என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முதல் சுற்று போட்டி நடந்தது.
    • இதில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    துபாய்:

    துபாயில் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச், தகுதி நிலை வீரர் தாமஸ் மசாக்கை (செக் குடியரசு) எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-3 என முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டை மசாக் 6-3 என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஜோகோவிச் போராடி 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    இறுதியில், ஜோகோவிச் 6-3, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்,

    • டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்கள் முதலிடம் இருந்தவர் ஸ்டெபி கிராப்.
    • இவரது சாதனையை செர்பிய வீரர் ஜோகோவிச் முறியடித்துள்ளார்.

    நியூயார்க்:

    சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் போலந்தின் இகா ஸ்வியாடெக் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான பெலாரசின் சபலென்கா 2-வது இடத்திலும், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 3-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கிறார்கள். துபாய் ஓபன் டென்னிசில் ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்து மகுடம் சூடிய செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா 14 இடங்கள் எகிறி 16-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6,980 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 6,780 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், கிரீசின் சிட்சிபாஸ் 5,805 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் தொடருகிறார்கள். ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 2 இடம் சரிந்து 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    ஜோகோவிச் 'நம்பர் ஒன்' இடத்தில் பயணிப்பது இது 378-வது வாரமாகும். 2011-ம் ஆண்டு ஜூலையில் தனது 24-வது வயதில் முதல்முறையாக 'நம்பர் ஒன்' அரியணையில் அமர்ந்த அவர் அப்போது தொடர்ச்சியாக 122 வாரங்கள் முதலிடத்தில் இருந்தார். அதன் பிறகு சில சறுக்கலுக்கு பிறகு மீண்டும் முதலிடத்துக்கு வந்தார். இப்படியே ஏறுவதும் இறங்குவதுமாக உள்ள ஜோகோவிச் கடந்த மாதம் ஆஸ்திரேலிய ஓபனை வசப்படுத்தியதும், அல்காரசை பின்னுக்குத் தள்ளி மறுபடியும் முதலிடத்துக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், ஜோகோவிச் சர்வதேச டென்னிஸ் அரங்கில் ஒட்டுமொத்தத்தில் அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். இதற்கு முன் 22 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஜெர்மனி முன்னாள் வீராங்கனை ஸ்டெபிகிராப் 377 வாரங்கள் முதலிடத்தில் இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அச்சாதனையை ஜோகோவிச் தகர்த்துள்ளார்.

    இதுதொடர்பாக ஜோகோவிச் வெளியிட்ட வீடியோ பதிவில், அதிக வாரங்கள் முதலிடம் வகிக்கும் சாதனை வரிசையில் ஜாம்பவான்களில் ஒருவரான ஸ்டெபி கிராப்பை முந்தியுள்ளேன். இச்சாதனை உண்மையிலேயே மிக மிக பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது என தெரிவித்தார்.

    • மெத்வதேவ் 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தினார்
    • சில நேரங்களில் இருவரும் மோசமாக விளையாடியதாக மெத்வதேவ் கூறினார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ரஷியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    தோஹா நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேவை, மெத்வதேவ் எதிர்கொண்டார். போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய மெத்வதேவ், 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் எளிதில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

    இதுபற்றி மெத்வதேவ் கூறுகையில், 'இன்றைய போட்டி மிகவும் கடினமான போட்டியாக இருந்தது, ஏனெனில் காற்று அதிகம் வீசியது. இன்று கடுமையான போராட்டமாக இருந்தது. சில நேரங்களில் நாங்கள் இருவரும் மோசமாக விளையாடினோம், சில சமயங்களில் இருவரும் நன்றாக விளையாடினோம்' என்றார்.

    • போபண்ணா ஜோடி கத்தார் ஓபன் டென்னிஸ் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
    • போபண்ணாவுக்கு மொத்தத்தில் இது 23-வது இரட்டையர் பட்டமாக அமைந்தது.

    தோகா:

    கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்தது. இதில் நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி - கான்ஸ்டன் லெஸ்டினே (பிரான்ஸ்)- போடிக் வான் டி ஜான்ட்ஸ்கல்ப் (நெதர்லாந்து) இணையுடன் மோதியது.

