்கி வருகிறார்.

    வியாதியை குணமாக்கும் சாம்பார்சாதம் :

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் வளாகத்தில் ஒரு வீடு உள்ளது. இதனை ‘கோவில் வீடு’ என்று அழைப்பர். இங்கு செவ்வாய்க்கிழமைதோறும் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருவார்கள். பெரியசாமிக்கு பூஜை முடிந்த பிறகு பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு கூடி இருப்பர். அவர்கள் மீது பூசாரி தீர்த்தத்தை தெளிப்பார். அன்று மதியம் சாம்பார் சாதம் தயார் செய்து, அதை பனை மர ஓலையில் செய்த பட்டையில் படைப்பார்கள். இவ்வாறு படைக்கப்பட்ட சாம்பார் சாதத்தை உடல் நலம் இல்லாதவர்கள் சாப்பிட்டால் உடற்பிணி நீங்கி குணமடைவதாக ஐதீகம். இந்த சாம்பார் சாதத்தை பெற இன்றும் செவ்வாய்க்கிழமைதோறும் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் கூடி இருப்பதை காணலாம்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    வழியும்-தூரமும் :

    தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் அமைந்து உள்ள தென்திருப்பேரை என்ற ஊரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்றதும் இக்கோவிலை அடையலாம்.
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ‘கோவில் நகரம்’ என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த நகரிலும், அதைச் சுற்றிலும் ஏராளமான கோவில்கள் உள்ளன. அவற்றில் பலவும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் திருத்தலங்களாக இருப்பது கூடுதல் சிறப்பு.
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ‘கோவில் நகரம்’ என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த நகரிலும், அதைச் சுற்றிலும் ஏராளமான கோவில்கள் உள்ளன. அவற்றில் பலவும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் திருத்தலங்களாக இருப்பது கூடுதல் சிறப்பு. அப்படிப்பட்ட சில ஆலயங்களைப் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்க்கலாம்.

    மன நோய் அகல..

    சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்து வழிபட்ட சிவலிங்கம் இருக்கும் திருத்தலம், திருவிடைமருதூர். இத்தல இறைவன் மகாலிங்கம் என்று அைழக்கப்படுகிறார். இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு, மன நோய் அகலும். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து வழிபட்டால் அதற்கான தீர்வு கிடைக்கும். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது, இத் திருத்தலம்.
    புற்றுநோய் தீர

    கும்பகோணம் அருகே உள்ளது திருந்துதேவன்குடி. இங்கு கற்கடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது இந்திரனால் வழிபடப்பட்ட ஆலயம் ஆகும். இத்தல இறைவியின் திருநாமம் ‘அருமருந்து அம்மை’ என்பதாகும். இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், வேண்டுவோர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான நிவாரணி. அதிலும் குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக இது கருதப்படுகிறது.

    கடன் தொல்லை நீங்க..

    கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது, திருச்சேறை. இங்கு ‘ரிண விமோச்சனர்’ என்ற நாமத்துடன் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டால், அனைத்து விதமான கடன் தொல்லைகளும் நீங்கிவிடும். இறைவனை வழிபடுவதோடு, இத்தல மகாலட்சுமியையும், ஜேஷ்டா தேவியையும், பைர வரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.

    வழக்குகளில் இருந்து விடுபட..

    திருபுவனத்தில் உள்ள சரபேஸ்வரரை வணங்கி வருவது சிறப்பான ஒன்று. இவர் அனைத்து சங்கடங்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டவர். இந்த இறைவன், சூலினி- பிரத்தியங்கரா என தன் இரண்டு தேவியர்களுடன் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். சரபரை 11 விளக்கேற்றி, 11 முறை சுற்றி வந்து, தொடர்ச்சியாக 11 வாரங்கள் வழிபாடு செய்தால் வழக்குகள் சாதகமாகும். சுகமான வாழ்வு அமையும்.

    பிரிந்த தம்பதியர் ஒன்று சேர..

