என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- உண்மையில் மூலம் நட்சத்திரம் உன்னதமான நட்சத்திரம். ஒரு குடும்பத்திற்கு பலம் சேர்க்கும் நட்சத்திரம் ஆகும்.
- ஒரு மூலம் நட்சத்திரக்காரரை வேறு ஒரு நட்சத்திரக்காரர் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டால் அந்த நபர் வாழ்க்கையில் வெற்றியை தவிர வேறு எதையுமே சந்திக்க மாட்டார்.
ஜாதகத்தில் ஆணுக்கோ, பெண்ணுக்கோ மூலம் நட்சத்திரம் இருப்பதாக தெரிய வந்தால் பெரும்பாலானவர்கள் பதட்டம் அடையும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மூலம் நட்சத்திரம் என்றாலே அது ஆகாத நட்சத்திரம் என்ற ஒரு மாயை மக்கள் மனதில் மிக மிக ஆழமாக பதிந்து விட்டது. ஜோதிட உலகில் உள்ள எத்தனையோ மூட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்றுதான் என்று இதை சொல்ல வேண்டும்.
உண்மையில் மூலம் நட்சத்திரம் மிக மிக அருமையான நட்சத்திரம் ஆகும். மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் மூலம் நட்சத்திரம் 19-வது நட்சத்திரமாக வரையறுக்கப்பட்டுள்ளது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் மிக மிக சிறந்து விளங்குவார்கள்.
ஒருவரது ஜாதகத்தில் அனைத்து பாதங்களிலும் மூலம் நட்சத்திரம் இருந்தால் அவர்கள் கல்வியில் மிக மிக சிறந்து விளங்குவார்கள். இல்லறத்திலும் சரி, ஆன்மிகத்திலும் சரி அவர்கள் மிகவும் புகழ் பெற்றவர்களாக இருப்பார்கள். மூலம் நட்சத்திரம் மற்ற கிரக அமைப்புகளுடன் வலுவாக இருக்கும் பட்சத்தில் அவர் அசைக்க முடியாத இடத்தில் இருப்பார்.
பொதுவாகவே மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கும். ஆலய பணிகளுக்கு முன்நின்று உதவி செய்வார்கள். கம்பீரமான தோற்றம், யாரையும் கவர்ந்து இழுக்கும் வாக்கு தன்மை ஆகிய இரண்டும் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு அடிப்படையாக அமைந்து இருக்கும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழில் செய்தாலும் சரி அல்லது மற்றவர்களிடம் பணிபுரிந்தாலும் சரி அவர்களது திறமை தனித்துவம் கொண்ட தாக காணப்படும். தொழிலில் எதை தொட்டாலும் வெற்றி பெறுவார்கள். அதற்காக எந்த விலை கொடுக்கவும் தயங்க மாட்டார்கள்.
அதே சமயத்தில் அவர்களிடம் இரக்க குணமும் மிகுந்து இருக்கும். ஏழை-எளியவர்களுக்கு தாராளமாக உதவி செய்வார்கள். அதுபோல குடும்ப உறுப்பினர்களிடம் அளவு கடந்த பாசத்துடன் காணப்படுவார்கள். சுயமரியாதை மிகுந்த இவர்கள் அமைதியான வாழ்க்கை வாழவே விரும்புவார்கள்.
எவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் மூலம் நட்சத்திரம் என்றதும் ஆகாத நட்சத்திரம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லும் வழக்கம் மக்களிடையே காணப்படுகிறது. குறிப்பாக மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்தால் மாமனார் அல்லது மாமியாருக்கு ஆகாது என்று பொத்தாம் பொதுவாக சொல்லி விடுவது உண்டு.
ஆனால் இதில் எந்த உண்மையும் கிடையாது. எதனால் இத்தகைய பேச்சுவழக்கு நடைமுறைக்கு வந்தது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மூலம் நட்சத்திரத்தில் முதல் பாதம் நவாம்சத்தில் மேஷ ராசியில் இடம் பெறும். மேஷ ராசி என்பது சூரியன் உச்சம் அடையும் ராசியாகும். அதாவது ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு பிறகு சூரியன் என்பது அவரது மாமனாரை குறிக்கும்.
இத்தகைய நிலையில் உள்ள ஒரு பெண் ஒரு குடும்பத்துக்குள் செல்லும்போது அந்த வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு அந்த பெண்ணுக்கு தானாகவே வந்து விடும். அதற்கு காரணம் மூலம் நட்சத்திரம். மாமனார் உயிரை எடுத்து விட்டு இது வரும் என்று அர்த்தமல்ல. அந்த பெண்ணுக்கு உள்ள தனித்திறமையால் அது கிடைக்கும்.
இதுவரை நிர்வாகம் செய்து குடும்பத்தை கட்டிகாத்து வரும் மாமனாருக்கு புதிதாக பெண் நிர்வாக பொறுப்பு ஏற்பது பிடிக்கவே பிடிக்காது. இதைதான் ஜோதிடர்கள் மேலோட்டமாக சொல்வதாக நினைத்துக்கொண்டு மூலம் நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்று சொல்லி விடுவார்கள். இப்படி சொல்லி சொல்லிதான் மூலம் நட்சத்திரம் என்றால் ஏதோ பயங்கரமான நட்சத்திரம் என்று நினைக்கும் அளவுக்கு ஆகி விட்டது.

உண்மையில் மூலம் நட்சத்திரம் உன்னதமான நட்சத்திரம். ஒரு குடும்பத்திற்கு பலம் சேர்க்கும் நட்சத்திரம் ஆகும். ராம பக்தனான அனுமனின் நட்சத்திரம் மூலம்தான். அதனால்தான் அனுமனால் இலங்கை சென்று சீதையை மீட்க உதவிகள் செய்ய முடிந்தது.
ஒவ்வொரு நட்சத்திரமும் நமது உடல் அமைப்பில் ஒரு பகுதியை குறிக்கும். அந்த வகையில் மூலம் நட்சத்திரம் நமது மூலாதார பகுதியை குறிப்பதாகும். இந்த மூலாதாரம் என்பது நமது உடலில் உள்ள 7 சக்கரங்களில் முதன்மையானது. மூலாதார சக்கரம் முனைப்பாக வேலை செய்தால்தான் மற்ற 6 சக்கரங்களும் செயல்படும்.
மூலம் நட்சத்திரம் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள இந்த ஒரு உதாரணமே போதும். ஆனால் மூலம் நட்சத்திரம் என்பது கேது எனப்படும் நிழல் கிரகத்தின் கீழ் வருவதால் அதை தோஷமான நட்சத்திரம் என்ற பட்டியலில் சேர்த்து விட்டனர்.
அதாவது மூலம் 1, 2, 3 பாதம் என்றால் மாமனாருக்கு ஆகாதாம். கேட்டை 2, 3, 4 பாதமானால் கணவரின் மூத்த சகோதரருக்கு ஆகாதாம். விசாகம் 4-ம் பாதமானால் கணவரின் இளைய சகோதரருக்கு ஆகாதாம். ஆயில்யம் 2, 3, 4 பாதனால் மாமியாருக்கு தோஷம் என்றெல்லாம் சொல்லி வைத்து இருக்கிறார்கள்.
மூலம் நட்சத்திரத்தின் சிறப்பையும், மூலம் நட்சத்திரத்தை தொடர்புபடுத்தி சொல்லப்படும் பழமொழிகளின் உண்மையையும் உணர்ந்து புரிந்து கொண்டவர்கள் மூலம் நட்சத்திரத்தை ஒரு போதும் தவறாக சொல்ல மாட்டார்கள். புரியாதவர்கள்தான் மூலம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு வேண்டாம் என்று சொல்லும் மரபின் மயக்கத்தில் இப்போ தும் இருக்கிறார்கள். இதனால்தான் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஏராளமான வர்கள் உரிய காலத்தில் திருமணம் கைகூடாமல் கடுமையாக தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
ஒருவர் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து வைத்தால் அவர்களது வாழ்க்கை மற்றவர்களை விட சிறப்பானதாகவே இருக்கும். அதாவது ஒரு மூலம் நட்சத்திரக்காரரை வேறு ஒரு நட்சத்திரக்காரர் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டால் அந்த நபர் வாழ்க்கையில் வெற்றியை தவிர வேறு எதையுமே சந்திக்க மாட்டார்.
ஒரே நட்சத்திரத்தில் பிறந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் ஜாதக ரீதியாக திருமணம் செய்ய மாட்டார்கள். ஆனால் மூலம் நட்சத்திரத்தில் மட்டும்தான் இந்த நட்சத்திரம் கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தாராளமாக திருமணம் செய்யலாம் என்பார்கள்.
என்றாலும் சிலர், "ஆண் மூலம் அரசாளும். பெண் மூலம் நிர்மூலம்" என்ற பழமொழி எப்படி வந்தது என்று கேட்கக்கூடும். இதுவும் பேச்சு வழக்கில் தவறாக மாறி விட்ட ஒன்றுதான். "ஆனி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம்" என்பது தான் சரியானதாகும்.
அதாவது ஆனி மாதம் பவுர்ணமி நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகள் அரசாளும் யோகத்துடன் இருப்பார்கள் என்பார்கள். அதுபோல ஆனி மாதத்திற்கு பிறகு வரும் மாதங்களில் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தால் எதிரிகளை நிர்மூலம் ஆக்குவார்கள் என்பதுதான் உண்மையான கருத்தாகும்.
இதைத்தான் சுருக்கமாக ஆனி மூலம் அரசாளும் பின் மூலம் நிர்மூலம் என்று சொல்லி வைத்தார்கள். புலிப்பானி சித்தரின் ஜோதிட நூல் உள்பட பண்டைய ஜோதிட நூல்களில் இப்படித்தான் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு சில ஜோதிடர்கள் எதுகை மோனைக்காக ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்று எக்குத்தப்பாக சொல்லி வைத்ததால் அதுவே இப்போது உண்மை என்பது போல உலா வருகிறது.
எனவே மூலம் நட்சத்திரம் தோஷமானது அல்ல. ஒருவேளை நீங்கள் தோஷம் என்று நினைத்தால் தினமும் காலையில் விநாயகரை வழிபடுங்கள். கோவில்களுக்கு நிறைய தானம் செய்யுங்கள். பிரமோற்சவம் நடக்கும்போது கோவில்களில் கொடி ஏற்றுவார்கள். அந்த கொடி செலவை ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஆலயங்களுக்கு சென்று மூலம் நட்சத்திர பரிகாரம் அல்லது பிரார்த்தனை பூஜை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம், திருநீர்மலை பெருமாள் ஆலயம், திருவதிகை சிவாலயம் ஆகிய ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம்.
- அர்ஜுனன் கோபம் கொண்டு அவ்வுருவத்துடன் போரிட்டார். பூதாகரமான அந்த உருவம் அர்ஜுனனை தாக்கி விட்டு மறைந்தது.
- கிருஷ்ணர் சிரிக்க சிரிக்க அந்த உருவம் சிறிதாகிக் கொண்டே வந்தது.
ஒரு மனிதன் தன் வாழ்வில் பல செய்திகளை கேட்டு, கற்று, படித்து, அறிந்து நடக்கிறான். தன் தலைமுறையினருக்காக முன்னோர்கள் இவைகளை உபதேசங்களாக நமக்குக் கொடுத்தனர். இவற்றில் சில நடந்தவைகளாக இருக்கலாம். சில கதை ரூபத்திலும் இருக்கும். ஆனால் இவை மனதில் படிய வேண்டும் அவ்வளவே. எனவே கதை, கற்பனை என்பதனை தவிர்த்து சொல்லப்படும் கருத்தில் கவனம் செலுத்துவோம்.
ஒரு சமயம், ஸ்ரீ கிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் மூவரும் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தனர். இருட்டி விட்டதால் ஏதாவது ஒரு இடத்தில் தங்கி பொழுது விடிந்த பிறகே பயணத்தினை தொடர முடியும். ஓய்வும் எடுத்தது போல் ஆகி விடும் என முடிவு செய்தனர்.
காடு ஆயிற்றே கொடிய மிருகங்கள் இருக்குமே. எனவே சேர்ந்து அனைவரும் தூங்க முடியாது. எனவே ஸ்ரீ கிருஷ்ணரும், பலராமரும் உறங்க சென்றனர். ஒரு ஜாமம் அர்ஜுனன் காவல் செய்ய முடிவு எடுத்தனர்.
அர்ஜுனன் காவல் காத்து கொண்டு இருந்தான். திடீரென ஒரு புகை மண்டலத்தில் இருந்து அகன்ற மூக்கு பெரிய பற்கள், முட்டை போன்ற கண்கள் கொண்ட வடிவில் ஒரு உருவம் தோன்றியது. மரத்தடியில் தூங்கும் ஸ்ரீ கிருஷ்ணர். பலராமனையும் காவல் காக்கும் அர்ஜுனனையும் பார்த்தது. அருகில் சென்றது. அர்ஜுனன் தடுத்தான். அவ்வுருவமோ அர்ஜுனனைப் பார்த்து அவர்கள் இருவரையும் தான் கொல்லப் போவதாகவும் அர்ஜுனன் அந்த உருவத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் சொன்னது.
அர்ஜுனன் கோபம் கொண்டு அவ்வுருவத்துடன் போரிட்டார். பூதாகரமான அந்த உருவம் அர்ஜுனனை தாக்கி விட்டு மறைந்தது.
இரண்டாம் ஜாமம் வந்தது. பலராமனை எழுப்பி விட்டு அர்ஜுனன் தூங்கச் சென்றான். மீண்டும் அவ்வுருவம் வந்தது. அர்ஜுனனிடம் கூறியது போலவே பலராமனிடம் கூறியது. பலராமனும் அவ்வருவத்துடன் கடுமையாக போரிட்டார். ஆனால் அவ்வுருவம் பலராமரையும் கடுமையாய் தாக்கி விட்டு சென்றது.
அடுத்த ஜாமத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் காவல் காக்கும் நேரம் வந்தது. அதே போல் அவ்வுருவமும் வந்தது. அந்த உருவத்தினைக் கண்டு கிருஷ்ணர் கலகலவென சிரித்தார். அந்த உருவம் இதனை எதிர்பார்க்கவில்லை. 'ஏன் என்னைப் பார்த்து சிரிக்கின்றாய்?' என்றது.
'உன்னைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகின்றது? என்றார் ஸ்ரீ கிருஷ்ணர்.
தன்னை கேலி செய்வதனை அவ்வுருவத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மிகுந்த கோபத்துடன் ஸ்ரீ கிருஷ்ணருடன் சண்டை போட்டது. ஆனால் ஸ்ரீகிருஷ்ணரோ சிரித்துக் கொண்டே போரிட்டார்.
கிருஷ்ணர் சிரிக்க சிரிக்க அந்த உருவம் சிறிதாகிக் கொண்டே வந்தது.பலமும் குறைந்தது. கடைசியில் அந்த பெரிய கோர உருவம் ஒரு புழுவாக மாறியது... நெளிந்தது.

கமலி ஸ்ரீபால்
ஸ்ரீ கிருஷ்ணர் அந்த புழுவினை ஒரு துணியில் கட்டி வைத்தார். பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் இரவில் வந்த பயங்கர உருவத்தினைப் பற்றியும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதானது பற்றியும் கூறினர்.
அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் துணியில் கட்டியிருந்த புழுவினைக் காட்டி நீங்கள் சண்டை போட்ட உருவம் இதுதான் என்றார்.
நீங்கள் அந்த உருவத்துடன் சண்டை போடும் போது அதிக கோபத்துடன் சண்டை போட்டீர்கள். அதனால் அதன் பலமும் உருவமும் பெரிதாகிக் கொண்டே போயிற்று. அதன் பலமும் கூடியது.
நான் சிரித்துக் கொண்டே சண்டை போட்டதால் அது உருவமற்று போயிற்று. பலமும் இழந்தது என்றார். இது முழுமையும் கற்பனையான கதையாகவே இருக்கட்டும். ஆனால் எத்தனை அவசியமான கருத்தினை கொடுத்துள்ளனர் என்பதினை சிந்திக்க வேண்டும். வம்பு, சண்டை என வருபவனை புன்னகையோடு எதிர் கொள்ளும் பொழுது அவன் புழுவுக்கு சமமானவனாகி விடுகிறான்.
கோபத்தை கட்டுப்படுத்தி விட்டாலே பெரிய ஞானிதான். வாழ்க்கையில் பல விஷயங்களுக்கு நாம் பதிலுக்கு பதில் என்று கொந்தளிக்காவிட்டாலே போதும் அது எதுவும் இல்லாமல் கலைந்து விடும்.
இதனையும் கற்பனை கதை என்று எள்ளி நகைத்தவரின் கருத்தினை உணர்ந்து வாழ முயல்வோம்.
