என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டிஎன்பிஎல் போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி மோத உள்ளது.
    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.

    இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 15-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    அந்த அணியில் ஹரி நிஷாந்த், அருண், மணிபாரதி, விவேக், விக்னேஷ், சுவாமி நாதன், சிலம்பரசன் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    சேலம் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை. அந்த அணி 2-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது.

    அந்த அணியில் அபிஷேக், கோபிநாத், விஜய்சங்கர், முருகன் அஸ்வின், ஜி.பெரியசாமி போன்ற வீரர்கள் உள்ளனர்.

    நேற்று நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் திருச்சி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 110 ரன் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் தினேஷ் 26 ரன் எடுத்தார். திருச்சி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டும், சரவணகுமார் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் விளையாடிய திருச்சி 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து வெற்றிபெற்றது. ராஜகோபால் 47 ரன்னும், ஆதித்ய கணேஷ் 43 ரன்னும் எடுத்தனர். திருச்சி அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.திருப்பூர் அணி 2-வது தோல்வியை சந்தித்தது.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பேட்மிட்டன் காலிறுதி தகுதிச் சுற்றில்  21-15, 21-13 என்ற செட் கணக்கில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து டென்மார்க்கின் மியா பிளிச்பெல்ட்டை வென்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

    இன்று இந்தியா வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அகனே யமகுச்சியை இடையேயான காலிறுதி ஆட்டம் நடைபெற்றது.

    இந்த போட்டியில் யமகுச்சியை 21-13, 22-20 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்து வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் ஒற்றையர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    பி.வி.சிந்து சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதி சுற்றில் சீனாவின் சென்யூபையை உடன் மோதுகிறார்.
    டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் தீபிகா குமாரியின் செயல்பாடும் மோசமாக இருந்தது.

    டோக்கியோ:

    32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    இதன் வில்வித்தை பந்தயத்தில் இந்தியா சார்பில் அதானு தாஸ் , பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய் ஆகிய 3 வீரர்கள், ஒரே ஒரு வீராங்கனையான தீபிகா குமாரி ஆகிய நான்கு பேர் பங்கேற்றனர்.

    இதன் ஆண்கள் அணிகள் பிரிவிலும், கலப்பு அணிகள் பிரிவிலும் இந்திய அணி ஏற்கனவே தோல்வி அடைந்தது. தனிநபர் பிரிவில் பிரவீன் ஜாதவும், தருண் தீப் ராயும் தோல்வி அடைந்தனர். இருவரும் முதல் சுற்றில் வென்று இரண்டாவது சுற்றில் தோற்று வாய்ப்பை இழந்தனர்.

    கணவன்-மனைவியான அதானு தாசும் , தீபிகா குமாரியும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    தீபிகா குமாரி இன்று காலை நடந்த கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் செனியா பெரோவாவை (ரஷிய ஒலிம்பிக் கமிட்டி) எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தீபிகா குமாரி 6-5 என்ற கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    முதல் செட்டை தீபிகா 28-25 என்ற கணக்கில் கைப்பற்றினார். செட்டை (3 முறை அம்பு எறிய வேண்டும்) வெல்பவர் 2 புள்ளி பெறுவார். சமநிலையில் முடிந்தால் தலா ஒரு புள்ளி கிடைக்கும். அதன்படி அவர் 2-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றார். 2-வது செட்டை பெரோவா 27-26 என்ற கணக்கில் வென்றார். இதனால் 2-2 என்ற சம நிலை ஏற்பட்டது.

    3-வது செட்டை தீபிகா குமாரி 28-27 என்ற கணக்கில் வென்றதால் 4-2 என்ற முன்னிலையை பெற்றார். 4-வது செட்டில் சமநிலை ( 26-26 ) ஏற்பட்டது. இதனால் அவர் 5-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.

    6-வது மற்றும் கடைசி செட்டை செனியா பெரோவா 28-25 என்ற கணக்கில் வென்றார். இதனால் 5-5 என்ற சம நிலை ஏற்பட்டு உருவாகி ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    எனவே ஆட்டத்தை நிர்ணயிக்க “சூட்-அவுட்” கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது இருவருக்கும் ஒரே ஒருமுறை அம்பு எறியும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பெரோவா இதில் 7 பாயிண்ட் பெற்றார். தீபிகா குமாரி மிகவும் சிறப்பாக செயல்பட்டு 10 பாயிண்டுகளை பெற்று வெற்றி பெற்றார். ஸ்கோர்: 28-25, 26-27, 28-27, 26-26, 25-28, 10-7.இந்தப் போட்டியில் அவர் 4 தடவை 10 பாயிண்டுகளை பெற்று சாதித்தார்.

