என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- நவக்கிரகங்களில் வீரத்திற்கு பெயர் பெற்றவர் செவ்வாய் பகவான்.
- ஒரு கிரகம் தனது நட்பு வீட்டில் உச்சம் அடைவது பெரிய விசயம் அல்ல.
''சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு."
நவக்கிரகங்களில் வீரத்திற்கு பெயர் பெற்றவர் செவ்வாய் பகவான். நாரதர் உள்ள இடத்தில் எப்படி கலகம் நடக்குமோ? அதே போல் செவ்வாய் பகவான் நின்ற வீட்டின் மூலம் கலவரம் உண்டு.
செவ்வாய் பூமிக் காராகன், ரத்த காரகன் மற்றும் யுத்த காரகன். தைரிய வீரியத்திற்குரிய கிரகம். மேலும் உடன் பிறந்த சகோதரம் மற்றும் பெண்கள் ஜாதகத்தில் கணவரைக் குறிக்கும் கிரகமாகும். இந்த செவ்வாய் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்பது பொது விதி. ஒரு கிரகத்தினால் ஏற்படும் நன்மை, தீமைகளை உயிர், பொருள், நோய் காரகத்துவம் என மூன்றாக வகைப்படுத்தலாம். அதன்படி செவ்வாய் பலம் பெற்றால் உயிர் காரகத்துவமான உடன் பிறந்தவர்களின் அன்பு, அனுசரனை, ஆதாயம் உண்டு. தைரியம், நிறைந்த குடும்பத்தை கட்டுக் கோப்பாக வழிநடத்தும் கணவர் கிடைப்பார். பொருள் காரகத்துவமான அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவராக இருப்பார்காள். செவ்வாய் பலம் குறைந்தால் உடன் பிறந்த ஆண்கள் கலகம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கும்.
பெண்களுக்கு கணவரின் அன்பும், அனுசரனையும் இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதே போல் திருமணத்திற்கு செவ்வாய் தோஷம் கணக்கிட வேண்டும் என்று ஒரு பிரிவினர் கூறினாலும், செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லை என்ற ஒரு கருத்தும் உள்ளது. உலகின் அனைத்து நிகழ்விலும் இரு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவது நாம் அறிந்ததே. அதனால் செவ்வாய் தோஷம் பற்றி 1000 பட்டி மன்றம் நடத்தினாலும் இது சர்ச்சைக்குரிய கருத்தாகவே இருக்கும். ஒரு கிரகத்தின் தன்மையை ஆதிபத்திய ரீதியாகவும், நின்ற நட்சத்திர சாரத்திற்கு ஏற்பவும், உடன் இணைந்த, சேர்ந்த, பார்த்த கிரகத்திற்கு ஏற்ப அணுகும் போதும் தீர்க்கமான முடிவு கிடைக்கும். அத்துடன் எந்த கிரகமாக இருந்தாலும் பொதுவாக யோகம், அவயோகம் என்று பலன் சொல்ல முடியாது. இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் அனைத்தும் ஒரு ஆதிபத்தியத்திற்கு சுப பலனை வழங்கினால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக ஏதேனும் அசுப விளைவுகளைத் தராமல் போகாது.
அதே போல் ஒரு கிரகம் தனது நட்பு வீட்டில் உச்சம் அடைவது பெரிய விசயம் அல்ல. தன் எதிரி வீட்டில் உச்சம் பெற்று தன் ஆளுமையை செலுத்துவது கெத்து தான். இதை மேலும் புரியும்படி கூறினால் உறவுக்காரன். நட்புகாரன் வீட்டிற்குச் சென்று ஒருவர் அதிகாரம் செய்தால் உறவினர்கள் அவரை கண்டு கொள்ளமாட்டார்கள். ஒருவர் தனக்கு கடும் பகைவன் வீட்டிற்குச் சென்று சிம்மாசனமிட்டு அமர்ந்து பகை வீட்டுக்காரனை அதிகாரம் செய்வது வீட்டு உரிமையாளர்களை ஏளனப்படுத்தும் செயலல்லவா?
அப்படிப்பட்ட வீரன் தான் செவ்வாய். செவ்வாய் தன் பகை கிரகமான சனியின் வீடான மகரத்தில் உச்சம் பெற்று எதிரி கிரகமான சனியை கட்டுப்படுத்தப் போகிறார். சிங்கம் சிங்கிளாக 45 நாட்கள் மகரத்தில் தன் உச்சபலனை வழங்கப் போகிறது. செவ்வாய் பகவான் கால புருஷ 10-ம் வீடான மகரத்தில் 5.2.2024 அன்று உச்சம் அடைகிறார்.
தனது 4-ம் பார்வையால் மேஷ ராசியில் உள்ள குரு பகவானைப் பார்க்கிறார். இது குருமங்கள யோகம். 7-ம் பார்வையால் கடக ராசியையும் 8ம் பார்வையால் சிம்ம ராசியையும் பார்வையிடுவார். இது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மையும், தீமையும் சேர்ந்த பலனை வழங்கும். இனி பனிரெண்டு ராசிக்கும் உச்ச செவ்வாய் ஏற்படுத்த போகும் மாற்றங்களையும் அதற்கான பரிகாரங்களையும் காணலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு செவ்வாய் ராசி அதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. ராசி அதிபதியாக செவ்வாய் தனது தொழில் ஸ்தானமான 10-ம் இடத்தில் உச்சம் பெறுவது சிறப்பு. தொழிலில் ஒரு உன்னத நிலையை அடைய முடியும். தனது மற்றொரு வீடான விருச்சிகத்திற்கு அவர் அஷ்டமாதிபதி என்பதால் ஒரு நல்லது நடந்தாலும் ஒரு அவச்சொல், அவமானம் ஏற்பட்டாலும் ஜாதகரே காரணமாக இருப்பார். சுய ஜாதகரீதியாக செவ்வாய் தசை, புத்தி நடப்பவர்களுக்கு ஒரு வம்பு, வழக்கு, சர்ஜரி, தீராத நோய், கடன் இருந்தே தீரும்.
பரிகாரம்
செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரையில் முருகனை வழிபட வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு செவ்வாய் 7,12-ம் அதிபதி. செவ்வாய் களத்திர ஸ்தான அதிபதி. 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் 7, 12-ம் அதிபதி செவ்வாய் உச்சம் பெறுவதால் திருமணத் தடை அகலும். நல்ல வரன் அமையும். தம்பதிகளுக்குள் நிலவிய கருத்து வேறுபாடு குறையும். சில தம்பதிகள். தொழில் உத்தியோக நிமித்தமாக அடிக்கடி பிரிந்து வாழும் நிலை ஏற்படும். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண உறவை ஏற்படுத்தும். செவ்வாய் தசை, புத்தி நடப்பில் இருந்தால் தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள் அல்லது அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்வார்கள்.
பரிகாரம்
செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அல்லது காளியை வழிபட வேண்டும்.

ஐ.ஆனந்தி
மிதுனம்
மிதுன ராசிக்கு செவ்வாய் 6, 11-ம் அதிபதி என்பதால் செவ்வாய் ஆட்சி உச்சம் பெறுவது சிறப்பல்ல. அதே நேரத்தில் செவ்வாய் சுப வலுப் பெற்றால் மிகப் பெரிய லாபம் கிடைத்து எவ்வளவு அதிகமான கடன் இருந்தாலும் விரைவில் தீர்ந்து விடும். செவ்வாய்க்கு குரு சம்பந்தம் குருமங்கள யோகமாக செயல்படும். லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் உள்ள குருவை செவ்வாய் பார்ப்பது குருமங்கள யோகமாக வரமாக செயல்படும். அதனால் செவ்வாயால் கடன், நோய் உருவாகினாலும் கடன், நோய் நிவர்த்தியாகும்.
பரிகாரம்
செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் சிவ வழிபாடு செய்வது நல்லது.
கடகம்
கடக ராசிக்கு செவ்வாய் 5, 10-ம் அதிபதி. ஏக யோகாதிபதி என்பதால் உச்ச செவ்வாய் கடக ராசிக்கு வரம். ராசிக்கு 7ல் நின்று ராசியை பார்ப்பதால் ஜாதகருக்கு மிடுக்கான தோற்றம், ஆளுமைத் திறன் கூடும். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். சிலருக்கு புதியதாக காதல் ஆசை துளிர் விடும். புதுமண தம்பதிகளுக்கு புத்திர பிராப்தம் உண்டாகும். நண்பர்கள், தொழில் கூட்டாளி வாடிக்கையாளர்கள், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டு. கடக ராசிக்கு சந்திர மங்கள யோகம், குரு மங்கள யோகம் ஏற்பட்டுள்ளது.
பரிகாரம்
செவ்வாய் கிழமை முருகன் வழிபாடு செய்து வரும் கடக ராசியினருக்கு தொடர் அதிர்ஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு செவ்வாய் 4,9-ம் அதிபதி. ஒரு கேந்திரத்திற்கும் திரிகோணத்திற்கும் அதிபதி. தாய், தந்தை வழி உறவுகளின் அன்பு, அனுசரனை இருக்கும். தாய் வழி, தந்தை வழி பூர்வீகச் சொத்து கிடைப்பதில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும். தீர்த்த யாத்திரை செல்லுதல், தானதர்மம் செய்தல் போன்ற பாக்கிய பலனை அதிகரிக்கும் செயலில் ஈடுபடுவார்கள். அரச உத்தியோகம், அரச பதவி போன்ற பாக்கிய பலன்கள் நடக்கும். செவ்வாய் தனது 8ம் பார்வையால் ராசியை பார்ப்பதால் பிரயாணங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பரிகாரம்
செவ்வாய் கிழமை சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்வதால் நன்மைகள் இரட்டிப்பாகும்.
கன்னி
கன்னி ராசிக்கு செவ்வாய் 3, 8-ம் அதிபதி என்பதால் செவ்வாய் ஆட்சி, உச்சம் பெறக் கூடாது. இடப்பெயர்ச்சி நடக்கும். மனதில் வெறுமை தேவையில்லாத கற்பனை பய உணர்வு நிரம்பும். ஞாபக சக்தி குறையும். கடன் தொல்லை அதிகரிக்கும். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு, உடன் பிறந்தவர்களுடன் சொத்துத் தகராறு, ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை, விபத்து, கண்டம், சர்ஜரி வம்பு, வழக்கு ஏற்படலாம். தேவையற்ற வழக்குகள் மற்றும் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் அதிர்ஷ்ட சொத்து, நகை, பணம், பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும்.
பரிகாரம்
செவ்வாய் கிழமை புதன் ஓரையில் வாராகி அம்மனை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்கு செவ்வாய் 2, 7-ம் அதிபதி. வாக்கு வன்மை பெறும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்திற்கு மதிப்பு கொடுப்பார்கள். ஆடம்பர விருந்து உபசாரங்களில் கலந்து கொண்டு அறுசுவை உணவு அருந்துவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். தன வரவில் தன்னிறைவு உண்டாகி கடன் சுமை குறையும். கண், பல் போன்றவற்றிற்கு சிகிச்சை செய்வீர்கள். திருமணத் தடை அகலும். திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள்.
சொத்துக்களால், கூட்டுத் தொழிலால், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும்.
பரிகாரம்
செவ்வாய் கிழமை கால பைரவரை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு செவ்வாய் 1, 6-ம் அதிபதி. ராசி அதிபதியே 6ம் அதிபதியாக இருப்பதால் விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய் ஆட்சி, உச்சம் பெறுவது சிறப்பல்ல. தங்களுக்கு ஏற்படும் நல்லது, கெட்டது இரண்டிற்கும் இவர்களே காரணமாக இருப்பார்கள். முன் கோபத்தால் சொந்த செலவில் தனக்கு தானே சூன்யம் வைத்துக் கொள்வார்கள். உத்தியோக மாற்றம் செய்வது, கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். சிறு சிறு நோய் தாக்கம் இருக்கும். கடனால் கவலை, எதிரிகளால், உயர் அதிகாரிகளால் மன சஞ்சலம் இருக்கும்.
பரிகாரம்
செவ்வாய் கிழமை சரபேஸ்வரரை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்கு செவ்வாய் 5, 12-ம் அதிபதி. செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி என்பதால் குழந்தை பேறு, குல தெய்வ அனுகிரகம், பங்குச் சந்தை ஆதாயம், பிள்ளைகளுக்கு நல்ல உத்தியோகம், சுப விசேஷங்கள் நடக்கும். பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலம். அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டம் உண்டாகும். அதே நேரத்தில் அவரே விரயாதிபதி என்பதால் அவரவரின் சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப சுப அசுப விரயங்கள் உண்டு. சிலர் வெளி நாட்டு பயணம் மேற்கொள்ளலாம். வீடு வாகனம் வாங்கலாம். சிலருக்கு மருத்துவச் செலவு கூடுதலாகும்.
பரிகாரம்
செவ்வாய் கிழமை குரு ஓரையில் நவகிரக செவ்வாய் பகவானை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்கு செவ்வாய் 4, 11-ம் அதிபதி. உச்சம் பெற்ற செவ்வாய் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தருவார். சொந்த வீடு, வாகனம் அமையும். ஏற்கனவே வாங்கிய சொத்துக்களின் மதிப்பு உயரும். தாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறைந்து நல்ல புரிதல் உண்டாகும். மாணவர்கள் நன்கு படிக்கத் துவங்குவார்கள். சிலர் புதியதாக உயிரினங்கள் வளர்ப்பார்கள். மூத்த சகோதரம், சித்தப்பா, இளைய மனைவி போன்ற உறவுகளால் ஆதாயம் உண்டு. செவ்வாய் பாதகாதிபதி என்பதால் சிலருக்கு உயிர் காரக துவத்தையும், சிலருக்கு பொருள் காரகத்துவத்தையும் பாதிக்கலாம்.
பரிகாரம்
செவ்வாய் கிழமை திருவண்ணாமலை சென்று வர நன்மைகள் கூடும்.
கும்பம்
கும்ப ராசிக்கு செவ்வாய் 3, 10-ம் அதிபதி. சகாய ஸ்தான அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதி. தொழில், உத்தியோக ரீதியாக வாழ்வியல் மாற்றம் தரும் நல்ல இடப் பெயர்ச்சி நடக்கும். ஞாபகசக்தி கூடும். உயில் எழுதுதல், உயிலில் மாற்றம் செய்தல் , கடனை புதுப்பித்தல் போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதாயம், ஆதரவு புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் வந்து மனதை மகிழ்விக்கும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். செவ்வாய் குரு சம்பந்தம் குரு மங்கள யோகம் ஸ்திர சொத்துக்கள் சேரும். தொழில், உத்தியோக உயர்வை நிச்சயம் தரும்.
பரிகாரம்
செவ்வாய் கிழமை பழநி முருகனை வழிபட நிலையான முன்னேற்றம் உண்டாகும்.
மீனம்
மீன ராசிக்கு செவ்வாய் 2, 9-ம் அதிபதி. செவ்வாய் தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி. பாக்கியா திபதி. லாப ஸ்தானத்தில் உச்சம் பெறும் செவ்வாய் வாக்கு பலத்தை வழங்குவார். குடும்பத்தில் நிலவிய சலசலப்பு குறைந்து கலகலப்பு கூடும். ஏற்கனவே வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவை பார்ப்பது குருமங்கள யோகம். வங்கி, ஆசிரியப் பணி , ஜோதிடம், நிதி நிர்வாகம், அரசியல், ஆன்மீகம் போன்ற பணிகளில் தனித் திறமையுடன் மிளிர்வார்கள். இதில் ஆர்வம் ஆதாயமும். அதிகமாகும். முன்னோர்கள் வழிச் சொத்து கிடைக்கும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு, தீர்த்த யாத்திரை செல்லுதல் முன்னோர்களுக்கு பித்ரு சாந்தி செய்தல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும்.
பரிகாரம்
செவ்வாய் கிழமை குரு ஓரையில் திருச்செந்தூர் முருகனை வழிபட ஏற்றம் அதிகரிக்கும். எந்த ஒரு பலனும் அதன் தசாபுத்திகளிலேயே அப்பட்டமாக வெளிப்படும். எனவே செவ்வாய்க்கு உரிய பரிகாரங்களை பயன்படுத்தி உயர்வு பெற வாழ்த்துக்கள்.
- ஒரு வீட்டின் தெற்கு பகுதியில் அதிக காலியிடம் அல்லது பள்ளம் இருந்தால் அது அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு ஆகாது.
- கடையில் வியாபாரம் குறைந்து லாபம் இல்லாவிட்டால் வாஸ்து காரணம் என்று வியாபாரிகளையே ஜோதிடர்கள் நினைக்க வைத்து விடுகிறார்கள்.
வீடு கட்டுவது என்பது எல்லோராலும் இயலாது. வீடு கட்டும் அனைவரும் வாஸ்து பார்ப்பது இல்லை. ஆனால் வாஸ்து பார்க்க வேண்டியது அவசியம்தான். ஏனெனில் ஒரு வீட்டுக்கு உயிரோட்டமாக இருப்பது வாஸ்துவின் அம்சங்கள்தான்.
வாஸ்து என்பது நெருப்பு, நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் சரிசமமான சேர்க்கையை குறிப்பதாகும். இந்த ஐந்தும் சரியான விகிதத்தில் இருந்தால் அந்த வீட்டில் வாஸ்துவும் சரியாக இருக்கும். பஞ்ச பூதங்களில் ஏதாவது ஒன்று அதிகமாகி ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ அதுதான் வாஸ்து குறைபாடுகளாக பிரதி பலிக்கும்.
இதில் அறிவியல் ரீதியான தொடர்பும் இருக்கிறது. அதாவது ஒரு வீடு கட்டும்போது அந்த இடத்தில் மின்காந்த அலைகளின் ஓட்டம் சீராக இருக்க வேண்டும். அந்த ஓட்டம் சரியாக இருந்தால் நல்ல அதிர்வலைகளை வீடு கட்டும் போதே உணர முடியும். கட்டுமானப் பணிகள் நடக்கும் போதே உள்ளே செல்லும்போது மன நிலைகள் அதற்கேற்ப அமையும். இப்படி இருந்தால் வாஸ்து குறைபாடு இல்லை என்று அர்த்தம்.
புதிதாக வீடு கட்டும் இடத்தில் மின் காந்த அலைகளின் ஓட்டத்தை நாமே கூட உருவாக்க முடியும். வீடு கட்டும் இடத்தில் வடகிழக்கு மூலை தாழ்ந்தும், தென்மேற்கு மூலை மேடாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் வாஸ்துவுக்கான மின் காந்த ஓட்டம் சீராக அமையும். இதையும் மீறி வாஸ்து குறை பாடு இருப்பதாக இருந்தால் அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.