மேற்கூறியவாறு வாழ்வதற்கு உறுதியான மன வலிமை வேண்டும். இல்லையெனில் சிரித்துக் கொண்டே பிரச்சினைகளுடன் போராடுவது என்பது எளிதான காரியமா என்ன?
சாதிக்க கடினமான விஷயங்களை சாதிப்பதுதானே சாதனை. மனவலிமை இருந்தாலும் சமூக கட்டுப்பாடுகளை அதாவது சட்ட திட்டங்களை மீறக்கூடாது.
எதனையும் பதற, பதற துடிதுடிக்க சதா சர்வ காலமும் எதிர்பார்ப்பிலேயே காலம் தள்ளாதீர்கள். எதிர்பார்க்காமல் இருந்தாலே பிரபஞ்சம் பல அதிசயங்களை நிகழ்த்தும்.
கடந்த காலத்தினை நினைத்து வருத்தம் ஏற்படும் பொழுது மரத்தின் உதிர்ந்த காய்ந்த இலைகளைப்பாருங்கள். அது மீண்டும் அப்படியே மரத்தில் போய் ஒட்ட முடியாது. மரமும் அதனை ஏற்பதில்லை.
கங்கை கூட ஓடிக் கொண்டேதான் இருக்கின்றது. திரும்ப பின்னோக்கி வராது.
இப்படி மனதின் பாசியினை அன்றாடம், ஒவ்வொரு நொடியும் தேய்த்து தேய்த்துதான் மன வலிமையினைக் கூட்ட முடியும்.
நம் வாழ்க்கைக்கு உணவு, உடை, இருப்பிடம் என சில தேவைகள் அவசியமாகின்றன. அதைவிட்டு மனதினை அலையோ அலை என்று அலைய விடுவது எத்தனை பிரச்சினைகளைத் தருகின்றது.
பலவித கெடுதல் உணவுகளை மூக்கு முட்ட சதா உண்பது உடலை கெடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. உணவிலும் சரி, பேச்சிலும் சரி கட்டுப்பாடு இல்லை எனில் வாழ்க்கை, ஆரோக்கியம், ஆன்மீகம் இதனைப் பற்றி சிந்திக்கக்கூட முடியாது.
நல்ல உடல் உழைப்பு இருந்தாலே உடல் உள் உறுப்புகள் சிறப்பாய் இருக்கும். அளவான எதுவும் இயற்கையோடு ஒத்துப்போய்விடும்.
சற்றே சிந்தித்துப் பார்ப்போமோ....
* ஆண்டவனிடம் முழு நம்பிக்கையோடு வேண்டுகின்றோமா! இல்லையெனில் இன்றிலிருந்து தொடங்கி விடுவோம்.
* மகாபாரதம், ராமாயணம் என்று பேசுகின்றோம். எல்லோர் வீட்டிலும் ஒரு கூனியும், சகுனியும் இருக்கத்தானே செய்கின்றார்கள். இப்படி பல கதாபாத்திரங்களை அன்றாட வாழ்விலும் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றோம்.
* ராமனை மணந்த சீதைக்கும் கஷ்டம்தான். ராவணனை மணந்த மண்டோதரிக்கும் கஷ்டம்தான். பஞ்ச பாண்டவரை மணந்த திரவுபதிக்கும் கஷ்டம்தான். கோவலனை மணந்த கண்ணகிக்கும், மாதவிக்கும் கூட கஷ்டம்தான். சித்தார்த்தரை மணந்த யசோதைக்கும் கஷ்டம்தான். இயேசு பிரானை ஈன்ற மேரி அன்னைக்கும் தான் பெற்ற இறைவன் சிலுவையில் அறையப்படு வதனைக் கண்டு நொந்து போனார். இப்படிக் கூறிக்கொண்டே போகலாம். ஆக பெண்ணே-நீயே சக்தி-எழுந்து வா- துன்பங்களை மிதித்து வா. வெற்றி வாகை சூடு. இது உன் வாழ்க்கை சாதித்து காட்டு. மேலே குறிப்பிட்டவர்களும் சாதித்துதான் வாழ்ந்தார்கள்.
* இயற்கைக்கு ஒரு சக்தி இருக்கின்றது.
* நீ என்ன செய்கின்றாயோ அதனை உன்னிடமே திருப்பி கொண்டு வந்துவிடும்.
* நான் இப்படிதான் என்ற வறட்சி கவுரவம் இல்லாது ஒருவர் தன்னை மாற்றிக் கொண்டால் பிரபஞ்சமும் அவரது வாழ்க்கையினை முறையாய் மாற்றி விடுகின்றது.
* கடந்த காலத்தில் மூழ்கி நிகழ் காலத்தினை விட்டு விடக்கூடாது. முயன்று பார்ப்போம்.
- மிகச்சிறந்த டைரக்டர். மிகப்பெரிய நடிகர் கூட்டணியில் இணைந்து நடிக்க கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியை கொடுத்தது.
- இவ்வளவு பெரிய நடிகர் இவ்வளவு சாதாரணமாக இருக்கிறாரே என்று ரொம்பவும் ஆச்சரியப்பட்டு போனேன்.
எந்த நாட்டில் எந்த ஓட்டலில் என்ன வகை உணவு பிரபலம்? ருசி எப்படி என்று தெரிய வேண்டுமா? மோகன்லால் சாரை கேட்டால் போதும்...
கேட்பது மட்டுமல்ல... அவரோடு எந்த நாட்டுக்கு சென்றாலும் பிரபலமான உணவு வகைகளை சாப்பிட்டும் மகிழலாம். இது எனக்கு சிங்கப்பூரில் கிடைத்த அனுபவம்!
ரஜினி சாருடன் நான் நடித்த முத்து ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த தருணம். மலையாள பட தயாரிப்பாளர் ஒருவர் என்னை அணுகி மலையாளத்தில் 'வர்ணபகிட்டு' என்ற படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு கேட்டார்.
ஹீரோ யார்...? என்றேன்.
மோகன்லால்...! என்றார்கள்.
டைரக்டர்?
ஐ.வி.சசி! என்றார்கள்.
சூப்பர். கதையை சொல்லுங்கள் பார்ப்போம் என்றேன்.
கதையை சொல்ல தொடங்கினார். அவர் சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டிருந்தேன். கதையும் பிடித்து இருந்தது. ஓ.கே. சொல்லிவிட்டேன்.
மிகச்சிறந்த டைரக்டர். மிகப்பெரிய நடிகர் கூட்டணியில் இணைந்து நடிக்க கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியை கொடுத்தது.
அதுமட்டுமல்ல. இந்த படத்தில் நான் நடிக்க டபுள் ஓ.கே. சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.
நான் ஹீரோயினியாக நடித்த அந்த காலக்கட்டத்தில் காஸ்ட்யூம் என்பது சேலை, பாவாடை-தாவணி, கச்சம் ஆகியவைதான். எனக்கு அந்த வயதில் மாடர்ன் காஸ்ட்யூமில் நடிக்க ஆசை இருந்தது. ஆனால் எந்த படத்திலும் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனது.
ஆனால் வண்ண பகிட்டு படத்தில் காஸ்ட்யூம் மாடர்ன் டிரெஸ் என்றதும் 'சூப்பர்' என்று மனதுக்குள் ஒரே கொண்டாட்டமாக இருந்தது.
அதன்பிறகு எப்போது ஷூட்டிங் என்ற எதிர்பார்ப்புதான் இருந்தது.
ஷூட்டிங் சிங்கப்பூர் என்றார்கள். அதை கேட்டதும் வாவ்... சிங்கப்பூரா? என்ற சந்தோசம் வேறு. அப்போதுதான் முதல்முறையாக சிங்கப்பூர் சென்றேன்.
மலையாளத்தில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் மோகன்லால். அப்படிப்பட்ட பெரிய நடிகருடன் நடிக்கப் போகிறோம் என்ற எண்ணம் சிங்கப்பூர் போகும் வரை இருந்தது. ஆனால் அங்கு சென்று ஷூட்டிங் தொடங்கியதும் அந்த எண்ணமும் போய்விட்டது.
அதற்கு காரணமும் மோகன்லால் சார் தான்.

படக்குழுவினரின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டிருந்தது. அங்கு ஓட்டலில் இருந்து ஷூட்டிங் செல்வதற்கும் ஆளுக்கு ஒரு கார் கிடையாது. காலையில் சாப்பிட்டு ரெடியானதும் ஒரு கார் தயாராக நிற்கும். அதில் எத்தனை பேர் செல்ல முடியுமோ அத்தனை பேரும் ஏறிக் கொள்வோம்.
இவ்வளவு சிக்கனத்தை கடை பிடித்ததற்கும் காரணம் உண்டு. நம் நாட்டைவிட சிங்கப்பூரில் செலவு அதிகம். அதனால்தான் இந்த சிக்கன ஏற்பாடு.
மோகன்லால் சார், மனைவி, குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார். இவ்வளவு பெரிய நடிகர் இவ்வளவு சாதாரணமாக இருக்கிறாரே என்று ரொம்பவும் ஆச்சரியப்பட்டு போனேன்.
ஷூட்டிங் செல்லும்போது ஜாலியாக பேசுவார். இந்த டவுனில் இந்த கடையில் இந்த உணவு சூப்பரா இருக்கும் என்பார். சொன்னதோடு விடமாட்டார். அங்கேயே சாப்பிடவும் அழைத்து செல்வார்.
அதுமட்டுமல்ல காரில் சென்று கொண்டிருக்கும்போது ஏதாவது ஓட்டலில் இருக்கும் பதார்த்தத்தை பார்த்துவிட்டால் போதும். அதை காட்டி இதை சாப்பிட்டு இருக்கியா? என்பார்.
நான் சிங்கப்பூர் சென்றதே அதுதான் முதல்முறை. எப்படி சாப்பிடுவது?
ம்கூம். சாப்பிட்டது இல்லை என்பேன். உடனே அன்று அதை வாங்கி தருவார். அவரோடு செல்லும்போது விதவிதமான சாப்பாடு. வாய்க்கு ருசியாக சாப்பிடலாம்.
இன்னொரு முக்கிய விசயம். அவர் நடிப்பதில் எப்படி கில்லாடியோ அதேபோல் சமையல் செய்வதிலும் கில்லாடி. வீட்டில் நன்றாக சமைப்பார். நான் வெஜ் சூப்பரா பண்ணுவார். அடி பொலியாக இருக்கும். அவர் சமைத்து தர அவரது மனைவி, குழந்தைகளுடன், நானும் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்த தருணங்கள் மறக்க முடியாதது.
ரொம்ப பொறுமையாக இருப்பார். இயல்பாக இருப்பார். காட்சிகளில்கூட நடிப்பதற்காக சிரத்தை எடுத்துக்கொள்ளமாட்டார். இயல்பாகவே நடிப்பார். ஆனால் அது கச்சிதமாக வந்திருக்கும்.
சின்ன சின்ன விசயங்களை மிக இயல்பாக செய்வார். அவரை பார்த்து பல விசயங்கள் நான் கற்றுக் கொண்டேன்.
உடல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துவார். அவர்தான் எனக்கு சூரிய நமஸ்காரம் சொல்லி தந்தார். அதன்பிறகு தான் நானும் சூரிய நமஸ்காரம் செய்ய தொடங்கினேன்.
தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருந்ததால் மலையாளத்தில் என்னால் சரளமாக பேச வரவில்லை. சுமார் 60 சதவீதம் திருப்தியாக தெரிந்தது.
ஆனால் மோகன்லால் சார்தான் எனக்கு சொல்லி தருவார். அவர் ரொம்ப சாதாரணமாக நடிப்பதை பார்த்து இப்படியும் நடிக்க முடியுமா? இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று நினைத்ததுண்டு.
அவர் 'எதையும் மிகைப்படுத்தக்கூடாது. கதை, டயலாக்குகளை உள்வாங்கி கொண்டு இயல்பாக நடித்தால் போதும் சிறப்பாக இருக்கும்' என்பார். அவர் சொன்ன மாதிரியேதான் எல்லாம் அமைந்தது.
டான்ஸ் மாஸ்டர் கலாவை முதல் முதலாக 'இதய வாசல்' படத்தில் சந்தித்தேன். அதன் பிறகும் சில படங்களில் அவர் எனக்கு மாஸ்டராக இருந்துள்ளார். ஆனால் இந்த படத்தில் பணியாற்றிய போதுதான் எங்களுக்குள் நட்பு நெருக்கமானது.
எங்கள் இருவருக்கும் பூர்வீகம் கேரளாதான். ஆனால் தமிழில் பேசுவதை பார்த்து மோகன்லால் சார் 'ரெண்டு பேரும் மலையாள பெண்குட்டிகள். ஆனால் மலையாளம் பேச தெரியாது' என்று கிண்டல் செய்வார்.
உண்மைதான், நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். ஆனால் எனது தாத்தா-பாட்டி நன்றாக மலையாளம் பேசுவார்கள். எனக்கு மலையாள தொடர்பு இல்லாமல் போய்விட்டது.
இந்த படத்தில் நடித்த பிறகுதான் மலையாளத்திலும் நன்றாக பேச கற்றுக் கொண்டேன்.
அப்பல்லாம் மலையாள படங்களில் நடிக்கும்போது வசனம் மறந்து போனால் உதவியாளர் ஒருவர் சொல்லித்தரும் முறை இருந்தது.
ஆனால் அப்படி கேட்டு, கேட்டு வசனம் பேசி நடிப்பது ஈசி அல்ல. ரொம்ப சிரமம். ஏனெனில் முகபாவணை வராது. ஆனால் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஈசியாக நடிப்பேன்.
அதேபோல் டான்சுக்கு தேவையான துணை ஆர்ட்டிஸ்டுகளை இங்கிருந்து அழைத்து செல்லவில்லை. சிங்கப்பூரிலேயே ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
அவர்கள் நமது ஸ்டைலில் ஆடியது வித்தியாசமாக இருந்தது. அந்த காட்சிகளும், நாட்களும் மறக்க முடியாதவை.
அப்போதே சிங்கப்பூரில் மெட்ரோ ரெயில், ரோப் காரில் பயணித்த அனுபவங்களும் மறக்க முடியாதது.
சிங்கப்பூரிலும், கேரளத்திலும் படப்பிடிப்புகள் நடந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்து 1997 ஏப்ரல் 4-ந்தேதி படம் திரைக்கு வந்தது. சூப்பர்-டூப்பர் படமாக ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
தமிழில் சிவாஜி சார்-பத்மினி அம்மா ஜோடி பொருத்தம் சூப்பர் என்று எப்படி பாராட்டுவார்களோ அதேபோல் மலையாளத்தில் முதல் படத்திலேயே எங்கள் ஜோடிப் பொருத்தம் சூப்பர் என்று ரசிகர்கள் சர்டிபிகேட் கொடுத்தார்கள்.
அது முதல் உங்கள் மீனா மலையாள ரசிகர்கள் மனதிலும் நிலையான இடம் பிடித்தேன்.
அடுத்த வாரம் புதிய தகவலுடன் சந்திக்கிறேன்.
-தொடரும்...
- சிவனை வணங்க வேண்டும் என்றால் சிவமாக இரு, ராமனை வணங்கவேண்டும் என்றால் ராமனாக இரு என்று பொருள்.
- அகங்காரம், சுயநலம், பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு இடர்கள் காரணமாக உலகம் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது.
ராமர் கோவில் அமைந்தது தேசத்தின் பெருமை- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்இந்துக்களின் புண்ணிய பூமியான அயோத்தியில் நாளை (திங்கட்கிழமை) ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சுமார் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடிய வரலாறு நம் பாரதத்தின் வரலாறு. ஆரம்ப காலத்தில் நடந்த படையெடுப்புகள் செல்வத்தை கொள்ளையடிக்க நடந்தன. சில (அலெக்சாண்டர் படையெடுப்பு போன்றவை) ஆக்கிரமிப்பை மையமாக வைத்து நடந்தன.
ஒரு நாட்டின், ஒரு சமுதாயத்தின் தன்னம்பிக்கையை குறைக்க அவர்களின் வழிபாட்டுத்தலத்தை அழிப்பது அக்காலத்தில் அவசியமாக இருந்தது. எனவே, அன்னிய படையெடுப்பாளர்கள் பாரதத்தில் பல்வேறு கோவில்களை அழித்தார்கள். அவர்கள் குறிக்கோள் பாரதிய சமுதாயத்தின் சுயநம்பிக்கையை சிதைத்து, பலவீனமாக்கி, பின்னர் நிரந்தரமாக இங்கு ஆட்சி செய்வதாக இருந்தது. அயோத்தியில் இருந்த ராமர் கோவிலும் அதே எண்ணத்துடன் அழிக்கப்பட்டது.
