என் மலர்
விளையாட்டு
புதுடெல்லி:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி கடந்த ஏப்ரல் 9-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.
29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் அதாவது மே 2-ந் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக ஐ.பி.எல். போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது.
எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஐ.பி.எல்.லின் 2-வது கட்ட போட்டிகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் அக்டோபர் 15-ந் தேதி வரை துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது.
செப்டம்பர் 19-ந் தேதி நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்று இருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ரிச்சர்ட்சன், மெரிடித் ஆகியோர் விளையாடவில்லை. அவர்கள் விலகி உள்ளனர்.
அவர்களுக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீரர் நாதன் எல்லிசை பஞ்சாப் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. பிப்ரவரி மாதம் நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க வில்லை. தற்போது நாதன் எல்லிசை எடுக்க 3 அணிகள் முயற்சி செய்தது. கடைசியில் பஞ்சாப்தான் வெற்றி பெற்றது.
26 வயதான நாதன் எல்லிஸ் தனது முதல் சர்வதேச 20 ஓவர் போட்டியிலேயே ஹாட்ரிக் சாதனை படைத்தார். வங்காள தேசத்திற்கு எதிராக கடந்த 6-ந் தேதி நடந்த போட்டியில் அவர் 3 பந்துகளில் 3 விக்கெட்டை வீழ்த்தி முத்திரை பதித்தார்.
மேலும் உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் 3 பேர் கொண்ட மாற்று வீரர்கள் பட்டியலில் அவரும் இடம்பெற்றுள்ளார். இதனால்தான் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்தில் அவருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளும்(133 டெஸ்ட்), ஒரு நாள் கிரிக்கெட்டில் 534 விக்கெட்டுகளும் (350 ஆட்டம்) வீழ்த்தி இருக்கிறார். இவ்விரு வடிவிலான கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய உலக சாதனையாளர் இவர் தான். 2011-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்த முரளிதரன் தற்போது ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக உள்ளார்.
49 வயதான முரளிதரன் தான் விளையாடிய காலத்தில் பல பேட்ஸ்மேன்களின் வயிற்றில் புளியை கரைத்தவர். ஆனாலும் அவரையும் இரு பேட்ஸ்மேன்கள் நடுங்க வைத்துள்ள தகவலை அவரே இப்போது வெளியிட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவரும், 100 சர்வதேச சதங்கள் விளாசிய ஒரே வீரருமான இந்திய சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கரை கண்டு கூட அவர் பயப்படவில்லையாம். தன்னை மிரள வைத்த பேட்ஸ்மேன்களின் விவரத்தை இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எனது காலக்கட்டத்தில் பிரையன் லாரா ( வெஸ்ட் இண்டீஸ்), வீரேந்திர ஷேவாக் (இந்தியா) ஆகியோருக்கு பந்து வீசுவது தான் மிகவும் கடினமாக இருந்தது. எனக்கு எதிராக நிறைய அபாயகரமான பேட்ஸ்மேன்கள் விளையாடி இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் கூட நான் எப்படி பந்து வீசுவேன் என்பதை கணிக்க முடியாமல் தடுமாறுவார். அவர் ஒரே ஒரு முறை மட்டும் எங்களுக்கு எதிராக 3-வது வரிசையில் இறங்கி 150 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் மற்ற எல்லோரையும் காட்டிலும் ஷேவாக்கும், லாராவும் தான் எனக்கு அதிகமாக குடைச்சல் கொடுத்தவர்கள் ஆவர். இருவரும் நான் எப்படி பந்து வீசுவேன் என்பதை புரிந்து செயல்படுவார்கள்.
ஷேவாக்குக்கு பந்து வீசும்போது நான் பயந்து இருக்கிறேன். ஏனெனில் அச்சமின்றி விளையாடக்கூடிய ஒரு ஆட்டக்காரர் ஷேவாக். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 மணி நேரம் களத்தில் நின்றாலும் கூட 150 ரன்கள் திரட்டி விடுவார். ஒரு நாள் முழுவதும் விளையாடினால் ஸ்கோர் போர்டில் அவரது பெயரில் 300 ரன்களை காட்டும். அன்றைய தினம் முதல் பந்தை சந்தித்தாலும் சரி, 98 அல்லது 99 ரன்னில் இருந்தாலும் சரி. தடுப்பாட்டத்தில் ஈடுபடும் எண்ணம் அவருக்கு இருக்காது. மற்றவர்கள் இதே சூழலில் இருந்தால் ஒன்று, இரண்டு ரன் வீதம் எடுத்து சதத்தை நிறைவு செய்ய நினைப்பார்கள்.