    கும்பகோணத்தை அடுத்துள்ளது ஸ்ரீவாஞ்சியம். காசிக்கு சென்றால் பாவமும் வளரும், புண்ணியமும் வளரும். ஆனால் இந்த ஸ்ரீவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளரும். அவ்வளவு சிறப்புக்குரியது இந்தத் திருத்தலம். இந்த ஆலயத்தில் ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரு கிறார்கள். ஏழரைச்சனி, அஷ்டமச் சனி மற்றும் கண்டகச் சனிகளுக்கான பரிகாரத் தலமாகவும் இது திகழ்கிறது. இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்யதால் நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு- கேதுவை வழிபட்டு வந்தால், கால சர்ப்ப தோஷம் நீங்கும். இத்தலத்தில் ஓர் இரவு தங்கினாலே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும் என்கிறார்கள். இத்தல தீர்த்தமான குப்த கங்கையில் நீராடி, இறைவனையும், இறைவியையும், மகாலட்சுமியையும் வணங்கி வந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள் என்பது ஐதீகம்.
    திருச்சி மாவட்டத்தில் உள்ளது, ஊட்டத்தூர் திருத்தலம். 1000 ஆண்டுகளுக்கும் முந்தைய இந்தக் கோவில், பிரம்மதேவனால் வழிபாடு செய்யப்பட்டது என்று ஆலய வரலாறு சொல்கிறது.
    திருச்சி மாவட்டத்தில் உள்ளது, ஊட்டத்தூர் திருத்தலம். இங்கு அகிலாண்டேஸ்வரி உடனாய சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கும் முந்தைய இந்தக் கோவில், பிரம்மதேவனால் வழிபாடு செய்யப்பட்டது என்று ஆலய வரலாறு சொல்கிறது. திருச்சியில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பாடலூர். இங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் சென்றால், ஊட்டத்தூரை அடையலாம். இந்த ஆலயத்தின் சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.

    பிரம்மன் வழிபட்ட தலம்

    ஒரு முறை பிரம்மனுக்கு சாபம் உண்டானது. அந்த சாபம் நீங்க, பிரம்மதேவன் இந்தத் திருத்தலத்திற்கு வந்தார். அவர் தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, சிவபெருமானை வழிபாடு செய்து, சாபம் நீங்கப் பெற்றார். பிரம்மனால் உருவாக்கப்பட்ட தீர்த்தம், ‘பிரம்ம தீ்ர்த்தம்’ என்றே அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் பல்வேறு வியாதிகள் நீங்குவதாக நம்பப்படுகிறது. மூலவர் முன்பாக உள்ள மகா மண்டபத்தின் எதிரில் இருக்கும் பிரம்ம தீர்த்தம், கோடை காலத்திலும், மழை இல்லாத காலத்திலும் வற்றாமல் இருப்பது இறைவனின் திருவருளால் நடக்கும் அற்புதமாகும். இந்த தீர்த்தமே இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நாள்தோறும் பயன்படுத்தப்படுகிறது.

    பஞ்சநதன நடராஜர்

    இந்த ஆலயத்தில் சுமாா் 8 அடி உயரம் கொண்ட நடராஜர் திருமேனி உள்ளது. கல்லால் ஆன மிகப்பெரிய நடராஜ உருவத்தில் இதுவும் ஒன்று. இவருக்கு தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை அபிஷேகம் நடைபெறும். ஆலிங்க நதனம், பஞ்ச நதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று ஐவகையான நதனக் கற்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் சிறப்பு வாய்ந்த பஞ்ச நதனக் கல்லால் ஆனது, இந்த நடராஜர் திருமேனி. சாபம் காரணமாக, தான் இழந்த இந்திரலோக பதவியை, இந்த நடராஜரை வழிபட்டுதான் இந்திரன் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. சிறுநீரக பாதிப்பை நீக்கும் சக்தி படைத்தவராக, இந்த பஞ்ச நதன நடராஜர் திகழ்கிறார். சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள், ஒரு கிலோ வெட்டி வேரை வாங்கி, அதை 48 துண்டுகளாக்கி, மாலையாக கோர்க்க வேண்டும். பின்னர் நடராஜருக்கு அர்ச்சனை செய்து, ஆலயத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் உள்ள நீரை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். தினமும் ஒரு துண்டு வெட்டி வேரை, பிரம்ம தீர்த்தத்தில் ஊறவைத்து, அதன் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) இவ்வாறு செய்வதால், சிறுநீரக நோய் பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ராஜராஜனால் அமைக்கப்பட்ட ஆலயம்