ராமஜென்ம பூமி விஷயத்தில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தொடங்கிய சட்டப்போராட்டம் தொடர்ந்தது. 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி அன்று, 134 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு பிறகு, சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு சான்றுகளை ஆய்வு செய்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்ப்பை வழங்கியது. இருதரப்பு நம்பிக்கைகள் மற்றும் எண்ணங்களுக்கும் இந்த தீர்ப்பு மதிப்பளித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகுதான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆன்மிக ரீதியாக பார்த்தால், பெருவாரியான மக்களால் வழிபடப்படும் கடவுளாக இருக்கிறார் ராமர். ராமரின் வாழ்க்கை ஒரு நெறியான வாழ்க்கை என்று ஒட்டுமொத்த சமுதாயமும் போற்றுகிறது. அயோத்தியா என்றால் 'போர் இல்லாத நகரம், 'சச்சரவுகள் இல்லாத நகரம்' என்று பொருள். இந்த நேரத்தில், ஒட்டுமொத்த நாடும், அயோத்தியை எப்படி மீண்டும் நிர்மாணம் செய்வது என்பது பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும், இது நமது கடமையும் கூட.
ராமர் கோவில் அமைந்துள்ள இந்த தருணம் நமது தேசத்தின் பெருமையை மீண்டும் எழ செய்துள்ளது. பாரத சமுதாயம் ராமரின் வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாகவும் இது விளங்குகிறது. ராமரை கோவிலில் வணங்க சொல்லப்பட்டுள்ள முறைகள் பத்ரம், புஷ்பம், பலம், தோயம் (இலை, பூ, பழம், தண்ணீர்).
அதுமட்டுமில்லாது ராமரின் உருவத்தை நமது மனதில் பதித்து, அந்த நெறிப்படி நமது வாழ்க்கையை அமைத்து ராமரை பூஜிக்க வேண்டும். 'சிவோ பூத்வா சிவம் பஜேத், ராமோ பூத்வா ராமம் பஜேத்' என்பார்கள், அதாவது சிவனை வணங்க வேண்டும் என்றால் சிவமாக இரு, ராமனை வணங்கவேண்டும் என்றால் ராமனாக இரு என்று பொருள்.
'மற்றவர் மனைவியை தாயாக பார்ப்பவனும், பிறர் சொத்தை ஒரு பிடி மண்ணாக பார்ப்பவனும், அனைத்து ஜீவராசிகள் உள்ளேயும் தன்னை காண்பவனே பண்டிதன்' என்ற சொல் வழக்கு உள்ளது. பாரதிய கலாசாரம் வலியுறுத்துவது இதையே. இதேபோன்று ராமரின் பாதையில் நாமும் செல்ல வேண்டும்.
வாழ்க்கையில் சத்தியம், வலிமை மற்றும் துணிவுடன் மன்னிக்கும் மனம், நேர்மை, அடக்கம், அனைவர் மீதும் அன்பு பாராட்டல், தூய்மையான எண்ணம், கடமையை நிறைவேற்றுவதில் கண்டிப்பு உள்ளிட்ட பண்புகள் ராமனிடம் இருந்து கற்று நாம் அனைவரும் பின்பற்றக்கூடியதாகும். இவற்றை நம் வாழ்வில் கொண்டுவர நேர்மை, அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைக்க வேண்டும்.
நமது தேசிய கடமைகளை மனதில் கொண்டு, இந்த பண்புகளை நமது சமுதாய வாழ்விலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த பண்பின் அடிப்படையில்தான் ராமர் - லட்சுமணர் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்ததுடன், வலிமையான ராவணனையும் வீழ்த்தினார்கள்.
ராமரின் குணங்களை பிரதிபலிக்கும் நீதி, கருணை, சமத்துவம், சமூக நல்லிணக்கம், நேர்மை, சமுதாய நடத்தை ஆகியவற்றை பரப்பவும்; துணிச்சலான, சுரண்டல் இல்லாத, சமநீதியை கொண்ட வலிமையான சமுதாயம் உருவாவதை உறுதிசெய்வோம். இது நாம் ராமருக்காக மேற்கொள்ளும் சமுதாய பூஜை.
அகங்காரம், சுயநலம், பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு இடர்கள் காரணமாக உலகம் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. பால ராமர் அயோத்தியில் எழுந்தருள்வதும், அவரது பிராண பிரதிஷ்டை நடப்படும் பாரத பூமியின் புனர் நிர்மாணத்தின் ஆரம்பம். இது எல்லோருக்கும் நன்மை பயக்கக்கூடியது, எவர் மீதும் விரோதம் பாராட்டாதது. நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி, அமைதிக்கான வழியை காட்டவல்லது.
நாம் இதை பின்பற்றி எடுத்து செல்லும் பக்தர்கள். இன்று, கோவில் எழுந்ததற்கான ஆன்மிக கொண்டாட்டங்களில் பங்கேற்கும் அதே வேளையில், பாரதத்தை புனர் நிர்மாணம் செய்து, அதன் மூலம் உலகை புனர் நிர்மாண பணியில் ஈடுபட உறுதி எடுத்துக்கொள்வோம். இந்த பேரொளியை மனதில் வைத்து, முன்னேறி செல்வது காலத்தின் கட்டாயம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கலாம் சுற்றுப்புறச்சூழலின் மேம்பாட்டிற்காகப் பெரிதும் உழைத்தார்.
- ஜனாதிபதி பதவியில் அவர் ஆற்றிய செயல்கள் பல.
இந்தியாவின் தலைசிறந்த மாமனிதருள் ஒருவராகத் திகழ்ந்ததோடு இளைஞர்களுக்கு 'கனவு காணுங்கள், அதை மெய்ப்பிக்க உழையுங்கள்' என்ற தாரக மந்திரத்தைத் தந்தவர் மக்கள் தலைவராகத் திகழ்ந்த பெரும் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். இவரைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வதே இளைஞர்கள் வெற்றியின் முதல் படியில் காலடி வைத்தது போலாகும்.
ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தில் படகு ஒன்றின் சொந்தக்காரராகத் திகழ்ந்த ஜைனுலாப்தீன் மற்றும் அவரது மனைவி ஆஷியம்மாவிற்கு ஐந்தாவது மகனாக 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி பிறந்தார்.
மிக வறுமையான பின்னணி. ஆகவே குடும்பத்திற்கு வருமானம் சேர்க்கும் வகையில் பள்ளி நேரம் போக மற்ற நேரத்தில் வேலைக்குச் சென்றார். செய்தித்தாள்களை அன்றாடம் விநியோகம் செய்யத் தொடங்கினார்.
ராமேஸ்வரத்தில் தொடக்கப்பள்ளியில் தன் கல்வியை ஆரம்பித்த கலாம், திருச்சிக்குச் சென்று 1954-ம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தார். 1955-ல் சென்னை எம்.ஐ.டி.-யில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்து முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.
படைப்பாற்றல் திறனுடன் கூடிய அதிக உழைப்பு, இன்னும் அதிக உழைப்பு - இதற்கு இலக்கணமாக இளமையில் இருந்தே திகழ்ந்தார் கலாம். முடிக்கவே முடியாத ஒரு திட்டத்தைக் கொடுத்த ஒரு முதல்வர் அதை இரண்டு நாளில் முடிக்க வேண்டும் என்ற காலக்கெடுவை விதித்தார். இராப்பகலாக உழைத்து இரண்டே நாட்களில் அதை முடித்து சாதனையை நிகழ்த்தினார் கலாம்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ) விஞ்ஞானியாகச் சேர்ந்த கலாம் ஒரு ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றார். விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட கலாம் இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோளை ஏவும் ஊர்தியைச் செய்யும் திட்டத்தின் இயக்குநர் ஆனார். சாட்டிலைட் லாஞ்ச் வெஹிகிள் எனப்படும் இந்த ஊர்தி உருவாக்கப்பட்டு, ரோஹினி என்ற செயற்கைக் கோளை புவி ஓடுபாதையில் 1980-ல் வெற்றிகரமாக ஏவியது.
கலாம் சுற்றுப்புறச்சூழலின் மேம்பாட்டிற்காகப் பெரிதும் உழைத்தார். டிஆர்டிஓவின் தலைவராகத் திகழ்ந்த கலாம் அக்னி ஏவுகணையை வடிவமைப்பதில் ஈடுபட்டார். 20 மீட்டர் நீளமுள்ள இந்த சாலிட் புரொபல்ட் பாலிஸ்டிக் மிஸைல் 16 டன் எடையைக் கொண்டது. இதன் பே- லோட் 1000 கிலோ ஆகும். இதைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.
வீலர் என்ற தீவு ஒரிசாவின் தெற்குக் கடற்கரையில் பிதர்கணிகா காடுகளுக்கு அருகில் உள்ளது. இதுவே அக்னி –| ஏவுகணையைச் சோதனை செய்ய வேண்டிய இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தக் கடற்கரை பிரதேசத்திற்கு அருகில் உள்ள கடலில் மிகவும் அரிதாகக் காணப்படும் ஒருவகை ஆமைகள் ஏராளமாக உள்ளன.
இவற்றை ஆலிவ் ரிட்லி டர்டில் என்பர். நம்ப முடியாத தூரத்தில் இருந்து பயணப்பட்டு அவை இங்கு வருவது வழக்கம். ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கு வந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் குஞ்சு பொறிக்கும் ஒரு வகை விசேஷமான ஆமைகள் இவை. நவம்பரில் வரும் இவை மார்ச் முடிய இங்கே தங்கும். குஞ்சுகள் பொறிக்கப்பட்டவுடன் திரும்பித் தமது இடம் நோக்கிச் செல்லும்.

ஆகவே சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் அப்துல் கலாம் அவர்களிடம் மார்ச்சுக்கு பிறகு அக்னி ஏவுகணை சோதனையை வைத்துக் கொள்ளலாம் என்று யோசனை கூறினர். சுற்றுப்புறச் சூழலில் பெரிதும் ஆர்வம் கொண்ட அப்துல் கலாம் உடனே இந்த யோசனையை ஏற்றுக் கொண்டார்.
உடனடியாக ஒரு ஆணையைப் பிறப்பித்தார். அதன்படி இந்தத் தளத்தில் இருந்த அனைத்து விஞ்ஞானிகளும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்துக் கொண்டு தங்கள் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தனர்.
ஒருவிதமான மின் விளக்கும் எரியவிடப்படவில்லை. ஏனெனில் அவை ஆமைகளுக்கு தொந்தரவாக இருக்கும் என்று. சுமார் ஐந்து மாதங்கள் இப்படி மெழுகுவர்த்திப் பணி தொடர்ந்தது.
விசேஷ விருந்தாளிகளான இந்த ஆமைகள் தமது சந்ததி விருத்திப் பணி முடித்து மீண்டும் சொந்த இடம் நோக்கிப் பயணப்பட்டபின் ஆய்வு வேலைகள் முழு வீச்சில் நடைபெற ஆரம்பித்தன.
1999-ம் ஆண்டு ஏப்ரல் 11 என்ற – நிர்ணயிக்கப்பட்ட தேதியில் சோதனை நடந்தது; வெற்றி பெற்றது. இது 2004-ம் ஆண்டு உரிய முறையில் நமது ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. அடுத்து பிரித்வி ஏவுகணைத் திட்டத்தையும் அவர் வெற்றிகரமாக்கினார். மக்கள் அவரை ஏவுகணை மனிதர் என்று செல்லமாகப் போற்றி அழைக்கலாயினர்.
பொக்ரான் அணுகுண்டு வெடிப்புத் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டு ஒவ்வொரு திட்டத்தின் வெற்றிக்காகவும் கடுமையாக உழைத்தார் கலாம். இந்திய அரசாங்கம் 1999 நவம்பரில் முதன்மை அறிவியல் ஆலோசகர் பதவியை அவருக்கு வழங்கியது. ஆலோசகராக 2001 நவம்பர் வரை இருந்த அவர் இந்தியா விண்வெளித் துறையில் முன்னேற பல்வேறு ஆலோசனைகளை அரசுக்கு வழங்கினார். அவரது தளராத உழைப்பும் அதன் மூலம் நாட்டிற்கு அவர் ஆற்றிய பணியும் பெரிதும் அனைவராலும் போற்றப்பட்டது. பல்வேறு விருதுகள் அவரை வந்தடைந்தன. 1981-ல் பத்மபூஷண் 1990-ல் பத்மவிபூஷண் விருதுகளைப் பெற்ற கலாம் பாரதத்தின் மிக உயரிய கவுரவ விருதான பாரத ரத்னா-வை 1999-ல் பெற்றார்.
இதைத் தொடர்ந்து அவர் இந்தியாவின் 11-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002 ஜூலை 25-ம் நாள் தேதி முதல் 2007 ஜூலை 25 முடிய அவர் ஜனாதிபதியாகத் திகழ்ந்தார். அவரை மக்கள் தலைவர் என அனைவரும் அன்புடன் அழைத்தனர்.
ஜனாதிபதி பதவியில் அவர் ஆற்றிய செயல்கள் பல. நாடு முழுவதும் பயணப்பட்டு ஆங்காங்கே மாணவர்களையும் இளைஞர்களையும் அவர் ஊக்குவித்தார். அவர் சென்ற இடமெல்லாம் அவரது ஆளுமையைக் காட்டும் பல்வேறு சுவையான சம்பவங்கள் நடைபெற்றன.
கலாம் அவர்களின் வாழ்க்கையின் முக்கிய மையமாக அமைந்தது அவர் மாணவர்களையும் இளைஞர்களையும் கவர்ந்து அவர்களை ஊக்குவித்தது தான்!
பல்கலைக் கழக விழா ஒன்றில் பங்கேற்பதற்கு ஜனாதிபதி கலாமிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் ஏற்றார். மாணவர்களைச் சந்திப்பது என்றால் அவருக்குத் தான் தனிப்பட்ட உற்சாகம் உண்டே! விழா மேடையில் ஜனாதிபதி அமர்வதற்காக சற்று பெரிதாக இருந்த விசேஷ நாற்காலி போடப்பட்டிருந்தது. கலாம் அதில் அமர மறுத்து விட்டார். துணைவேந்தரை அதில் அமருமாறு கூறி அவரது நாற்காலியில் தான் அமர்வதாகக் கூறினார். துணைவேந்தரோ அதற்கு மறுத்து விட்டார். உடனடியாக மற்றவருக்குப் போடப்பட்டிருந்தது போன்ற நாற்காலி வரவழைக்கப்படது. அதில் அமர்ந்தார் கலாம். விழா தொடங்கியது. எளிமையிலும் எளிமை என்பதற்கு அவர் ஒரு இலக்கணமாக விளங்கினார்.
அடுத்த ஜனாதிபதியாக ஆகப் போகிறார் என்று நிச்சயமாகி விட்ட நிலையில் அவர் ஒரு பள்ளியில் உரையாற்றச் சென்றார். அங்கு பவர் கட்! கலாம் அசரவில்லை. நானூறு மாணவர்களுக்கு மத்தியில் சென்ற அவர் தன்னைச் சுற்றி நெருங்கி வருமாறு அனைவரையும் அழைத்தார். அனைவரும் அப்படியே வந்தனர். உத்வேகமூட்டும் உரையை அவர் நிகழ்த்த மாணவர்கள் மனம் மிக மகிழ்ந்தனர்.
டி.ஆர்.டி.ஓ-வில் அவர் பணியாற்றிய போது அவரது உதவியாளர்களுள் ஒருவருக்கு வேலைப்பளு காரணமாக தன் மகனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போனது. அன்று மாலை பொருட்காட்சிக்குத் தன் மகனைக் கூட்டிக் கொண்டு போவதாக அவர் சொல்லி இருந்தார். போகமுடியவில்லை. இதை அறிந்த கலாம் அவரது வீட்டிற்குச் சென்று அவர் மகனைத் தானே பொருட்காட்சிக்குக் கூட்டிச் சென்று விட்டார். குடும்பங்களின் மூத்த அண்ணன் அவர்!
சைவ உணவுக்காரர். பிரம்மச்சாரி. மக்களின் தலைவர் என்று அழைக்கப்பட்டவர்.
ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவரிடையே 2015 ஜூலை மாதம் 27-ந் தேதி உரை ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருந்த போது அவர் மாலை சுமார் 6.30 மணியளவில் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது உடல் ராமேஸ்வரத்தில் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அவர்களும் நல்லடக்க நிகழ்வில் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அவர் எழுதிய நூல்கள் பல. அவற்றுள் முக்கியமானது அக்னிச் சிறகுகள்.
அவர் இளைஞர்களுக்குக் கொடுத்த முக்கிய உத்வேகமூட்டும் உபதேசம் :-
"கனவு காணுங்கள். தேசம் மேம்பட, நீங்கள் மேம்பட கனவு காணுங்கள். படைப்பாற்றலுடன் தீவிரமாக உழைத்து அதை மெய்ப்பித்து நனவாக்குங்கள்."