ஆனால் ஷேவாக் சதத்தை பற்றி கவலைப்படமாட்டார். அந்த நிலையிலும் பந்தை சிக்சருக்கு விரட்டவே முயற்சிப்பார். ஆக்ரோஷமாக விளையாடுவது அவருக்கு பிடிக்கும். கில்கிறிஸ்ட், ஜெயசூர்யா போன்று தனிநபராக வெற்றி தேடித்தரக்கூடிய திறமைசாலி. 2009-ம் ஆண்டு மும்பையில் நடந்த டெஸ்டில் நான் அவருக்கு எப்படி பந்து வீசினாலும் அடித்து தள்ளினார். அந்த டெஸ்டில் அவர் 293 ரன்கள் குவித்து கேட்ச் ஆனார்.
இதே போல் எல்லா திசையிலும் பந்தை விரட்டக்கூடியவர் பிரையன் லாரா. அவ்வளவு எளிதில் அவரை அவுட் ஆக்க முடியாது. அவர் எப்போது தவறு செய்வார் என காத்திருக்க வேண்டியது இருக்கும். ஒரு முறை கொழும்பில் நடந்த டெஸ்டில் அவர் இரட்டை சதம் அடித்தார். பந்து வீச்சுக்கு ஏற்ப தன்னை வெகு எளிதாக மாற்றிக்கொண்டு அருமையாக ஆடினார்.
சச்சின் தெண்டுல்கர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருக்கு எதிராக பந்து வீசியபோது நான் பயந்தது கிடையாது. ஏனெனில் அவர் எனது பந்து வீச்சை பெரிய அளவில் அடித்து நொறுக்கியது இல்லை. தெண்டுல்கரின் விக்கெட்டை சாய்ப்பது மிகவும் கடினம். எனது பந்து வீச்சுக்கு எதிராக விக்கெட்டை காப்பாற்றும் நோக்கில் விளையாடுவார். பந்து எப்படி வருகிறது என்பதை நன்றாக கவனித்து சாதுர்யமாக செயல்படுவார். இருப்பினும் எனது ஆப்-ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக தெண்டுல்கர் கொஞ்சம் பலவீனமாக ஆடுவதை பார்த்து இருக்கிறேன். இந்த வகை பந்து வீச்சில் அவரை பலமுறை அவுட் ஆக்கி இருக்கிறேன். எதுஎப்படி என்றாலும், ஷேவாக் அளவுக்கு அவர் என்னை காயப்படுத்தியதில்லை.
இவ்வாறு முரளிதரன் கூறினார்.

🎺🎺🎺 - #VIVOIPL 2021 is BACK and ready to hit your screens once again!
— IndianPremierLeague (@IPL) August 20, 2021
Time to find out how this blockbuster season concludes, 'coz #AsliPictureAbhiBaakiHai!
Starts Sep 19 | @StarSportsIndia & @DisneyPlusHSpic.twitter.com/4D8p7nxlJL

லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது. கடைசி நாள் வரை திரிலிங்காக நகர்ந்த இந்த டெஸ்டில் இரு அணி வீரர்கள் இடையே வாக்குவாதம், சீண்டல்களை அவ்வப்போது பார்க்க முடிந்தது. இதை சுட்டிகாட்டி இந்திய கேப்டன் விராட் கோலியை, இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மிகவும் இழிவாக பேசக்கூடிய ஒருவர் விராட் கோலி. 2012-ம் ஆண்டில் விளையாடி போது நானே மிரளும் அளவுக்கு அவர் என்னை நோக்கி அடுக்கடுக்காக வசைபாடினார். அதை ஒரு போதும் மறக்க முடியாது. அவரது இந்த செயலே அவர் எப்படிப்பட்டவர் என்பதை காட்டி விடும். சச்சின் தெண்டுல்கர், வில்லியம்சன், ஜோ ரூட் போன்ற தலைச்சிறந்த வீரர்கள் எல்லாம் களத்தில் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வார்கள். அதற்கு நேர்மாறானவர் கோலி’ என்று சாடியுள்ளார்.
காம்ப்டனின் பதிவை கண்ட இந்திய ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் பும்ராவை திட்டி வம்பு இழுத்தபோது எங்கு இருந்தீர்கள்? இந்த மோசமான நடத்தைக்கு உங்கள் ஊரில் என்ன பெயர்? தென்ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் தனது கடைசி டெஸ்டில் ஆடிய போது அவரை பட்லர் வேண்டுமென்றே கிண்டல் செய்தாரே? அப்போது எங்கு இருந்தீர்கள் என்று சகட்டு மேனிக்கு காம்ப்டனை வறுத்தெடுத்துள்ளனர்.