இத்தகைய குறைகள் வராமல் இருக்க வேண்டுமானால் வாஸ்து பகவான் கண்விழிக்கும் நாளில் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும். பொதுவாக ஒரு ஆண்டில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய 8 மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்ய லாம். இந்த 8 நாட்களிலும் வாஸ்து பகவான் 1½ மணி நேரம்தான் கண்விழித்து இருப்பார். அந்த நேரத்துக்குள் பூமி பூஜை செய்து விட வேண்டும்.
வாஸ்து பூஜை செய்வதற்கு திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 கிழமைகளும் மிக மிக சிறப்பானவை. வாஸ்து பூஜை நாட்களில் ரிஷபம், மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்பம் லக்னம் அமைந்தால் மேலும் சிறப்பானதாக கருதப்படும். அதுபோல ஒவ்வொரு திசைக்கும் ஒரு பலன் உண்டு. அவற்றையும் கருத்தில் கொண்டுதான் பூமி பூஜைகளை செய்ய வேண்டும்.
மேலும் வீடு கட்டும்போது அறைகளின் அமைப்பு, அவற்றின் அளவு, உயரம் ஆகியவையும் வாஸ்துவை நிர்ணயிக்கும். வீட்டை சுற்றி இருக்கும் காலி இடங்கள் கூட வாஸ்து பலன்களில் பார்க்கப்படும். அதாவது ஒரு வீட்டின் தெற்கு பகுதியில் அதிக காலியிடம் அல்லது பள்ளம் இருந்தால் அது அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு ஆகாது. மேற்கு பகுதியில் காலி இடம் அமைந்தால் அது ஆண்களுக்கு உகந்த தாக இருக்காது.
இப்படி வாஸ்து குறைபாடுகளுக்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. சமீப காலமாக இதில் பல புதிய தகவல்களை இணைத்து புதிதாக வீடு கட்டுபவர்களை ஜோதிடர்கள் கடுமையாக குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள். வீடு கட்டும் ஒருவர் யாராவது ஒரு ஜோதிடரிடம் வாஸ்து தொடர்பாக கருத்துக்கள் கேட்டுவிட்டால் நிம்மதி இல்லாத நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலைதான் தற்போது காணப்படுகிறது.
எனவே வீடு கட்டும்போது தொட்டதற்கு எல்லாம் வாஸ்து பார்க்கக் கூடாது. பார்த்தால் குழப்பம்தான் மிஞ்சும். பல வீடுகள் ஜோதிடர்களின் வாஸ்து கணிப்புகளால் மீண்டும் மீண்டும் இடித்து கட்டப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறது. எனவே வாஸ்துகளை குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு பார்ப்பது நல்லது.
வசித்து கொண்டிருக்கும் வீட்டில் வாஸ்து பார்க்கும் நடைமுறை சமீப காலமாக அதிகமாகி இருக்கிறது. ஏதாவது குடும்ப பிரச்சினை, கடன் பிரச்சினை, வியாபார பிரச்சினை, திருமண தாமதம், கணவன்-மனைவி தகராறு என்று வந்து விட்டால் உடனே ஜோதிடர்கள் வாஸ்து குறைபாடுதான் காரணமாக இருக்கும் என்று கண்மூடிக் கொண்டு சொல்லி விடுகிறார்கள்.
கடையில் வியாபாரம் குறைந்து லாபம் இல்லாவிட்டால் வாஸ்து காரணம் என்று வியாபாரிகளையே ஜோதிடர்கள் நினைக்க வைத்து விடுகிறார்கள். இவ்வளவு நாள் நன்றாக நடந்த கடை இப்போது ஏன் நிலைதடுமாறுகிறது என்பதை வியாபாரிகள் நன்கு அலசி ஆராய்ந்து பார்த்தாலே குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். அதற்கும் வாஸ்துக்கும் நிச்சயம் எந்த தொடர்பும் இல்லை.
சில வீடுகளில் வாஸ்து குறைபாடு காரணமாக நீண்ட நாள் ஏதாவது ஒரு பிரச்சினை தொடர்கதை போல இருந்து கொண்டே இருக்கும். அத்தகைய வீடுகளில் பரிகாரங்கள் செய்வது நல்லது. குறிப்பிட்ட பரிகாரங்களை செய்தாலே வாஸ்துகள் சரியாகி விடும். வாஸ்துவை சரி செய்வதற்காக பல்லாயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய அவசியமே கிடையாது.
சில ஜோதிடர்கள் தங்களது சுய லாபத்துக்காக ஒன்று வீட்டை இடிக்க வைப்பார்கள் அல்லது நிறைய பூஜை செய்ய சொல்வார்கள். இவை யெல்லாம் கண்டிப்பாக அவசியமே இல்லை. மிக மிக சாதாரண எளிய பூஜைகள் மூலம் வாஸ்து குறைபாடுகளை சரி செய்து விட முடியும். வாஸ்துதான் பிரச்சினையாக இருக்கும் என்று நினைப்பவர்கள் தினமும் வீட்டு வாசலில் நிலைப்படிக்கு அருகே தீபம் ஏற்றி வந்தாலே போதும். குடும்பத்தில் மாற்றங்கள் நிகழ்வதை பார்க்க முடியும்.
பொதுவாக வீடுகளில் காலை-மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது. வாஸ்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வாஸ்து தீபம் ஒன்று இருக்கிறது. அதை தெரிந்து கொண்டு ஏற்றினால் கைமேல் பலன் கிடைக்கும். வாஸ்து தீபங்களை எப்போதும் வீட்டின் வாசலில் வலது பக்கத்தில் ஏற்றுவது நல்லது. முடிந்தால் காலை-மாலை இருவேளையும் ஏற்றலாம்.
வாஸ்து தீபம் ஏற்றும்போது, "ஓம் வாஸ்து தேவதாய நமக.... ஓம் வாஸ்து புருஷாய நமக..." என்ற வாஸ்து மந்திரத்தை 3 தடவை சொல்ல வேண்டும். இது மிக மிக எளிதான உடனடியாக வாஸ்து குறைபாட்டை விரட்டும் பரிகாரம் ஆகும். அது மட்டுமின்றி வீட்டில் செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த தீபத்துக்கு உண்டு.
வாஸ்து தீப பூஜைகளை செய்ய இயலாதவர்கள் வீட்டு வாசலில் உட்புறத்தில் கோலம் போட்டு அதில் அகல் தீபம் ஏற்றலாம். அந்த அகல் தீபம் வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி இருக்கும் வகையில் அமைப்பது நல்லது.
சிலருக்கு தோஷங்கள் காரணமாக வாஸ்து பிரச்சினை ஏற்படலாம். அத்தகைய நிலை இருப்பது தெரிய வந்தால் வீட்டின் 4 மூலைகளிலும் தலா ஒரு விளக்கு ஏற்றி பைரவர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். 3 மாதங்கள் இந்த வழிபாட்டை செய்தால் பிரச்சினைகள் தீரும். இந்த தீபம் ஏற்றும்போது பைரவர் கவசம் அல்லது பைரவருக்கு உரிய போற்றிகளை சொல்லிக் கொண்டே தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் பலன்களை தரும்.
பூமிகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் பகவானை நினைத்து வாஸ்து நாட்களில் 5 திரி போட்டு 5 அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டால் வாஸ்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். இந்த 5 அகல் விளக்கு பூஜை என்பது வாஸ்து பகவானை திருப்தி செய்யும் வழிபாடு ஆகும். வீட்டில் தன்வந்திரி படம் வைத்து பூஜைகள் செய்வதும் நல்ல வாஸ்து பரிகாரம் ஆகும்.
சிலருக்கு ேஹாமங்கள் வளர்த்து பூஜை செய்தால் வாஸ்து பிரச்சினைகளை சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை இருப்பது உண்டு. அப்படிப்பட்டவர்கள் நவ கலசங்கள், நவ தானியங்கள், நவ சமித்துகள், நவ மூலிகைகள் ஆகியவற்றை பயன்படுத்தி ஹோமம் செய்வது நல்லது. இந்த ஹோமம் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை விரட்டி வெற்றிகளை தேடி தரும் ஆற்றல் கொண்டது.
அடிக்கடி ஹோமம் செய்ய இயலாது என்று நினைத்தால் ஆண்டுக்கு ஒரு தடவை வீட்டில் கணபதி ஹோமம் நடத்துங்கள் போதும். வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்துக்கு துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கு ஏற்றுங்கள். சரியாகி விடும்.
இத்தகைய பூஜைகள் எதையும் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா? கவலையே வேண்டாம். வீட்டில் குல தெய்வத்திற்கு பூஜைகள் செய்யும் போது ஊதுபத்தி காட்டி மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள் போதும். வாஸ்து பிரச்சினைகளை குல தெய்வம் பார்த்துக் கொள்ளும். முடிந்தால் செவ்வாய், வெள்ளிக்கிழ மைகளில் வீட்டில் சாம்பிராணி புகை போட்டு கந்தசஷ்டி கவசத்தை ஒலிக்க செய்யுங்கள். நல்ல அதிர்வுகள் உண்டாகும்.

தினமும் அதிகாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், பிரணவ மந்திரம், கந்தசஷ்டி கவசம், சிவ புராணம் மற்றும் காயத்ரி மந்திரம் போன்றவற்றை ஒலிக்க செய்தால் நல்ல அதிர்வுகள் ஏற்பட்டு வீட்டில் எந்த குறைபாடுகள் இருந்தாலும் விரட்டி அடிக்க செய்து விடும்.
சில பெண்களுக்கு காலையில் சமையல் செய்வதற்கு முன்பு பூஜை அறைக்கு சென்று தீபம் ஏற்றுவது வழக்கத்தில் இருக்கும். அதே போன்று மாலை நேரத்தில் வீட்டில் தண்ணீர் தொட்டிக்கு அருகே விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் அதுவும் புதுமையான பலன்களை தரும். அதாவது இந்த தீப வழிபாடு வீட்டில் யாருக்கு எந்த தோஷம் இருந்தாலும் நிவர்த்தி செய்து விடும்.
வைணவத்தில் அதிக ஈடுபாடு இருப்பவர்கள் பெருமாளின் அணுகிரகம் பெற சங்கு பயன் படுத்துவார்கள். அத்தகைய சங்கை வீட்டின் நிலைவாசலுக்கு அடுத்து வெளியே புதைத்து வைத்தால் வாஸ்து தோஷங்கள் விலகும். வாஸ்துவை வாசலின் முன்பு புதைக்கும்போது சங்கின் நுனி பகுதி கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பார்த்தவாறு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புக ளில் இருப்பவர்கள் பூஜை அறையில் சங்கு வைத்து வழிபட்டால் இறைவன் அருளை பெற முடியும். அது தோஷங்களை விலக்குவதோடு புது தோஷங்கள் நம் அருகில் வராமலும் பார்த்துக் கொள்ளும்.
எனவே வீட்டில் வாஸ்து குறைபாடு வராமல் இருக்க புது வீடு கட்டும் போதே கவனமாக இருங்கள். இல்லையெனில் எளிய பரிகாரங்கள் செய்யுங்கள். போதுமானது.
- நேரம், தொலைவு, காலம் இவற்றினை அறிவியல் விஞ்ஞானம் கணித முறையில் கூறுகின்றது.
- நாம் இருக்கும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும்.
கடவுள் யார்? எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? பல உருவங்களில் கடவுளை வணங்குகிறார்கள். அப்படியானால் உண்மை ரூபம் என்ன? என்ற கேள்விகள் எழுந்து கொண்டு தான் இருக்கின்றன.
இறைவன் ஜோதி ரூபன். ஒளி ரூபம் அதன் பிரதிபலிப்பாக பல ரூபங்களில் நாம் வழிபடுகின்றோம் என்பது பதில். இந்த ஒளியினைத் தான் அடி முடி காண முடியாதவர் இறைவன் என்கின்றோம்.
இது விஞ்ஞான ரீதியான நிரூபணமாக இல்லையே. விஞ்ஞானம்-உலகம், பூமி, சூரியன், சந்திரன் என பேசுகின்றது. நிரூபிக்கின்றது. நேரம், தொலைவு, காலம் இதனை புள்ளி விவரமாய் சொல்கின்றதே. மீண்டும் எழும் சந்தேகம். நேரம், தொலைவு, காலம் இவற்றினை அறிவியல் விஞ்ஞானம் கணித முறையில் கூறுகின்றது.
ஆக விஞ்ஞானத்தின் அடிப்படை கணக்கு. கணக்கிற்கு அடிப்படை எண்கள் தானே. இருக்கட்டும். எண்கள் வழியில் மிகப்பெரிய எண், மிகச்சிறிய எண் என வரையறுக்க முடியுமா என்ன? உதாரணம்-100 என்றால் அதனுடன் மற்றொரு 0 சேர்த்தால் அது 1000. அதுபோல மிகச்சிறிய எண்ணையும் வரையறுத்து கூற முடியாது. ஆக முடிவில்லாத (00) என்ற குறியீட்டில்தான் விஞ்ஞான வழி எண்களும் உள்ளன. இதனை
'ஆதி அந்த மில்லாத என்றோ
அடி முடி இல்லாத என்றோ'
ஒளியினை கூறுவதும் சரியாகத் தானே இருக்கும். அந்த ஒளி ஒவ்வொருவர் உள்ளேயும் உள்ளது. அதனை ஒளிரச் செய்வோமாக.
நமக்கு ஒரு அமைதியான வாழ்வு வேண்டுமென்றால்,
நாம் இருக்கும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும்.
சுவாசிக்கும் காற்று தூய்மையாக இருக்க வேண்டும்.
பேசும் பேச்சும், எண்ணும் எண்ணங்களும், செய்யும் செயல்களும் தூய்மையாக இருக்க வேண்டும்.
உண்ணும் உணவும் தூய்மையாக இருக்க வேண்டும்.
உணவில் கூட தோஷங்கள் உள்ளன.
உணவு யாரால், எப்படி, எங்கே செய்யப்படுகின்றது? எப்படி பரிமாறப்படுகின்றது? என்பது கவனம் செலுத்தப்பட வேண்டியவை ஆகும்.
உணவு சமைப்பவர் ஆரோக்கியமானவராக, பசியின்றி இருப்பவராக, மன வேதனைகள் இன்றி இருப்பவராக இருப்பது அவசியம்.
உணவு பரபரப்பின்றி, அள்ளி கொட்டிய காரம், புளி, உப்பு, மசாலா இன்றி - நிதான முறையில் சமைக்கப்பட வேண்டும்.
சமைக்கும் இடம் சுத்தமாக தெய்வீகமானதாக இருக்க வேண்டும்.
பரிமாறப்படும் உணவு அப்பொழுது சமைத்ததாக இருக்க வேண்டும். அன்புடன் பரிமாறப்பட வேண்டும். இவையெல்லாம் இன்றைய சூழ்நிலையில் சாத்தியமா? முடிந்த வரை சூழ்நிலையினை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
உணவுப் பொருட்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருக்க வேண்டும். தவறான முறையில் சம்பாதித்த பொருளை சமைத்து உண்டால் தவறான எண்ணங்களே உண்பவருக்கு உண்டாகும்.
உணவு சமைக்கப்படும் இடத்தில் நல்ல அதிர்வுகள் இருக்க வேண்டும். சண்டை சச்சரவுகள் இருக்க கூடாது.
துரியோதனன் கிருஷ்ணரை விருந்திற்கு அழைத்தான். 56 வித உணவுகள் சமைக்கப்பட்டன. இருப்பினும், துரியோதனன் கிருஷ்ணரை எப்படி கைது செய்யலாம் என்ற தீய எண்ணத்தோடே இருந்தான். இதனை கிருஷ்ணர் அறியாமலா இருப்பார்? அவர் விதுரன் வீட்டிற்கு உணவு உட்கொள்ள சென்றார். திடீரென கிருஷ்ணர் வீட்டிற்கு வந்ததும் விதுரன் மகிழ்ச்சி கொண்டான். அந்த மகிழ்ச்சியில் வாழைப் பழத்தினை உரித்து பழத்தை கீழே போட்டு தோலை கிருஷ்ணருக்கு தவறுதலாக அளித்தான். விதுனர் தன் மனைவியினை கோபித்துக் கொண்டார். ஆனால் கிருஷ்ணரோ 'எனக்கு உள்ளன்புடன் ஒரு இலையோ, துளி நீரோ, ஒரு பழமோ, எது கொடுத்தாலும் அதுவே எனக்கு போதும்' என்றார்.