    ஊட்டத்தூரின் மேற்குப் பகுதியில் சோழேசுவரர் என்ற மேட்டுக்கோவிலை, ராஜராஜ சோழன் கட்டியிருந்தார். வில்வ வனத்தின் ஒரு பகுதியில் அமைந்த இந்த ஆலயத்திற்கு ராஜராஜ சோழன் அவ்வப்போது வருவதுண்டு. அதுபோன்ற நேரங்களில், மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி, முட்புதர் மற்றும் வளர்ந்த புற்களை அகற்றும் பணி நடைபெறும். அப்படி ஒருமுறை நடந்து கொண்டிருந்த பணியின் போது, ஓாிடத்ைத பணியாளா்கள் மண்வெட்டியால் வெட்ட, அதில் இருந்து ரத்தம் பீரிட்டது. தகவல் கிடைத்து அங்கு வந்த மன்னன், ரத்தம் வந்த இடத்தை சுற்றிலும் புதர்களை நீக்கச் சொன்னார். அந்த இடத்தில் பழமையான சிவலிங்கம் ஒன்று வெட்டுத் தழும்போடு காட்சியளித்தது. அந்த இடத்திலேயே கோவில் அமைக்க மன்னன் உத்தரவிட்டார். அதுவே ஊட்டத்தூர் அகிலாண்டேசுவரி உடனாய சுத்தரத் தினேசுவரர் திருக்கோவில் ஆகும். லிங்கத்தின் தலைப்பகுதியில் உள்ள வெட்டுக் காயத்தை இன்றும் நாம் காண முடியும்.

    நந்தியாறு நந்திகேசுவரர்

    சிவாலயங்களில் இருக்கும் நந்தி, பெரும்பாலும் மூலவரைப் பார்த்து மேற்கு நோக்கித்தான் காட்சியளிப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள நந்தியாறு நந்திகேசுவரர், கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். ஒரு முறை கங்கை, யமுனை, கோதாவரி, பிரம்மபுத்திரா உள்ளிட்ட நதிகளுக்குள், ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. அதனால் சிவபெருமான், நந்தியெம்பெருமானிடம் ‘அனைத்து நதிகளின் நீரையும் குடித்துப் பார்க்க வேண்டும். குடிக்க முடியாத நதிதான் பெரிய நதி’ என்று கூறினார். அதன்படி ஒவ்வொரு நதியின் நீரையும் குடித்த நந்தியெம்பெருமானால், கங்கை நதியின் நீரைக் குடிக்க முடியவில்லை. அந்த வகையில் கங்கையே பெரிய நதி என்று அறிவிக்கப்பட்டது.

    இறந்தவரின் அஸ்தியை இத்திருக்கோவிலுக்கு அருகிலுள்ள ஆற்றில் கரைத்த போது, அது புஷ்பமாக மாறியது. அதன்படி கங்கையை விடவும் சக்தி வாய்ந்தது நந்தியாறு என்று ஈசன் அருளினாா். இதன் காரணமாகவே நந்தியாறு செல்லும் கிழக்கு திசை நோக்கி நந்தியம்பெருமான் வீற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. நந்தியின் பெயரும் ‘நந்தியாறு நந்திகேஸ்வரர்’ என்றானது.
    ×