    தீபிகா குமாரி கால் இறுதியில் தென் கொரியாவை சேர்ந்த ஆன்சானை சந்தித்தார். ஆன்சானின் குறிபார்த்து அம்பு எறிதலுக்கு முன்பு தீபிகா குமாரியால் சமாளிக்க முடியவில்லை. அவர் 3 செட்டையும் தோற்று போட்டியில் இருந்து வெளியேறினார். அதே நேரத்தில் தீபிகா குமாரியின் செயல்பாடும் கால் இறுதியில் மோசமாக இருந்தது.

    முதல் செட்டை 27-30 என்ற கணக்கிலும், 2-வது செட்டை 24-26 என்ற கணக்கிலும் 3-வது செட்டை 24-26 என்ற கணக்கிலும் அவர் இழந்தார். ஆன்சான் 6-0 என்ற கணக்கில் தீபிகா குமாரியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

    இலங்கை சென்றுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மேலும் இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    இலங்கை:

    ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது.

     முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாளை தொடரைப் போலவே டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றி விடும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. 

    இந்த நிலையில் 2-வது போட்டி நடைபெறும் நாளின் போது குர்ணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 2-வது போட்டி அடுத்த நாளுக்கு மாற்றி அமைக்கப்பட்டது. 

    மேலும் குர்ணால் பாண்ட்யாவுடன் தொடர்பில் இருந்த தீபக் சஹார், இஷான் கிஷன், மனிஸ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, சூர்யா குமார் யாதவ், பிரத்வி ஷா, யுஸ்வேந்திர சாஹல், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர். 

    இதனையடுத்து முக்கிய வீரர்கள் இன்றி விளையாடிய இந்திய அணி, அடுத்து 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது.

    சாஹல் - கவுதம்

     இந்நிலையில், குர்ணால் பாண்ட்யாவுடன் தொடர்பில் இருந்த 8 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    நடுவர்கள் தோல்வி என அறிவித்தது என்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்று குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் கூறியுள்ளார்.

    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பெண்களுக்கான 51 கிலோ எடைபிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மேரிகோம் போராடி தோல்வி அடைந்தார். அவர் கொலம்பியாவின் இன்கிரிட் வலென்சியாவிடம் 3-2 என்ற கணக்கில் வீழ்ந்தார்.

    கடைசி ரவுண்டில் இருவரும் சரமாரியாக குத்துகளை விட்டனர். ஆனால் நடுவர்களின் முடிவின்படி வலென்சியா வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நடுவர்களின் தீர்ப்பால் மேரிகோம் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, நடுவர்களின் தீர்ப்பு மோசமாக இருந்தது இதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்று கூறினார்.

    இந்த நிலையில் மேரி கோம் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    போட்டிக்கு சில நிமிடங்களுக்கு முன்பாக எனது உடை நிறத்தை மாற்ற அறிவுறுத்தப்பட்டேன். ஏன் உடை நிறத்தை மாற்ற வற்புறுத்தப்பட்டேன் என்பது குறித்து யாராவது விளக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    டோக்கியோ ஒலிம்பிக்கின் மகளிர் ஆக்கி போட்டியில் அயர்லாந்து அணியை 1-0 கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஆக்கி அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 1-5 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடமும், 2-வது போட்டியில் 0-2 என்ற கணக்கில் ஜெர்மனியிடமும், 3-வது ஆட்டத்தில்1-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடமும் தோற்றது.

    இந்திய மகளிர் ஆக்கி அணி 4-வது ஆட்டத்தில் அயர்லாந்தை இன்று எதிர் கொண்டது. இதில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் நவ்நீத் கவுர் கோல் அடித்தார்.