கமலி ஸ்ரீபால்
ஆக சாப்பிடுபவர் நன்கு உண்ண வேண்டும் என்ற உள்ளன்போடு சமைக்க வேண்டும். நல்ல வார்த்தைகள் அவ்விடத்தில் பேசப்பட வேண்டும். அதிகம் வேக வைத்தல், அதிகம் வறுத்தல், பழைய உணவு, கெட்டு போன உணவு இவை கூடவே கூடாது.
ஆக உண்ணும் உணவு என்பது இத்தனை புனி தத்துவம் பெற்றது. கண்ட நேரத்தில், கண்ட இடத்தில், கண்டபடி உண்பதனை முதலில் தவிர்த்தாலே நம் ஆன்மீகப் பயணம் சிறப்பாக இருக்கும்.
இந்த பிரபஞ்சம் நீ எதனை செய்கின்றாயோ அதனையே திருப்பி கொடுக்கும் என்பர். அது உங்கள் உடலுக்கும் பொருந்தும். அண்டத்தில் இருப்பது பிண்டத்தில் இருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. ஆக உங்களின் உடலும் உங்கள் பிரபஞ்சமே. நீங்கள் அளவாய், முறையாய் உணவு அருந்தினால் உடலும் உங்களது உடல் ஆரோக்கியத்தினை சீராய் வைக்கும். நீங்கள் உணவினை முறையற்று கையாண்டால் ஆரோக்கியம் கெடும். இது பிரபஞ்ச விதி.
சிலர் எதற்கெடுத்தாலும் பிறர் இடத்தில் 'சாரி', 'சாரி' என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஏன் இப்படி சொல்கின்றனர்? எந்த தவறும் செய்யாத பொழுது 'சாரி', 'சாரி' என்கின்றனர். தன் வாழ்விற்காக தன்னை மிகவும் இறக்கிக் கொள்கின்றனரோ? எதிராளியிடம் இப்படி ஒரு அடிமைத் தனம் தேவையா?
இப்படி வாழ்ந்தால் உள்ளுக்குள் இருக்கும் ஒளி இருள் சூழ்ந்து விடுமே? அதன்பின் ஆன்மீக முன்னேற்றம் பெறுவது எப்படி? ஆகவே இன்று முதல் செய்யாத தவறுக்காக மன்னிப்பு கேட்க வேண்டாம்.
செய்த தவறுக்காக உதட்டளவில் ஒப்புக்காக 'சாரி' சொல்வது வேண்டாம். மனம் உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.
சிலர் தன் உடல்நலம் என்பதில் சிறிதும் அக்கறை கொள்ள மாட்டார்கள். காலை உணவினையே மதியத்திற்கு மேல் எடுத்துக் கொள்வார்கள். டீ குடித்தே நாள் முழுவதும் கடத்துவார்கள். 'என்ன பெரிய வாழ்க்கை? நான் சாப்பிடாவிட்டால் என்ன?' என்பார்கள். தன் உடை, தோற்றம் இவற்றில் கவனம் செலுத்த மாட்டார்கள். ஒரு வித மன அழுத்தம், சோர்வு இருக்கும். இத்தகையோர் முதலில் தன் உடல்நலத்தில் முறையாக கவனம் செலுத்த வேண்டும். எல்லாம் துறந்த நிலை என்பது வேறு. அன்றாட வாழ்க்கை முறையில் வாழ்பவர் வேறு என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இல்லையெனில் உடல், மனம் இரண்டும் கெட்டு எந்த செயலிலும் முன்னேற முடியாது.
வீட்டிலோ, அலுவலகத்திலோ நம் சுயமரியாதை குறையும் இடத்தில் இருந்து நகர்ந்து விடுவதும், தவிர்த்து விடுவதும் நல்லது. இல்லையெனில் ஒருவரின் வாழ்வினை, முன்னேற்றத்தினை நசுக்க இது ஒன்றே போதும்.
ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு உலகம். ஒரு பிரபஞ்சம். மற்றவர்களோடு தன்னை நினைத்து பார்க்காமல் உங்களுக்குள்ளே உங்களைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும்.
வெற்றியோ, தோல்வியோ நம் வாழ்வினை நாம் முறையாகத் தான் வாழ வேண்டும். இதில் பிறர் நம்மை பாராட்டலாம் அல்லது நம்மை தூற்றவும் செய்யலாம். அது பற்றிய கவலை கொண்டால் வாழ்வு சிதறி விடும். ஆகவே முறையாக மட்டுமே வாழ வேண்டும்.
சுதந்திரம், சுதந்திரம் என்கின்றோமே எது சுதந்திரம்? சட்டம், வரைபாடுகள் இவற்றில் கட்டுப்பட்டு வாழ்வது தானே சுதந்திரம். இதனை சரியாக செய்யும் பொழுது அபரிமிதமான சுதந்திரத்தினை ஒவ்வொருவரும் உணருவர்.
நமது கடமைகளை நாம் சரியாக செய்யத் தொடங்கினால் நம் திறமைகள், நேர்மை வெளிப்படும். பகையாளி கூட உங்களை மதிப்பார்.
இருப்பினும் பிறர் பாராட்டினை எதிர்பார்த்து கடமையினைச் செய்தால் மனம் பேயாய் அலையும்.
ஆகவே எதிர்பார்ப்புகளே வேண்டாம். அவை ஏக்கத்தினையும், ஏமாற்றத்தினையும் தரும்.
அவரவர் கஷ்டங்களை கூச்சல் போட்டு கூறாதீர்கள். நாமே யோசித்து தகுதியான உதவியோ அல்லது ஆலோசனையோ பெற்று செய்யலாம்.
பொறுத்துக் கொள்ளுங்கள். வேறு வழியே இல்லை. கோபம், ஆத்திரம், பொறுமை இவற்றில் வாழ்க்கையே இல்லை.
ஏட்டிக்குப் போட்டியாக பேசுவது திறமையும் இல்லை. அறிவும் இல்லை.
பல நேரங்களில் மவுனம் நமக்கு மகுடம் சூட்டும். ஒரு அரிசி மணி, ஒரு சிறு காகிதத் துண்டை கூட வீண் செய்யாதீர்கள். வாழ்வில் இதுவும் ஒரு வகை தவம் தான்.
- நேரம் கிடைக்கும் போது வந்தால் போதும் என்று ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்டார்கள்.
- பொதுவாக கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடித்த படங்கள் என்றாலே பாடல்கள் சூப்பர் ஹிட்டாக இருக்கும்.
குறும்புத்தனம்...
என்னுடன் பிறந்தது என்று தான் சொல்ல வேண்டும். கதாநாயகி ஆன பிறகும் என்னிடம் குறும்புத் தனம் இருக்கத்தான் செய்தது.
கன்னடத்தில் எனது முதல் படம் 'புட்ட நஞ்சா' ஹீரோ ரவிச்சந்திரன். கன்னடத்தில் அவர் பெரிய ஸ்டார்.
எனவே அழைப்பு வந்ததும் ஒப்புக் கொள்ள ஆசை தான். ஆனால் தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மிகவும் பிசியாக இருந்ததால் கால்ஷுட் கொடுப்பத்தில் சிக்கல் இருந்தது.
ஆனாலும் அவர்கள் விடவில்லை. நேரம் கிடைக்கும் போது வந்தால் போதும் என்று 'அட்ஜஸ்ட்' செய்து கொண்டார்கள். எனவே நானும் ஒத்துக்கொண்டேன்.
அந்த காலத்தில் சிவாஜி சாரும், ஜெயலலிதாம்மாவும் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' படத்தின் தழுவல்தான் அந்த படம்.
ஹீரோவாக வரும் ரவிச்சந்திரன் கிராமத்து இளைஞன். நான் பட்டணத்தில் வளர்ந்த பெண். காதல், மோதல் என்று காட்சிகள் விறு விறுப்பாக இருந்தது.
பொதுவாக கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடித்த படங்கள் என்றாலே பாடல்கள் சூப்பர் ஹிட்டாக இருக்கும். ஹீரோயின்களை கிளாமராக காட்டுவார். முக்கியத்துவமும் இருக்கும்.
அதைப்போலவே இந்த படமும் ஹிட்டாச்சு. பாடல்களும் சூப்பர் ஹிட்டாச்சு. கன்னடத்தில் முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் கன்னட பட உலகிலும் புகழ் பெற தொடங்கினேன்.
முதல் நாள் பட பூஜை பெங்களூரில் நடந்தது. பூஜை முடிந்ததும் ஷுட்டிங்கையும் தொடங்கிவிட்டார்கள். பெங்களூர் எனக்கு பிடித்தமான நகரம். பகலில் வெயில் அடிக்கும். ஆனாலும் ஜில்லென்று இருக்கும். நகரை சுற்றி வந்தாலும் தூசு நம்மை சுற்றாது. அப்படி ஒரு அழகான ஊர் பெங்களூர்.
அங்கு என்னென்ன பொருட்கள் எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆனால் சாம்பார் வடை சூப்பர் டேஸ்டாக இருக்கும்.
அது எப்படி கண்டு பிடித்தீர்கள் என்கிறீர்களா?
அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சார் சிங்கப்பூரில் எந்தெந்த கடைகளில் என்ன உணவுகள் பிரபலம் என்று சொல்லி தந்ததை ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறேன்.
அதேபோல் பெங்களூரில் எந்த கடையில் என்ன பிரபலம் என்று ரவிச்சந்திரன் தான் சொல்லி கொடுத்தார். அப்போது தான் சாம்பார் வடையை ருசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பிறகு பெங்களூர் சென்றால் சாம்பார் வடையை மிஸ் பண்ணுவதே கிடையாது.

அதேபோல் எனது நெருங்கிய தோழி நடிகை சவுந்தர்யாவும் பெங்களூரில் தான் இருக்கிறார். அப்போது தான் அவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்து கொள்ள முடியாததால் மாலையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றேன். எல்லோரும் ஒன்றாக இரவு விருந்தில் கலந்து கொண்டோம்.
அப்போது தான் உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங்மால் என்று வர்ணிக்கப்பட்ட மால் ஒன்று பெங்களூரில் திறந்திருந்தார்கள்.
ஒரு நாள் இரவு 8 மணிக்கு அங்கு சென்றேன். ஏழெட்டு புதிய ஆடைகளையும் வாங்கினேன். சிப்பியில் செய்திருந்த அலங்கார பொருட்கள் பிரமாதமாக இருந்தது. அவைகளையும் வாங்கினேன்.
யாருக்குமே ஷுட்டிங் நடத்த அனுமதிக்காத பங்களா வீடு ஒன்றை எங்களுக்கு தந்திருந்தார்கள். சுற்றிலும் வயல் வெளிகள்.. ஓங்கி வளர்ந்த மரங்கள். கண்ணுக்கு விருந்தளித்த இயற்கை சூழல்.
அங்கு வைத்து தான் ஷுட்டிங் நடந்தது. நாங்கள் அங்கு தான் தங்கி இருந்தோம். எனக்கு பிறந்தநாள் நடப்பது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அதற்காக நிறைய பலூன்கள் வாங்கி கட்டியிருந்தார்கள். எனக்கு பலூன்களை பார்த்ததும் ஷுட்டிங் முடிந்து விளையாட ஆசை. ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று ஆசையை அடக்கி கொண்டிருந்தேன்.
ஆனால் ரவிச்சந்திரன் என்னைவிட பெரிய விளையாட்டு பிள்ளை என்பதை தெரிந்து கொண்டேன்.
ஷுட்டிங் முடிந்த பிறகு வீட்டில் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அவர் என்ன செய்தார் தெரியுமா?
சில பலூன்களை அவிழ்த்து எடுத்து வருவார். அதற்குள் தண்ணீரை நிரப்பி வைத்து கொள்வார். சுற்றும் முற்றும் பார்ப்பார். யாராவது தூங்கி வழிந்தால் அவரை அழைத்து வர சொல்லி அவர் அருகே வந்ததும் அவர் முகத்துக்கு அருகில் பலூன் மீது குண்டூசியால் குத்தி விடுவார். அது வெடித்து முகத்தில் தண்ணீரை விசுறும்.
உடனே என்ன... தூக்கம் போச்சா...? என்று கேட்டபடி சிரிப்பார். உடனே நானும் கை கொட்டி சிறுபிள்ளை போல் சிரிப்பேன்.
அப்புறமென்ன? அவரைப் போலவே நானும் சேட்டை பண்ணுவேன். ஒரே ஜாலியாக இருக்கும். ஷுட்டிங்கில் இருப்பது போலவே இருக்காது. நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவது போல் இருக்கும்.
அந்த படத்தில் தான் முகமெல்லாம் ஹோலி வண்ணம் பூசினார்கள். அதுவரை அந்த அனுபவம் கிடையாது. உடல் முழுவதும் வண்ண பொடியுடன் தான் ஷுட்டிங் முடிந்து வீட்டுக்கு செல்வேன்.
குளித்து அந்த சாயத்தை அகற்றுவதே பெரும் பாடாக இருக்கும். தற்காலிக நீச்சல் குளம் ஒன்று தயார் செய்யப்பட்டிருந்தது. பெங்களூர் குளிரில் காலை 6 மணிக்கு அந்த தண்ணீரில் இறங்கி நடிக்க சொன்னால் எப்படி இருக்கும்?
ஐஸ் கட்டிக்குள் நிற்பது போல் இருக்கும். குளிரில் உடலெல்லாம் நடுங்கும். அதையெல்லாம் தாங்கி கொண்டு நடிப்போம். லைட்மேன், கேமரா மேன் என எல்லோரும் கரையில் நின்றபடி படமாக்கி கொண்டிருப்பார்கள்.
இன்னும் கொஞ்சம் அப்படி நில்லுங்கள்... இப்படி நில்லுங்கள்.. என்று சொல்லி சொல்லியே படமாக்குவதற்கு நேரமாகும்.
எங்களுக்கோ... டேய் நீங்களும் உள்ளே இறங்கி பார்த்தால் தெரியும். சீக்கிரம் ஷுட்டிங்கை முடிங்கப்பா.. என்று சொல்ல வேண்டும்போல் இருக்கும்.
ஷுட்டிங் முடிந்து குளத்தில் இருந்து கரையேறியதும் ரவிச்சந்திரன் வெளியே நிற்கும் படக்குழுவினர் யாரையாவது பிடித்து குளத்தில் தள்ளி விடுவார். அவர்கள் குளிரில் நடுங்குவதை பார்த்து சிரிப்பார்.
நானும் சிலரை பிடித்து தள்ளி விடுவேன்... அவர்கள்.. மேடம்.. மேடம்... என்றபடி உள்ளே விழுவார்கள். அதை பார்த்ததும் நாங்கள் கைகொட்டி சிரிப்போம்.
எப்படியெல்லாம் விளையாடி இருக்கிறேன். பாருங்கள். அடுத்த வாரம் மேலும் சில தகவல்களுடன் சந்திக்கிறேன்.
(தொடரும்...)
- நம்மோட மருத்துவ முறையில் சித்தமருத்துவம் என்பது மிகவும் முக்கியமானது.
- ரமணா ஸ்டைலில் தானே இப்போதெல்லாம் மருத்துவம் பார்க்கிறார்கள்.
வரவர உன் போக்கு சரியில்லை, உடம்பு சரியில்லைன்னு மருந்து கொடுத்தா குடிக்க என்ன?
என்னயிது?
கஷாயம்
யாருக்கு?
அட மக்கு மனசாட்சி... நீதான் நேத்து ராத்திரியில் இருந்து இருமிகிட்டு இருந்தியே? அதனால்தான்.
நீ எப்போதில் இருந்து டாக்டரா மாறினே?
கேள்வி கேட்காம இதைக் குடி. மனசாட்சி ஏற இறங்க ஒரு பார்வைப் பார்த்துவிட்டு எதுக்கு இப்போ திடீர்னு இந்த வேலையிலே இறங்கிட்டே?
இந்தவாரத் தலைப்பு அப்படி ? ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்... மனசாட்சிக்கு இரண்டு மிடறு விழுங்கியதும் புரையேறியது.
அடப்பாவி... என்னைக் கொல்லப் போறீயா?
அட முட்டாள் மனசாட்சி... நீ செத்தா நானும்தானே சாவேன்.
அப்படின்னா சரி... கஷாயம் காலியாகிட ஒரே கசப்பு. மருந்துன்னா இத்தனை கசக்குமா? ஆமா நீ எப்படி இப்போ அரை வைத்தியனா இல்லை முழு வைத்தியனா ?
நான் முறைத்தபடியே, மனசாட்சியிடம், வழக்கம்போல இந்த பழமொழியும் அர்த்தம் மாறித்தான் போயிருக்கிறது. உனக்குத் தெரியுமா? ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுதான் பழமொழி.
ஒஹோ... சலிப்புடன் எப்படியும் நீ அர்த்தம் சொல்லத்தான் போறே... நான் கேட்கத்தான் போறேன், ஏன் டயம் வேஸ்ட் பண்றே?! கம்மான் ஸ்டார்ட். அதுக்கு முன்னாடி எனக்கு ஒண்ணு சொல்லணும்.