இதன்படி வாழ்ந்து காட்டி நாட்டின் உயரிய குடிமகனாகத் திகழ்ந்த அவர் பொன்மொழி பொய்யா மொழி அன்றோ!
தொடர்புக்கு:- snagarajans@yahoo.com
- “யோவ்! ஜொள்ளு விடாத! நான் அமெரிக்கப்புயல் கத்ரினாவைச்சொல்றேன்!”
- “என்ன வாட்சன்! இவனைப்போய் செலக்ட் பண்ணியிருக்கே! இவனோட முகமே சரி இல்லியே, எப்பப்பாரு கடுகடுன்னு..?”
"ரெண்டு நாளா தல வலிங்க!"
"சரி வேறென்ன ..?"
"சாப்பாடே வேண்டியதில்லீங்க!"
"ம்..?"
"எப்பப்பாரு கோவம் வருதுங்க!"
"வீட்ல சாமானெல்லாம் போட்டு ஒடைக்கணும்னு தோணுதா?"
" கரெக்டுங்க! இட்சிணி மாதிரி சொல்றீங்க!"
"ஒண்ணும் பிராப்ளம் இல்ல. நீங்க உங்க தங்கைய ஊருக்கு அனுப்பிட்டு, உங்க புருஷன ஆஃபீஸ் லீவ கான்சல் பண்ணச்சொல்லுங்க! சரியாயிடும்!"
ஒரு டாக்டர் இப்படி சொன்னா அவர் மேல கம்ப்ளெயிளைண்ட் பண்ணத்தோணுமா இல்லியா?
ஆனால் இப்படிச்சொல்வது ஒரு கம்ப்யுட்டராக இருந்தால்…?
"என்னது..? கம்ப்யூட்டரா..டாக்டருக்குப்பதிலாகவா..?"
" பதிலாக இல்லை, டாக்டருக்குத்துணையாக!"
ஆம், செயற்கை புத்திசாலித்தனம் (Artificial Intelligence) என்னும் இயல், படு வேகமாக முன்னேறி, இன்று மனிதர்கள் போலவே யோசித்துச்செயல்படும் திறமைகளைக்கொண்ட கம்ப்யூட்டரை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. ஐ பி எம் மின் "வாட்ஸன்" என்று பெயர் சூட்டப்பட்ட இந்த புத்திசாலிக்கம்ப்யூட்டர்கள் பல துறைகளில் நுழைய ஆரம்பித்துவிட்டன.
இந்த செயற்கை புத்திசாலித்தனம் முதன் முதலில் சாதாரண, யோசனை இன்றிச்செய்யும் வேலைகளுக்காக உருவாக்கப்பட்டன. இந்த சாதாரண, தினப்படி அல்லது ரொட்டீன் வேலைகளை ரோபோக்களை வைத்துச்செய்வது பற்றி அறிந்துள்ளோம். ஆனால் யோசித்து அறிவாற்றல் கலந்த வேலைகளை (Cognitive Intelligence) செய்ய மனிதர்களால் மட்டுமே முடியும் என்னும் சித்தாந்தத்தை ஓரளவு இந்த வாட்சன் உடைத்துவிட்டது. ஆம், வாட்சனால் மனிதர்களைப்போல சிந்தித்து செயல்படவும் அனுபவங்களின் மூலம் கற்றுக்கொள்ளவும் முடியுமாம்!
சமீபத்தில் ஜப்பானில் ஒரு பெண்ணுக்கு ரத்தப்புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு கீமோதெரபி வைத்தியம் செய்தார்கள். ஆனால் அவர் எப்படி குணமாக வேண்டுமோ அப்படி குணமாகிக்கொண்டு வரவில்லை. டாக்டர்கள் குழம்பித்தான் போனார்கள். வாட்சனிடம் தஞ்சம் அடைய, நம் வாட்சன் அந்தப்பெண்ணின் லட்சக்கணக்கான ஜீன் தகவல்களை அலசி ஆராய்ந்து அந்தப்பெண்ணுக்கு மரபணு சடுதி, அதாவது Genetic mutation ஏற்படுவதைக்கண்டுபிடித்தது. கிட்டத்தட்ட ஆயிரம் மரபணுக்களில் இந்த சடுதி ஏற்படுவதை அறிந்து, அவற்றில் பல இந்த புற்று நோய்க்கு சம்மந்தமில்லை என்பதையும் பத்தே நிமிடங்களில் வாட்சன் கண்டுபிடித்து விட்டது. இதைக்கண்டு பிடிக்க டாக்டர்களுக்கு இரண்டு வாரம் ஆகியிருக்கும்! இந்தக்கண்டுபிடிப்பை வைத்து மருந்து மாற்றப்பட்டபோது அந்தப்பெண் சீக்கிரம் குணமடைந்தாள்.
வாட்சன் போன்ற கண்டு பிடிப்பு மிகப்புரட்சிகரமானதாகும். ஏனென்றால், சாதாரண கம்ப்யூட்டரால் சீராக கட்டமைக்கப்பட்ட (Structured) தகவல்களை மட்டுமே புரிந்துகொள்ள முடியும். ஆனால் வாட்ஸனால் கட்டமைக்கப்படாத (Unstructured) தகவல்களையும் புரிந்துகொண்டு செயலாற்ற முடியும். வாட்சன் ஆன்காலஜி அட்வைசர் (Watson Oncology Advisor) என்னும் கம்ப்யூட்டர் கான்சர் பற்றிய ஏராளமான கட்டமைப்பற்ற தகவல்களை ஆராய்ந்து முடிவுகள் சொல்லக்கூடிய சக்தி படைத்ததாம்.

கல்வித்துறையில் வாட்சன் சாதிக்கப்போகும் புரட்சி இன்னும் பிரமிக்க வைக்கிறது.
"டீச்சர்! என்னோட மார்க் தப்பு!"
"எப்படிடா சொல்றே?"
"நான் அப்படியே ரமேஷ் பாத்து வரிக்கு வரி கப்பி அடிச்சேன்! அவனுக்கு எண்பது! எனக்கு பெயில் மார்க்கு! எப்படி டீச்சர்!"
"அது அப்படித்தான்! நீ உன் லெவலுக்கு எழுதணும்! ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி லெவல்ல பரிட்சை, தெரியுமா!"
ஆம், இனி பள்ளிக்கூடங்களில் ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் அவரவரின் தனித்தன்மைக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் வகுத்து சொல்லித்தர முடியும்! ஆக ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்கள் இருந்தாலும் ஒவ்வொருவரின் திறமை விகிதங்களுக்கு ஏற்றபடி பாடங்களின் ஆழமும் விஸ்தாரமும் வடிவமைக்கப்பட்டு சொல்லித்தரலாம். இதனால் மாணவர்களில் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு, பேசுதல், திட்டுதல் போன்ற வகுப்பறைக்கலவரங்களை ஒருமிக்க தடுக்க முடியும். வாட்சன் என்லைட் (Watson Enlight) இப்போது இங்கிலாந்தில் பல கல்வி நிலையங்களில் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது.
"டீச்சர்! என் கொஸ்டின் பேப்பர் ரொம்ப கஷ்டமா இருந்தது!"
"என்னைக்கேக்காதப்பா! ஹெட்மாஸ்டர் ரூமுல வாட்சன் இருக்கு பாரு, அதக்கேளு!!"
அமெரிக்காவில் வேலைக்கு ஆள் எடுப்பதைக்கூட வாட்சன் செய்து விடுகிறதாம்!
"என்ன வாட்சன்! இவனைப்போய் செலக்ட் பண்ணியிருக்கே! இவனோட முகமே சரி இல்லியே, எப்பப்பாரு கடுகடுன்னு..?"
"அவனோட ஐக்யூ உன்னோடத விட ஜாஸ்தி! அவனுக்கு இருக்கும் அனுபவங்களப்பார்த்தா நீதான் அவனுக்கு அசிஸ்டண்டா இருக்கணும்! அடுத்த வருஷம் அதையும் ரெகமண்ட் பண்ணிடறேன்!"
"அய்யய்யோ வாட்சன்! அப்படி எல்லாம் பண்ணிடாதப்பா! உனக்குன்னு நான் இனிமே தனியா ஸ்பெஷல் கரண்ட் வரவெச்சு தரேன்! நா புள்ள குட்டிக்காரன், என்னை போட்டுக்குடுத்துடாத! என் கண்ணில்லியா!"
ஆனால் இந்த வேலை செலக்ஷன் விஷயத்தில் வாட்சன் இப்பொதைக்கு ஓரளவுக்குதான் செய்கிறது. முழு ரெக்ரூட்மெண்டுமே வாட்சனிடம் விட முடியாது.
ஐ.பி.எம்.மில் இந்தியா ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஸ்ரீராம் ராகவன் வாட்சனுக்கு இருக்கும் பிரகாசமான எதிர்காலம் பற்றிச்சொல்லுகிறார். "கூடவே அதில் இருக்கும் கஷ்டங்களும் மிகச்சிக்கலானவை. சூழலுக்கேற்றார்போல் புரிந்துகொள்ளும் அறிவை கம்ப்யூட்டருக்குப்புகட்டுவது மிகப்பெரிய சவால்" என்கிறார் ஸ்ரீராம் ராகவன்
"கத்ரினாவினால் அமெரிக்காவில் அதிக சேதம்!"
"என்னப்பா இப்படி சொல்றே! கத்ரினாவா? ஷீலா கி ஜவானி……அவங்க அமெரிக்காவுல போய் என்ன பண்ணினாங்க?"
உடனே கேள்வி கேட்ட ஆசாமியை வாட்சன் இப்படி சவட்டக்கூடும்.
"யோவ்! ஜொள்ளு விடாத! நான் அமெரிக்கப்புயல் கத்ரினாவைச்சொல்றேன்!"
இனிமேல் வர்தா என்றால் "டாய்லெட் அந்தப்பக்கம்" என்றோ, மிக்ஜாம் என்றால் "அது கிசானா இல்லை வேறு ஏதாவது ஜாமா என்று கேட்டு அசடு வழியாதீர்கள்.
வாட்சனின் பதில் மரங்களைப்போல உங்களையும் சென்னையின் புயல் சாய்த்துவிடக்கூடும்!
- ஆண்மையும் பெண்மையுமாக இயங்கும் இருவேறு மனித அமைப்பை இயற்கையிலும் நாம் காணலாம்.
- மனத்தின் நிறை குறைகளைப் பொறுத்து, குடும்பம், நண்பர்கள், வேலைபார்க்கும் இடம் போன்றவை உருவாகின்றன.
உலக வாழ்வியலில் உண்மையின் தரிசனம் காணத் துடிக்கும் வாசகர்களே!
வணக்கம்.
செல்லிடப்பேசியில் நவீன சமூக ஊடகங்களைக் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கத் தொடங்கில் இருந்தால் ஓர் உண்மை உங்களுக்கு நிச்சயம் விளங்கி இருக்கும். முகநூல், மற்றும் யூடியூப் வரிசைகளில் நாம் எந்த மாதிரி வீடியோக்களையும் செய்திகளையும் தொடர்ந்து பார்க்கத் தொடங்குகிறோமோ, அந்த ஊடகங்களும் அதேமாதிரி வீடியோக்களையும் செய்திகளையும் தொடர்ந்து முன்னுரிமை கொடுத்துக் காட்டிக்கொண்டே இருக்கும்.
வீடுகள் மனைகள் வாங்குவது குறித்த செய்திகளைத் தொடர்ந்து பார்த்தால், அடுத்து எப்போது செல்பேசி வலையொளியைத் திறந்தாலும் வீட்டுமனை விற்பனை வீடியோக்களும் செய்திகளுமே முந்தி முந்தி வந்து நிற்கும். ஒரு குறிப்பிட்ட பேச்சாளரின் சொற்பொழிவுகளில் ஈடுபாடு காட்டினால், அவர் தொடர்பான ஒளிக்காட்சிகளே எப்போதும் வந்து காட்சியை ஆக்கிரமிக்கும்.
உடையவரின் ரசனைகளுக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் தொழில் நுட்பத்தைச் செல்பேசிகள் பெற்றிருக்கின்றன.
இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. மனித மூளையால் திட்டமிடப்பட்ட செயற்கை அறிவு இத்தகு நுட்பங்களை உருவாக்குகின்றது. ஏனெனில் இன்று நாம் காணும் இயற்கை உலகமும், வாழும் மனிதர்களின் பிரதிபலிப்பாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்மையும் பெண்மையுமாக இயங்கும் இருவேறு மனித அமைப்பை இயற்கையிலும் நாம் காணலாம்.
காணும் பொருள்களிலெல்லாம் பக்தன் கடவுளைக் காண்பதைப் போல, மனிதன் தன்னையும் காண்பதுதான் உண்மை வாழ்வியல்.
ஒரு கிராமத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில், ஒரு தாத்தாவும் அவரது பத்து வயதுப் பேரனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் பெரியவரைப் பார்த்து வணக்கம் சொன்னார். பெரியவர், ஞயாருங்க? ஊருக்குப் புதியவர் போல இருக்கிறீர்கள்? எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டார்.
தன்னுடைய ஊரின் பெயரைச் சொன்ன புதியவர், ''ஐயா! நான் இந்த ஊருக்குப் புதியவன்தான். ஒரு வேலையாக இந்த ஊருக்கு வந்திருக்கிறேன். தாங்கள் இந்த ஊர் தானா?" என்று கேட்டார்.
பெரியவர், "நாங்கள் இந்த ஊர் தான். இவன் என்னுடைய பேரன்" என்று பேரனை அறிமுகப்படுத்தி வைத்தார்.''ஐயா, இந்த ஊரைப்பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டதில்லை!. இந்த ஊர் எப்படி? ஊர்மக்கள் எப்படி?" என்று விசாரித்தார் புதியவர்.
பெரியவர்,''எங்கள் ஊரைப்பற்றி அப்புறம் சொல்கிறேன்! முதலில், உங்கள் ஊர் எப்படி? அங்குள்ள மக்கள் எப்படி?" என்று எதிர்க்கேள்வி கேட்டார்.
"ஆஹா! அற்புதமாய்ச் சொல்கிறேன்!. எங்கள் ஊர் வளமான ஊர். மாதம் மும்மாரி மழை! முப்போக விளைச்சல்! எல்லாம் அமோகம்!.
எங்கள் ஊரிலுள்ள மக்களோ தங்கமோ தங்கம் சொக்கத் தங்கம்! அனைவரும் அவ்வளவு நல்லவர்கள்!" ஊர்ப் பெருமையைப் புகழ்ந்து தள்ளிவிட்டார் புதியவர்.
''அருமையாகச் சொன்னீர்கள்!. நீங்கள் சொன்னதற்கு இம்மியளவும் குறைவில்லாதது எங்கள் ஊர். உங்கள் ஊரைப் போலவே வளம் நிறைந்த ஊர்; மக்களும் உத்தம புத்திரர்கள்!" என்று தன் ஊரைப்பற்றிச் சொன்னார் பெரியவர்.
"மகிழ்ச்சி ஐயா! நான் ஊருக்குள் சென்று வந்த வேலையைப் பார்த்துத் திரும்புகிறேன்" என்று ஊருக்குள் சென்றார் புதியவர்.
அவர் சென்றதும், பேரனுடன் பேச்சைத் தொடர்ந்தார் தாத்தா. சிறிது நேரத்தில் மற்றுமொரு புதியவர் அங்கு வந்து பெரியவருக்கு வணக்கம் வைத்தார்.
பெரியவரும் வழக்கம்போல, ஊருக்குப் புதிதா? எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்? என்ன வேலை? என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். வந்த புதியவரும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டு, "இந்த ஊர் எப்படி? இந்த ஊர் மக்கள் எப்படி?" என்று முந்தைய புதியவர் கேட்டது போலவே கேட்டார். பெரியவரும் வழக்கம் போல உங்கள் ஊரும் மக்களும் எப்படி? என்கிற கேள்வியை இரண்டாம் புதியவரிடம் வைத்தார்.

"ஊராங்க அது? ஊர்ல மழை பேஞ்சாலும் விவசாயம் கிடையாது. காரணம் ஊர்ல இருக்கிறவன்லாம் காலிப் பசங்க சார். பொய், பித்தலாட்டம், வஞ்சகம், சூது, யாருமே நல்லாருக்கக் கூடாதுங்கிற கெட்ட எண்ணம் அநியாயத்தின் மொத்த உருவமே எங்க ஊர் மக்கள்தான்!" மூச்சுவிடாமல் பேசி முடித்தவர், ''இப்பச் சொல்லுங்க உங்க ஊர் எப்படி?" என்று கேட்டார்.
''ரொம்பச் சரியாச் சொன்னீங்க! நீங்க சொன்னதுக்கு இம்மியளவும் குறைவில்லாதது இந்த ஊர். ஒரு வளமும் கிடையாது; ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் கடைஞ்செடுத்த அயோக்கியனுங்க! போய் ஊருக்குள்ள பாருங்க! நீங்களே தெரிஞ்சுக்குவீங்க'' என்றார் பெரியவர்.
