என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் எந்தவொரு இளைஞருக்கும் உண்மையான முன்மாதிரி என்று லட்சுமண் புகழாரம் சூட்டியுள்ளார்.
    நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். கொரோனா காலத்திற்குப் பிறகு போட்டி தொடங்கியபின் கேன் வில்லியம்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார். 2-வது டெஸ்ட் போட்டியில் மனைவிக்கு குழந்தை பிறந்ததால் விளையாடவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த நிலையில், 3-வது டெஸ்டிலும் சதம் விளாசினார்.

    இந்த சீசனில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் சதம் கண்டுள்ளார். இந்த நிலையில் கேன் வில்லியம்சன் எந்தவொரு இளைஞருக்கும் உண்மையான முன்மாதிரி என்று இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் லட்சுமண் புகழாரம் சூட்டியுள்ளார்.

    மேலும், கேன் வில்லியம்சன் இதுகுறித்து கூறுகையில் ‘‘தொடர்ச்சியாக கேன் வில்லியம்சன் சதம் அடிப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஒர்க் எத்திக்ஸ் நம்பமுடியாத வகையில் உள்ளது. அவருடைய வெற்றிக்கு பின்னால், எந்தவொரு போட்டிக்கும் அவர் தயார் ஆகுவதுதான் முக்கிய காரணமாக உள்ளது. எந்தவொரு இளைஞருக்கும் உண்மையான முன்மாதிரியாக உள்ளார்’’ என்றார்.
    பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிஃப் பந்தை எதிர்கொள்ளும்போது பேட்ஸ்மேன்கள் கண்ணீர் விட்டதை நான் பார்த்தேன் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் முகமது ஆசிஃப். துல்லியமான வகையில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார். இதனால் அடுத்த மெக்ராத் என எதிர்பார்க்கப்பட்டார். அந்த நேரத்தில்தான் 2010-ல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டார்.

    இதனால் ஐந்தாண்டு தடைபெற்றார். அதன்பின் முகமது ஆசிஃபால் பாகிஸ்தான் தேசிய அணிக்கு அவரால் திரும்பமுடியவில்லை.

    இந்த நிலையில் முகமது ஆசிஃப் பந்தை எதிர்கொள்ளும்போது எதிரணி பேட்ஸ்மேன்கள் அழுதார்கள். அதை நான் பார்த்தேன் என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘முகமது ஆசிஃப் பந்து வீச்சை நான் பார்த்தவகையில், வாசிம் அக்ரமை விட சிறந்தவராக இருந்தார். அவரது பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளும்போது கண்ணீர் விட்டதை பார்த்தேன். லட்சுமண் கூட ஒருமுறை, முகமது ஆசிஃபின் பந்து வீச்சை எதிர்கொள்வது எப்படி எனச் சொன்னார். ஆசியா டெஸ்ட் சாம்பியன்சிப்பில் ஏபி டி வில்லியர்ஸ் அழ ஆரம்பித்தார்.

    அவருக்குப்பின் தற்போது பும்ரா புத்திசாலியான பந்து வீச்சாளராக திகழ்கிறார். டெஸ்ட் போட்டியில் அவரது உடற்தகுதி குறித்து சந்தேகம் எழுப்பினர். நான் கூட அவரை நெருக்கமாக பார்க்கும்போது அப்படித்தான் தோன்றியது’’ என்றார்.

    முகமது ஆசிஃப் 23 டெஸ்ட் போட்டிகளில் 106 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.
    பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்தது.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 297 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. அசார் அலி 93 ரன்னும், கேப்டன் ரிஸ்வான் 61 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட்டும், சவுத்தி, போல்ட் தலா 2 விக்கெட்டும், ஹென்றி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து முதல் இன்னிங்சை ஆடியது. 71 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து அந்த அணி திணறியது.

    புளுன்டெல் 14 ரன்னில் அஸ்ரப் பந்திலும், டாம் லாதம் 33 ரன்னில் ‌ஷகீன்ஷா பந்திலும், டெய்லர் 12 ரன்னில் அப்பாஸ் பந்திலும் அவுட் ஆனார்கள்.

    4-வது விக்கெட்டான கேப்டன் வில்லியம்சன்-நிக்கோலஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். இதனால் அந்த அணியின் ரன் மளமளவென உயர்ந்தது.

    வில்லியம்சன் மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 140 பந்துகளில் 15 பவுண்டரியுடன், அவர் 100 ரன்னை தொட்டார். முதல் டெஸ்டிலும் வில்லியம்சன் சதம் அடித்து இருந்தார். 83-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 24-வது சதமாகும்.

    இதேபோல மறுமுனையில் இருந்த நிக்கோலஸ் அரை சதத்தைத் தொட்டார்.

    இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்திருந்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி, அபாஸ், அஸ்ரப் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    கேப்டன் பதவியில் ரஹானே செயல்படும் விதத்தை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான இயன் சேப்பல் பாராட்டி உள்ளார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் பகல்-இரவாக நடந்த முதல் டெஸ்டில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 36 ரன்னில் சுருண்டு படுதோல்வியை தழுவியது.