சொல்லேன்... தொண்டையைக் கனைத்தபடியே ஆரம்பித்தது.
போனவாரம் நான் வாசற்படியிலேயே நின்னுகிட்டு கிடந்தேன். ஒரு குட்டிப் பையன் வழுவழுன்னு ஒரு நோட்டீசைத் திணிச்சிட்டுப் போனான். அதில் பக்கத்து தெருவில் புதிய ஆஸ்பத்திரி திறக்கப் போவதாகவும் அங்கே முதல் ஐந்து நாட்களுக்கு மருத்துவம் 50 சதவீதம் இலவசம்னும், 1000 ரூபாய்க்கு டெஸ்ட் எடுத்தா இரண்டு ஊசி இலவசம்னு போட்டு இருந்தது. எனக்கு பகீர்ன்னு ஆயிடுச்சி. பிரியாணிக்கு முட்டை இலவசம்னு போர்ட்டு போடுவாங்களே அதுபோல...ஏம்பா... மருத்துவத்தில் இலவசம் சாத்தியமா...
நீ இதைச் சொல்றே? காம்போ ஆபர்ல கம்ப்ளீட்டெஸ்ட் எடுக்கறோன்னு டீவியிலே அறிவிப்பு வருதே அதை என்ன செய்ய?
படிப்பிலேயே உசந்ததுன்னு டாக்டர், என்ஜினீயர்ன்னு ஒரு அலீபியைக் கிரியேட் பண்ணிடறாங்க. தெருவுக்கு நாலு பிரியாணி கடைக்குப் போட்டியா இப்போ மருத்துவமனைகளையும், பத்துக்கு பத்து அறையும், தட்டுத் தடுமாறி ஊசிபோடற ஒரு உதவியாளரும் கிடைச்சா அங்கே ஒரு மருத்துவமனை ரெடி, பெரிய பெரிய பையோடு, சேல்ஸ் ரெப்புகளும் படையெடுத்து மருந்துகளை கொண்டு வந்து கொட்டறாங்க இதுக்கு மேல...
அட ஆமாப்பா... போனவாரம் நம்ம அடுத்தவீட்டு கீதாக்கா, ஒரு மாத்திரையைக் கொண்டு வந்து கொடுத்து இது போட்டதில் இருந்து தலை சுத்துதுன்னு கிறக்கமாக இருக்குன்னு சொல்லுச்சி. நானும் என்னான்னு வாங்கி, கூகுளில் செக் பண்ணிப் பார்த்தேன். புது பார்முலா, புது மாத்திரை மார்க்கெட்டுக்கு வரும்முன் டாக்டரிடம் சேம்பிள் என்று வந்திருக்கிறது. பணம் செலுத்த முடியாத அக்காவிற்கு, மாத்திரை பணம் கொடுத்து வாங்கி கஷ்டப்பட வேண்டான்னு நல்ல எண்ணத்தில் சேம்பிள் பார்த்திருக்கிறார்.
ஆனா... உண்மைதான் மருத்துவர்களைத் தாண்டி சில மெடிக்கல்ஷாப்பில் பணிபுரிபவர்கள் கூட அடிக்கடி இப்படித்தான்... அண்ணே தலைவலிக்குது, லேசா இருமல், தொண்டை சரியில்லை ஏதாவது மாத்திரை கொடுங்க என்று ஒருவர் கேட்க,
அவர் நான்கைந்து டப்பாக்களைத் திறந்து சில மாத்திரைகளை எடுத்து தருகிறார்.
என்ன சார் இது, டாக்டர் மருந்து சீட்டு இல்லாம நீங்க கொடுக்கலாமா என்று கேட்க, அவர் பதில் சொல்லும் முன் நோயாளி சொல்லுகிறார். அட போங்க சார்.. தலைவலின்னு போனா எக்ஸ்ரே எடுக்க சொல்றாங்க. ஒண்ணுமில்லாததுக்கு ஆயிரக்கணக்கிலே துட்டைப் பிடுங்குறாங்க. இதிலே எங்கே சார் அங்கே போக முடியுது. மாத்திரையை வாங்கிப்போட்டோமா தூங்கினோமோ காலையிலே ஜோலியைப் பார்க்க போனோமான்னு இல்லாம? அவர் பேசியது ஆச்சரியமாக இருந்தாலும், ரமணா ஸ்டைலில் தானே இப்போதெல்லாம் மருத்துவம் பார்க்கிறார்கள். அந்த நண்பரின் கேள்வி சரியாகவேப்பட்டது.
அட ஆமாப்பா மருந்தைக் கண்டுபிடிச்சி நோயை உருவாக்குகிறார்கள். அது சரி..
ம்... அப்போ ஆயிரம் பேரைக் கொன்றால்தான் அரை வைத்தியன் என்பது சரிதானா? அது சரி முழு வைத்தியன் ஆகணுன்னா எத்தனை பேரைக் கொல்லணும்?
எங்கே போனாலும் கரெக்டா என்னை டிராக்கிலே கொண்டு வந்திடறே பாரு... நீதான் நல்ல மனசாட்சி.
புகழ்ந்தது போதும் விளக்கத்தைச் சொல்லு..
பண்டைய காலத்திலே சித்த மருத்துவர்கள் மூலிகை வேர்களைக் கொண்டு மருந்துகளைத் தயாரித்தார்கள். அதனால் எண்ணிக்கையில் அதிகப்படியான வேரை வைத்திருப்பவர்களுக்கான பழமொழி.
டாக்டர் கையெழுத்து போல புரியாத மாதிரி விளக்கம் சொல்லாதே?
நம்மோட மருத்துவ முறையில் சித்தமருத்துவம் என்பது மிகவும் முக்கியமானது. இதற்கு மூலிகைத் தாவரங்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாதிரி மருத்துவத்தில் ஈடுபடுகிறவர்கள் நோயைக் குணப்படுத்திட சரியான மூலிகையைத் தேடி காடு மேடெல்லாம் அலையணும். தன்னோட வாழ்நாளில் பாதியை இதற்காக செலவிடணும். இந்த மருத்துவ முறையை கற்றுக்கொள்ள மாணவனாக சேரும் ஒருவன் ஆயிரம் மூலிகை வேர்களை பறித்து அதன் தன்மைகள், அது எந்த நோயைக் குணமாக்க பயன்படும் என்பதை எல்லாம் ஆராய்ந்து தன் பணியைத் துவங்க வேண்டும். இப்படி ஆராய்ந்து பார்த்து செயல்படும் பிராசஸ்சுக்கு தான் அரை வைத்தியன் என்று பெயர்.
இப்போ புரியுதுப்பா.

இன்னும் விரிவா சொல்றேன்... சித்த ஆயுர்வேத வைத்தியர்கள். பல வகையான மூலிகைகளைப் பறித்து வந்து அவற்றினை பதப்படுத்தி, உலர வைத்து, சில மூலிகைகளைப் பிழிந்து சாறு எடுப்பார்கள். இந்த மாதிரி மூலிகைகளைப் பதப்படுத்தும் போதும், உலர வைக்கும் போதும் அதிலிருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றுவார்கள். இவ்விதம் மூலிகைகளைப் பதப்படுத்துதலை மாரணம் செய்தல் என்று கூறுவார். மாரணம் என்ற சொல்லுக்கு வடமொழியில் கொல்லுதல் என்று பொருள்.
இப்படி வேரை மாரணம் செய்து மருந்து தயாரிப்பவன் வைத்தியன். எனவேதான் ஆயிரம் வேரை... நல்லா கவனி... ஆயிரம் பேரை இல்லை ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்.
அடடா... இத்தினி நாளா இது தெரியாம போச்சே?!
பழமொழி - ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.
நாளடைவில் மருவி ஆயிரம் பேரைக் கொன்றவன் என்றாகிப்போனது.
ஒரு சினிமாவில் இப்படித்தான், டாக்டர் டிரஸ் போட்டுகிட்டு எப்பா நான் இப்பவே 999பேரைக் கொன்னுட்டேன். இன்னும் ஒரேயொருத்தர்தான், நான் அரை வைத்தியன் ஆகிவிடுவேன் என்று சிரிப்பிற்கு சொல்லுவார்கள். சிந்தனைகள் எல்லாம் சிரிப்பாக மாறியது போலும், பழமொழிகளும் அதன் விளக்கங்களை நமக்கு எப்படி தோணுதோ அப்படி மாற்றிக் கொள்ள சபிக்கப்பட்டு விட்டது.
அடுத்த பழமொழியில் சந்திப்போம்.
- ஒவ்வொரு தனிமனிதனும் சமுதாயத்தில் கலந்து சமுதாய மனிதனாகிறான்.
- பட்டம் சுதந்திரமாக உயரே பறக்கட்டும்!” என்று கூறி, நூலையும் அறுத்துவிட்டான்.
சுற்றத்தோடு சூழ்ந்து வாழ முயற்சிக்கும் அன்புமயமான வாசகர்களே! வணக்கம்.
மனிதர்கள் பெரும்பாலும் தனித்தனியாகப் பிறக்கிறோம். தனித்தனியாகவே இறக்கிறோம். ஆனால் வாழும்போது மட்டும் கூடிவாழ வேண்டும் என்கிற நிலைக்கு ஆட்படுத்தப் படுத்தப்படுகிறோமே! அது ஏன்?.
ஆணும் பெண்ணுமாக அமையும் மனிதப் படைப்பில் ஆணோ பெண்ணோ ஒவ்வொரு தனிநபரும் தனித் தனியே வாழக்கூடாது என்று சமூக அமைப்பில் சட்டம் கிடையாது. தனித் தனியாக வாழ நினைப்பவர்கள் வாழ்ந்து கொள்ளலாம். ஆனாலும் மனிதனாகிலும் அல்லது மற்ற படைப்புக்களாகிலும் அவர்கள் தாமே சுயம்புவாய் எவருடைய தயவுமின்றித் தோன்றியவரில்லை. சமுதாயக் குடிமரபில் அவர்கள் புதிதாய்த் தோன்றிடும் புதிய கிளை.
மனிதன் தனியேதான் பிறந்தவன் என்றாலும் அவன் பிறப்பதற்கு முன்பே அவனுக்கு உற்றார், உறவினர், சுற்றத்தார் எனும் ரத்தவழிச் சொந்தங்கள் உருவாகி விடுகின்றனர். பிறந்த பிறகு நண்பர்களும் உறவுபோல ஒட்டிக் கொள்கின்றனர். தனிமனிதன் குடும்பமாகிக், குடும்பம் குடிவழியாகிக், குடிவழி சமூகமாகிறது. இப்படித்தான் ஒவ்வொரு தனிமனிதனும் சமுதாயத்தில் கலந்து சமுதாய மனிதனாகிறான்.
"யாதும் ஊரே! யாவரும் கேளிர்!" எனும் கணியன் பூங்குன்றனின் தமிழ் முழக்கம், மண்ணில் தோன்றுகிற தனிமனிதன் ஒவ்வொருவருக்கும் உலகில் உள்ள ஒவ்வொரு ஊரும் சொந்த ஊரே! ஒவ்வொரு மனிதனும் சொந்த உறவினரே! என்று உலகளாவிய சமூக நல்லுறவிற்குப் புதுப்பாதை சமைக்கிறது.
'கேளிர்' என்னும் பூங்குன்றனின் உறவுரிமைச் சொல் ஆழமான பொருள்விரிவு உடையது. தனியனாகப் பிறக்கின்ற மனிதனுக்கு முதலில் உற்றார் உறுதுணையாக நிற்கின்றனர். உற்றார் என்றால் ரத்த சம்பந்தமுடையதால் சொந்தம் எனும் உரிமை கொண்டாடத் தகுதி உற்றவர்கள். அம்மா, அப்பா, பெரிய, சிறிய அப்பாக்கள், அம்மாக்கள், தாத்தா, பாட்டிகள், மாமா, அத்தைகள், உடன் பிறந்தோர், பிறகு தம்வயிற்றிற் பிறந்தோர் என ரத்த சம்பந்தம் கொண்டவர்களையெல்லாம் உற்றார் என்று குறிப்பிடலாம்.
உறவினர்கள் என்போர் குடிவழியில் தோன்றியவர்கள், பெண் கொடுத்தோ அல்லது எடுத்தோ உறவுமுறை ஆகிறவர்கள், தூரத்துச் சொந்தத்தினர் ஆகியோர் உறவினர்கள் ஆகின்றனர். இப்போதெல்லாம் சாதிமறுப்புத் திருமணங்கள் பெருகிக் கொண்டிருப்பதால் உறவினர் எனும் எல்லை சாதி மதம் கடந்ததாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
திருமண அழைப்பிதழ்களில் நிறைவாக ஒரு சொற்றொடர் கட்டாயம் இடம் பெற்றிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். "சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து மணமக்களை வாழ்த்தியருள வேண்டுகிறோம்" என்பதே அந்த வாக்கியம். 'உற்றார்' என்பதையும் 'உறவினர்' என்பதையும் பார்த்தோம்; அது என்ன 'சுற்றம்'?.

