என் மலர்tooltip icon

    தென் ஆப்பிரிக்கா

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
    • ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

    ஜோகனஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது.

    இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என முழுமையாக கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவை ஓயிட்வாஷ் செய்தது.

    இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 49 ஒவரில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பவுமா 142 பந்தில் 114 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மார்கோ ஜான்சன் 32 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலிய அணி 113 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 8-வது விக்கெட்டுக்கு மார்னஸ் லபுசேன், ஆஷ்டன் அகார் ஜோடி சேர்ந்தனர்.

    தனி ஆளாகப் போராடிய லபுசேன் அரை சதம் பதிவு செய்தார். தொடர்ந்து ரன்கள் குவித்த இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், ஆஸ்திரேலியா 40.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. லபுசேன் 80 ரன்னும், ஆஷ்டன் அகார் 48 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, கோட்சி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 190 ரன்களை சேர்த்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 191 ரன்களை எடுத்து வென்றதுடன், டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது.

    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    முதலில் இரு அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது மற்றும் 2-வது டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்தது. ஹென்ட்ரிக்ஸ் 42 ரன்களும், டோனோவன் பெரேரா 48 ரன்களும் எடுத்தனர். கேப்டன் மார்க்ரம் அதிரடியாக ஆடி 41 ரன்கள் சேர்த்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் அபாட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து 191 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.

    டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி அதிரடியாக ஆடியது. பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்கவிட்டது. ஜோஷ் இங்கிலிஸ் 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் நிலைத்து ஆடி 48 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் அதிரடி காட்டி 37 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில் 17.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், ஆஸ்திரலிய அணி 3-0 என டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

    டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருதும், மிட்செல் மார்ஷ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

    • தென் ஆப்பிரிக்காவில் கொள்ளை கும்பல் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர்.
    • இதில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    ஜோகனஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை மறித்து பணத்தைக் கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மீது கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த 16 ஆண்கள், 2 பெண்கள் உள்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்தது. மார்க்ரம் 49 ரன்களில்ஆட்டமிழந்தார். பவுமா 35 ரன்களில் வெளியேறினார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார்.

    ஆஸ்திரேலியா சார்பில் அபாட், நாதன் எலீஸ் தலா 3 விக்கெட்டும், பெஹ்ரெண்டார்ப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. டிராவிஸ் ஹெட் 18 ரன்னில் அவுட்டானார். மேத்யூ ஷார்ட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 30 பந்தில் 66 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    மிட்செல் மார்ஷ் 39 பந்தில் 79 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

    இதன்மூலம் ஆஸ்திரேலியா 168 ரன்கள் எடுத்து வென்று டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. 3 விக்கெட் வீழ்த்திய அபாட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    • சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில் தீ விபத்தில் சிக்கியுள்ளனர்
    • ஐந்து மாடி கட்டிடத்தில் குடில்கள் அமைத்து தங்கியுள்ளனர்

    தென்ஆப்பிரிக்காவின் முக்கிய வணிக மாவட்டமாக கருதப்படுவது ஜோகன்னஸ்பர்க். தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான இங்குள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 64 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக கருகி உயிரிழந்துள்ளனர். 43 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் ஒரு காலத்தில் பரபரப்பாக செயல்பட்ட கட்டிடமாக இருந்து வந்துள்ளது. தற்போது குற்றச்செயல் புரியும் நபர்களின் கூடாரமாக மாறியுள்ளது. சட்டப்படி மற்றும் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் இங்கு தங்கியுள்ளனர். இவர்களை விரட்டியடித்து விட்டு குற்றச்செயல் புரிந்துவர்களும் தங்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில்தான் இந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி நிகழ்ந்துள்ளது.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். உறவினர்களை தேடிக்கொண்டிக்கும் நபர்களிடம், கட்டிடத்திற்குள் யாரும் உயிருடன் இருப்பதற்கு சாத்தியமில்லை என்ற அதிர்ச்சி தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஒவ்வொரு மாடியிலும் சிறுசிறு குடில் அமைத்து தங்கியியுள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் 15-க்கும் மேற்பட்ட குடில்களில் தங்யிருக்கிலாம் எனக் கூறப்படுகிறது.