    இதில் 6-7 (5-7), 6-4, 10-6 என்ற செட் கணக்கில் போராடி போபண்ணா ஜோடி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    இந்த ஆட்டம் 1 மணி 39 நிமிடங்கள் நீடித்தது. போபண்ணா- எப்டன் ஜோடியாக வென்ற முதல் ஏ.டி.பி. பட்டம் இதுவாகும். இவர்களுக்கு ரூ.60 லட்சம் பரிசாக கிடைத்தது.

    பெங்களூருவைச் சேர்ந்த 42 வயதான போபண்ணாவுக்கு மொத்தத்தில் இது 23-வது இரட்டையர் பட்டமாக அமைந்தது.

    • முதல் சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா- மேடிசன் கீஸ் ஜோடி தோல்வியடைந்து வெளியேறியது.
    • சானியா மிர்சா பெண்கள் 6 கிரண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார்.

    பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா (வயது 36) துபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்படி துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில், தோல்வியடைந்த நிலையில் அவர் ஓய்வு பெற்றார்.

    மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா- மேடிசன் கீஸ் ஜோடி, ரஷியாவின் வெரோனிகா-லியுத்மிளா ஜோடியிடம் 4-6, 0-6 என தோல்வியடைந்து வெளியேறியது.

    சானியா பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 கிரண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். 2015ல் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் பட்டங்களையும், 2016-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். கலப்பு இரட்டையர் பிரிவிலும் சானியா மிர்சா 3 கிராண்ட்சிலாம் பட்டங்களை பெற்றார். 2009-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2012-ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், 2014-ல் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார்.

    • துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் துபாயில் தொடங்குகிறது.
    • இந்தப் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெற சானியா முடிவு செய்துள்ளார்.

    துபாய்:

    துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் துபாயில் தொடங்குகிறது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்காவின் மேடிசன் கீசுடன் இணைந்து பங்கேற்கிறார்.


    இந்தப் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ள சானியா, இரட்டையர் முதல் சுற்றில் ரஷியாவின் குடெர்மிதோவா-சம்சோனோவா ஜோடியை இன்று எதிர்கொள்கிறார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி தோஹாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று, சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.

    • அர்ஜூன் காடே, கிளார்க் ஜோடி 6-0, 6-4 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றது
    • இரட்டையர் பிரிவில் அர்ஜூன் காடே 4வது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

    சென்னை:

    சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரில், ஆண்கள் இரட்டையர் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அர்ஜூன் காடே- பிரிட்டனின் ஜே கிளார்க் ஜோடி, செபஸ்தியான் (ஆஸ்திரியா)- நினோ செர்டாரசிக் (குரோசியா) ஜோடியை எதிர்கொணட்து. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-0, 6-4 என்ற நேர்செட்களில் அர்ஜூன் காடே, கிளார்க் ஜோடி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஏடிபி சேலஞ்சர் போட்டிகளில் அர்ஜூன் காடே இரட்டையர் பிரிவில் பெறும் 4வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் நிகோலஸ் மொரீனோ டி அல்போரனை எதிர்கொண்டார். இப்போட்டியில் சுமித் நாகல் 4-6, 2-6 என தோல்வியடைந்தார். வெற்றி பெற்ற டி அல்போரன் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேக் பர்செலுடன் மோதுகிறார்.

    • கடைசியாக அக்டோபர் 2021-ல் சிபியோ சேலஞ்சர் போட்டியில் சுமித் நாகல் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • சென்னை ஓபன் அரையிறுதியில் நிகோலஸ் மொரினோவை எதிர்கொள்ள உள்ளார்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றுவரும் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்திய வீரர் சுமித் நாகல் முன்னேறி உள்ளார். இன்று ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் பிரிட்டன் வீரர் ஜே கிளார்க் உடன் சுமித் நாகல் மோதினார். இதில், 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்ற சுமித் நாகல், அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    நாகல் கடைசியாக அக்டோபர் 2021-ல் சிபியோ சேலஞ்சர் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார். அதன்பின்னர் நவம்பர் மாதம் அவருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த அவர் தற்போது பார்முக்கு திரும்பி, 16 மாத இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக ஏடிபி சேலஞ்சர் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். அடுத்து சனிக்கிழமை நடைபெற உளள் அரையிறுதி ஆட்டத்தில் நிகோலஸ் மொரினோவை எதிர்கொள்ள உள்ளார்.