சுந்தர ஆவுடையப்பன்
ரத்த சம்பந்தம் உடையவர்கள் 'உற்றார்'; உறவுவழிச் சொந்தம் ஆகிறவர் 'உறவினர்'. இந்த உற்றாரும் உறவினரும், நமது வாழ்க்கையில் ஏற்படும் நன்மையிலும் தீமையிலும் நம்மைச் சுற்றியே நிற்கப் போகிறவர்கள் ஆகையால், இவர்களே 'சுற்றம்'.
நகரத்தின் ஓர் அடுக்ககத்தின் மொட்டை மாடியில் நின்று சிலர் பட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். பட்டம் விடுகிறவர்கள் சிறுவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உதவியாகப் பெரியவர்களும் உடன் நின்றிருந்தனர். பத்துப் பதினைந்து பட்டங்கள் வானவெளியில் பறக்கத் தொடங்கியிருந்தன. சிறுவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது பட்டங்களை உயரே உயரே பறக்க விடுவதில் ஆர்வமும் கவனமும் செலுத்திக் கொண்டிருந்தனர்.
ஒரு சிறுவன், அவனது தந்தையின் கையில் இருந்த நூலைத் தன்னுடைய கையில் தருமாறு அடம்பிடித்துக் கொண்டிருந்தான். அவனது பட்டம் மற்ற பட்டங்களைப் போல உயரே சென்று பறக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. காற்றடிக்கும் விசைக்கு ஏற்ப, நூலை அங்கும் இங்குமாக அசைத்துச் செலுத்தினால்தான் பட்டம் மற்ற பட்டங்களோடு சிக்கிக் கொள்ளாமல் உயரே உயரே பறக்கும்.
ஆனால் சிறுவன் மிகுந்த பரபரப்போடு அப்பாவிடம் கூறினான், " அப்பா! பட்டத்திற்கு விடுதலை கொடுங்கள்! நம்முடைய பட்டம் எல்லார் பட்டத்திற்கும் மேலே பறக்க வேண்டும்!. இப்படி நூலை இழுத்து இழுத்துப், பறக்க விடாமல் பிடித்துக் கொண்டால் எப்படிப் பறக்கும்?. நூலை உங்கள் கையிலிருந்து விட்டு விடுங்கள்! அல்லது நூலை அறுத்தெறியுங்கள்! பட்டம் சுதந்திரமாக உயரே பறக்கட்டும்!" என்று கூறி, நூலையும் அறுத்துவிட்டான்.
அவ்வளவுதான். வானத்தில் பறந்து கொண்டிருந்த பட்டம் நிலைதடுமாறிப் பறக்கமுடியாமல், கீழ்நோக்கிச் சரிந்து, ஒரு மரக்கிளையில் பட்டுக் கிழிந்து நைந்தும் போனது. சிறுவன் அழத்தொடங்கி விட்டான். அவனை அமைதிப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்த அப்பா கூறினார்,
"மகனே கேள்! பட்டம் விடுவதில் ஒரு தத்துவம் இருக்கிறது. ஒரு பட்டம் வானில் பறக்கிறது என்றால், அது காற்றின் விசையினால்தான் பறக்கிறது. என்றாலும் அது எந்த விதமான இடையூறும் இன்றி உயரே உயரே மேலே மேலே பறப்பதற்கு, அதன் ஒருமுனையில் கட்டப்பட்டு மறுமுனையில் நம் கைகளில் இருக்கும் நூல்தான் காரணம் என்பதை மறவாதே!. "
அந்தப் பட்டம் தான் நீ என்று வைத்துக்கொள். உன்னை மேலே மேலே உயர்த்தி முன்னேற்றுவதற்கு என்னால் முடிந்த அளவுக்கு நான் பாடுபட வேண்டும். என் கையில் உன்னோடு பிணைக்கப்பட்ட நூல் இருக்கிறது. சேதாரமில்லாத உன் பறத்தலுக்கு நானும் செயலாற்ற வேண்டும்; நூலும் அறுந்து போகாமல் கெட்டியாக இருக்க வேண்டும். பட்டம் நீ என்றால், உன்னை உயரத்தில் பறக்க விடுவது நான் என்றால், உன்னையும் என்னையும் பிணைத்திருக்கக் கூடிய நூல் நமது சுற்றத்தினராகிய உற்றார் உறவினர் மற்றும் நமது நண்பர்கள் ஆகும் . சுற்றத்தார் எனப்படும் நூலின் உதவி அறுந்து போனால் பட்டத்தின் நிலை என்னவாகும் பார்த்தாயா?"
தந்தையின் தத்துவார்த்தக் கதையும் உறவுகளின் மேன்மையும் சிறுவனைச் சிந்திக்க வைத்தது. சுற்றிக் கரைகள் இல்லாத குளத்தில் தண்ணீர் ததும்பி நிற்காது; அதே போலச் சுற்றத்தினர் சூழ்ந்து அளவளாவி மகிழாத குடும்பத்தில் மகிழ்ச்சியும் தளும்பி நிற்பதில்லை என்கிறார் திருவள்ளுவர். குளத்திற்குப் பலமான கரை எப்படி அவசியயோ அதுபோலக் குடும்பத்திற்கு நல்ல சுற்றத்தினரும் அவசியம்.
ஒரு நகரத்தின் பாதுகாப்பிற்கு, அதனைச் சுற்றிப் பாதுகாப்புச் சுவர்களை எழுப்புவர். அதைப்போலச் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் சுற்றத்தினரால் சுற்றப்பட்ட பாதுகாப்பு உடையதாகத் திகழ்வது நல்லது. திருவள்ளுவர் ஒவ்வொரு குடும்பமும் சுற்றம் தழுவி வாழவேண்டும் என்பதற்காகத் தான் 'சுற்றந்தழாஅல்' என்னும் தனி அதிகாரம் படைத்தார்.
வேளாண்மைத் தொழிலை மட்டுமே நம்பியிருந்த கிராமியம் சார்ந்த மக்கள் நிலை இன்று மாறியிருக்கிறது. நகர்மயமாதலில் பல்வேறுபட்டத் தொழில்களை மேற்கொள்ளும் நிமித்தம் மனிதர்கள், உற்றார் உறவினர் என்னும் சுற்றுச் சூழலைப் பிரிந்து வாழும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கின்றனர். எந்த ஊர் பணிவழங்கி, தொழில் வழங்கி, வாழும் வசதிகளை வழங்குகிறதோ அதுவே காலப்போக்கில் சொந்த ஊர் எனும்படிக்கு மக்கள் மனநிலை மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஓர் அராபியக் கதை. ஓர் ஊரில் ஒரு வீட்டில் தந்தையும் மகளும் மட்டும் வசித்து வருகின்றனர். அன்றைக்குப் பகல் விருந்தாக ஒரு முழு ஆட்டையும் சமைத்துவிடுவது என்று முடிவெடுத்த தந்தை அப்படியே செய்து விருந்தைத் தயார் செய்து விட்டார். தானும் மகளும் என இருவர் மட்டும் வாழும் வீட்டில் எப்படி இவ்வளவு அதிகமான உணவை உண்ணுவது?.
மகளை அழைத்தார், " விருந்து தயார் மகளே! இன்றைக்கு நம்மோடு மதிய விருந்து சாப்பிடுவதற்காக, வெளியில் சென்று, நமது வீட்டைச் சுற்றியுள்ள நமது உற்றார் உறவினர் அனைவரையும் அழைத்து வா! மகிழ்ச்சியோடு உணவுண்போம்!" என்றார்.
வீட்டை விட்டு வெளியில் வாசலுக்கு வந்து நின்று கொண்ட மகள், ஒரு புதுவிதமான உத்தியைக் கையாண்டார், "ஆபத்து! ஆபத்து! உள்ளே வீட்டின் சமையலறையில் சமைத்துக் கொண்டிருக்கும் போது என் தந்தையின் மீது நெருப்புப் பற்றிக்கொண்டது!,. எனது தந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். யாராவது உள்ளே சென்று காப்பாற்றுங்கள்!" என்று கூக்குரலிட்டாள்.
அவளின் கூக்குரலைக் கேட்டு வீடுகளை விட்டு வெளியே வந்த அவளது சொந்த உறவினர்களில் பலர், நெருப்பில் இருப்பவரைக் காப்பாற்றுவதற்கு மனமில்லாமல், திரும்ப வீட்டுக்குள் சென்று கதவை நன்றாகப் பூட்டிக் கொண்டனர். சில உறவினர்களோ வேக வேகமாகச் சொந்த வீட்டின் கதவுகளைப் பூட்டிக்கொண்டு நகரத்தை நோக்கித் தப்பிச் சென்றனர். வெகு சில உறவினர்கள் மட்டுமே உண்மைப் பதற்றத்துடன், என்ன! ஏது! என்று கேட்டுக்கொண்டே அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் ஓடினர். அந்தத் தெரு வழியாக அப்போது சென்றுகொண்டிருந்த ஒருசில புதிய வழிப்போக்கர்களும் உதவும் பரோபகாரச் சிந்தனையுடன் அவளின் வீட்டுக்குள் புகுந்தனர்.
வீட்டிற்கு உள்ளே வந்தவர்கள் அனைவரும் பதற்றத்துடனும் பரபரப்புடனும் காணப்பட்டனர். அவர்களை அன்பு கனிந்த முகத்துடன் வரவேற்பறையில் நின்றுகொண்டு வரவேற்றார் பெண்ணின் தந்தை. வந்தவர்கள்," எங்கே சமையலறை? எங்கே நெருப்பு? உங்களுக்கு ஒன்றுமில்லையே?" என மிகுந்த பரபரப்புடனும் பரிவுடனும் விசாரித்தனர்.
ஏதும் புரியாமல், என்ன நடந்தது என்று தெரியாமல் மகளைப் பார்த்தார் அப்பா." இவர்கள்தான் அப்பா நமது உண்மையான சுற்றத்தினர், உற்றார் உறவினர். இவர்களுக்கு விருந்து பரிமாறி மகிழ்வோம்!" என்று கூறிய மகள், வந்திருந்தவர்களிடம்," மன்னிக்கவும்! இங்கு தீ விபத்து எதுவும் நடக்கவில்லை!. எங்களுக்கு ஏதாவது நடந்துவிட்டால் யாரெல்லாம் ஓடிவந்து உதவுவார்களோ அவர்கள்தாம் உண்மையான உற்றார் என நான் நினைத்தேன். அப்படிப் பார்த்தால் நீங்கள் அனைவரும் எங்கள் சுற்றத்தினர். எங்கள் விருந்தில் அன்போடு கலந்து கொள்ளுங்கள்" என்றாள்.
காலம் புதிய புதிய குடும்பக் கோட்பாடுகளோடும் உறவுக் கோட்பாடுகளோடும் பயணப்படத் தொடங்கியிருக்கின்ற இன்றைய சூழ்நிலைகளில், ரத்தச் சொந்தம், உறவுச் சொந்தம், சுற்றச் சொந்தம் எல்லாம் கடந்து, தற்போது நட்புச் சொந்தமே பெருஞ் சொந்தமென ஆகும் காலம் கருவாகியிருக்கிறது.
"யாவரும் கேளிர்!"
எனும் கணியனின் வாசகமும் கனிந்திருக்கிறது.
ஏற்போம்! புதிய சுற்றம் படைப்போம்!
தொடர்புக்கு 9443190098.
- மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரம் தினத்தன்று அங்கு நீராடுவது கூடுதல் சிறப்பாகும்.
- சிறப்புமிக்க இந்த மகாமகத் தீர்த்தத்தை ஒருமுறை வலம் வந்தால் பூமியை நூறுமுறை வலம் வந்த பலன் கிட்டும்.
கும்பகோணம் என்றதும் அனைவருக்கும் மகாமகம் குளம்தான் நினைவுக்கு வரும். கும்பகோண நகரின் மையப்பகுதியில் மகாமகம் தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. இந்த தீர்த்த குளம் முக்கிய சாலை ஓரத்திலேயே அமைந்திருக்கிறது. எனவே கும்பகோணம் யாத்திரை செல்பவர்கள் தீர்த்தக்குளத்தை கடந்து செல்லாமல் வேறு எங்கும் செல்ல இயலாது.
ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று இந்த தீர்த்த குளத்தில் புனித நீராடுவது அவ்வளவு சிறப்பாக கருதப்படுகிறது. அதிலும் மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரம் தினத்தன்று அங்கு நீராடுவது கூடுதல் சிறப்பாகும்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கு மகாமகம் புனித நீராடல் நடத்தப்படும். நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரண்டு வந்து அந்த நாட்களில் புனித நீராடுவார்கள். இதன் காரணமாக கும்பகோணம் மகாமகம் குளம் வடஇந்தியாவிலும் புகழ் பெற்றுள்ளது.
தஞ்சை பகுதி மக்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் சொந்த பூமிக்கு வரும்போது மகாமகம் குளத்தில் புனித நீராடுவதை மிகவும் புண்ணியமாக கருதுகிறார்கள். எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும் அவை அனைத்தையும் போக்கி தோஷங்களை களைந்து புத்துணர்ச்சி தரும் ஆற்றல் கொண்டது இந்த தீர்த்த குளம்.
தஞ்சாவூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் உள்ளது, இந்தத் தீர்த்தக்குளம். கும்பகோணத்திற்கு வருவதற்கு எல்லா ஊர்களில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. இந்த மகாமக தீர்த்தத்தின் தலைமைக் கோவில் கும்பேசுவரர் கோவில் ஆகும். இத்தலத்து இறைவன் பெயர், "கும்பேசுவரர், அமுதேசுவரர், குழகர்" என்பதாகும்.
அம்பாள் பெயர், "மங்களாம்பிகை" ஆகும். தல மரம் வன்னி ஆகும். இத்தலத்து விநாயகர் "ஆதி விநாயகர்" ஆவார். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தேவாரத்தலம், இது.
இந்த கும்பகோணத்திற்கே தனிச் சிறப்பு அளிப்பது இங்குள்ள "மகாமக தீர்த்தமே" ஆகும். இந்த தீர்த்தம் கும்பகோணம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இந்தக் குளத்தைச் சுற்றிலும் உள்ள படிக்கட்டுகள் மீது பதினாறு மண்டபங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டபத்திலும் ஒரு சிறு கோவில் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கோவிலிலும் ஒரு சிவலிங்கம் உள்ளது. அவற்றின் பெயர்கள் வருமாறு:-
1. பிரம்மதீர்த்தேசுவரர், 2. முகுந்தேசுவரர், 3. தளேசுவரர், 4. விருஷபேசுவரர், 5. பரணேசுவரர், 6. கோணேசுவரர், 7. பக்திஹேசுவரர், 8. பைரவேசு வரர், 9. அகத்தீசுவரர், 10. வியாசேசுவரர், 11. உமைபாகேசுவரர், 12. நைருதீசுவரர், 13. பிரமேசுவரர், 14. கங்காதரேசுவரர், 15. முக்த தீர்த்தேசுவரர், 16. சேத்திரபாலேசுவரர் என்பனவாகும்.

இந்த மகாமகக் குளத்தின் படிக்கட்டுகளின் உச்சியில் ஓர் அழகான மண்டபம் உள்ளது. இதில் பதினாறு தூண்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் சிறப்பாக விளங்குகின்றன. இவை யாவற்றையும் கட்டியவர், அச்சுதப்ப நாயக்க மன்னரின் அமைச்சராக இருந்த "கோவிந்த தீட்சிதர்" ஆவார். இக்குளத்தின் பரப்பளவு பதினைந்து ஏக்கர் ஆகும்.
கும்பகோணம் நகரில் 14 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் குளம் ஏழு, கிணறுகள் மூன்று, காவிரித் தீர்த்தங்கள் நான்கு ஆகும்.
இத்தனை சிறப்புகள் மிக்க புண்ணிய தலமாகிய கும்பகோணம் மகாமக தீர்த்தம் தோன்றிய வரலாறு, வருமாறு:-
பிரளய காலத்திற்குப் பிறகு தன் சிருஷ்டித் தொழிலைத் தொடங்கித் தொடரும் பொருட்டு, பிரம்ம தேவர், சிவபெருமானின் அறிவுரைக்கு ஏற்ப, அமுதத்தை மண்ணில் கலந்து பிசைந்து அழியாக் குடமாகச் செய்து, உலக உற்பத்திக்குத் தேவையான சகல பீஜத் தொகுப்பையும் அதில் வைத்து, மேருமலை மீது அதைப் பத்திரப்படுத்தி இருந்தார். பின்பு பிரளயத்தின்போது அவ்வமுதக் குடம் அசைந்து மிதந்து தென்திசையில் சென்று ஓரிடத்தில் தங்கியது.
பிறகு, சிவ பாணத்தால் அக்குடம் பிளக்கப்பட்டு, அமுதம் பெருகி வழிய அப்போது அந்த அமுதத்தை பூமி குழிந்து தாங்க என பிரமன் நினைத்தருள, அவ்வண்ணமே அமுதம் இரண்டு இடத்தில் திரண்டு நின்றது. அவைதாம் முறையே, கும்பகோணம் கும்பேசுவரர் கோவிலின் பொற்றாமரைக் குளமும், மகாமக தீர்த்தமும் ஆகும்.இது நடந்தது, சூரியனது ஆட்சி வீடாகிய சிம்ம ராசியில், சந்திரனும், குருவும் ஒன்று சேர்ந்து இருக்க, அப்போது சிம்ம ராசிக்கு ஏழாவது வீடாகிய கும்பத்தில் சூரியன் இருந்து, குருவையும், சந்திரனையும் பார்த்த காலகட்டத்தில் ஆகும்.
இதற்கு பிரம்ம தேவன் எம்பெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணமாக கும்பேஸ்வரருக்கு ஒன்பது நாட்கள் உற்சவம் நிகழ்த்தினார். பத்தாம்நாள் உற்சவ முடிவாக, இறைவனுக்கு ஸ்நானம் செய்யும் பொருட்டு, அமுத வாலியாகிய இந்த மகாமக தீர்த்தக்கரையை அலங்கரித்து, அங்கே எம்பெருமானை ரிஷப ரூபராக எழுந்தருளச் செய்து, பிரம்ம தேவன் அவரை தரிசித்து, அந்த உத்தம மகாமகத் தீர்த்தத்தில் நீராட்டி, தானும் நீராடினார்.
அப்போது தேவர்களும் வந்து நீராடினார்கள். இந்த சிறப்புமிக்க திருவிழா இப்போது "12" ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதன் நினைவாக ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மக நட்சத்திரம் அன்று இறைவன் இந்த மகாமகக் குளத்திற்கு வந்து தீர்த்தமாடல் நடைபெறுகிறது.
இந்த மகாமகக் குளத்தில் பிரம்ம தேவன் தன் பெயரால் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினார். இதேபோல், எண்திக்குப் பாலகர்களும் நவ கன்னியரும் தத்தம் பெயரில் தீர்த்தம் கண்டார்கள். இதேபோல், தேவர்களும் ஒரு தீர்த்தம் உண்டாக்கினார்கள்.
ஆக, இந்த மகாமகக் குளத்தில் உள்ள இருபது தீர்த்தங்களின் பெயர்களையும், அதில் நீராடுவதால் ஏற்படும் நன்மைகளையும் இனி காண்போம்.
1. இந்திர தீர்த்தத்தில் நீராடினால் சொர்க்கம் கிட்டும்.
2. அக்கினி தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் நாசமாகும்.
3. எம தீர்த்தத்தில் நீராடினால் எம பயம் நீங்கும்.
4. நிருதி தீர்த்தத்தில் நீராடினால் பூத, பிரேத, பிசாசு பீடை நிவர்த்தி ஏற்படும்.
5. வருண தீர்த்தத்தில் நீராடினால் முக்திப் பேறு கிட்டும்.
6. வாயு தீர்த்தத்தில் நீராடினால் துன்ப நிவர்த்தி ஏற்படும்.
7. குபேர தீர்த்தத்தில் நீராடினால் செல்வப் பெருக்கு ஏற்படும்.
8. ஈசான தீர்த்தத்தில் நீராடினால் சகல காரிய சித்தி ஏற்படும்.
9. பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால் மகத்தில் 101 தலைமுறையும், மகாமகத்தில் 300 கோடி தலைமுறையும் ஈடேறும்.
10.கங்கை தீர்த்தத்தில் நீராடினால் பதினாயிரம் கங்கை ஸ்நானம் செய்த பலன் கிட்டும்.
11. பலமுனை தீர்த்தத்தில் நீராடினால் பொன் பேறு கிட்டும்.
12.கோதாவரி தீர்த்தத்தில் நீராடினால் காரியசித்தி கிட்டும்.
13.நர்மதை தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் ஒழியும்.
14.சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மெய்ஞானமும், வைராக்கியமும் கிட்டும்.
15.காவிரி தீர்த்தத்தில் நீராடினால் மானச பாவ நிவர்த்தியும், காம்யார்த்த சித்தியும் கிடைக்கும்.
16.குமரி தீர்த்தத்தில் நீராடினால் பதினாயிர அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்,
17.பயோட்டிணி தீர்த்தத்தில் நீராடினால் காமதேனு கிடைத்தது போன்று வாழ்வு கிட்டும்.
18.சரயு தீர்த்தத்தில் நீராடினால் கலி கால கஷ்ட நிவர்த்தி ஏற்படும்.
19.அறுபத்தாறு கோடி தீர்த்தத்தில் நீராடினால் உலகின் சகல தீர்த்தங்களிலும் நீராடிய பலன் அனைத்தும் கிட்டும்.
20.தேவ தீர்த்தத்தில் நீராடினால் கல்வி அறிவு கிடைக்கும்.