அவ்வளவு தான். அந்தப் புதியவர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தவுடன் தாத்தாவிடம் பளிச்சென்று ஒரு கேள்வியைக் கேட்டான் பேரன்; ''அது எப்படி தாத்தா ஒரே ஊர் ஒருத்தருக்கு மிக நல்ல ஊராகவும் இன்னொருத்தருக்கு மிக மோசமான ஊராகவும் இருக்கும்?.நம்ம ஊரைப் பத்தியே இப்படி ரெண்டுவிதமாச் சொல்லலாமா?"
"அழகான கேள்விடா பேராண்டி. நல்லவங்க கண்ணுக்கு இந்த உலகம் நல்லதாவே தெரியும்! கெட்டவங்க கண்ணுக்கு உலகம் கெட்டதாவே தெரியும். உலகம் அப்படியே தான் இருக்குது. அது சிலருக்கு நல்லதாவும், சிலருக்குக் கெட்டதாவும் தெரியக் காரணம் பார்க்கிறவங்க மனோநிலையைப் பொறுத்ததேயொழிய வேறு ஒன்றுமில்லை. முதல்ல போனவன் நல்லவன்: அவனுக்கு நம்ம ஊர் நல்ல ஊராவே தெரியும்! இரண்டாவதாப் போனவன் கெட்டவன்; அவனுக்கு நம்ம ஊர் கெட்டதாத்தான் தெரியப் போகுது!. உலகம் என்பது நமது பிதிபலிப்பே தவிர வேறு ஒன்றுமில்லை" தாத்தாவின் பேச்சை கவனமாகக் கேட்டான் பேரன்.
ஆம்! உலகம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது ஆழ்மனத்தின் பிரதிபலிப்பாகவே அமைகிறது. மனத்தின் நிறை குறைகளைப் பொறுத்து, குடும்பம், நண்பர்கள், வேலைபார்க்கும் இடம் போன்றவை உருவாகின்றன.
"எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே!" என்று குறிப்பிடும் அவ்வையார், மனிதர்கள் எங்கெல்லாம் நல்லவர்களாக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் நாட்டுப் பகுதிகளும் நல்லனவாகவே அமையும் என்று தீர்க்கமாகக் கூறுகிறார்.
ஒரு சாலையில் ஒரு மனிதர் நடந்து சென்றுகொண்டிருக்கிறார். வழிநெடுக இருபுறமும் கொடிக்கம்பங்கள் நடப்பட்டு வண்ண வண்ணக் கொடிகள் பறக்க விடப்பட்டிருக்கின்றன. அந்த மனிதர் மகிழ்ச்சியான மனநிலையில் நடந்து சென்று கொண்டிருந்தால், அந்த வண்ணக் கொடிகளின் அசைவு அவருக்கு, வருக! வருக! என வரவேற்புக் கூறுவது போலத் தோன்றும். மாறாக அவர் பெருஞ்சோகத்தோடு நடந்து சென்று கொண்டிருந்தால், அக்கொடிகள் வராதே! வராதே! என்று மறித்து அசைவதுபோலத் தோன்றும். மனிதர் ஒருவர்தான்!
கொடியசைவும் ஒன்றுதான்! ஆனால் ஆழ்மனச் சிந்தைக்கு ஏற்ப அர்த்தப்பாடு மாறி விடுகிறது.
எப்படி முயன்றாலும், முயற்சி தோல்வியிலேயே முடிந்து விடுகிறதே! என வருத்தப்படுபவரா நீங்கள்? முதலில் உங்களின் சூழலை மாற்றுவதற்குமுன் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். ஈரமும் இளக்கமும் உடைய மண்ணில் விழும் விதையே செழித்து வளரும்.
மகிழ்ச்சியும் நம்பிக்கையும் உடைய மனத்தில் எழும் முயற்சிகளே வெற்றியை அடையும்.
யாரைப் பார்த்தாலும் முதல் புன்னகை நம்முடையதாக இருக்கட்டும்!.எதிரில் வருபவர் எதிரியாக இருந்தாலும் அவரையும் புன்னகைக்க வைத்து அவரையும் நம் பக்கம் மாற்றிவிடும் நமது புன்னகை. நமது வாழ்க்கையின் நோக்கத்தில் நன்மையும் செயல் ஊக்கமும் கலந்திருந்தால் மகிழ்ச்சி தாமாகவே நம்மிடம் ஒட்டிக்கொள்ளும்.அந்த மகிழ்ச்சி, காணும் மனிதர்கள் மற்றும் செயல்களில் எல்லாம் பற்றிக் கொள்ளும்!.
நகரத்தில் இருக்கும் ஒரு முதியோர் காப்பகத்திற்கு ஒரு நாள் இரண்டாயிரம் ரூபாய் மணி ஆர்டர் வந்தது. அடுத்து ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் இரண்டாயிரம் வீதம் பணம் வரத் தொடங்கியது; ஆறு மாதங்கள் கழிந்தவுடன், காப்பக நிர்வாகி, மணி ஆர்டரில் இருந்த முகவரியை வைத்து அனுப்பியவரைத் தேடிச் சென்றார் நகரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு கிராமத்தில், பணம் அனுப்பிய நபர் ஒரு சிறிய இட்லிக்கடை நடத்தி வந்தார்.
காணச் சென்றது காலை நேரமாகையால் வியாபாரம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது. காப்பக நிர்வாகி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அவரைத் தனியாக அழைத்துச் சென்ற இட்லிக் கடைக்காரர், " ஐயா! என் பெயர் சங்குவேல். எனக்கு 73 வயதாகிறது.அதோ அங்கே இட்லி அவித்துக் கொண்டிருக்கிறாளே அவள் என் மனைவி. அவளுக்கு வயது 62. நாங்கள் இட்லிக்கடை வைத்து சொற்ப லாபத்தில் சேவை மனப்பான்மையோடு வியாபாரம் நடத்தி வருகிறோம். காலம் இப்படியே போகாது.எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என் மனைவி தனியே கஷ்டப்பட நேரிடும்.
உங்கள் முதியோர் இல்லம் பற்றிக் கேள்விப்பட்டேன். மாதம் இரண்டாயிரம் என் மனைவிக்குத் தெரியாமல் அனுப்புகிறேன்.ஆயிரத்தை என் மனைவி பெயரில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்; மீதம் ஆயிரத்தை நன்கொடையாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஏதாவதொரு மாதத்தில் பணம் வரவில்லையென்றால் நான் இறந்து விட்டேன் என்று அர்த்தம். அப்போது இங்கே வந்து என் மனைவியை உங்கள் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்" என்று கண்கலங்கச் சொன்னார்.
காலம் நகர்ந்தது.இரண்டாண்டுகள் கழித்து ஒரு மாதத்தில் மணிஆர்டர் வரவில்லை. காப்பக நிர்வாகி ஒருநாள் காலை நேரத்தில் அந்த கிராமத்திற்குச் சென்றுவிட்டார். அந்த இட்லிக்கடை அதே பரபரப்போடு நடந்து கொண்டிருந்தது. முதியவரைத் தேடினார் காப்பக நிர்வாகி. காணவில்லை; கடைக்காரரின் மனைவி இவரைப் பார்த்துவிட்டார்.
"ஐயா என்கணவர் இருபது நாள்களுக்கு முன் இறந்துவிட்டார். உங்களைப் பற்றியும் காப்பகம் பற்றியும் ஏற்கனவே என்னிடம் சொல்லி இருக்கிறார். நானும் அங்கு வந்து விடலாம் என்றுதான் முடிவெடுத்தேன். ஆனால் ஊர்க்காரர்கள் பாசம் என்னைத் தடுத்துவிட்டது.
'ஆத்தா இங்கேயே இருந்து இட்லிக்கடை நடத்து ஆத்தா! உன்னைய நாங்க பார்த்துகிறோம்'னு சொல்லி மறிச்சுட்டாங்க. என் காலம் வரைக்கும் இங்கேயே இருந்து இவங்களுக்கு சேவை செய்யுறதுன்னு முடிவெடுத்துட்டேன். என் வீட்டுக்காரர் அனுப்பின மாதிரியே அடுத்த மாசத்திலர்ந்து உங்களுக்குப் பணம் அனுப்பி வைக்கிறேன்" என்றார். நாம் நல்ல மனத்தோடு சமூகத்திற்குச் சேவை செய்தால், அதன் பிரதிபலிப்பாய் சமூகமும் நமக்குச் சேவைசெய்யக் காத்திருக்கிறது'
தொடர்புக்கு 9443190098
- காசியில் இறப்பதால் எம பயமில்லாது போனாலும் ஒரு நாழிகையாவது பைரவரின் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
- காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது மாசி மகத்தன்று இத்தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.
உலகிலேயே புண்ணியத்தை அதிகம் வழங்கும் இடமாக 'காசி' தலம் கருதப்படுகிறது. அத்தகைய மகத்துவம் வாய்ந்த 'காசி' திருத்தலத்திற்கு 100 முறை சென்று வந்த பலனை தமிழகத்தில் கும்பகோணத்திற்கு அருகே உள்ள "ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி" கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தால் கிடைக்கும் என்று பிரமாண்ட புராணம் கூறுகிறது. இந்த ஆலயத்தின் பின்னணியில் உள்ள தல வரலாறு வருமாறு:-
உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் அதன் இறுதி காலத்தில் பறிக்கும் போது தனக்கு அவப்பெயர் ஏற்படுவதாக எமதர்மராஜா மிகவும் வருந்தினார். அதனால் 'திருவாரூர் தியாகராஜரிடம்' சென்று தனது குறையை தெரிவித்தார். அதற்கு இறைவனும், ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரியாக கூறினார். அதன்படி எமதர்மன் "ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி" கோவிலுக்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். எமதர்மனின் தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசி மாதம், பரணி நட்சத்திரத்தில் காட்சியளித்து எமதர்மனுக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.
எமதர்மனும் இறைவா அனைத்து உயிர்களையும் பறிக்கும் பதவியால் எல்லோரும் என்னை கண்டு பயந்து திட்டுகின்றனர். உயிர்களைப் பறிப்பதால் "பிரம்மஹத்தி தோஷம்" பிடித்து என்னை வாட்டுகிறது. எனவே அதிலிருந்து நீங்கும் வரம் வேண்டும் என்றார். எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன் எமதர்மா இனிமேல் யாரும் எமன் உயிரை பறித்துவிட்டான் என கூற மாட்டார்கள். நோய் வந்ததால், வயதாகி விட்டதால், விபத்து ஏற்பட்டு இறந்தான் என்றே கூறுவார்கள். அதனால் உனக்கு எந்த பழியும் பாவமும் ஏற்படாது, மேலும் நீ தவம் செய்த இந்த இடத்திற்கு புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தலத்தின் ஷேத்திர பாலகனாக நீ விளங்குவாய். இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பு என்னை தரிசிப்பார்கள் என்று கூறினார். அதன்படி இங்கு எமதர்மராஜனுக்கு முதல் வழிபாடு நடைபெறுகிறது.
யோக நிலையில் எமதர்மன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்குகிறது. காசியில் இறப்பதால் எம பயமில்லாது போனாலும் ஒரு நாழிகையாவது பைரவரின் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
ஆனால் ஸ்ரீவாஞ்சியத்தில் இறந்தவருக்கு எமபயம், பைரவ தண்டனை எதுவுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில் இறைவனை வணங்கி கொண்டு இருக்கிறார். எனவே எமதர்மன் பைரவர் இருவருக்குமே அதிகா ரம் இல்லாத இத்தலம் காசியை காட்டிலும் 100 மடங்கு உயர்ந்தது என்று முனிவர்கள் கூறுகின்றனர். ஸ்ரீவாஞ்சியத்தின் சிறப்பு குறித்து பிரமாண்ட புராணத்திலும் கூறப்பட்டு உள்ளது.
மக்கள் அனைவரும் கங்கையில் குளித்து தங்களது பாவத்தை தீர்ப்பதால் கங்காதேவியிடம் பாவம் சேர்ந்துவிட்டது. அதனால் தன்னிடம் சேர்ந்த பாவத்தை போக்க வேண்டும் என்று "கங்காதேவி" சிவபெருமானிடம் சென்று முறையிட்டாள். அதற்கு சிவபெருமான் பதில் கூறுகையில் உயிர்களைப் பறிக்கும் எமதர்ம னுக்கு பாவம் விமோசனம் அளித்த ஸ்ரீவாஞ்சியதிற்கு சென்று வணங்கினால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்று கூறினார்.

அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதியுள்ள 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் வந்திருப்பதாக ஐதீகம். அதனால் "குப்த கங்கை தீர்த்தம்" என்று அழைக்கப்பட்ட இங்கு உள்ள தீர்த்தம் தற்போது 'முனி தீர்த்தம்' என்று அழைக் கப்படுகிறது.
எனவே காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது மாசி மகத்தன்று இத்தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது. மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரக்காரர்கள், மேஷம், சிம்மம், கும்பம் ராசி மற்றும் லக்னக்காரர்கள் தங்கள் தோஷங்கள் நீங்குவதற்கு இங்கு வந்து பரிகாரம் செய்து வழிபடலாம்.
பதவி இழந்தவர்கள், பணி மாற்றம் விரும்புபவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் குப்த கங்கையில் குளித்து வாஞ்சிநாதரை வழிபடுவது சிறந்தது.
உயிரை மாய்த்திடும் பணியில் ஈடுபட்டிருக்கும் எம தர்ம ராஜன் தன் பணியின் கொடுமையினால் ஏற்பட்ட மனச்சுமை நீங்கிட, இத்தல ஈசனான வாஞ்சி லிங்கேஸ்வரரை வணங்கினார். அது முதல் எமனை சேத்திர பாலகராக நியமித்து, கோயிலின் அக்னி மூலையில் தனிக் கோயில் ஒன்றை நிர் மாணித்தார் ஈசன்.
தெற்கு நோக்கிய சந்நிதியில் எமன் நான்கு திருக்கரங்களுடன் பாசம், கதை, ஆலம் ஏந்தி இடக் காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தருகிறார். அவர் அருகில் முனிவர் போல். ஒரு வரது சிலை வடிவம் உள்ளது.
யோக நிலையில் எமன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும். காசியில் மரித்தால், எம பயமில்லாவிட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு, ஆனால், ஸ்ரீ வாஞ்சியத்தில் மரித்தவருக்கு எம பயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில், தமது தண்டங்களை யெல்லாம் கீழே வைத்து விட்டு, ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார்,
எமன், பைரவர் இருவருக்குமே அதிகாரமில்லாத இத்தலம், 'காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது' என முனிவர்கள் கூறுகின்றனர். பிரம்மாண்ட புராணத்திலும் விரிவாகக் கூறப் பட்டுள்ளது. ஒரு சமயம், திருமானுக்கும் லட்சுமி தேவிக்கும் ஊடல் ஏற்பட்டது. தேவி கண்காணாத தொலைவுக்குச் சென்று விடுகிறாள். அவளில்லாமல், திருமால் தவிக்கிறார். நல்லதொரு முடிவைக் கண்டிட மைத்துனன் சிவபெருமானை அணுகுகிறார் திருமால்.
இந்த நிலை கண்ட கயிலை நாதன் தேவியை அணுகி "உலகெல்லாம் போற்றித் துதிக்கப்படும் தேவி நீ இல்லையென்பதால், பொலிவிழந்து காணப்படுகிறது. தேவி! தயை கூர்ந்து உனது கணவனுடன் வாஞ்சையாக இருந்திட வருவாய்!'' என்று இறைஞ்சி கேட்கிறார் மகாதேவன்.
பிரிவால் வாடியிருந்த அன்னைக்கு இந்த அழைப்பு. ஆறு தலாக இருந்தது. கணவனுடன் சேர்ந்திட மன மகிழ்ந்து ஒப்புக் கொள்கிறாள். லட்சுமி தேவியை வாஞ்சையுடன் அழைத்தமையால், ஈசன் வாஞ்சி நாதேஸ்வரர் ஸ்ரீவாஞ்சி லிங்கேஸ்வரர் என்ற திருநாமங்களைப் பெற்றார். இந்தத் தலத்திற்கு 'ஸ்ரீவாஞ்சி யம்' என்ற தலப்பெயரும் கிடைத்தது.