    முதல் டெஸ்ட் போட்டி முடிந்தபிறகு கேப்டன் விராட் கோலி நாடு திரும்பினார். அவரது மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால், இந்தியா வந்துவிட்டார். இதனால் ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

    அவரது தலைமையிலான இந்திய அணி மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பதிலடி கொடுத்தது.

    இந்த நிலையில் கேப்டன் பதவியில் ரஹானே செயல்படும் விதத்தை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான இயன் சேப்பல் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மெல்போர்ன் டெஸ்டில் கேப்டனாக அசத்திய ரஹானே இந்திய அணிக்கு வெற்றி தேடி தந்ததில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் அவர் 2017-ல் தர்மசாலாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டார்.

    அவர் இந்திய அணியை வழிநடத்த பிறந்தவர் என்பதை அறிந்து கொண்டேன். அந்த டெஸ்டில் வார்னர், சுமித் ஜோடி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது அறிமுக சுழற்பந்து வீரர் குல்தீப் யாதவை பந்துவீச அழைத்தார். இது அவரது துணிச்சலான முடிவு. இதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    இந்த 2 டெஸ்ட்களிலும் ஜடேஜாவின் பங்கு அதிகம் இருப்பதை கவனிக்க வேண்டும். அது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. தலைமை பண்புக்கே உரிய குணத்துடன் அணியை வழிநடத்தி செல்லும் துணிச்சல் மிக்கவர் ரஹானே.

    நெருக்கடியான நேரத்தில் மிகவும் அமைதியாக இருப்பார். சக வீரர்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளார். இவை இரண்டும் அவரிடம் உள்ள சிறந்த தலைமை பண்பாக கருதுகிறேன்.

    இவ்வாறு இயன் சேப்பல் கூறியுள்ளார்.

    சிட்னி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ரோகித் சர்மா, ஷுப்மன் கில், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி, ரிஷப் பண்ட் ஆகியோர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் 7ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இன்று மெல்போர்னில் இருந்து இரு அணி வீரர்களும் சிட்னி செல்கிறார்கள்.

    இதற்கிடையே, இந்திய அணியில் தனிமைப்படுத்தப்பட்ட 5 வீரர்கள் உள்ளிட்ட அனைத்து வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இதனால், வீரர்கள் 3-வது டெஸ்டில் பங்கேற்பதில் எந்த சிக்கலும் இல்லை.
    பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டின் இரண்டாவது நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது.
    கிறிஸ்ட்சர்ச்:

    பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அசார் அலி 93 ரன்னும், விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஃபாஹிம் அஷ்ரப் 48 ரன்னும், கோஹர் 34 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் கைல் ஜேமிசன் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டும், சவுத்தி, போல்ட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம், டாம் பிளெண்டல் களமிறங்கினர்.

    இருவரும் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 52 ரன்கள் எடுத்தது. பிளெண்டல் 16 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து டாம் லாதமும் 33 ரன்னில் வெளியேறினார்.

    உணவு இடைவேளையில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது. கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 45-வது லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை தோற்கடித்தது
    கோவா:

    11 அணிகள் இடையிலான 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் அறிமுக அணியான ஈஸ்ட் பெங்கால் 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை தோற்கடித்தது. 8-வது ஆட்டத்தில் ஆடிய ஈஸ்ட் பெங்கால் அணி சுவைத்த முதல் வெற்றி இதுவாகும்.

    இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத ஒடிசா அணிக்கு இது 6-வது தோல்வியாகும். இரவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றதுடன், புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஐதராபாத் எப்.சி.யை சந்திக்கிறது.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் சிட்னியில் தொடங்குகிறது. அதன்பின் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கப்பா என அழைக்கப்படும் பிரிஸ்பேன் மைதானத்தில் நடக்கிறது.
    இந்த மைதானத்தில் சுமார் 30 வருடத்திற்கு மேலாக எந்த அணியும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது கிடையாது. இந்தியாவும் இந்த மைதானத்தில் மிகவும் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை காரணம் காட்டி இந்திய அணி பிரிஸ்பேன் செல்ல விரும்பவில்லை என்ற செய்தி வெளியாகி வருகிறது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், இந்திய அணி பிரிஸ்பேன் செல்லாத வகையில் முயற்சி செய்து கொண்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிராட் ஹாடின் கூறுகையில் ‘‘கிரிக்கெட் பார்வையில் பார்க்கும்போது, இந்திய அணி ஏன் கப்பா செல்ல விரும்பனும்?. கப்பாவில் யாரும் வென்றதில்லை. ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது, ஆஷஸ் போட்டியை தவிர்த்து அங்கு யாரும் ஆஸ்திரேலியாவை எதிர்த்து வெற்றி பெற்றது கிடையாது.

    இந்திய அணி வீரர்களை பற்றி ஒரு விசயத்தை நினைக்க வேண்டியுள்ளது. அவர்கள் மிகமிக நீண்ட நாட்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்துள்ளனர். இதனால் அவர்கள் சற்று சோர்வு அடைந்திருக்கலாம்.