இத்தகைய சிறப்புமிக்க இருபது தீர்த்தங்க ளும், இந்த மகாமகக் குளத்தில் உள்ளன. இந்த தீர்த்தங்களின் பலனைப் பெற ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் மகத்தன்றும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத்தன்றும், இந்த மகாமகக் குளத்து தீர்த்தங்களில் நீராடி, அனைத்துப் பயன்களும் பெறலாம். மகாமக புண்ணிய காலம் என்பது பகல் 10.30 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் ஆகும். இந்த நேரத்தில் இங்கு தீர்த்தமாடுதல் மிகச் சிறப்பாகும். இந்த புண்ணிய காலத்தில் இந்த தீர்த்தத்தை வணங்குவதால் தேவர்கள் யாவரையும் வணங்கிய புண்ணியம் கிட்டும்.
இந்த மகாமகக் குளத்தில் குளிப்பதற்கு முன் காவேரி ஆற்றில் நீராடுவது வழக்கமாக உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க இந்த மகாமகத் தீர்த்தத்தை ஒருமுறை வலம் வந்தால் பூமியை நூறுமுறை வலம் வந்த பலன் கிட்டும். இந்த தீர்த்தத்தை உட்கொள்ள பாவங்கள் யாவும் தீரும், இந்த மகாமகக் குளத்தில் குளிக்க வேண்டும் என்று நினைத்தாலே சகல செல்வமும் கிட்டும். மேலும் சந்ததி இல்லாதவர்கள் சந்ததி வேண்டி வருடந்தோறும் வரும் மாசி மகத்தன்று மூழ்க வேண்டும். இவ்வாறு ஐந்து வருடம் மூழ்கினால் தீர்க்காயுள் உள்ள பிள்ளை கிடைக்கும். மகாமகத்தன்று மூழ்கினால் முருகனே மகனாக வருவான் என்கிறது புராணங்கள்.
இத்தகைய சிறப்புமிக்க புண்ணிய தீர்த்தத்தில் தினமும் மூழ்குதல் மிகவும் உத்தமம் ஆகும். அப்படி முடியாவிட்டால் சித்திரை, கார்த்திகை, மாசி ஆகிய மாதங்களில் மூழ்குவது மிகவும் சிறப்பாகும். இதுவும் முடியாவிட்டால் மாசி மாதம் மூழ்குவது சிறப்பு. இதுவும் முடியாவிட்டால் மாசி மகத்தன்றாவது மூழ்க வேண்டும். இதுவும் முடியாவிட்டால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா மகத்தன்றா வது மூழ்குதல் வேண்டும். அப்படியே முடியா விட்டாலும், மகாமகக் குளத்தில் நீராடி வருபவர்களை யாவது தரிசிக்க வேண்டும்.
இதுவும் முடியாவிட்டலும் கும்பகோணம் இருக்கும் திக்கை நோக்கி வணங்கி, பூசித்து, தீர்த்தத்தை தியானித்து இருந்தால்கூட அந்த ஸ்நான பலனைப் பெறலாம் என புராணங்கள் கூறுகின்றன. இங்கு மாசி மகத்தன்றும், மகாமகத்தன்றும் இந்தத் தீர்த்தக் கரையில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியமாகக் கருதப்படுகிறது. இந்த மகாமகத் தீர்த்தத்துடன் தொடர்புடைய குடவாசல் தீர்த்தத்தைப் பற்றியும், சாக்கோட்டை தீர்த்தத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். அங்கும் சென்று அவசியம் நீராட வேண்டும். இந்த இரு தல தீர்த்தங்களிலும் நீராடிய பின்பே, மகாமகத் தீர்த்தத்தில் நீராடுவது முறையாகும்.
இந்த தீர்த்தங்களில் நீராடினால் நிச்சயம் அனைத்து தோஷங்களும் விலகும். தோஷங்கள் விலகினால் நிம்மதியாக வாழலாம். அது மட்டும் போதுமா?
நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் அல்லவா? அதற்கு திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்ய வேண்டும். திருக்கடையூர் ஆலயம் பற்றி அடுத்த வாரம் காணலாம்.
- ஒருநாள் சூர்தாசைச் சோதிக்கும் பொருட்டாக கிருஷ்ண விக்கிரகத்திற்கு அலங்காரம் செய்யும்முன் திரையிட்டு மூடினார்கள்.
- கண்ணனும் எல்லையற்றவன் என்பதால் அவன் நிறமும் நீலமாக அமைந்திருக்கிறது!`
நமது ஆன்மிகத்தில் வண்ணங்களுக்கு ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. குண்டலினி யோகத்தில் பல்வேறு ஆதார சக்கரங்கள் விவரிக்கப்படுகின்றன. அவ்வையார் எழுதிய விநாயகர் அகவல் தோத்திரத்தில் குண்டலினி யோகம் பற்பல வரிகளில் விவரிக்கப்படுகிறது.
`இடைபிங்கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து...'
குண்டலினி யோகத்தில் மனம் நிலைக்கும் இடங்களான சக்கரங்களைப் பற்றி அவ்வை பேசுகிறார். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராகாரம் என்பவையே அந்தச் சக்கரங்கள்.
ஆன்மிகத்தில் அவை பல்வேறு வண்ணங்களோடு தொடர்புபடுத்தப்படுகின்றன. மூலாதாரம் சிவப்பு, ஸ்வாதிஷ்டானம் ஆரஞ்சு நிறம், மணிபூரகம் மஞ்சள், அனாகதம் பச்சை, விசுத்தி நீலம், ஆக்ஞா சக்கரம் கருநீலம், சகஸ்ராகாரம் ஊதா நிறம் எனச் சக்கரங்களுக்கு நிறங்கள் உண்டு என்கிறது யோக சாஸ்திரம்.
கண்ணன், ராமன் ஆகிய கடவுளரின் மேனி நீல நிறமாக இருக்கின்றன. ராமனுடைய மேனி நிறத்தைக் குறிப்பிடும்போது `மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ` என்கிறார் கம்பர். ராமன் மேனி மரகதப் பச்சை நிறத்தில் இருந்ததாகக் கூறி வியக்கிறார் அவர்.
சிவன் சிவப்பு நிறம் உடையவன். சிவனின் கையைப் பிடித்த அவன் மனைவி பார்வதி, ஒரு சந்தர்ப்பத்தில் அவன் கழுத்தைப் பிடித்தாள்!
தன் கணவர் ஆலகால விஷத்தை அருந்தியபோது ஓடிப்போய் தன் கணவன் கழுத்தை இறுகப் பிடித்து நஞ்சு நெஞ்சுவரை செல்லாமல் கழுத்தளவிலேயே தங்கிவிடுமாறு செய்தாள்.
உள்ளே தங்கிய விஷம் காரணமாகக் கழுத்து மட்டும் நீல நிறம் பெற்றதால் சிவன் நீலகண்டன் என்றும் அழைக்கப்படலானான்.
`நீலகண்டரே வாரும்!` எனத் தொடங்கும் கீர்த்தனை ஒன்றை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் சுஜாதா விஜயராகவன்.
`சிவபெருமானே! உன் கழுத்து நஞ்சை உண்டதால் நீல நிறமாக இருக்கிறது. நீ சென்னைக்கு வந்து இங்குள்ள மாசுடைய காற்றை சுவாசித்துப் பார். சந்தேகமில்லாமல் நீயும் திருமாலைப் போல் உடல் முழுவதும் நீலநிறம் கொண்டவனாக மாறிவிடுவாய்!` என பக்திக் கவிதையில் சுற்றுச்சூழல் சிந்தனையையும் இணைத்து எழுதுகிறார் அவர்.
அகலிகை சாப விமோசனக் காட்சியைச் சித்திரிக்கும் கம்பர், மை வண்ணமுடைய தாடகையை மழை வண்ணமுடைய ராமன் கையால் அம்பு எய்து வதம் செய்ததையும் பின்னர் தன் காலால் அகலிகைக்குச் சாப விமோசனம் அருளியதையும் விஸ்வாமித்திரர் வாயிலாக வியக்கிறார்.
`இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனியிந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவ துண்டோ?
மைவண்ணத் தரக்கி போரில்
மழைவண்ணத் தண்ணலேநின்
கைவண்ணம் அங்கு கண்டேன்
கால்வண்ணம் இங்கு கண்டேன்!'
கண் பார்வையற்ற பக்திக் கவிஞரான சூர்தாசர் வாழ்வில் கண்ணனின் ஆடை நிறம் குறித்து ஒரு சம்பவம் வருகிறது. வடமதுரைக் கண்ணன் ஆலயத்தில் சூர்தாசர் ஆஸ்தான பாடகராக இருந்த காலகட்டம்.
ஒவ்வொரு நாளும் அர்ச்சகர்கள் கண்ணனது விக்கிரகத்திற்குத் திரையிட்டு அலங்காரம் செய்து பின் திரையைத் திறப்பார்கள். உடன் சூர்தாஸ் பாடத் தொடங்குவார்.
கண்ணன் அன்று என்ன நிறப் பட்டாடை அணிந்திருக்கிறான் என்பதை அந்தப் பாடலில் அவர் குறிப்பிடுவார்! இது அர்ச்சகர்களுக்குப் பெரும் வியப்பைத் தந்தது.
ஒருநாள் சூர்தாசைச் சோதிக்கும் பொருட்டாக கிருஷ்ண விக்கிரகத்திற்கு அலங்காரம் செய்யும்முன் திரையிட்டு மூடினார்கள்.
கண்ணனுக்கு உடையே அணிவிக்காமல் முத்துமாலைகளை இடுப்பிலும் கைகால்களிலும் கழுத்திலும் தொங்கவிட்டு அலங்காரத்தை முடித்தார்கள்.
திரையை விலக்கிய அவர்கள் சூர்தாசரிடம் இன்று கண்ணன் என்ன நிற ஆடை அணிந்திருக்கிறான் என வினவினார்கள். சற்றுநேரம் அமைதியாக இருந்த சூர்தாஸ் திடீரெனப் பாடலானார்.
`கண்ணா! என்ன ஆயிற்று உனக்கு? பாஞ்சாலிக்குச் சேலைகளை வாரிவாரிக் கொடுத்த வள்ளல் அல்லவா நீ? இன்றென்ன வெறும் முத்துமாலைகளோடு காட்சி தருகிறாய்? உன் பல் முத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நீ அள்ளியெடுத்து துணிக்கு பதிலாக இன்று முத்தை அணிந்துகொண்டாயா?`
என்று சூர்தாசர் பாடியதைக் கேட்டு அர்ச்சகர்கள் திகைத்துப்போய் அவரை விழுந்து வணங்கினார்கள் என்கிறது சூர்தாசரின் திருச்சரிதம்.

திருப்பூர் கிருஷ்ணன்
விவேகானந்தர் சென்னை வந்தபோது கல்லூரி மாணவர்களிடையே பேசினார். அப்போது மாணவராக இருந்தார் ராஜாஜி. கண்ணன் ஏன் நீல நிறமாக இருக்கிறான் என மாணவர்களைக் கேள்வி கேட்டார் விவேகானந்தர்.
ராஜாஜி அந்த வித்தியாசமான கேள்விக்கு ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு பதிலைச் சொல்லி விவேகானந்தரின் பாராட்டைப் பெற்றார். அவர் சொன்ன பதில் இதுதான்:
`ஆகாயம் எல்லையற்றுப் பரந்திருக்கிறது. அது நீல நிறமாக இருக்கிறது. கண்ணனும் எல்லையற்றவன் என்பதால் அவன் நிறமும் நீலமாக அமைந்திருக்கிறது!`
கண்ணன் பாட்டு எழுதிய கிருஷ்ண பக்தரான பாரதியாரும் எல்லா இடங்களிலும் கண்ணனின் வண்ணமே தென்படுவதாகக் கூறிக் கண்ணனைப் போற்றுகிறார்.
`காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா!
பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா!!`
சிவானந்தர் எழுதிய `வாழ்விலும் ஆத்மானுபூதியிலும் வெற்றிக்கு வழி` என்ற நூலில் ஒரு விந்தையான செய்தி வருகிறது.
அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த ஒரு பார்வையற்றவர், அவரிடம் ஒரு துணியைக் கொடுத்தால் அதன் அடர்த்தியை விரலால் சோதித்துப் பார்த்து, இது பச்சை நிறத் துணி இது நீல நிறத் துணி என்றெல்லாம் வேறுபடுத்தி அடையாளம் கண்டு சொல்லி விடுவாராம்.
கண்கள் இல்லாத அவருக்கு நகக் கண்களே கண்கள்போல் பயன்பட்ட அதிசயம் அந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னை வேத காலத்திலிருந்து நம்மிடையே நிலவிவரும் மலர் வழிபாட்டின் பயன்பாட்டை நெறிப்படுத்தியவர். இன்னின்ன வண்ணமுடைய மலர்களால் இறைவனை வழிபட்டால் இன்னின்ன பயன்களைப் பெறலாம் என அவர் ஆராய்ந்து பட்டியலிட்டுத் தந்திருக்கிறார்.
மனிதர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிற மொழி தமிழ், ஆங்கிலம் எனப் பலப்பல. மனிதன் கடவுளுடன் பேசப் பயன்படும் மொழியே மலர்கள் என்பது அன்னையின் கண்டுபிடிப்பு.
மஞ்சள் வண்ணமுடைய ஜவந்தி போன்ற மலர்கள் கடவுளிடம் தன்னை அர்ப்பணித்தவருக்கு ஆரோக்கியம் வேண்டும் என்று எடுத்துச் சொல்லுமாம். சிவப்பு நிறமுடைய தாமரைகள் பக்தருக்குச் செல்வம் வேண்டும் என்று கடவுளிடம் தெரிவிக்குமாம்.
இப்படிக் காகித மலர்கள் என்றால் பாதுகாப்பு, எருக்கம்பூ என்றால் தைரியம் எனப் பல்வேறு நிறமுடைய மலர்களின் ஆன்மிகப் பயன்பாட்டை அன்னை வகுத்துத் தந்துள்ளார்.
கண்ணதாசனின் திரைப்பாடல் ஒன்று, திருமாலின் திருவுருவை மலர்களோடு ஒப்பிட்டுப் போற்றுகிறது.
`மலர்களிலே பல நிறம் கண்டேன் - திரு
மாலவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பல மணம் கண்டேன் - திரு
மாதவன் கருணை மனம் கண்டேன்
பச்சை நிறம் அவன் திருமேனி
பவழ நிறம் அவன் செவ்விதழே
மஞ்சள் முகம் அவன் தேவிமுகம்
வெண்மை நிறம் அவன் திருவுள்ளம்...`
பக்தர்கள் தாங்கள் எந்தக் கடவுளின் அடியவர்கள் என்பதை அடையாளம் காட்டுவதற்கும் வண்ணம் பயன்படுகிறது. ஐயப்ப பக்தர்கள் கறுப்பு நிற ஆடை அணிகிறார்கள்.
அறுபடை வீடுகளுக்கு யாத்திரை செல்லும் முருகன் அடியவர்கள் பச்சை நிற ஆடையில் காட்சி தருகிறார்கள். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் அடியவர்களோ சிவப்பு வண்ண உடை அணிகிறார்கள்.
உணர்வுகளுக்கு ஏற்றவாறும் மனிதர்கள் ஆடையின் நிறத்தைத் தேர்வு செய்துகொள்வது உண்டே? கடும் துயரத்தில் இருப்பவர்கள் கறுப்பு நிற உடையை அணிகிறார்கள். ஒரு தலைவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்க நினைப்பவர்கள் கறுப்புக் கொடி காட்டுகிறார்கள். கறுப்பு சோகத்தின் அடையாளமாகவும் எதிர்ப்பின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
பறவைகளிலும் பட்டுப்பூச்சிகளிலும் மலர்களிலும் ஏராளமான வண்ணங்களை இயற்கை படைத்திருக்கிறது.
இரவில் இருளில் மலரும் மலர்கள் தங்களை நாடிவரும் தேனீக்களுக்குத் தாங்கள் தெரியவேண்டும் என்ற நோக்கத்தில் வெள்ளை நிறத்திலேயே அமைகின்றன.