    இந்த பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி 12 புள்ளிகள் பெற்று கால்இறுதிக்கு முன்னேறிவிட்டன. இங்கிலாந்து 6 புள்ளிகளுடனும், அயர்லாந்து, இந்தியா தலா 3 புள்ளிகளுடனும் உள்ளன. தென் ஆப்பிரிக்கா 4 போட்டிகளிலும் தோற்று புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

    இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை நாளை எதிர்கொள்கிறது. இதில் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் கால் இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை பெற முடியும்.
    ஹாங்காங் ஜோடியை 2-0 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி, ஜப்பான் ஜோடி வெண்கல பதக்கத்தை உறுதி செய்தது.
    டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் இன்று மிக்ஸ்டு டபுள்ஸ் ஜோடிக்கான வெண்கல பதக்க போட்டி நடைபெற்றது. இதில் ஜப்பான் ஜோடி (யுடா வடானாபே- அரிசா ஹிகாஷினோ) ஹாங்காங்கின் சுன் மான் டாங்- சுயட் சி யிங்  ஜோடியை எதிர்கொண்டது.

    ஜப்பான் ஜோடி முதல் கேம்-ஐ  21-17 எனக் கைப்பற்றியது. 2-வது செட்டில் ஹாங்காங் ஜோடி கடும் நெருக்கடி கொடுத்தது. என்றாலும் ஜப்பான் ஜோடி 2-வது செட்டை 23-21 எனக்கைப்பற்றி வெண்கல பதக்கத்தை உறுதி செய்தது.
    சீன தைஃபேயின் நின்-சின் சென்-ஐ காலிறுதியில் 4:1 என வீழ்த்தி இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா.
    டோக்கியோ:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  கடந்த 23-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.

    கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த பிரம்மாண்ட விளையாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது.

    போட்டியின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. கடந்த 24-ந்தேதி பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். 26 வயதான மணிப்பூரை சேர்ந்த அவர் 49 கிலோ உடல் எடை பிரிவில் 202 கிலோ (ஸ்னாட்ச் 87+கிளீன் அண்ட் ஜெர்க் 115) தூக்கி 2-வது இடத்தை பிடித்தார்.

    21 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று மீராபாய் சாதித்தார்.  அதன்பிறகு கடந்த 5 நாட்களாக டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு எந்த பதக்கமும் கிடைக்காமல் இருந்தது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. குத்துச்சண்டை போட்டி மூலம் 2-வது பதக்கம் உறுதியாகி இருக்கிறது.

    பெண்களுக்கான வெல்டர் வெயிட் பிரிவில் (உடல் எடை 64 முதல் 69 கிலோ வரை) கால் இறுதி ஆட்டம் இன்று நடந்தது. இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் சீன தைபேயை சேர்ந்த நின்சின்சென்னை எதிர் கொண்டார்.

    கால்இறுதியில் சீன தைபே வீராங்கனையை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீராங்கனை லவ்லினா


    லவ்லினாவின் அபாரமான தாக்குதல் ஆட்டத்திற்கு சீன தைபே வீராங்கனையால் ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதியில் லவ்லினா 4-1 என்ற புள்ளி   கணக்கில் (30-27, 29-28, 28-29, 30-27, 30-27) என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

    குத்துச்சண்டை போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றாலே வெண்கலப் பதக்கம் கிடைத்துவிடும். அதன்படி அவர் தற்போது வரை வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.

    குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்கிறது.

    23 வயதான அசாமை  சேர்ந்த லவ்லினா தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே மிகவும் சிறப்பாக செயல்பட்டு அரை இறுதிக்கு முன்னேறி சாதித்து உள்ளார். அவர் கடந்த ஆண்டு கொரோனாவால் லேசாக பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் ஐரோப்பா சென்று அவரால் பயிற்சி பெற முடியவில்லை. அப்படி இருந்தும் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தது.

    லவ்லினா அரை இறுதியில் துருக்கியை சேர்ந்த பூசன்நாஸ் சுர்மெனிலியை சந்திக்கிறார். இந்த ஆட்டம் வருகிற 4-ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் லவ்லினா வெற்றி பெற்றால் வெள்ளி பதக்கம் உறுதி ஆகிவிடும். தோல்வி அடைந்தால் வெண்கலப் பதக்கம் கிடைக்கும்.

    குத்துசண்டை போட்டி யில் இன்று பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் (லைட் வெயிட் பிரிவு) 2-வது சுற்றில் தோல்வியை தழுவினார். அவர் 0-5 என்ற கணக்கில் தாய்லாந்தை சேர்ந்த சுதாபோர்ன் சீசன்டியிடம் தோற்றார்.