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் அருகில் ஸ்ரீவாஞ்சியம் அமைந்துள்ளது. வியாசர் அருளிய ஸ்காந்த புராணம், பிரம்மாண்ட புராணம் ஆகியவற்றில் இந்தத் தலத்தின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது இதில் இருந்து கோவிலின் தொன்மையைப் புரிந்து கொள்ளலாம். இந்தத் தலத்தில் தேவர்களும் முனிவர்களும் கடும் தவமிருந்து சிவ பூஜை செய்தி ருக்கிறார்கள். தெய்வங்களே இங்கு வந்து, சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொண்டி ருக்கிறார்கள். அவ்வளவு ஏன்... எமதருமருக்கு சிவனார் அருளிய பேறு பெற்ற திருத்தலம் இது. ஆகவே இந்தத் தலத்தின் அம்மைக்கும் அப்பனுக்கும் வாகனத் தொண்டு செய்து வருகிறார். இதனால் எம தருமருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது.
நால்வர் பெரு மக்கள், அருண கிரிநாதர், வள்ளலார் பெருமான் ஆகியோரால் பாடல்கள் பெற்ற திருத்தலம் இது. இந்தத் தலத்துக்கு வந்து தரிசிக்கும் பாக்கியம் இருந்தால்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும் என்பது ஐதீகம். அற்புதமான ஆலயம். தலம், தீர்த்தம், மூர்த்தம் என விசேஷங்கள் கொண்ட கோவில். எம பயம் முதலான பலவற்றுக்கு பரிகாரத் தலமும் இதுவே! இந்த பிறவியில் ஒருமுறை யேனும் வாஞ்சியம் வந்து வாஞ்சி நாதரை தரிசித்துவிட்டு, எமதருமனையும் வணங்கினால், இந்த வாழ்க்கை நிம்மதியாகவும் நிறைவுடனும் அமைந்துவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
இந்தக் கோவிலின் தீர்த்தம், குப்த கங்கை எனப்படுகிறது. கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில், இங்கு வந்து நீராடிவிட்டு, இறைவனைத் தரிசித்தால் ஏழு ஜென்மப் பாவங்களும் தீரும் என்பது ஐதீகம்! குறிப்பாக, கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை இன்னும் விசேஷ மாகவும் கூட்டமாகவும் இருக்கும் என்கிறார்கள் பக்தர்கள்!
கார்த்திகை மாதம் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில், ஸ்ரீவாஞ்சியம் வாருங்கள். பிறவிப்பயனைப் பெறுங்கள். 7 ஜென்மப் பாவம் நீங்கி, புத்துணர்வுடன் வாழ்வீர்கள்! "காசியைவிட வீசம் அதிகம்" என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவத்தலமாக புகழ்ந்து கூறப்படுகிறது, இந்த ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்.
இங்கு இரண்டு நந்தி சிலைகள் உள்ளன. ஒன்று கோவிலின் கிழக்கு திசையிலும் மற்றொன்று மேற்கிலும் அமைந்துள்ளது.
இந்த கோவில் காசிக்கு சமமாக கருதப்படும் ஆறு சிவன் கோவில்களில் ஒன்றாகும். காசி விசுவநாதர் கோவிலுக்கு சமமான காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோவில்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
காவிரி ஆற்றங்கரையில் உள்ள திருவையாறு, திருவிடை மருதூர், மயிலாடுதுறை மயூரநாதர் சுவாமி கோவில், சாயாவனேசுவரர் கோவில், சாயாவனம். (பூம்புகார் அருகில் உள்ளது) திருவெண்காடு, ஸ்ரீவாஞ்சியம் கோவில்களுக்கு வருகை தருவது சிவ பக்தர்களின் பாவங்கள் மட்டுமல்லாது, அவரது மூதாதை யர்களின் பாவங்களையும் தீர்க்கும் என்று கூறப்படுகிறது. ஸ்ரீவாஞ்சியத்தில் எம தீர்த்தம் மற்றும் குப்த கங்கை ஆகியவை கோவில் தீர்த்தங்களாக உள்ளன. இந்த இடத்தில் பித்ரு தர்ப்பணம் செய்தால், அது புறப்பட்ட ஆத்மாக்களுக்கு இரட்சிப்பைக் கொடுக்கும் என்று தல வரலாற்றில் கூறப்பட்டு உள்ளது. ஸ்ரீவாஞ்சியத்தின் மண்ணில் புறப்படும் ஆத்மாக்களுக்கு வாஞ்சிநாத பகவான் மோட்சத்தை அளிப்பதால் இந்த இடத்தில் மரணம் புனிதமாகவும், இந்த இடம் காசிக்கு சமமாகவும் கருதப்படுகிறது.
இந்த கோவில் சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின் போது கூட திறந்திருக்கும் (இது கிரகணங்களின் போது மூடப்படும் அனைத்து கோவில்களுக்கும் முரணானதாகும்). பொதுவாக, கிராமத்தில் மரணம் ஏற்படும் போது அங்குள்ள கோவிலை மூடுவது வழக்கம். ஆனால், இந்த கிராமத்தில் யார் இறந்தாலும் வாஞ்சிநாதர் கோவில் மூடப்படாமல் திறந்திருக்கும். காசியில் உள்ள கங்கையை விட இங்குள்ள குப்தா கங்கை தீர்த்தம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. மகாமக தீர்த்தம் பற்றி அடுத்த வாரம் காணலாம்.
- அனுமனின் வார்த்தைகளைக் கேட்டுச் சீற்றமடைந்த ராவணன் அனுமனைக் கொல்லுமாறு கட்டளையிடுகிறான்.
- அவ்வையார் மன்னர்களின் இடையே பெண் தூதராக இயங்கியிருக்கிறார் என்ற விவரத்தைச் சங்கப்பாடல் மூலம் அறியலாம்.
ஒருவரிடமிருந்து மற்றவருக்குச் செய்தியை எடுத்துச் செல்பவர்களைத் தூதர்கள் என்கிறோம். தூதனுப்பும் மரபு எல்லா நாடுகளிலும் எல்லா இலக்கியங்களிலும் உண்டு. இன்றும் அரசியல் ரீதியாக தூதர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவதைப் பார்க்கிறோம்.
நமது ஆன்மிகம் பல தூதுச் செய்திகளைப் பேசுகிறது. ராமாயணம், மகாபாரதம் ஆகிய இருபெரும் இதிகாசங்களிலும் தூது சென்றது பற்றிய செய்திகள் வருகின்றன.
கம்ப ராமாயணத்தில் இரண்டு தூதர்கள் வருகிறார்கள். இருவருமே முக்கியமானவர்கள் என்றாலும் அவர்களில் ஒருவன் மிக முக்கியமானவன். அவன் இன்று தெய்வமாகவே வழிபடப்படும் அனுமன்.
இன்னொருவன் வாலியின் பிள்ளையும் வாலியின் மரணத்திற்குப் பிறகு சுக்கிரீவன் அணியில் இளவரசனாக முடி சூட்டப்பட்டவனுமான அங்கதன்.
அங்கதன் போர்க்காலத்தில் ராமபிரானால் தூதனாக ராவணனிடம் அனுப்பப்படுகிறான். தூது செல்ல அவனே தகுந்தவன் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகிறான் அவன்.
ஆனால் அனுமன் அப்படி தூதனாக அனுப்பப்பட்டவன் அல்ல. ஆனாலும் சூழ்நிலை கருதி தூதனுக்குரிய வேலையை அவன் செய்கிறான்.
போருக்கு முன்பே சீதாப் பிராட்டியைத் தேடி இலங்கை சென்றவன் அவன். அங்கே ராவணனை நேருக்குநேர் சந்தித்து ராமபிரானின் தூதனாகத் தானே விரும்பி இயங்கியவன்.
அனுமனின் வார்த்தைகளைக் கேட்டுச் சீற்றமடைந்த ராவணன் அனுமனைக் கொல்லுமாறு கட்டளையிடுகிறான். ஆனால் நியாய உணர்ச்சி கொண்ட விபீஷணன் குரல் அந்தக் கட்டளைக்கிடையே குறுக்கிடுகிறது.
அனுமன் தூதன் என்றும் தூதர்களைக் கொல்வது தர்ம சாஸ்திரப்படித் தவறு என்றும் எடுத்துச் சொல்கிறான் விபீஷணன். இவனைத் திரும்ப அனுப்பினால் தானே இவன் ராமனிடம் சென்று நம் வலிமையைச் சொல்வான், இவனைக் கொன்றுவிட்டால் அது நிகழாதல்லவா என்ற விபீஷணனின் விவாத பூர்வமான பேச்சு அரசவையில் எடுபடுகிறது.
அனுமனுக்குச் சிறிய தண்டனை கொடுத்து அனுப்பிவிடலாம் என்ற விபீஷணனின் யோசனையை ராவணன் ஏற்கிறான். அதன்படி அனுமனின் வாலில் தீ வைக்கப்படுகிறது. வால் தானே ஒரு வானரத்தின் முக்கியமான உறுப்பு! அதைச் சேதப்படுத்திவிட நினைக்கிறான் ராவணன்.
அவன் அனுமன் வாலில் தீ வைத்தான்! அதனால் அனுமன் அழித்தது இலங்கை என்னும் தீவைத் தான்!

இலங்கை முழுவதும் தாவித் தாவிச் செல்கிறான் அனுமன். இலங்கையின் பெரும்பகுதிகள் அனுமன் வாலில் வைத்த நெருப்பால் சுட்டுக் கருகின. ஆனால் சீதாதேவி இருந்த அசோக வனப்பகுதி மட்டும் நெருப்பால் எரியுண்ணப்படாமல் அப்படியே இருந்தபடி இருந்தது.
அந்த விந்தையைப் பார்த்து அனுமன் வியக்கிறான். கற்பின் கனலியான சீதையைக் கனல் சுடாது என்பதை அனுமன் புரிந்துகொண்டு சீதாதேவியைக் கைகூப்பி வணங்குகிறான்.
(சீதை இருந்த இடம் நெருப்பால் பாதிக்கப்படாமல் இருந்ததை, இலங்கையிலிருந்து மீண்டுவந்த அனுமன் ராமபிரானிடம் பிற்காலத்தில் சொல்லியிருக்க வேண்டும். எனவே நெருப்பு சீதாதேவியை ஒன்றும் செய்யாது என்பது அக்கினிப் பிரவேசத்தின்போது ராமனுக்கு உறுதியாகத் தெரியும் என்று கொள்ள இடமிருக்கிறது. அந்த நம்பிக்கையில்தான் ராமன் தன் காதல் மனைவியை அக்கினிப் பிரவேசத்திற்கு உட்படுத்தினான் எனவும் கருத முடியும்)
ராமாயணத்தில் மட்டுமல்ல, மகாபாரதத்திலும் தூதன் வருகிறான். ராமாயணத்தில் கடவுளின் அவதாரமான ராமன் தூது செல்லவில்லை. ராமனுக்காக அவன் அணியைச் சேர்ந்த அனுமனும் அங்கதனும்தான் தூது சென்றார்கள்.
ஆனால் மகாபாரதத்தில் தன் அன்பர்களான பாண்டவர்களின் பொருட்டாகக் கடவுளான கண்ணனே தூது செல்கிறான்.
அப்படிச் சென்றபோது, துரியோதனன் அரண்மனையில் தங்காமல் தன் பக்தரான விதுரர் இல்லத்தில் தங்கினான் பரந்தாமன். கடவுள் வசதிகளை விரும்புபவன் அல்ல, பக்தியை அங்கீகரிப்பவன் அல்லவா?
கண்ணன்மேல் அளவற்ற பக்தி செலுத்தும் விதுரரின் மனைவி கண்ணனை நேரில் தரிசித்த பரவசத்தில் வாழைப் பழத்தை உரித்து பழத்தை எறிந்து அதன் தோலைக் கண்ணனுக்குத் தந்தாள். பக்தி அவள் கண்ணை மறைத்தது. ஆனால் அவள் பக்தியை மெச்சி அவள் அன்போடு கொடுத்த வாழைப் பழத்தின் தோலை உண்டான் கண்ணன்.
தான் மேய்க்கும் மாடுகள் உண்ணும் வாழைப்பழத் தோலைத் தானும் உண்டு பார்க்கலாம் என அந்த இடையனுக்குத் தோன்றியதோ என்னவோ! பக்தியை மட்டுமே பிரதானமாகக் கருதும் கடவுள் நிவேதனப் பொருள் என்ன என்பதைப் பார்ப்பதில்லையே?
பாண்டவர்களுக்காக ஐந்து ஊர் அல்லது ஐந்து வீதி, அல்லது ஐந்து வீடு எனக் கண்ணன் கெஞ்சிக் கேட்டதும் ஊசிமுனை அளவுகூட இடம்தர மாட்டேன் என துரியோதனன் ஆணவத்தோடு பதில் சொன்னதும் மகாபாரதத்தில் உள்ள செய்திகள்.
கண்ணன் விரும்பியபடியே கண்ணன் தூது தோல்வியில் முடிந்தது. அப்படி கண்ணன் தூது தோல்வியில் முடியாவிட்டால் கண்ணன் நடத்த விரும்பிய மகாபாரத யுத்தமேது? இறுதி வெற்றிக்குப் பிறகு பாண்டவர்களுக்கு முழு ராஜ்ஜியமும் கிடைப்பதேது?
பக்தி இலக்கியமான சைவம் சார்ந்த பன்னிரு திருமுறைகளிலும் வைணவம் சார்ந்த நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திலும் இறைவனிடம் காதல் கொண்ட தலைவி இறைவனுக்குத் தூது அனுப்புவதாய் அமைந்த பாடல்கள் பல உள்ளன.

திருப்பூர் கிருஷ்ணன்
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியிலும், காப்பியத் தலைவன் சீவகனிடம் குணமாலை என்ற தலைவி தான் வளர்க்கும் கிளியைத் தூதனுப்பும் செய்தி இடம் பெற்றுள்ளது.
சங்க காலத்தில் பெண் தூதுவர்கள் கூட இருந்திருக்கிறார்கள். அவ்வையார் மன்னர்களின் இடையே பெண் தூதராக இயங்கியிருக்கிறார் என்ற விவரத்தைச் சங்கப்பாடல் மூலம் அறியலாம்.
அதியமான் மேல் போர் தொடுக்க நினைத்த தொண்டைமானிடம் தானே விரும்பித் தூது செல்கிறாள் அவ்வை. `அதியமான் போர்க்கருவிகள் தொடர்ந்து போரில் ஈடுபட்டதால் நுனி மழுங்கிச் சிதைந்தவை. உன்னுடைய போர்க் கருவிகள் புத்தம் புதிதாக இருக்கின்றன` என தொண்டைமானிடம் எடுத்துச் சொல்கிறாள்.
அதன்மூலம் `அதியமானிடம் நீ போரிடுவது சரியல்ல, அப்படிப் போரிட்டால் நீ தோற்றுத்தான் போவாய்` என்பதை அவனுக்கு மறைமுகமாக உணர்த்துகிறாள்.
இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட அவ்வையின் அழகிய தமிழ்ப் பாடல் உதவுகிறது. போர் நிறுத்தப்படுகிறது. போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்திய அந்தப் பாடல் இதோ...
இவ்வே
பீலி அணிந்து மாலை சூட்டி
கண்திரள் நோன்தாழ் திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே, அவ்வே
பகைவர்க்குத்திக் கோடுநுனி சிதைந்து
கொல்துறைக் குற்றிலமாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல் எம் கோமான் வைந்நுதி வேலே!
அவ்வை நிகழ்த்திய அரசியல் தூது சங்க காலத்திலேயே தமிழ்ப் பெண்கள் அரசியலிலும் அரசாங்கத்திலும் ஈடுபட்டிருந்ததைப் புலப்படுத்துகிறது. இன்றைய பெண் அரசியல்வாதிகளுக்கு அவ்வையார்தான் முன்னோடி.
அரசியல் தூது அல்லாமல் இலக்கியத் தூதும் பின்னாளில் வளர்ந்தது. தொண்ணூற்றாறு வகைப் பிரபந்த இலக்கியங்களில் ஒரு வகையாக தூது இலக்கியம் அமைந்திருக்கிறது. தமிழின் இலக்கியப் பரப்பில் கணிசமான பங்கு வகிக்கிறது தூது இலக்கியம்.
நாரை விடு தூது, கிளி விடு தூது என்றெல்லாம் தூது நூல்கள் பிறந்தன. தலைவி தலைவனுக்குக் கிளியையும் நாரையையும் இன்னும் மற்ற பறவைகளையும் தூதனுப்பினாள்.
தமிழையே காதல் தூதாக அனுப்பிய தமிழ் விடு தூது என்ற நூலும் தமிழில் உண்டு. அவ்வளவு ஏன்? செருப்பு விடு தூது, பணவிடு தூது போன்றவையும் கூட உண்டு.