நிலத்தில் மலரும் மல்லிகை, நீரில் மலரும் அல்லி போன்ற இரவுப் பூக்களெல்லாம் வெண்மை நிறம் கொண்டிருக்கின்றன. இயற்கையின் ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் நாம் உணர வேண்டிய காரணம் ஒன்று மறைந்திருக்கிறது என்பது உண்மைதானே?
பச்சோந்திக்குத் தனித்த நிறம் கிடையாது. அது எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தின் நிறத்திற்கு ஏற்றவாறு தன் நிறத்தை மாற்றிக் கொள்கிறது. அதனால்தான் அடிக்கடிக் கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்களைப் பச்சோந்தி என்கிறார்கள்.
மழைக்கால வானவில் ஏழு வண்ணங்களோடு திகழ்கிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு சிவப்பு, பச்சை ஆகிய வண்ணங்கள் பயன்படுகின்றன. சிவப்புக் கொடி அசைத்தால் ரெயில் நிற்கிறது. பச்சைக் கொடி அசைத்தால் புறப்பட்டுச் செல்கிறது. நமது தேசியக் கொடி காவி, வெண்மை, பச்சை ஆகிய வண்ணங்களைத் தாங்கியுள்ளது. நம் ஆன்மிகம் வண்ண மயமானது. பின்பற்றுவதற்கு ஏற்றது. நம் எண்ணங்களைத் தூய்மைப்படுத்தும் சக்தி ஆன்மிக வண்ணங்களுக்கு உண்டு.
தொடர்புக்கு,
thiruppurkrishnan@gmail.com
- சிறந்த மனிதர்களை இங்கு வரவழைப்பது நமது பெரும் பாக்கியமன்றோ என்றார் மன்னர்.
- மிகப் பெரும் சான்றாக விளங்குபவர் ஜாம்ஷெட்ஜி டாடா.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம். கி.பி.பத்தாம் நூற்றாண்டில் குஜராத்தை ஆண்டு வந்தார் மாமன்னர் ஜடி ராணா. அப்போது பெர்சியாவிலிருந்து முகலாயர் தாக்குதலில் தப்பி வந்த பார்சிக்கள் குஜராத்தின் சஞ்ஜன் துறைமுகத்தை வந்தடைந்தனர். பார்சிக்களின் தலைவர், நாட்டில் உள்ளே வந்து குடியேற அனுமதி தருமாறு கேட்டு ஒரு தூதுவரை மன்னர் ராணாவிடம் அனுப்பினார். சற்று யோசித்த மன்னர் ஒரு கோப்பையில் பாலை நிரப்பி அதை தூதுவரிடம் கொடுத்து தலைவரிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பினார்.
தலைவர் அந்தக் கோப்பையை வாங்கி ஒரு கணம் யோசித்தார். பின்னர் சிறிது சர்க்கரையை அள்ளி அதில் போட்டு மன்னரிடம் கொண்டு சென்று தருமாறு தூதுவரிடம் கூறினார்.
நடந்ததைக் கேட்டார் மன்னர். பிறகு புன்முறுவல் பூத்தார். அனைவரையும் நாட்டிற்குள்ளே வந்து தங்குமாறு அழைப்பு விடுத்தார்.
அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. எதற்கு கோப்பையில் பாலை மன்னர் நிரப்பினார், அதற்குள் எதற்கு சர்க்கரையை பார்சிக்களின் தலைவர் போட்டார் என்று.
மன்னரே விளக்கினார். நாட்டில் குடியேற அனுமதி கேட்ட போது எங்கள் நாடே முழுவதுமாக மக்களால் நிரம்பி இருக்கிறது என்பதைக் குறிக்க கோப்பையில் பாலைத் தளும்பத் தளும்ப விட்டு நிரப்பி அனுப்பினேன். அதற்கு அந்தத் தலைவர் பாலில் சிறிது சர்க்கரையைப் போட்டார். சர்க்கரை எப்படி பாலில் கரைந்து விடுகிறதோ அது போல உங்கள் மக்களுடன் மக்களாக நாங்கள் கலந்து கரைந்து விடுவோம். அதுமட்டுமல்ல, சர்க்கரை எப்படி இனிப்புடன் சுவையைக் கூட்டுகிறதோ அது போல உங்கள் நாட்டில் வாழும்போது அனைவரது வாழ்க்கையையும் மேம்படுத்த உழைப்போம் என்றார் அவர்.
இதுபோன்ற சிறந்த மனிதர்களை இங்கு வரவழைப்பது நமது பெரும் பாக்கியமன்றோ என்றார் மன்னர்.
அன்று பெர்சியாவில் இருந்து (இன்றைய ஈரான், ஈராக்) இந்தியாவிற்கு வந்த பார்சிகள் சொன்ன சொல் தவறாமல் இந்திய நாட்டின் வளப்பத்தையும் பண்பாட்டையும் மேம்படுத்திக் கொண்டே வருகின்றனர்.
இதற்கு மிகப் பெரும் சான்றாக விளங்குபவர் ஜாம்ஷெட்ஜி டாடா.
ஜாம்ஷெட்ஜி நுசர்வாஞ்சி டாடா குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி என்ற இடத்தில் 1839-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி நுசர்வாஞ்சி மற்றும் ஜீவன்பாய் டாடாவிற்கு மகனாகப் பிறந்தார். இவரது குடும்பம் மிக்க ஏழ்மையான ஒரு புரோகிதர் குடும்பம்.
இளமையிலேயே படிப்பதில் ஆர்வமும் அனைத்தையும் உடனே அறியும் கூர்மையான அறிவுத் திறனையும் கொண்டிருந்தார் டாடா. அவர் மேலைநாட்டுக் கல்வித்திட்டத்தின்படி கல்வியைக் கற்றார்.
வழக்கமாக குடும்பம் செய்து வந்த புரோகிதத்தை ஏற்காமல் முதன் முதலாக வணிகத்தில் குடும்பம் ஈடுபட அவர் காரணமானார்.

படிக்கும் போதே ஹீராபாய் டாபூவை அவர் மணந்தார், அவரது தந்தையார் ஓபியம் வணிகத்திற்காக சீனாவிற்கு அடிக்கடி சென்று வந்தார். தனது மகனை அதில் ஈடுபடுத்த நினைத்த அவர் டாடாவை சீனாவிற்கு அனுப்பினார். ஆனால் சீனா சென்ற டாடா ஓபியத்தை விட பருத்தி வாணிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டார். அதில் தேர்ச்சியும் பெற்றார்.
தொழிற்சாலைகளின் வளர்ச்சி:
29 வயது முடிய தந்தையுடன் வணிகம் செய்து வந்த டாடா 1868-ல் தனியாக தனது நிறுவனத்தை ஆரம்பித்தார். 1869-ல் சிஞ்ச்போக்லி என்ற இடத்தில் திவாலாகி இருந்த ஒரு பஞ்சாலையை வாங்கிய அவர் அதை அலெக்ஸாண்டிரியா மில் என்று பெயர் மாற்றம் செய்தார். இரண்டே வருடங்களில் அதை லாபம் கொழிக்குமாறு செய்து, பின்னர் விற்றார்.
1874-ல் பெரிய அளவில் ஒரு பஞ்சாலையைத் தொடங்கினார். நாக்பூரை சரியான இடமாக அவர் தேர்ந்தெடுத்ததை மற்றவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர். ஆனால் உற்பத்திச் செலவு, போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை வெகுவாகக் குறைத்து லாபத்தை ஈட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தார் அவர். பின்னர் அவர் மனதில் இரும்பு எக்கு தொழிற்சாலையை உருவாக்கும் எண்ணம் தோன்றியது...
டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் பிளாண்ட் ஜார்கண்டில் சாக்க்ஷி கிராமத்தில் தொடங்கியது. பிரம்மாண்டமான அளவில் அது வளர்ந்தது, கிராமம் பின்னர் பெரிய நகராக மாறி டாடா நகர் என்ற ரெயில் நிலையம் உருவாகும் அளவு வளர்ந்தது. இப்போது பெரும் நகரமாக ஜாம்ஷெட்பூர் என்ற பெயரில் விளங்குகிறது.
இதைத் தொடர்ந்து டாடா குடும்பம் பெரிதாக வளர்ந்தது. பல்வேறு துறைகளில் இந்தக் குடும்பம் முத்திரை பதித்து விட்டது. இன்று சுமார் 29 பொது நிறுவனங்களைக் கொண்டுள்ளது டாடா குடும்பம். இதன் வருடாந்தர மொத்த வருமானம் 12 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய். பத்து லட்சம் பேர் இந்த நிறுவனங்களில் இப்போது வேலை பார்த்து வருகின்றனர்.
பாரதத்தின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு இவரை ஒன் மேன் பிளானிங் கமிஷன் - ONE MAN PLANNING COMMISSION என்று பாராட்டினார். இந்திய தொழில்துறையின் தந்தை என்று பொருத்தமான பெயரால் இவர் இன்று அறியப்படுகிறார்.
சுவாமி விவேகானந்தருடன் சந்திப்பு!
1893-ம் ஆண்டு மே மாதம் 31-ந் தேதி யோகோஹாமாவிலிருந்து வான்கூவருக்குச் சென்று கொண்டிருந்த கப்பலில் சுவாமி விவேகானந்தரைச் சந்தித்தார் ஜாம்ஷெட்ஜி. சிகாகோவில் நடந்து கொண்டிருந்த தொழில் கண்காட்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தார் அவர். சுவாமி விவேகானந்தர் தங்கி இருந்த அதே ஓட்டலில் சில நாட்களுக்கு முன்பாகவே வந்து தங்கியிருந்தார் டாடா. சுவாமிஜியுடன் பேசுவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. சுவாமிஜியின் பேச்சால் உத்வேகம் பெற்ற டாடா கல்வி நிறுவனங்களையும் ஆய்வு நிறுவனங்களையும் தொடங்க உத்வேகம் பெற்றார்.
டாடா 23-11-1898 தேதியிட்ட ஒரு கடிதத்தை எஸ்பிளேட் ஹவுஸ், பாம்பேயில் இருந்து எழுதி சுவாமி விவேகானந்தருக்கு அனுப்பினார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:-
ஜப்பானில் இருந்து சிகாகோவிற்கு சென்ற கப்பலில் என்னை கூட வந்த பயணியாக நீங்கள் சந்தித்ததை நினவில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.... எனது அறிவியல் ஆய்வு இன்ஸ்டிடியூட்டை ஆரம்பிக்கும் திட்டத்தைப் பற்றிய கருத்துக்களை இப்போது நினைவு கூர்கிறேன்.
அறிவியலுக்கான ஒரு பெரும் இயக்கத்தைத் தொடங்க கடுமையான விரதம் கொண்ட ஆன்மிக துறவியான உங்களை விடத் தகுதியானவர் வேறொருவர் யாராக இருக்க முடியும்? இந்தத் திட்டத்திற்கான செலவு முழுவதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்று எழுதியிருந்தார்.
சுவாமிஜி உடனடியாக சகோதரி நிவேதிதா தேவியை அவரிடம் அனுப்பி ஆய்வு நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கான விரிவான திட்டத்தை உருவாக்க வழி கோலினார். 1902-ல் சுவாமிஜி மறைய, அதற்கு இரண்டு வருடங்கள் கழித்து டாடா மறைந்தார். என்றாலும் அவர்கள் கனவு கண்டு உருவாக்க உழைத்த அறிவியல் நிறுவனம் 1909-ல் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் என்ற பெயரில் உருவானது. அதுவே இன்று நாம் அறியும் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் என்று 1911-ல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தான் சம்பாதித்த பணத்தை கல்விக்காகவும் சுகாதார மேம்பாட்டிற்காகவும் தாராளமாக நன்கொடையாக 1892-ம் ஆண்டில் இருந்து வழங்க ஆரம்பித்தார் டாடா.
ஒரு பிரமிக்க வைக்கும் செய்தியை 2021-ல் உலக நன்கொடையாளர்கள் பட்டியலைத் தயார் செய்த ஹூருன் மற்றும் எடெல்கிவ் நிறுவனம் வெளியிட்டது. அதன்படி சென்ற நூற்றாண்டில் மிக அதிகம் வழங்கிய கொடைவள்ளல்கள் 50 பேரில் குறிப்பிடத்தகுந்த இடத்தை டாடா வகிக்கிறார். டாடா நன்கொடையாக வழங்கிய தொகை 7.6 லட்சம் கோடி ரூபாயாகும். இவருக்கு அடுத்தபடியாகத் தான் பில் கேட்ஸ், வாரன் பபெட், ராக்பெல்லர் ஆகியோர் வருகின்றனர்.
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வீராங்கனையான கல்பனா சாவ்லா விண்வெளிக்குச் செல்லும் போது தன்னுடன் டாடாவின் புகைப்படத்தையும் ஒரு புத்தகத்தையும் மட்டுமே கொண்டு சென்றிருந்தார். அந்த அளவு டாடாவிடமிருந்து தான் உத்வேகம் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
பல்லாயிரம் பேர்களை உத்வேகப்படுத்திய டாடா 1904-ம் வருடம் மே மாதம் 19-ம் நாளன்று ஜெர்மனிக்குச் சென்ற போது நோய்வாய்ப்பட்டு நௌகீம் என்ற இடத்தில் மறைந்தார். இங்கிலாந்தில் ஒர்கிங் என்ற இடத்தில் உள்ள பார்சியருக்கான ப்ரூக்வுட் இடுகாட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
டாடா முக்கியமாக நான்கு லட்சியங்களைக் கொண்டிருந்தார்.
1) பிரம்மாண்டமான இரும்பு மற்றும் எக்கு தொழிற்சாலையை அமைப்பது
2)ஆகப் பெரும் கல்வி நிறுவனம் தொடங்குவது
3) மிகப் பிரமாதமான ஓட்டல் ஒன்றைத் தொடங்குவது
4) ஹைட்ரோ எலக்ட்ரிக் பிளாண்ட் ஒன்றை நிறுவுவது.
இவற்றில் தாஜ்மகால் ஹோட்டலை அவர் 1903-ல் ஆரம்பித்தார். இதர மூன்று கனவுகளையும் அவர் காட்டிய வழியில் அவரது குடும்பத்தினர் ஆரம்பித்து அவரது கனவை நனவாக்கினர்.
டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் இண்டஸ்ட்ரி துவங்கப்பட்டது. இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் ஆரம்பிக்கப்பட்டது. டாடா பவர் கம்பெனி 8000 மெகாவாட் மின்உற்பத்தியை செய்ய ஆரம்பித்தது.
இளைஞர்களுக்கு அவர் தந்த செய்தி இது:
நேர்மையான, ஒளிவுமறைவற்ற வணிக கொள்கைகளுடன் சின்னச் சின்ன விஷயங்களின் மீதும் கூட தீவிரமான கவனத்தைக் கொண்டு, நமக்கு ஏற்ற சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் சாதகமாக்கிக் கொண்டு உழைத்தால் வெற்றி நிச்சயம். இதை தனது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி நிரூபித்த அவர் நமது இளைஞர்களுக்கான சரியான வழிகாட்டி அல்லவா!
தொடர்புக்கு:- snagarajans@yahoo.com
- அமுக்கரா கிழங்கு என்ற சித்த மருத்துவ மூலிகை முதுமையில் பல்வேறு நோய்நிலைகளில் பலன் தரக்கூடியது.
- சாதிக்காயைப் பொடித்து சிட்டிகை அளவு பாலில் கலந்து எடுத்துக்கொள்ள மன அழுத்தம் நீங்கும்.
நல்ல தூக்கம் தரமான ஆரோக்கியத்தின் அறிகுறி. ஒரு நாளைக்கு மூன்றில் ஒரு பகுதியும், வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியும் தூக்கத்தில் கடந்து விடுகிறது. அவ்வாறு இருக்கையில், நிம்மதியான தூக்கம் என்பது முதுமைக்கு கிடைக்கும் வரம் எனலாம். முதுமையில் குறைந்தது ஒரு நாளைக்கு 7 முதல் 9 மணி நேரம் உறங்க வேண்டியது அவசியம்.
பகல் தூக்கம், இரவில் ஆழ்ந்த தூக்கம் இல்லாமை, இடை இடையே எழுதல், இடையில் எழுந்த பின் தூக்கம் இல்லாமல் போதல் ஆகிய பல்வேறு குறிகுணங்கள் தூக்கமின்மையை உண்டாக்கிவிடுகின்றன.
கிட்டத்தட்ட 50 சதவீதம் முதியவர்கள் இரவில் நிம்மதியான தூக்கமில்லாமல் கண் விழிப்பதுடன், பகலில் தூக்க கலக்கத்துடனும், சோர்வுடனும் அவதிப்படுவதாக ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன. இயல்பாகவே முதுமையில், தூக்கத்தில் விழிப்பு அதிகம் பேருக்கு உண்டாகிறது. இது மட்டுமின்றி பல்வேறு நோய்நிலைகளும் தூக்கமின்மைக்கு காரணமாகின்றன. வயது மூப்பில் தூக்கத்தை உண்டாக்க உதவும் 'மெலடோனின்' எனும் ஹார்மோன் சுரப்பு இயல்பாகவே குறைவதும் தூக்கம் இல்லாமல் போவதற்கு காரணமாக உள்ளது. தூக்கமின்மை எனும் நோய்நிலை இன்னும் பல நோய்நிலைகளுக்கு பாதை அமைக்கிறது என்பது கூடுதல் வருத்தம் தான்.
நீரிழிவு (சர்க்கரை) நோய், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், மூட்டுவாதம், ஞாபக மறதி நோய், அசீரணம், ஆஸ்துமா போன்ற நுரையீரல் நோய்கள், பார்கின்சன் எனும் நடுக்கு வாதம், மன அழுத்தம், மனப் பதட்டம் போன்ற பல்வேறு நோய்நிலைகளில் தூக்கமின்மை உண்டாகக்கூடும். ஆகவே அந்த நோய்களுக்குரிய மருந்துகளுடன், தூக்கமின்மைக்கும் சிகிச்சை மேற்கொள்வது நல்லது.
சித்த மருத்துவக் கூற்றுப்படி வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் வாதமானது நரம்புகளில் செயல்படக்கூடியது. நரம்பு சார்ந்து உண்டாகும் நோய்நிலைகளுக்கு வாதமே முதற்காரணமாக உள்ளது. அத்தகைய வாதமானது அதிகரித்து உடல் மற்றும் மனம் இரண்டிலும் பாதிக்கப்பட்டு தூக்கமின்மையை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது.
நரம்புகளில் தங்கும் இத்தகைய வாதத்தைப் போக்கி தூக்கத்தை இயல்பாக உண்டாக்கும் சித்த மருத்துவ மூலிகைகள், முதுமையில் நிம்மதியான தூக்கத்தை வரவழைக்கும். அமுக்கரா கிழங்கு, சடாமாஞ்சில், பிரமி, தகரை போன்ற மூலிகைகளும், அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கான சாதிக்காய் மற்றும் கசகசா ஆகியன தூக்கம் இயல்பாக உண்டாக்க உதவும்.
அமுக்கரா கிழங்கு என்ற சித்த மருத்துவ மூலிகை முதுமையில் பல்வேறு நோய்நிலைகளில் பலன் தரக்கூடியது. 'முதுமையின் தோழன்' என்றே இதனை குறிப்பிடலாம். இது மன அழுத்தம் போக்கும் சிறந்த மூலிகை. அமுக்கரா கிழங்கு சேர்ந்த 'அமுக்கரா சூரணம்' எனும் சித்த மருந்து தூக்கமின்மைக்கு தீர்வு தரக்கூடியது. இதனை இரவு வேளைகளில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு பாலில் கலந்து எடுத்துக்கொள்வது பலன் தரும்.
தூக்கமின்மைக்கு கசகசா வீட்டு வைத்தியமாக மிகச்சிறந்த நன்மை பயக்கும். கசகசா விதைகளை ஒரு தேக்கரண்டி அளவுக்கு பொடித்து பாலில் கலந்து எடுத்துக்கொள்ள தூக்கம் இயல்பாக வரும். உடலுக்கும் மனத்திற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் மனப்பதட்டமும், மன அழுத்தமும் குறையும். தூக்கமின்மைக்கு கசகசா விதை எண்ணெயை இரவில் எடுத்துக்கொள்வதும் நன்மை பயக்கும் என்கிறது மேற்கத்திய வழக்கு முறை.
கசகசா விதைகளுடன் வால்மிளகு, பாதாம் பருப்பு, கற்கண்டு இவை சம எடை எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் மற்றும் நெய் சேர்த்து லேகியமாக்கி வைத்துக் கொள்ளலாம். இதனை 'கசகசா லேகியம்' என்று சித்த மருத்துவம் கூறுகின்றது. அவ்வப்போது இதை அரை முதல் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள உடல் வன்மை அடையும். தூக்கமின்மையை போக்கி நல்ல உறக்கத்தைத் தரும்.