    அல்பர்ட்ஸ் தெரு, டெல்வர்ஸ் கார்னரில் உள்ள அடுக்கமாடி கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியின் ஏராளமான கட்டிடங்களில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்கள், இன்னும் குடியுரிமை பெற முடியாத ஏராளமானோர் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது.
    • இந்தியா, சீன எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

    ஜோகனஸ்பர்க்:

    எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிகிறது.

    இதற்கிடையே, ஜோகன்ஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 15-வது மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கலந்து கொள்ள தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். மாநாட்டுக்கு இடையே இரு நாட்டு தலைவர்களும் சந்தித்தனர். அப்போது இருவரும் கைகுலுக்கி, சிறிது நேரம் தனியாக பேசினர்.

    இந்நிலையில், இரு நாட்டு தலைவர்கள் பேசியது குறித்து வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ரா கூறியதாவது:

    இந்தியாவின் லடாக்கில் படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது.

    எல்லை பிரச்சினையில் இருதரப்பிலும் அமைதியை நிலைநாட்டுவதன் முக்கியத்துவம்.

    இந்திய சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் என இருவரும் முடிவு செய்துள்ளனர் என தெரிவித்தார்.

    • முதல் உச்சி மாநாடு 2009ல் ரஷியாவில் நடைபெற்றது
    • 5 நாடுகளுக்கிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குதல் கடினம் என்கிறார் பேராசிரியர்

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பாக 2009-இல் பிரிக்ஸ் (BRICS) உருவானது.

    இதன் முதல் உச்சி மாநாடு 2009-இல் ரஷியாவில் நடைபெற்றது.

    2023 ஆகஸ்ட் 22-ம் தொடங்கி இன்றுடன் 3-வது மற்றும் நிறைவு நாளாக இந்த அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகென்னஸ்பர்க் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது.

    2024-இல் அர்ஜென்டினா, எகிப்து, எதியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்த கூட்டமைப்பில் இணைய போகின்றன.

    இது குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறும் போது,"கூட்டமைப்பின் விரிவாக்கம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம்," என தெரிவித்துள்ளார்.

    "இது ஒரு மிக பெரிய தருணம். வளர்ச்சிக்கான ஒரு உலக கட்டமைப்பை உருவாக்க எத்தியோப்பியா துணை நிற்கும்" என புதிதாக இணையவுள்ள எத்தியோப்பியாவின் பிரதமர் அபி அகமது கூறியுள்ளார்.

    சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான் மற்றும் எகிப்து ஆகியவை இணைவதன் மூலம் 'மெனா' எனப்படும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க (MENA) நாடுகளுக்கு ஒரு பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

    ரஷியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் அமெரிக்க உட்பட மேற்கத்திய நாடுகளால் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் நலனை கருத்தில் கொண்டு அவை இந்த விரிவாக்கத்திற்கு பெரிதும் முனைந்துள்ளன.

    "5 பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குதல் கடினம் என்பதால் இந்த கூட்டமைப்பு இதுவரை குறிப்பிட்டு சொல்லும் வகையில் எதையும் சாதிக்கவில்லை. எனவே இதன் விரிவாக்கம் மேலும் இப்பிரச்சனையை சிக்கலாக்கலாம். இருந்தாலும் அது இணைந்து கொள்ளும் நாடுகளின் கையில் உள்ளது" என தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழக பேராசிரியர் டேனி பிராட்லோ தெரிவித்துள்ளார்.

    • பிரிக்ஸ் அமைப்புகளின் வர்த்தக அமைப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • மேடையில் தலைவர்கள் நிற்கும் இடத்தை குறிக்க தரையில் இந்திய கொடியும், தென் ஆப்பிரிக்கா கொடியும் வைக்கப்பட்டிருந்தது.

    தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கி ஆகஸ்ட் 24ம் தேதி வரை நடக்கிறது. அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.

    இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தார். ஜோகனஸ்பர்க் நகரில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர், பிரிக்ஸ் அமைப்புகளின் வர்த்தக அமைப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, மேடையில் தலைவர்கள் நிற்கும் இடத்தை குறிக்க தரையில் இந்திய கொடியும், தென் ஆப்பிரிக்கா கொடியும் வைக்கப்பட்டிருந்தது.

