என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல், ஆகஸ்ட் ஹோம்கிரனை வீழ்த்தினார்.
    • மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தோல்வி அடைந்தார்.

    ஹில்லராட்:

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்-1 சுற்றில் இந்தியா, டென்மார்க் அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டிகள் டென்மார்க்கின் ஹில்லராட் நகரில் நடைபெற்று வருகின்றன.

    முதல் நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, உலகின் 9-ம் தரநிலை வீரரான ஹோல்கர் ரூனேவை சந்தித்தார். இதில் 2-6, 2-6 என்ற நேர்செட்களில் யுகி பாம்ப்ரி தோல்வியடைந்தார். இதன்மூலம் 0-1 என இந்தியா பின்தங்கியது.

    இந்நிலையில், நேற்று நடந்த மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல், டென்மார்க் வீரர் ஆகஸ்ட் ஹோம்கிரனுடன் மோதினார்.

    இந்த போட்டியின் முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இந்திய வீரர் கோட்டை விட்டார். இதையடுத்து சுதாரித்து கொண்ட சுமித் நாகல் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் உள்ளது.

    இந்தப் போட்டி 2 மணி நேரம் 27 நிமிடங்கள் நீடித்தது

    • அனுபவம் வாய்ந்த டென்மார்க் வீரரின் சர்வீஸ்களை சமாளிக்க, யூகி தீவிரமாக போராடினார்.
    • மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல், ஆகஸ்ட் ஹோம்கிரனுடன் விளையாடுகிறார்

    ஹில்லராட்:


    டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்-1 சுற்றில் இந்தியா - டென்மார்க் அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டிகள் டென்மார்க்கின் ஹில்லராட் நகரில் நடைபெற்று வருகின்றன. முதல் நாளான இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, உலகின் 9ம் தரநிலை வீரரான ஹோல்கர் ரூனேவை சந்தித்தார்.

    ஆரம்பம் முதலே ரூனேயின் கை ஓங்கியிருந்தது. அனுபவம் வாய்ந்த அவரது சர்வீஸ்களை சமாளிக்க, யூகி தீவிரமாக போராடினார். ஆனாலும் இப்போட்டியில் வெறும் 58 நிமிடங்களில் 2-6, 2-6 என்ற நேர்செட்களில் யுகி பாம்ப்ரி தோல்வியடைந்தார். இதன்மூலம் 0-1 என இந்தியா பின்தங்கி உள்ளது.

    மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல், ஆகஸ்ட் ஹோம்கிரனுடன் விளையாடுகிறார். இந்த போட்டியில் இந்திய வீரர் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதன்பின்னர் மாற்று ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த சுற்றில் இந்தியா தோல்வியடைந்தால் உலக குருப்-2 நிலைக்கு பின்தள்ளப்படும்.

    • கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடிய சானியா மிர்சா-போபண்ணா ஜோடி இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது.
    • போட்டியில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் நான் அதிக உணர்ச்சிகளை காட்டுவதில்லை.

    புதுடெல்லி:

    இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இம்மாதம் நடக்கும் ஒரு போட்டி தொடருக்கு பிறகு டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.

    சமீபத்தில் தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியாக ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடினார். அதில் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடிய சானியா மிர்சா-போபண்ணா ஜோடி இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது.

    போட்டிக்கு பிறகு பேசிய சானியா மிர்சா உணர்ச்சிவசமாக காணப்பட்டார். இந்த நிலையில் சானியா மிர்சா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஓய்வுக்கு பிறகு அடுத்த தலைமுறை வீரர்-வீராங்கனைகளுக்கு உதவ விரும்புகிறேன். இளம் வீரர்களை ஊக்கப்படுத்தவும், என்னால் முடிந்த உதவியை செய்யவும் விரும்புகிறேன்.

    போட்டியில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் நான் அதிக உணர்ச்சிகளை காட்டுவதில்லை. பொதுவாக என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொண்டிருக்கிறேன்.

    ஆனால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு பிறகு நான் பேசிய போது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தேன். கிராண்ட்சிலாம் போட்டியில் பங்கேற்பது இதுவே கடைசி முறை என்ற வகையில் அரை இறுதி போட்டியுடன் முடித்ததற்கு நன்றியுடன் இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்றைய போட்டியில் சிட்சிபாசை வீழ்த்தினால் ஜோகோவிச் 22-வது கிராண்ட்சிலாமை வென்று நடாலின் சாதனையை சமன் செய்தார்.
    • இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்ஸிபாசை 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் அபாரம்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 5-வது வரிசையில் உள்ள ஷபலென்கா (பெ லாரஸ்)-எலினா ரைபகினா (கஜகஸ்தான்) மோதினார்கள். இதில் ஷப லென்கா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று கிராண்ட்சிலாம் பட்டத்தை முதல் முறையாக கைப்பற்றினார்.

    ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி இன்று பிற்பகல் நடக்கிறது. இதில் 21 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 4-வது வரிசையில் உள்ளவருமான ஜோகோவிச் (செர்பியா)-தர வரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதினர்.

    டென்னிஸ் போட்டியில் அதிக கிராண்ட்சிலாம் வென்றவர் ரபெல் நடால். ஸ்பெயினைச் சேர்ந்த 36 வயதான அவர் 22 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஒபனில் அவர் 2-வது சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

    ஜோகோவிச் 21 கிராண்ட்சிலாமுடன் 2-வது இடத்திலும், ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 20 கிராண்ட்சிலாமுடன் 3-வது இடத்திலும் இருந்தனர்.

    இன்றைய போட்டியில் சிட்சிபாசை வீழ்த்தினால் ஜோகோவிச் 22-வது கிராண்ட்சிலாமை வென்று நடாலின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் ஆஸ்திரேலிய ஓபனை வெல்லும்போது மேலும் ஒரு சாதனையாக, அவர் 10 மற்றும் அதற்கு மேல் வென்ற 3வது நபர் என்ற பெருமையை பெறுவார் என்றும் கூறப்பட்டது.

    மேற்கூறியபடி, ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்ஸிபாசை 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் அபாரமாக வெற்றிப்பெற்றார்.

    • இந்தியா தரப்பில் பிரிஜ்னேஷ் குணேஸ்வரன், முகுந்த் சசிகுமார் ஆகியோர் தகுதி சுற்றில் விளையாடுவார்கள்.
    • போட்டிகள் காலை 10 மணிக்கு தொடங்கும். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

    தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் 100 ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.

    இந்த போட்டி சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது. 19ம் தேதி வரை சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் போட்டி நடக்கிறது.

    14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். முதல் நிலை வீரராக சீன தைபேயை சேர்ந்த சென்சியுன்சின் உள்ளார். அவருக்கு 21 வயது தான் ஆகிறது. பெனிஸ்டன் ரியான் ராயர் (இங்கிலாந்து), ஜேம்ஸ் டக்வொர்த் (ஆஸ்திரேலியா) லுகா நார்டி (இத்தாலி), டிமிடர் குஸ்மனோவ் (பல்கேரியா) செபாஸ்டியன் (ஆஸ்திரியா), மிக்கேல் குஷ்கின் (கஜகஸ்தான்) உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்தியா தரப்பில் பிரிஜ்னேஷ் குணேஸ்வரன், முகுந்த் சசிகுமார் ஆகியோர் தகுதி சுற்றில் விளையாடுவார்கள். 3 வைல்டு கார்டு, 6 தகுதி சுற்று வீரர்கள் உள்ளனர்.

    இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1.06 கோடியாகும். சாம்பியன் பட்டம் பெறுபவருக்கு ரூ.14.47 லட்சமும், 2-வது இடத்தை பிடிப்பவருக்கு ரூ.8½ லட்சமும் வழங்கப்படும். போட்டிகள் காலை 10 மணிக்கு தொடங்கும். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

    2019ல் கடைசியாக நடந்த சென்னை சேலஞ்சர் போட்டியில் பிரான்சை சேர்ந்த கோரென்டீன் பட்டம் பெற்றார். அடுத்த சேலஞ்சர் போட்டிகள் பெங்களூரு, புனேயில் நடைபெறும்.

    • மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, ரிபாகினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவுடன் மோதினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ரிபாகினா 6-4 என வென்றார். இதையடுத்து சுதாரித்துக் கொன சபலென்கா அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் அரையிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் ஜோகோவிச், அமெரிக்க வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டி ஒன்றில் செர்பிய வீரரான ஜோகோவிச், அமெரிக்க வீரரான டாமி பாலுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 7-5, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ரஷிய வீரர் காரென் கச்சனாவுடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 7-6, 6-4, என முதல் இரு செட்களை கைப்பற்றினார். 3வது செட்டை 7-6 என கச்சனாவ் கைப்பற்றினார். 4வது செட்டை சிட்சிபாஸ் 6-3 என கைப்பற்றி  இறுதிக்கு முன்னேறினார்.