    • முதல் சுற்றில் முகுந்த் சசிகுமார் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ் பர்செலை எதிர்கொள்கிறார்.
    • சுமித் நாகல் இங்கிலாந்து வீரர் ரயான் பெனிஸ்டனை சந்திக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. ரூ.1.06 கோடி பரிசு தொகைக்கான இந்தப் போட்டி வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது.

    இதல் 20 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    நேற்று நடந்த தகுதி சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சுமித் நாகல், முகுந்த் சசிகுமார் ஆகியோர் வெற்றி பெற்று முதன்மை சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    சுமித் நாகல் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தென் கொரியாவின் ஜங்குகையும், முகுந்த் சசிகுமார் 4-6, 6-4, 6-4 என்ற கணக்கில் தைவானின் ஜேசன் ஜங்கையும் வீழ்த்தினார்கள்.

    மற்றொரு இந்திய வீரர் திக்விஜய் பிரதாப் சிங் 2-6, 6-7(2-7) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் மைக்கேப்பிடம் தோற்று முதன்மை சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.

    இன்று நடைபெறும் முதல் சுற்றில் முகுந்த் சசிகுமார் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ் பர்செலையும், சுமித் நாகல் இங்கிலாந்து வீரர் ரயான் பெனிஸ்டனையும் சந்திக்கிறார்கள்.

    இருவரும் முதல் சுற்றில் வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளனர். இருவரும் எதிர்த்து விளையாடும் வீரர்கள் தர வரிசையில் முன்னிலையில் இருப்பவர்கள். இதனால் கடுமையான சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்.

    'வைல்டு கார்டு' மூலம் விளையாட தகுதி பெற்ற மற்றொரு இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் இன்றைய முதல் சுற்றில் பல்கேரிய வீரர் டிமிட்டர் குஷ்ரம்கோவை எதிர் கொள்கிறார். டிமிட்டர் தர வரிசையில் 8-வது இடத்தில் உள்ளார்.

    நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தப் போட்டியில் தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் செங்சுன் (தைவான்), அலிபெக் கச்மாசோவ் (ரஷியா) உள்ளிட்ட வீரர்கள் வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

    • அபுதாபி ஓபன் டென்னிசில் இரட்டையர் பிரிவு முதல் சுற்று நேற்று நடந்தது.
    • இதில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    துபாய்:

    அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டி நேற்று நடந்தது.

    இதில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெத்தனி மெட்டக் சாண்டஸ் ஜோடி, பெல்ஜியத்தின் கிர்ஸ்டன் பிலிப்கன்ஸ், ஜெர்மனியின் லாரா செக்மண்ட் ஜோடியுடன் மோதியது.

    இதில் சானியா மிர்சா ஜோடி 3-6,4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    கடந்த வாரம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சானியா மிர்சா ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.

    • ரோகன் போபண்ணா-யுகி பாம்ப்ரி ஜோடி 6-2, 6-4 என நேர்செட்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
    • டென்மார்க் அணி 3-1 என்ற முன்னிலையுடன் இந்தியாவை வீழ்த்தியது.

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் உலக குரூப்-1 பிளே ஆப் போட்டியில் இந்திய அணி டென்மார்க் அணியுடன் விளையாடுகிறது. ஒற்றையர் பிரிவில் இந்தியா ஒரு ஆட்டத்திலும், டென்மார்க் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தது.

    இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரட்டையர் பிரிவு ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-யுகி பாம்ப்ரி ஜோடி 6-2, 6-4 என நேர்செட்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால் டென்மார்க் 2-1 என முன்னிலை பெற்றது.

    அதன்பின்னர் நடைபெற்ற மாற்று ஒற்றையர் ஆட்டத்திலும் டென்மார்க் வெற்றி வாகை சூடியது. இப்போட்டியில் இந்தியாவின் சுமித் நாகலை டென்மார்க்கின் ரூனே, 7-5, 6-3 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார். இதனால் டென்மார்க் அணி 3-1 என்ற முன்னிலையுடன் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய அணி, முதல் முறையாக உலக குரூப்-2 சுற்றுக்கு பின்தள்ளப்பட்டது.

    ×