அழகர் கிள்ளை விடுதூது, வண்டுவிடு தூது, காக்கை விடுதூது, காந்தியடிகள் நெஞ்சு விடுதூது, மயில் விடுதூது, மான்விடு தூது, தென்றல் விடுதூது, புகையிலை விடுதூது, முகில் விடுதூது எனத் தமிழில் புகழ்பெற்ற தூது நூல்கள் பல உண்டு. பெரும்பாலான நூல்கள் ஆன்மிகம் தொடர்பானவை. பயில்பவர் மனத்தில் பக்தி உணர்ச்சியை அதிகரிப்பவை.
திருவள்ளுவர் திருக்குறளில் தூது என்ற ஒரு தனி அதிகாரத்தையே அமைத்துள்ளார்.
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் நீ கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்` என்ற பாரதியார் பாடல், கண்ணன்மேல் காதல் கொண்ட தலைவி தூது அனுப்புவதாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது.
தூது இலக்கியம் வடமொழியிலும் உண்டு. காளிதாசன் மேகத்தை தூது விட்ட அழகிய காதல் கதையான மேக சந்தேசம் என்ற தூது நூல் பெரும்புகழ் பெற்றது.
`காதல் மணம் கொண்ட பாசம் அந்தக்
கவிஞனின் மேக சந்தேசம்..
தூது செல்லும் ஒரு மேகம்..அதைச்
சொல்வது மேக சந்தேசம்...`
என்பது மகாகவி காளிதாஸ் படத்தில் வரும் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்.
மேக சந்தேசம் நூல் வியக்கத்தக்க வகையில் அற்புதமானது. மேகத்தைத் தூதுவிடும் காளிதாசன் எந்தப் பிரதேசத்தையெல்லாம் தாண்டி மேகம் செல்ல வேண்டும் என திசைகளைக் கூறியும் அடையாளங்களைக் கூறியும் மேகத்திடம் அறிவுறுத்துகிறான்.
அந்த வர்ணனைகள் பாரத தேசத்தின் பூகோளம் முழுவதையுமே அறிந்தவன் காளிதாசன் என்பதைப் புலப்படுத்துகின்றன. எப்படி எல்லா இடங்களுக்கும் பயணம் செய்து அத்தகைய மாபெரும் பூகோள அறிவை அவன் பெற்றான் என்பது மலைப்புத் தருகிறது.
நம் எண்ணங்களை இறைவனுக்குத் தூதாக அனுப்புவோம். இறைவனைப் பிரார்த்தித்து அவன் அருளைப் பெறுவோம்.
தொடர்புக்கு,
thiruppurkrishnan@gmail.com
- பல மூலிகைகள் சோரியாசிஸ் நோய்க்கு பலனளிக்க கூடியதாக உள்ளன.
- பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகை மஞ்சள்.
பேரன் பேத்திகளோடு கொஞ்சி விளையாடும் முதுமைப் பருவத்தில், அவர்களை தொடுவதற்கே சங்கடமான சூழ்நிலையை உண்டாக்கி உடலோடு மனதையும் புண்படுத்தும் நோய்களாக இருப்பவை தோல் சார்ந்த நோய்கள். அடுத்த தலைமுறை சந்ததிகளுடன் இனிதாக பயணிக்க ஆரோக்கியம் அவசியம். ஆனால் அடுக்கடுக்கான மருந்து மாத்திரைகள், அவற்றிற்கு கட்டுப்படாத நோய்நிலைகள் என்று வாழ்வை நலமாக்க முதுமையில் போராட வேண்டியதாய் இருக்கிறது. அந்த நலவாழ்விற்கான போராட்டத்தில் தோல் நோய்கள் கூடுதல் துயரம் தான்.
அத்தகைய தோல் நோய்களில் சருமம் மட்டுமின்றி, தலை முதல் நகம் வரை எந்த உறுப்பு பாகுபாடும் இன்றி அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும் நோய்நிலையாக இருப்பது 'சோரியாசிஸ்' எனும் 'காளாஞ்சகப்படை'. உலக அளவில் கிட்டதட்ட 3 சதவீதம் பேருக்கு இந்த சோரியாசிஸ் உள்ளது. அதுவும் அறுபதைக் கடக்கும் முதுமையில் கிட்டத்தட்ட 15 சதவீதம் பேருக்கு இந்த நோய்நிலை வருத்தத்தை உண்டாக்க கூடியதாக உள்ளது.
சோரியாசிஸ் நோயானது உடலின் நோய் எதிர்ப்புசக்தியின் தானியங்கு செயல்பாட்டால் உண்டாவதாக உள்ளது. இது பருவநிலை மாறும் போது அதிகரிப்பதும் குறைவதுமாக மாறி மாறி தோன்றக்கூடியது. முதுமையில் திரும்ப திரும்ப உண்டாகி மனதளவில் பாதித்து, நாளடைவில் சோரியாசிஸ் சார்ந்த மூட்டுவலியை உண்டாக்கி மூட்டுக்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
முதுமையில் அதிகம் பேருக்கு காணும் சோரியாசிஸ் நோயில் தோல் தடித்து சிவந்து, வெள்ளி போன்ற வெள்ளை நிற செதில்கள் காணும். அவ்வப்போது அவை உதிரக்கூடும். சிலருக்கு சிறிய புள்ளி போன்ற ரத்தகசிவும் உண்டாகும். இத்துடன் பெரும்பாலும் நமைச்சலும் உண்டாகக்கூடும். கெரட்டினோ சைட்கள் எனும் ஒருவகை செல்களின் அதிகப்படியான பெருக்கமும், அசாதாரண வளர்ச்சியும், தோலின் அழற்சியும் இந்நோய்க்கு முக்கிய காரணமாக உள்ளன.
நூற்றுக்கணக்கான தோல் நோய்கள் இருக்கக்கூடிய சூழலில் சோரியாசிஸ் மட்டும் அதிக முக்கியத்துவம் பெறக் காரணம், இந்நோய் சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பல்வேறு தொற்றா நோய்களோடு தொடர்புடையது என்பது தான். இதனால் உண்டாகும் பின் விளைவுகளும் அதிகம். சோரியாசிஸ் நோய்க்கும் மாரடைப்புக்கும் கூட நெருங்கிய தொடர்புடையதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுவது வருத்தம் தான்.
சித்த மருத்துவக் கூற்றுப்படி வாதமோடு சேரும் கபம் தோலினை பாதிக்கும் போது உண்டாகும் நோய்நிலையாக உள்ளது சோரியாசிஸ். வாதகபம் மற்றும் கபவாதம் ஆகியவற்றின் கூட்டால் உண்டாகும் நோய்நிலைகள் தீருவது கடினம் என சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. அதன்படி இது முழுமையாக தீராமல் தொடர்ந்து வந்து மன உளைச்சல் தரும். இந்நிலையில் வாதம், கபம் இரண்டையும் தணிக்கும் மூலிகை மற்றும் மருந்துகள் இந்நோய்க்கு பலன் தரக்கூடியன.
சித்த மருத்துவ மூலிகைகளில் சீந்தில், பறங்கிப்பட்டை, நீரடிமுத்து, சேராங்கொட்டை, அமுக்கரா கிழங்கு, வெட்பாலை, அவுரி இலை, கருஞ்சீரகம், கார்போகரிசி, மஞ்சள் போன்ற பல மூலிகைகள் சோரியாசிஸ் நோய்க்கு பலனளிக்க கூடியதாக உள்ளன.
தோல் நோய்களுக்கு பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகை 'மஞ்சள்'. இதில் உள்ள 'குர்குமின்' சோரியாசிஸ் நோயில் தோலில் அழற்சியை ஏற்படுத்தும் கப்பா-பி எனும் வேதிக்காரணியை தடுக்கும் தன்மை கொண்டதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. சோரியாசிஸ் நோய்க்கு எடுக்கும் மருந்து மாத்திரைகளுடன், தினசரி 5 கிராம் மஞ்சளை பாலில் கலந்து எடுக்க நோயின் தன்மை குறையும். சோரியாசிஸ் நோயின் பின் விளைவுகளான மூட்டு வீக்கம் ஏற்படாமலும் தடுக்க உதவும்.

சோ.தில்லைவாணன்
சோற்றுக்கற்றாழை மூலிகை சோரியாசிஸ் நோயில் அதிக நன்மைகளை தரக்கூடிய இயற்கை கொடுத்த வரம். இதில் உள்ள 'ஆந்த்ரோகுயினோன்' வேதிப்பொருள் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை உடையது. கற்றாழையில் உள்ள 'சாலிசிலிக் அமிலம்' எனும் அழற்சியைப் போக்கும் வேதிப்பொருள் சோரியாசிஸ் நோயில் உதிர்ந்த செதில்களுக்கு புத்துணர்ச்சி தரவும், தோலின் தேய்மானத்தை சரி செய்யவும் உதவும்.
சித்த மருத்துவ மூலிகையான பரங்கிப்பட்டை தோல் நோய்களைப் போக்கும் பெரும்பாலான சித்த மருந்துகளில் சேருவது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள 'குர்செட்டின்' எனும் வேதிப்பொருள் சோரியாசிஸ் நோயில் உண்டாகும் தோல் தடிப்பினைக் குறைத்து இயல்பு நிலைக்கு திரும்ப உதவும். மேலும் அதில் உள்ள இயற்கை ஸ்டீராய்டு வகை வேதிப்பொருள் தோலில் காணும் அழற்சியை போக்கி நோயின் தீவிர தன்மையைக் குறைக்க உதவும். சித்த மருந்தான பறங்கிப்பட்டை சூரணத்தை பாலில் கலந்து எடுத்துக்கொள்ள மேற்கூறிய நன்மைகளைத் தரும். அதே போல் அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கான கருஞ்சீரகம் சோரியாசிஸ் நோய்நிலையில் பலன் தரக்கூடியது. இதனை கொண்டு செய்யப்படும் 'கருஞ்சீரகத் தைலம்' சோரியாசிஸ் நோய்நிலையில் மேலுக்கு தடவி வர நல்ல பலன் தரும்.
இதில் உள்ள 'தைமோகுயினோன்' வேதிப்பொருள் உடலில் பல்வேறு நோய்களுக்கு காரணமாகும் அழற்சிகளை தடுத்து பலன் தரக்கூடியது.
தோல் வறட்சியைப் போக்கும் அருகம்புல் சேர்ந்த அருகன் தைலம், புங்கன் விதை சேர்ந்த புங்கன் தைலம், வெட்பாலை இலை தைலம், அவுரி இலை தைலம் போன்ற சித்த மருத்துவ வெளிபிரயோக மருந்துகள் சோரியாசிஸ் நோயில் தோல் அழற்சியைப் போக்கி நன்மை தரவல்லன. அதனோடு கருஞ்சீரகம் மற்றும் சோற்றுகற்றாழை சேர்ந்த மருந்துகள் சோரியாசிஸ் நோயில் சிறப்பாக செயல்பட்டு பழைய தோல் இயல்பு நிலைக்கு திரும்ப உதவுவதாக உள்ளன.
சித்த மருந்தான 'வெட்பாலை தைலம்' சோரியாசிஸ் நோய்க்கு பிரசித்தி பெற்ற ஒன்று. இதனை நோயின் தன்மைக்கு ஏற்றாற் போல் வெளி உபயோகம் மட்டுமின்றி உள்மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு. வெட்பாலை இலையில் உள்ள இயற்கை நிறமிகளான கேம்ப்பெரால், குர்சிட்டின் இரண்டும் தோல் சிதைவினை உண்டாக்கும் நச்சுப்பொருட்களை நம் உடலில் இருந்து நீக்கி சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட தோலை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும்.
அதே போல் கருஞ்சீரகம் மற்றும் இயற்கை சாயத்தை கொண்ட அவுரி இலை தைலங்களும், சோரியாசிஸ் நோய் நிலையில் வெளிபிர யோகமாக பயன்படுத்த நல்ல பலன் தருவதாக உள்ளன. இயற்கை முடிசாயங்களை தயாரிக்க உதவும் அவுரி இலையில் உள்ள இயற்கை நிறமிகள் சோரியாசிஸ் நோயில் தோலின் இன்னலை போக்க உதவும். மூலிகை மருந்துகளை கடந்து இன்னும் பல தாது கலப்புள்ள மருந்துகள் முதுமையில் சோரியாசிஸ் நோயில் பலன் தரக்கூடியதாக உள்ளன.
சோரியாசிஸ் நோயினை 40-60 சதவீதம் வரை அதிகரிக்ககூடியதாக இருப்பது மன அழுத்தம் என்று நவீன ஆய்வுகள் தம்பட்டம் அடித்து கூறுகின்றன. முதுமையில் மன அழுத்தத்திற்கு பஞ்சமா என்ன? அவ்வாறு இருக்கையில் நோய் தன்மை குறைவது கடினம் தான். ஆகவே மன அழுத்தத்தைப் போக்க யோகாசன இருக்கை நிலைகளும், தியானமும் பழகுவது நோயின் தன்மையைக் குறைக்க உதவும்.
அதே போல் மன அழுத்தம் போக்கி சோரியாசிஸ் நிலையில் பலன் தருவதாக இருக்கும் சித்த மருத்துவ மூலிகை 'இந்தியன் ஜின்செங்' எனப்படும் 'அமுக்கரா கிழங்கு'. அமுக்கரா பொடியை கொண்டு மேற்கொண்ட ஒரு ஆய்வில் எட்டு வாரங்கள் உட்கொண்டவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பதாக 'ஆக்ஸ்போர்டு மகிழ்ச்சி கேள்வித்தாள்' எனும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
மேலும் அமுக்கராவில் உள்ள வேதிப்பொருட்கள் மன அழுத்தம் தூண்டும் ஹார்மோன் சுரப்புகளை குறைப்பதாக உள்ளதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. ஆகவே சோரியாசிஸ் நோய்நிலையில் அமுக்கரா சூரண சித்த மருந்தை பாலில் கலந்து எடுத்துக்கொள்ள, மன மகிழ்ச்சி உண்டாவதோடு நோயின் தன்மையைக் குறைக்க உதவும். 'வித்தாபெரின்-ஏ' எனும் வேதிமூலக்கூறு அமுக்கரா மூலிகையின் மகத்தான மருத்துவ தன்மைக்கு காரணமாகின்றது.
பதப்படுத்தப்பட்ட உணவும், செறிவுற்ற கொழுப்பு அமிலம் தோய்ந்த உணவுப் பண்டங்களும், இனிப்பு பண்டங்களும், இறைச்சி உணவுகளும், மதுப்பழக்கமும் உடலில் பல்வேறு வேதிகாரணிகளை தூண்டுவதன் மூலம் சோரியாசிஸ் நோயின் தன்மையை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
மாறாக வைட்டமின் டி, வைட்டமின் பி-12, செலினியம், நார்ச்சத்துக்கள், செறிவுறா கொழுப்பு அமிலம் சேர்ந்த உணவுகள் சோரியாசிஸ் நோய்க்கு காரணமாகும் அழற்சி வினைகளை தடுத்து நோயினை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் என்கின்றன ஆய்வுத் தரவுகள். எனவே நமது பாரம்பரிய உணவுகளை நாடுவது வெறும் வாய் ருசிக்காகவும், வயிற்று பசிக்காகவும் என்பதோடு இன்றி, பல்வேறு நோய்களையும் தடுக்க வல்லது என்பதற்கு இது மிகப்பெரும் சான்று.
அவ்வப்போது வாதம் குறைக்கும் மலமிளக்கி மருந்துகளும், வாரம் இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் குளியலும், இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை எழுதலும், இயற்கை உணவு மற்றும் மருந்துகளை நாடுவதும் போன்ற பாரம்பரிய வாழ்வியல் வழிமுறைகள் சோரியாசிஸ் நோயின் தாக்கத்தைக் குறைத்து முதுமையை நலமாக்கும். முக்கியமாக சோரியாசிஸ் நோய் ஒரு தொற்றுநோய் அல்ல. இதனை அனைவரும் புரிந்துகொண்டு, முதியோர்களை அரவணைத்து ஆறுதல் தருவதும், அன்பை பரிமாறுவதும் அவசியமான ஒன்று.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com
- பசியின் கொடுமையை இளம்வயதிலே அனுபவித்தவர் புரட்சித்தலைவர்.
- புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும், நாட்டுக்கு ஒரு தேவை என்றாலும் முதல் உதவி செய்யும் நபராக புரட்சித்தலைவரே இருந்துவந்தார்.
இந்திய திருநாட்டிலும், உலகத்திலும் எத்தனையோ அரசியல் தலைவர்கள், தியாகிகள் தோன்றியிருக்கிறார்கள். ஆனால், தான் உழைத்து சம்பாதித்த பணத்தை, வாழும் காலம் முழுவதும் கொடுத்துக்கொண்டே இருந்த ஒரே ஒரு தலைவர் என்றால், அது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மட்டும்தான்.