    • சானியா மிர்சா, அடுத்த மாதத்துடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
    • தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி நடந்தது.

    இதில் இந்தியாவின் சானியா மிர்சா-போபண்ணா ஜோடி பிரேசிலின் லூசா ஸ்டெபானி-ரபெல் மேட்டோஸ் ஜோடியுடன் மோதியது. இதில் சானியா மிர்சா-போபண்ணா ஜோடி 6-7 (2-7), 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தது. பிரேசில் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.


    சானியா மிர்சா, அடுத்த மாதத்துடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.


    தோல்விக்கு பிறகு சானியா மிர்சா கூறும் போது, எனது டென்னிஸ் வாழ்க்கை மெல்போர்னில் தொடங்கியது. எனது கிராண்ட்சிலாம் வாழ்க்கையை முடிக்க இதை விட ஒரு சிறந்த அரங்கை என்னால் நினைக்க முடியவில்லை என்றார்.

    அப்போது சானியா மிர்சா உணர்ச்சி வசத்தில் கண் கலங்கினார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. இதில் சிட்சிபாஸ் (கிரீஸ்)-கரன் கச்சனோவ் (ரஷியா), ஜோகோவிச் (செர்பியா)-டாமி பால் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடக்கும் இறுதி போட்டியில் சபலென்கா (பெலாரஸ்)-ரைபகினா (கஜகஸ்தான்) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் ஜோகோவிச், ரூப்லவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டி ஒன்றில் செர்பிய வீரரான ஜோகோவிச்,ரஷிய வீரரான ஆண்ட்ரூ ரூப்லெவுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், அமெரிக்காவின் டாமி பால், அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதினார். இதில் டாமி பால் 7-6, 6-3 என முதல் இரு செட்களை கைப்பற்றினார். 3வது செட்டை 7-5 என ஷெல்டன் கைப்பற்றினார். 4வது செட்டை டாமி பால் 6-4 என கைப்பற்றி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • நடப்பு விம்பிள்டன் சாம்பியனான எலெனா ரைபகினா அரையிறுதியில் அசரென்காவை வென்றார்.
    • சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு விம்பிள்டன் சாம்பியனான கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா மோதினர்.

    இப்போட்டியில் 7-6 (4), 6-3 என்ற செட்கணக்கில் ரைபகினா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் ரைபகினா.

    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் நாட்டின் அரினா சபலெங்கா, 7-6, 6-2 என்ற செட்கணக்கில் போலந்தின் மட்கா லினட்டை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதில், எலெனா ரைபகினா, 5ம் தரநிலை வீராங்கனையான அரினா சபலெங்காவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். 

    • 3-வது தரவரிசையில் உள்ள நீல் ஸ்குப்ஸ்கி-டெசிரே க்ராவ்சிக் ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது.
    • போட்டிக்கு முன்னதாக இது தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் என்று சானியா அறிவித்திருந்தார்.

    ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதியில் 7-6, 6-7 (10-6) என்ற கணக்கில் 3-வது தரவரிசையில் உள்ள கிரேட் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி-அமெரிக்காவின் டெசிரே க்ராவ்சிக் ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது.

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சானியா இது தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மக்டா லினெட் (போலந்து) 6-3, 7-5 என்ற கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல் முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
    • ஷபலென்கா 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 5-வது வரிசையில் உள்ள அர்யனா ஷபலென்கா (பெலாரஸ்)-டோனா வெகிச் (குரோஷியா) மோதினார்கள்.

    இதில் ஷபலென்கா 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 49 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    24 வயதான ஷபலென்கா முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். இதற்கு முன்பு 4-வது சுற்று வரை தகுதி பெற்று இருந்தார். ஒட்டு மொத்த கிராண்ட்சிலாம் போட்டிகளில் 4-வது முறையாக அரை இறுதியில் விளையாடுகிறார். விம்பிள்டனில் 2021 ஆண்டும், அமெரிக்க ஓபனில் 2021, 2022-ம் ஆண்டும் அவர் அரை இறுதிக்கு தகுதி பெற்று இருந்தார்.

    மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 30-வது வரிசையில் உள்ள கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) அதிர்ச்சிகரமாக தோற்றார். அவர் 7-வது முறையாக கிராண்ட்சிலாம் கால் இறுதியில் தோற்றுள்ளார்.

    45-வது வரிசையில் இருக்கும் மக்டா லினெட் (போலந்து) 6-3, 7-5 என்ற கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல் முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

    அவர் அரை இறுதியில் ஷபலென்காவை சந்திக்கிறார்.

    ×