    குயின்ஸ்லாந்தில் வைரஸ் தொற்று அதிகரிக்கவில்லை என்றால், டெஸ்ட் போட்டியை மாற்ற முடியாது. ஏனென்றால், வீரர்கள் கோரன்டைனில்தான் உள்ளனர். நீங்கள் ஆஸ்திரேலியாவிற்கு வரும்போது, இங்கே என்ன நடந்து கொண்டிருந்தது என்பது தெளிவாக தெரிந்திருக்கும். இங்குள் கட்டுப்பாடு உங்களுக்கு தெரிந்திருக்கும். இது நடக்கும் என்றும் தெரிந்திருக்கும்.

    இந்திய அணியை போன்று ஆஸ்திரேலிய அணியும் நீண்ட நாட்கள் கோரன்டைனில் இருந்துள்ளனர். அவர் இதுபோன்று கேட்கவில்லை. என்னைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் கப்பா மைதானத்தில் விளையாடாமல் இருப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.
    செஞ்சூரியன் டெஸ்டில் இலங்கையை முதல் இன்னிங்சில் 157 ரன்னில் சுருட்டிய தென்ஆப்பிரிக்கா, முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்துள்ளது.
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் இன்று செஞ்சூரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க வீரர் குசால் பெரேராவை (60) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 8-வது வீரரான வனிந்து ஹசரங்கா 29 ரன்களும், 9-வது வீரர் சமீரா 22 ரன்களும் அடிக்க இலங்கை முதல் இன்னிங்சில் 157 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    தென்ஆப்பிரிக்கா சார்பில் அன்ரிச் நேர்ஜே 6 விக்கெட்டும், முல்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டீன் எல்கர், எய்டன் மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்கிராம் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் டீன் எல்கர் அதிரடியாக விளையாடினார். அடுத்து வந்த வான் டெர் டுஸ்சென் டீன் எல்கருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த விக்கெட்டை இலங்கை பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை.

    இதனால் தென்ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்துள்ளது. இன்னும் 9 ரன்களே பின்தங்கியுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் மிகப்பெரிய முன்னிலையைப் பெற வாய்ப்புள்ளது.

    டீன் எல்கர் 92 ரன்களுடனும், டுஸ்சென் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
    இன்ஸ்டாகிராமில் உலகிலேயே அதிக பாலோவர்ஸ் கொண்ட நபர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.
    கால்பந்து உலகில் இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படுபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனான இவர் மான்செஸ்டர் யுனெடெட், ரியல் மாட்ரிட் ஆகிய கிளப் அணிகளுக்காக நீண்ட காலம் விளையாடியுள்ளார்.

    தற்போது இத்தாலியின் யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்கள். இவர் சமூக வலைத்தளங்களில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.

    கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் எண்ணிக்கை 250 மில்லியனை கடந்துள்ளது. இதன் மூலம் 25 கோடி பாலோவர்ஸ் வைத்துள்ள ஒரே நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலியிடம், பிரதமர் மோடி டெலிபோன் மூலம் உடல்நலம் விசாரித்தார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரும், தற்போதைய பிசிசிஐ-யின் தலைவருமான சவுரவ் கங்குலி நேற்று திடீரென நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு இரண்டு இடங்களில் அடைப்பு இருப்பதாகவும், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்டதாகவும், அவரது உடல்நிலையில் ஆபத்து ஏதும் இல்லை எனவும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேரடியாக மருத்துவமனையில் சென்று கங்குலியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். கங்குலியை பார்த்து நலம் விசாரித்ததாகவும், அவர் தன்னிடம் பேசியதாகவும் மம்தா தெரிவித்தார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி டெலிபோன் மூலம் கங்குலியிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார். அப்போது விரைவாக மீண்டும் வரவேண்டும் என தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.
    ரோகித் சர்மா உள்பட ஐந்து பேர் மீது பாதுகாப்பு வளையத்தை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தாலும், சக வீரர்களுடன் இணைந்தே சிட்னி செல்ல இருக்கிறார்கள்.
    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. பயோ-பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் கொண்டு வரப்பட்டு கொரோனா தாக்காத வண்ணம் எச்சரிக்கையுடன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில்தான் ரோகித் சர்மா, ஷுப்மன் கில், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி, ரிஷப் பண்ட் ஆகியோர் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக புகார் எழுந்துள்ளது. முதற்கட்டமாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில் குற்றச்சாட்டை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. நாளை மெல்போர்னில் இருந்து இரு அணி வீரர்களும் சிட்னி செல்கிறார்கள்.

    இரண்டு நாட்கள் தீவிர பயிற்சிக்குப்பின் 7-ந்தேதி 3-வது டெஸ்டில் விளையாடுகிறார்கள். இந்திய அணியின் சக வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்களுடன் ரோகித் சர்மா உள்பட ஐந்து பேரும் செல்வார்களா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் ஐந்துபேரும் சக வீரர்களுடன் இணைந்தே சிட்னி செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மா, ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் 3-வது டெஸ்டில் பங்கேற்பதில் எந்த சிக்கலும் இருக்காது.
    ×