    அப்போது, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, அவர்கள் நாட்டு கொடியை கையில் எடுத்து எதிரில் இருந்த நபரிடம் கொடுத்தார்.

    இதற்கிடையே, பிரதமர் மோடி மேடை ஏறியதும், தரையில் இருந்து இந்திய கொடியை எடுத்து எதிரில் இருந்த நபரிடம் கொடுக்காமல் தனது சட்டைப்பையிலேயே வைத்துக்கொண்டார். பிரதமர் மோடியின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • பிரிக்ஸ் வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
    • உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என தெரிவித்தார்.

    ஜோகனஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கி ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நடக்கிறது.

    அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தார்.

    ஜோகனஸ்பர்க் நகரில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்புகளின் வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

    உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.

    உலக வளர்ச்சிக்கான இன்ஜினாக இந்தியா விளங்கும்.

    இந்தியாவில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    யு.பி.ஐ. தொழில்நுட்பம் இன்று தெருவோர வியாபாரிகளால் பயன்படுத்தப்படுகிறது.

    சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற நாங்கள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.

    • தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
    • இதில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என தென் ஆப்பிரிக்கா அதிபர் அறிவித்துள்ளார்.

    கேப்டவுன்:

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் நாடுகளின் 15-வது உச்சி மாநாட்டை நடத்துவதற்குத் தென் ஆப்பிரிக்கா தயாராக உள்ளது என அதிபர் சிரில் ராமபோசா உறுதிப்படுத்தினார்.

    இதன்படி அடுத்த மாதம் பிரிக்ஸ் நாடுகளின் 15-வது உச்சி மாநாடு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

    கொரோனா பெருந்தொற்று நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து சர்வதேச கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்குப் பின் முதல் முறையாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்கக் கூடிய முதல் உச்சி மாநாடாக அது அமையும்.

    உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் படையெடுப்பு தீவிரமடைந்து உள்ள சூழலில், போரைக் கைவிட உலக நாடுகள் வலியுறுத்தின. சர்வதேச அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன. ஆனால், அதனை இரு நாடுகளும் கேட்கவில்லை. போர் நீடித்து வருகிறது.

    உக்ரைன் மீது போர் தொடுத்த புதினை கைது செய்யச் சர்வதேச குற்ற நீதிமன்றம் சார்பில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதில், தென் ஆப்பிரிக்காவும் ஓர் உறுப்பினராக உள்ளது. அதனால், புதின் அந்நாட்டில் இருக்கும்போது, அவரை கைது செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளார்.

    ரஷிய கூட்டமைப்பு சார்பில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ் பங்கேற்பார் என ரஷிய அதிபரின் செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.

    • ஐ.சி.சி. கூட்டம் தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்றது.
    • இதில் திருத்தப்பட்ட புதிய வருவாய் பகிர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    டர்பன்:

    ஐ.சி.சி சார்பில் இனிமேல் நடத்தப்படும் உலக கோப்பை உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு சரிசமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐ.சி.சி.தலைவர் கிரேக் பார்கிளே அறிவித்தார்.

    தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 2017-ம் ஆண்டில் இருந்து பெண்கள் கிரிக்கெட்டுக்கான பரிசுத்தொகையை அதிகரித்து வருவதாகவும், சரிசம பரிசுத்தொகை வழங்கும் இந்த முடிவு கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்தார்.

    பல்வேறு நாடுகளில் தற்போது டி20 வடிவிலான லீக் போட்டிகள் தொடங்கப்படுகின்றன. அமெரிக்காவில் எம்.எல்.சி. லீக் நடத்தப்படுகிறது. சவுதிஅரேபியாவிலும் டி20 கிரிக்கெட் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. டி20 லீக்கில் உள்ளூர் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆடும் லெவனில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என ஐ.சி.சி. தெளிவுபடுத்தியுள்ளது. திருத்தப்பட்ட புதிய வருவாய் பகிர்வுக்கும் ஐ.சி.சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • சமீப காலமாக தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    தென் ஆப்பிரிக்காவின் ஈஸ்ட் கேப் மாகாணம் குவானோ புஹ்லே நகரில் ஒரு வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஒரு பெண் உள்பட 6 பேர் பலியானார்கள். 4 பேர் காயம் அடைந்தனர்.

    பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சமீப காலமாக தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×