என் மலர்
விளையாட்டு


சிட்னி:
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் 66 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 51 ரன் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. கான்பெராவில் நடந்த 3-வது போட்டியில் இந்தியா 13 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் கான்பெராவில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி சிட்னியில் இன்று பிற்பகல் நடக்கிறது.
இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஒருநாள் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்க 20 ஓவர் தொடரை வெல்வது அவசியமாகும்.
ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் ஆர்வத்தில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் 20 ஓவர் போட்டிக்கான அணியில் இருந்து விலகி உள்ளார்.
தன்னுடைய குடும்பத்தில் உள்ள சிலருக்கு உடல்நலம் சரி இல்லாமல் இருப்பதால் அவர் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெறும் 20 ஓவர் போட்டியில் ஸ்டார்க் விளையாட மாட்டார். இது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாகும். அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என்பது உறுதியாக தெரியவில்லை.
வருகிற 17-ந் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட போட்டியிலும் ஸ்டார்க் இடம்பெறுவாரா? என்பது சந்தேகமே.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் கூறும் போது,’உலகில் குடும்பத்தை விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. இதற்கு ஸ்டார்க்கும விதிவிலக்கு இல்லை. அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக் கோளாறு இருப்பதால் ஸ்டார்க்கை இந்த நேரத்தில் விடுவிக்கிறோம் என்றார்.
புதுடெல்லி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் ஜடேஜாவுக்கு பதிலாக யசுவேந்திர சாகல் மாற்று வீரராக களம் இறங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த போட்டியில் ஜடேஜா பேட்டிங்கில் அசத்தினார். 20-வது ஓவரில் 2-வது பந்தில் அவரது ஹெல்மெட்டில் பந்து தாக்கியது. தலையில் பட்ட காயத்தால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறி அவருக்கு பதிலாக சுழற்பந்து வீரர் சாகல் பந்து வீச்சில் களம் இறங்கினார்.
அவர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்தினார். இது வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. ஒரே இடத்துக்கு 2 பேர் ஆடினர். பேட்டிங்கின்போது ஜடேஜாவும், பந்துவீச்சின் போது சாகலும் விளையாடினர்.
மாற்று வீரர் விஷயத்தில் இந்திய அணி விதிமுறையை மீறியதாக முன்னாள் வீரரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி மாற்று வீரர் விதிமுறையை மீறிவிட்டதாகவே நான் கருதுகிறேன்.
ஜடேஜா ஹெல்மெட்டில் பந்து பட்டு காயம் ஏற்பட்டது என்றால், உடனடியாக இந்திய அணியின் உடல் தகுதி நிபுணர் நிதின் படேல் களத்துக்கு வந்திருக்க வேண்டும். ஜடேஜாவின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்று அவர் கேட்டிருக்க வேண்டும்.
ஆனால் ஜடேஜா தொடர்ந்து 4 பந்துகள் விளையாடி 9 ரன்கள் சேர்த்தார். ஓய்வு அறைக்கு சென்று தன்னால் விளையாட முடியாது என்று கூறி மாற்று வீரரை தேர்வு செய்யுமாறு சொன்னார். இதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
ஜடேஜாவுவின் காயத்தை உடல் தகுதி நிபுணர் பரிசோதிக்க சென்றிருக்க வேண்டும். அப்படி செய்யாததால் அவருக்கு உண்மையிலேயே தலையில் காயம் ஏற்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நல்ல நோக்கத்தோடுதான் மாற்று வீரர் விதிமுறை ஐ.சி.சி.யால் கொண்டுவரப்பட்டது. இந்திய அணி மாற்று வீரர் விதிமுறையை மீறி சாகலை களம் இறக்கியதா? என்று எனக்கு தெரியாது. ஆனால் இதுபோன்ற நேரங்களில் ஐ.சி.சி. சிறிது கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும்.
ஒரு வீரருக்கு மாற்று வீரர் என்ற திட்டமே இந்த சம்பவத்தால் கேள்விக் குள்ளாகி இருக்கிறது. விதிமுறைகளை தங்களுக்கு சாதகமாக வளைக்க எந்த அணியையும் ஐ.சி.சி. அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.