    ஏற்கனவே குத்துச்சண்டையில் மனீஷ்கவுசிக், விகாஸ் கிருஷ்ணன், ஆசிஸ் குமார், மேரிகோம் ஆகியோர் தோல்வியை தழுவி இருந்தனர். சதீஷ்குமார், பூஜா ராணி ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர். அமித் பங்கல் நேரடியாக 2-வது  சுற்றில் விளையாடுகிறார்.
    தாய்லாந்து வீராங்கனைக்கு எதிராக ஒருமுறை கூட ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் 0:5 என்ற கணக்கில் சிம்ரஞ்சித் கவுர் தோல்வியடைந்தார்.
    குத்துச்சண்டை போட்டியில் இன்று பெண்களுக்கான லைட்வெயிட் (57-60 கிலோ) பிரிவு சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இந்திய வீராங்கனை சிம்ரஞ்சித் கவுர் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தாய்லாந்தை சேர்ந்த சுடாபோர்ன் சீசோண்டீயை எதிர்கொண்டார்.

    தாய்லாந்து வீராங்கனை மூன்று சுற்றிலும் சிம்ரஞ்சித்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார்.

    இதனால் ஐந்து நடுவர்களிடமும் தாய்லாந்து வீராங்கனை சுடாபோர்ன் சீசோண்டீ 30-27, 30-27, 30-27, 30-27, 30-27 என புள்ளிகள் பெற்று 5:0 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை சிம்ரஞ்சித் கவுரை வீழ்த்தினார்.

    துப்பாக்கி சுடுதலில் முன்னதாக நடந்த பிரிசிசன் தகுதிச்சுற்றில் மானு பாகெர் 292-9X புள்ளிகளும், ராகி சர்னோபாட் 287-12 X புள்ளிகளும் பெற்றனர்.
    பெண்களுக்கான 25 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் மானு பாகெர், ராகி சர்னோபாட் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்தப் போட்டி பிரிசிசன், ரேபிட் ஆகிய தகுதிச்சுற்றுகள் மூலம் நடத்தப்படும். இரு பிரிவுகளின் தகுதிச்சுற்றில் அதிக புள்ளிகள் பெறுபவர்களில் முதல் 8 பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

    இன்று காலை ரேபிட் தகுதிச்சுற்று நடைபெற்றது. இதில் மானு பாகெர் 96, 97, 97 என 290 புள்ளிகள் பெற்றார். ராகி சர்னோபாட் 96, 94, 96 என 286 புள்ளிகள் பெற்றார்.

    ஒட்டுமொத்தமாக மானு பாகெர் 582-17x, சர்னோபாட் 573-23 X புள்ளிகள் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். 
    இந்திய தடகள வீரர் அவினாஷ் சப்லே தேசிய சாதனையை படைத்திருந்தாலும் அவர் இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் 3000 மீட்டருக்கான தடை தாண்டிய ஓட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய வீரர் அவினாஷ் சப்லே பந்தய தூரத்தை 8 நிமிடம் 18:12 விநாடிகளில் கடந்து 7ம் இடம் பிடித்தார்.

    முதல் 3 நபர்களே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
    பூடான், அமெரிக்கா மற்றும் ரஷ்ய வீராங்கனைகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.
    வில்வித்தை போட்டியில் இன்று ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி ரஷ்யாவின் பூடானின் செனியா பெரொவாவை எதிர்கொண்டார்.

    தீபிகா குமாரி முதல் செட்டை 28-25 என கைப்பற்றினார். ஆனால் 2-வதுசெட்டை 26-27 என இழந்தார். 3-வது செட்டை 28-27 எனக் கைப்பற்றினார். 4-வது செட் 26-26 என சமனில் முடிந்தது. 5-வது செட்டை 25-28 என இழந்தார்.

    இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஷூட் ஆப் பாயிண்ட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

    ஷூட் ஆப் பாயிண்ட் முறையில் தீபிகா குமாரி 10 புள்ளிகள் பெற்றார். செனியா பெரோவா 7 புள்ளிகள் பெற்றார். இதன்மூலம் தீபிகா குமாரி 6-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
    ×