அதேபோல் இந்த உலகிலேயே திரைப்படக் கலையை மிகச்சிறப்பாக புரிந்துகொண்டு, அதன்மூலம் மக்களுக்கான வாழ்வியல் பண்புகளை, அறம் சார்ந்த கருத்துகளை பாடல்களாக, வசனங்களாக, காட்சியமைப்புகளாகப் புகுத்தி சமூகப்புரட்சி நிகழ்த்தியவரும் புரட்சித்தலைவர் மட்டும்தான்.
சினிமாவில் தான் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம், ஆட்சிக்கு வந்தபிறகு நிறைவேற்றிக் கொடுத்த ஒரே தலைவரும் புரட்சித்தலைவர் மட்டும்தான். கலியுக வள்ளல் புரட்சித்தலைவரின் பிறந்த இந்நாளில் அவர் சமூகத்திற்கும், நாட்டிற்கும் செய்த நன்மைகளை பட்டியலிட ஏடும், நாளும் போதாது. எனவே, ஆட்சியில் பாமர மக்களுக்கு அவர் செய்த ஒருசில சாதனைகளை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பசியின் கொடுமையை இளம்வயதிலே அனுபவித்தவர் புரட்சித்தலைவர். அதனாலே தன்னை சந்திக்க வரும் அத்தனை பேரையும் முதலில் சாப்பிட வைத்து, அதன்பிறகே அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்துதருவார். ஏழையின் மகிழ்ச்சியில் இறைவனைக் கண்டவர் புரட்சித்தலைவர்.
தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மாணவர்கள் மட்டுமின்றி குழந்தைகள், முதியோர்களும் பட்டினியோடு இருக்கக்கூடாது என்பதற்காகவே அனைவருக்கும் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். அத்துடன் இலவச புத்தகம், இலவச சீருடை, இலவச காலணி, இலவச பல்பொடி என்று மாணவர்கள் படிப்பதற்குத் தேவையான அத்தனை உதவிகளும் செய்துகொடுத்தார்.

எம்.ஜி.ஆருடன், சைதை துரைசாமி (பழைய படம்)
ரேஷன் கடைகளில் நடைபெற்ற ஊழல்கள், செயற்கை தட்டுப்பாடுகளை நீக்கி அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் 22 ஆயிரம் புதிய ரேஷன் கடைகளை உருவாக்கினார். வயிறார உண்ட மக்கள் மனதார வாழ்த்திய காரணத்தாலே, மறையும் வரையில் புரட்சித்தலைவர் வெற்றி மேல் வெற்றி அடைந்தார். ரேஷன் அரிசி தருவதற்கு மத்திய அரசு சுணக்கம் காட்டிய நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்து காரியம் சாதித்தவர்.
பரம்பரையாக வந்த கர்ணம், தலையாரி பதவிகளில் இருந்த சீர்கேடுகளை ஒழித்துக்கட்டி கிராம நிர்வாக அலுவலர் என்ற வி.ஏ.ஓ. பதவியை உருவாக்கி அரசுக்கும், மக்களுக்கும் இடையிலிருந்த இடைவெளியைக் குறைத்தார். படிக்காத பாமர மக்களையும், ஏழைகளையும் துன்புறுத்தி வந்த சைக்கிளில் 'டபுள்ஸ்', '41 கிளாஸ்' எனும் சந்தேக வழக்கு போன்ற அடக்குமுறை சட்டங்களை நீக்கி ஏழைகள் வயிற்றில் பால் வார்த்தார்.
குடிசை வீடுகளுக்கு ஒரு விளக்குத் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரையிலும் மாதந்தோறும் உதவித்தொகை, முதியோர்களுக்கு உதவித்தொகை, மகளிர் காவல் நிலையம் போன்ற புரட்சிகரமான திட்டங்களை எல்லாம் தமிழகத்திற்கு முதன்முதலில் கொண்டுவந்தவர் புரட்சித்தலைவர்.
பெண்களுக்காக அன்னை தெரசா பல்கலைக்கழகம், மாணவர்களின் கம்ப்யூட்டர் திறன் வளர்ப்பதற்காக சுயநிதி பொறியியல் கல்லூரிகள், மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு, இடஒதுக்கீட்டில் புரட்சி, தெலுங்கு கங்கை திட்டம் போன்ற தனித்தன்மையான நலத்திட்டங்களைக் கொண்டுவந்தார்.
மாற்றுத்துணி இல்லாமல் ஏழைகள் கஷ்டப்படுவதை கண்டு வருந்தியே, இலவச வேட்டி-சேலை திட்டத்தை கொண்டுவந்தார். அதோடு ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதி, தாலிக்குத் தங்கம், விதவைகளுக்கு உதவித்தொகை, விதவை மறுவாழ்வுத் திட்டம் என புரட்சித்தலைவர் ஏழைகள் நலனுக்காகவே திட்டங்களைத் தீட்டினார்.
முதலமைச்சராக மட்டுமல்ல, அவர் நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய காலம் முதலே உழைத்து சம்பாதித்த பணத்தை மக்கள் சேவைக்குப் பயன்படுத்தினார். 1959-ம் ஆண்டிலேயே தன்னுடைய தாயார் பெயரில் ரூ.3 லட்சத்தில் தொடங்கப்பட்ட, 'தி சத்யா எஜூகேசனல் அண்ட் சாரிட்டபிள் சொசைட்டி' என்ற அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் மருத்துவத் தொண்டு செய்தவர். புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும், நாட்டுக்கு ஒரு தேவை என்றாலும் முதல் உதவி செய்யும் நபராக புரட்சித்தலைவரே இருந்துவந்தார்.
அதனால்தான், மனிதநேயத்தின் மனித அவதாரமாக புரட்சித்தலைவரை அவரது பக்தர்களும், ரசிகர்களும், தொண்டர்களும் வணங்கி வருகிறார்கள். எந்த பிரதிபலனும் பாராமல் தங்களுடைய சொந்த செலவில் காலம் முழுவதும் மக்கள் சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இவர்கள் அனைவரையும் இந்த தருணத்தில் வணங்கி, உறுதுணையாக நிற்பதுடன், சேவையின் மூலம் புரட்சித்தலைவரின் புகழை காலம் முழுவதும் மக்களிடையே கொண்டுசென்று, மனிதநேயத்தை வளர்ப்போம்.
- சைதை துரைசாமி,
பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்
- சூரிய தோஷம் கடுமையாக இருந்தால் தந்தை வழி உறவுகளை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
- சந்திரனால் ஒருவருக்கு திருமண தோஷம் ஏற்பட்டதாக தெரிய வந்தால் அவர் அம்பாளை வழிபட வேண்டும்.
ஒருவருக்கு திருமணம் தாமதம் ஆகிக் கொண்டே இருக்கிறது என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். ஜாதக ரீதியாக பார்த்தால் நிச்சயமாக ஏதாவது கிரக தோஷம் இருப்பதாக ஜோதிடர்கள் சொல்வார்கள். நவக்கிரகங்களில் எந்த கிரகத்தின் அமைப்பு சரியில்லாமல் போனாலும் அதனால் நிச்சயமாக பாதிப்பு ஏற்படும்.
சில கிரக அமைப்புகள் முன்வினைகளை பிரதிபலிப்பதாக இருக்கும். அந்த கிரக அமைப்புகள் தான் திருமண தோஷமாக அமைந்து விடுவது உண்டு. கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பில் இருந்து விடுபட வேண்டுமானால் அதற்குரிய பரிகாரங்கள் உரிய வழிபாட்டு முறைகளுடன் செய்யப்பட வேண்டும்.
சூரியனால் ஒருவருக்கு திருமணம் கை கூடுவதில் பாதிப்பு ஏற்பட்டு தோஷம் ஏற்பட்டு இருந்தால் அதை ஜோதிடரிடம் கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும். ஜாதகப்படி சூரியன் பித்ருக்காரகன் எனப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் எந்த இடத்தில் அமைந்து இருக்கிறாரோ அதை பொறுத்துதான் அவருக்கு தந்தை அமைவார்.
எனவே சூரிய தோஷம் கடுமையாக இருந்தால் தந்தை வழி உறவுகளை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவான் துதிகளை சொல்லி வழிபட வேண்டும். ஆலயங்களுக்கு செல்லும்போதும் தவறாமல் சூரியனை வழிபட வேண்டும்.
சூரிய தோஷம் மிக கடுமையாக இருந்தால் திருவண்ணாமலைக்கு சென்று அருணாசலேஸ்வரரை பார்த்து வணங்கி வரவேண்டும். அதுபோல கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலுக்கு சென்று அங்குள்ள விநாயகருக்கு ரோஜா மாலை அணிவித்து நெய் விளக்கேற்றி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பிறகு சூரியனையும் வழிபட வேண்டும்.
வசதி இருப்பவர்கள் வீட்டில் வெள்ளருக்கு சமித்தால் ஹோமம் செய்து வழிபட்டால் சூரிய தோஷம் விலகி செல்லும்.
சந்திரனால் ஒருவருக்கு திருமண தோஷம் ஏற்பட்டதாக தெரிய வந்தால் அவர் அம்பாளை வழிபட வேண்டும். ஒருவரது ஜாதகத்தில் சந்திரனை மாத்ருக்காரகன் என்று சொல்வார்கள். அதாவது சந்திரன் தாயாரை குறிக்கும். எனவேதான் சந்திர தோஷம் விலக அம்பாளை தொடர்ந்து வழிபட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
சந்திர தோஷம் அதிகமாக இருந்தால் சிவ பெருமானுக்கு திங்கட்கிழமை தோறும் பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். திருச்சி அருகே உள்ள திருவானைக்காவல் தலத்தில் உச்சிக்கால பூஜையை தரிசிப்பது சந்திர தோஷ விமோசனத்துக்கு மிக சிறந்தது என்கிறார்கள். அதுபோல திங்களூர் சென்றும் சந்திரனை வழிபடலாம்.
நவகிரக தலங்களில் ஒன்றான கஞ்சனூரில் சந்திர தீர்த்த குளம் உள்ளது. அங்கு சந்திரன் நீராடி தனது தோஷத்தை நீக்கி கொண்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு சென்று வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும்.
மானாமதுரை, திருவெண்காட்டில் உள்ள தலங்களிலும் வழிபட்டு சந்திரதோஷ நிவர்த்தி பெறலாம்.
நவக்கிரகங்களில் செவ்வாய் தோஷத்தால் தான் அதிகம் பேர் திருமணம் கைகூடுவதில் பாதிப்பை சந்திக்கிறார்கள். பொதுவாக செவ்வாய் தோஷம் இருந்தால் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வழிபட்டு தானம் செய்து விட்டு வருமாறு ஜோதிடர்கள் சொல்வார்கள். ஆனாலும் இந்த பரிகாரம் மட்டுமே போதுமானது அல்ல.

செவ்வாய் தோஷத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் முருகப்பெருமானிடம் சரணடைய வேண்டும். செவ்வாய்க்கிழமை தோறும் காலையில் வீட்டிலும், ஆலயத்திலும் முருகனை வழிபட்டு தானங்கள் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் காலையில் வீட்டில் கந்தசஷ்டி கவசம் படித்தால் செவ்வாய் தோஷம் உங்களை விட்டு மெல்ல மெல்ல விலகி சென்று விடும்.
ஆண்டாளை வழிபட்டாலும் செவ்வாய் தோஷம் கட்டுப்படும். உங்கள் வீட்டுக்கு அருகில் பெருமாள் கோவிலுக்கு சென்று ஆண்டாள் சன்னதியில் விளக்கேற்றி அங்கேயே அமர்ந்து அவளை வழிபட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
புதன் கிரகத்தால் சிலருக்கு திருமண தோஷம் ஏற்படுவது உண்டு. நவக்கிரகங்களில் இருக்கும் புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷத்தை நிவர்த்தி செய்யலாம். காஞ்சிபுரம், திருவெண்காடு, சீர்காழி திருக்காவூர் தலங்களில் புதன் கிரகத்துக்கும் சிவ பெருமானுக்கும் பூஜைகள் செய்து வழிபடலாம்.
புதன்கிழமைகளில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு அங்கு பிரகாரத்தில் அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வந்தால் கைமேல் பலன் கிடைக்கும். எந்த அளவுக்கு புதனை வழிபட்டு பாராயணம் செய்கிறாமோ அந்த அளவுக்கு விரைவில் நல்ல செய்தி தேடி வரும்.
நவக்கிரகங்களில் திருமணத்துக்கு மிக மிக முக்கியமானதாக கருதப்படுவது குரு கிரகத்தின் அம்சமாகும். குரு பலம் இருந்தால்தான் ஜோதிட ரீதியாக திருமணம் கைகூடும் என்று சொல்வார்கள். குரு பலம் இல்லாவிட்டால் அதுவே ஒரு தோஷமாக கருதப்படும். குரு கிரகத்தால் தோஷம் இருப்பது தெரிய வந்தால் வியாழக் கிழமைகளில் ஆலய வழிபாடு செய்ய வேண்டியது அவசியமாகும்.
சித்தர்களின் ஜீவசமாதி, மகான்களின் அதிஷ்டானம் ஆகியவற்றுக்கு சென்று விளக்கேற்றி வழிபட வேண்டும். அங்கு அமர்ந்து தியானம் செய்வதின் மூலம் குரு ஸ்தானத்தில் இருக்கும் அவர்களது ஆசியை பெற முடியும். இது குரு தோஷத்தை கட்டுப்படுத்தி நல்ல மணவாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும்.
ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதாக இருந்தால் குரு பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலங்குடி தலத்துக்கு சென்று வழிபடலாம். மேலும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு சென்று சிவகாமி சமேத நடராஜரை வழிபட்டு வருவது மிகவும் நல்லது.
வசதி வாய்ப்பு இருப்பவர்கள் வீட்டில் ஹோமம் வளர்த்து பூஜைகள் செய்து குரு தோஷ நிவர்த்தி பெற முடியும். அரசமர சமித்தால் ஹோமம் செய்து வழிபாடு செய்யும் போது குரு தோஷம் நிவர்த்தி பெறும்.
ஜாதகத்தில் சுக்கிரனின் அமைப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சுக்கிரன் அமைப்பு சரி இல்லை என்றால் அல்லது வேறு கிரகத்துடன் சேர்ந்து இருந்தால் அதுவும் தோஷத்தை உண்டாக்கி விடும். சுக்கிர தோஷத்தில் இருந்து மிக எளிதாக வெளியில் வந்துவிட முடியும். அதற்கு அடிக்கடி சுமங்கலி பூஜை நடத்தப்பட வேண்டும்.
மேலும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வது நல்லது. வீட்டில் சுமங்கலிகளை அழைத்து பூஜை செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அந்த பூஜை முடிந்ததும் ஏழை பெண்களை அழைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். குறிப்பாக திருமணத்துக்கு தயாராக இருக்கும் ஏழை பெண்களுக்கு தாலி, சீர்வரிசை போன்ற மங்கலகரமான பொருட்களை வாங்கி தானமாக கொடுப்பது மிக மிக சிறந்த பரிகரமாகும்.
சுக்கிர தோஷம் மிக அதிகமாக இருப்பவர்கள் ஸ்ரீரங்கம் சென்று ரெங்கநாதரிடம் சரண் அடைந்து விடுங்கள். அவரை கண் குளிர வழிபட்ட பிறகு பிரகாரத்தில் அமர்ந்து லட்சுமி அஷ்டோத்திரம் படித்து விட்டு வாருங்கள். சுக்கிர தோஷம் நழுவி சென்று விடுவதை அனுபவப்பூர்வமாக பார்ப்பீர்கள்.
திருமணத்தை தாமதம் செய்வதில் சனி கிரகத்துக்கு முக்கிய பங்கு உண்டு. ஒருவரது ஜாதகத்தில் சனி தோஷம் மிகுந்து இருந்தால் எவ்வளவு பரிகாரம் செய்தாலும் திருமணம் தள்ளி போய்க்கொண்டே இருக்கும். இத்தகைய நிலையில் இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். ஆஞ்சநேயரை நினைத்து வழிபடுங்கள். அது ஒன்றே போதுமானது.
உலகில் பயபக்திக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் ஆஞ்சநேயர் மட்டுமே. அவர் மனம் குளிரும் வகையில் பூஜைகள் செய்து ஏழைகளுக்கு உதவினால் போதும். சனீஸ்வரனின் அருள் பார்வை உங்களுக்கு கிடைக்க தொடங்கி விடும்.
ஜாதக ரீதியாக சனி தோஷம் மிக சிக்கலாக இருப்பதாக கருதினால் ஒரு தடவை திருநள்ளாறுக்கு சென்று வருவது நல்லது. அங்குள்ள தர்ப்பா ரண்யேஸ்வரரையும் சனி பகவானையும் வழிபட்டால் நல்லது நடக்கும்.
சனி போலவே ராகு-கேது தோஷங்களும் திருமணத்தை தாமதப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. காள ஹத்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம். காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தரை வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும்.