சாதிக்காயைப் பொடித்து சிட்டிகை அளவு பாலில் கலந்து எடுத்துக்கொள்ள மன அழுத்தம் நீங்கும். மனப்பதட்டம் குறையும். நரம்புகளுக்கு வன்மை தரும். தூக்கமின்மையால் தவிப்பவர்கள் சாதிக்காய் பொடியுடன், கசகசா சேர்த்து பாலில் கலந்து எடுத்துக்கொள்வதும் நல்லது.
சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள தகரை மூலிகையின் வேரானது பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் தூக்கமின்மைக்காக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 'வலேரியன் ரூட்' எனும் 'தகரை வேர்' பல்வேறு நவீன ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு உறுதியும் செய்யப்பட்டுள்ளது.
அதே போல் சித்த மருத்துவ மூலிகையான சடாமாஞ்சில் எனும் மூலிகை தூக்கமின்மைக்கு நல்ல பலன் தரக்கூடியது. தூக்கமின்மையைப் போக்க 'சடாமாஞ்சில் சூரணம்' எனும் சித்த மருந்தினை இரவில் பாலில் கலந்து எடுத்துக்கொள்ளலாம். இதனை அதிக அளவில் எடுக்கக்கூடாது. ஆகவே மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது. தகரை மற்றும் சடாமாஞ்சில் ஆகிய இரண்டு மூலிகைகளில் உள்ள வேதிப்பொருட்கள் அதன் மருத்துவ தன்மைக்கு காரணமாக உள்ளன.
நீர்பாங்கான இடங்களில் வளரும் பிரமி எனும் கீரையைப் பற்றி இன்று பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நரம்பு தளர்ச்சியைப் போக்குவதுடன் நல்ல தூக்கத்திற்கும் வழிவகுக்கும். இந்த பிரமி கீரையை நெய்யுடன் சேர்த்து வதக்கி சிறிது மிளகு, உப்பு சேர்த்தும் எடுத்துக்கொள்ளலாம்.
எண்ணெய் குளியல் வாதத்தை சீராக்கும் எளிய முறை. வாரம் இருமுறை எண்ணெய் குளியல் நித்திரையின்மையைப் போக்கும் எளிய வைத்திய வாழ்வியல் முறை. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணையை தேய்த்து குளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
தூக்கமின்மையைப் போக்க கூறப்பட்டுள்ள அஸ்வகந்தா தைலம், பிரமி தைலம் இவற்றை பயன்படுத்துவதும் கூடுதல் பலன் தரும். 'எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்' என்பது சித்த மருத்துவ வழிமுறை. எண்ணெயைத் தேய்த்து வெந்நீரில் குளிக்க வாதம் குறைந்து தூக்கம் இயல்பாக வருவதுடன், நோய்களுக்கு இடமில்லாமல் போகும்.
உணவிற்கும் தூக்கமின்மைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. ஆக, மசாலா தோய்ந்த உணவுப்பொருட்களைத் தவிர்த்து, பாரம்பரிய உணவுகளையும், பழங்களையும், நாடுவது நல்ல தூக்கம் உண்டாக கைக்கொடுக்கும். அசைவ உணவுகளில் கொழுப்புச் சத்துள்ள மீன் எடுத்துகொள்வது தூக்கத்தை தூண்ட உதவும்.

சோ.தில்லைவாணன்
மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும், இரவில் காபி குடிப்பதும் தூக்கத்தை கெடுப்பதாக உள்ளதை பல ஆய்வுகள் ஒப்புக்கொள்கின்றன. மாறாக இரவில் பாலில் மஞ்சள் பொடி சேர்த்து குடிப்பது இயல்பான தூக்கத்திற்கு வழிவகுக்கும். மஞ்சளில் உள்ள 'குர்குமின்' எனும் வேதி மூலக்கூறு தூக்கத்தை உண்டாக்க உதவுவதாக எலிகளில் நடத்திய சோதனை முடிவுகளும் உறுதி செய்கின்றன.
அதே போல் பாலில் உள்ள 'டிரிப்டோபன்' எனும் வேதிக்கூறு தூக்கத்தை உண்டாக்க துணைபுரிவதாக உள்ளது. வெதுவெதுப்பான பால் குடிப்பதும், அவ்வப்போது உடற்பயிற்சி மேற்கொள்வதும் முதுமையில் இயல்பான தூக்கத்தை வரவழைக்கும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.
நமது உடலில் சுரக்கும் 'மெலடோனின்' ஹார்மோன் நல்ல தூக்கத்திற்கு மற்றொரு காரணம். அதே மெலடோனின் ஹார்மோன் அன்னாச்சி, ஆரஞ்சு, வாழைப்பழம், காளான், அசைவ உணவுகள் ஆகிய உணவுப்பொருட்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அத்தகைய உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்வது நல்ல உறக்கத்திற்கு நல்லது.
செரடோனின் எனும் உடலில் சுரக்கும் மற்றொரு ஹார்மோனும் இயல்பான தூக்கத்திற்கு காரணமாகிறது. 'கிவி பழம்' இந்த ஹார்மோன் சுரப்பை தூண்டுவதாக உள்ளது. இரவில் படுக்கைக்கு போகும் முன், இரண்டு கிவி பழங்களை உட்கொள்ள தூக்கமின்மையைப் போக்கி தூக்க நேரத்தையும், தரத்தையும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுவது கூடுதல் சிறப்பு.
வயது முதுமையில் ஆண்களுக்கு உண்டாகும் புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திலும், பெண்களுக்கு உண்டாகும் சிறுநீர்ப்பை பலவீனத்திலும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலையில் அதிகம் பாதிக்கப்படுவது இரவு தூக்கம் தான். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வால் தூக்கம் கெட்டு உடல் அசதியும், மனச்சோர்வும் பலருக்கு உண்டாகக்கூடும்.
முதுமையில் பெண்களுக்கு கடைசி மாதவிடாய்க்கு பிறகு உடலில் ஏற்படும் தாறுமாறான ஹார்மோன் மாற்றங்களும் தூக்கமின்மை தொந்தரவுக்கு முக்கிய காரணியாக உள்ளது. இத்தகைய தொந்தரவுகளை தீர்க்க முதியோர்கள் தயக்கமின்றி மருத்துவர்களை அணுகினால் தூக்கத்திற்கு வழி பிறக்கும். உடல் பருமன் உள்ள நிலையில் உடல் எடையைக் குறைப்பது இயல்பான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
இரவில் எளிய உணவை உண்பதும், உண்ட பிறகு சிறிது தூரம் நடப்பதும், மனதிற்கு பிடித்த இசையை கேட்பதும், வழக்கமான உடற்பயிற்சியும், பகல் உறக்கம் தவிர்ப்பதும், எவ்வித யோசனையும் இன்றி படுக்கைக்கு செல்வதும் இயல்பான தூக்கம் வருவதற்கு வழிகாட்டும். இரவில் தூக்கம் இல்லாமல் போவது துக்கத்திற்கு வழிவகுக்கும். பாரம்பரிய உணவு முறைகளுடன், வாழ்வியல் முறைகளும், அத்துடன் தேவையான மூலிகை மருந்துகளும் அந்த துக்கத்தைப் போக்கி தூக்கத்தை வரவழைக்கும்.
நோய்நிலைகள் மட்டுமின்றி, சில வகை மருந்து மாத்திரைகளும் தூக்கமின்மையை உண்டாக்கக்கூடும் என்பதால் மருத்துவர் ஆலோசனையை பின்பற்றி மருந்துகளை எடுப்பது முதுமைக்கு என்றுமே நல்லது. ஏனெனில் நல்ல தூக்கம் ஆரோக்கியமான, தரமான வாழ்விற்கு அடிப்படைத் தேவை.
தொடர்புக்கு:
drthillai.mdsiddha@gmail.com
- ஒருவரின் அடிமனத்தின் குணங்கள் உணர்வு மனத்தோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.
- ஒருவரின் உண்மையான பலம், பலவீனத்தை ஆழ்மனமே தெரிவிக்கும்.
மனிதனின் மனம் ஒன்று தான். ஆனால் உணர்வுகளுக்கு எண்ணிக்கை கிடையாது. மனதின் உணர்வுகளை புரிந்து கொள்ள மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. உணர்வு மனம்: நாம் செய்யும் வேலைக்கு ஏற்றார் போல் உணர்வை மாற்றிக் கொள்வது உணர்வு மனம். உதாரணமாக புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைத்தவுடன் மனம் படிக்கும் உணர்வுக்கு மாறுவது.
2. அடி மனம்: ஒருவரின் இயல்பான மனதை குறிப்பிடுவது. இதை ஒருவரின் உண்மையான சொரூபம் என்றும் சொல்லலாம். ஒருவரின் அடிமனத்தின் குணங்கள் உணர்வு மனத்தோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும். இது ஒருவர் மனதில் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே வெளிப்படுத்த வைக்கும்.
3. ஆழ்மனம்: ஒருவரின் உண்மையான பலம், பலவீனத்தை ஆழ்மனமே தெரிவிக்கும். ஆழ்மனதை உணர்வு மனமும், அடி மனமும் சாதாரண நேரத்தில் செயல்பட விடாது. ஒருவரின் ஆழ்மனம் செயல்படும் போது மட்டுமே நாம் யார்? ஏன் பிறந்தோம் ? எதற்காக பிறந்தோம்? என்ன செய்கிறோம்? எதை நோக்கி போக வேண்டும் போன்ற அனைத்து கேள்விக்கும் விடை பெற முடியும். ஒருவரது சஞ்சித கர்மாவின் நிலையை இந்த ஆழ் மனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
- இந்த மூன்று நிலை மனித உணர்வுகளே கனவுகளாக வருகிறது. கனவு என்பது நமக்கு கிடைக்காத நம்மால் செயல்படுத்த முடியாத உணர்வுகளின் வெளிப்பாடு. கனவில் வரும் நிகழ்வுகள் பெரும்பாலும் இனி நடக்கப் போவது, முன்னால் நடந்தது என்ற இரண்டு வகையாகவே இருக்கும். சில நேரங்களில் சம்பந்தமே இல்லாத நிகழ்வுகளும் வரும். சிலர் தமது எதிர்காலம் பற்றி பகல் கனவு காண்பார்கள்.
- சிலர் ஆழ் மன உணர்ச்சியை தியானம், யோகா போன்றவற்றின் மூலம் கட்டுப்படுத்தி "தான் யார்" என்ற கேள்விக்கு இறைவனின் பரிணாமே நாம் என்ற விடையறிந்து தங்களுக்கு வேண்டிய நல்ல பலன்களை சஞ்சித கர்மாவாக மாற்றி பிறவி பயனை அனுபவிக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க மருத்துவ ரீதியாக சீரான தூக்கம் இல்லாதவர்களுக்கு கனவு என்பது மன அழுத்தம், மன நோயில் ஆழ்த்தி விடுகிறது. இரவில் தூங்கச் செல்லும் போது என்ன சிந்தனையில் இருக்கிறோமே அது தொடர்பான கனவே வரும். மிகக் குறிப்பாக இக்காலத்தில் டிவி சீரியல்களே கனவுகளுக்கு அடித்தளமாக இருக்கிறது. கனவுகள் பலருக்கு மன பாரத்தை குறைக்கும் வடிகாலாகவும் இருக்கிறது.
- கனவுகள் மனிதனை ஒரு தனி உலகிற்கு அழைத்து செல்கிறது. இதனைப்பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் கடந்து வந்த ஜென்மத்தின் நிகழ்வுகள் கூட ஞாபகம் வரும். தூக்கத்தில் இருந்து விழித்த பிறகு அந்த கனவுகள் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகள் மட்டுமே பின்னால் நடக்க இருப்பதை முன்னரே உணர்த்தும்.
- குறிப்பிட்ட கால கட்டத்தில் அந்த சம்பவங்கள் அவர்களது கனவில் நிகழ்ந்தைப்போலவே நினைவில் நடக்கும். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் சேர்ந்திருந்து குருபகவானால் பார்க்கப்பட்டால் பின்னால் நடக்கப் போவதை முன்னமே கனவு மூலம் அறியும் சக்தி படைத்தவர்கள். சில புரியாத புதிர்களை பலமுறை சிந்தனை செய்தும் மற்றும் முயற்சி செய்தும் கிடைக்காத புதிர்களுக்கான விடைகள் சிலருக்கு கனவில் விடையாக கிடைக்கும். இன்னும் சிலருக்கு அவர்கள் செய்த தவறுகள் கனவில் வந்து தவறை உணர வைக்கும்.
- அதீத நம்பிக்கை மற்றும் தாழ்வுமனப்பான்மையும் கூட இரவில் கனவுகளாக வந்து தொல்லை தரும். கனவில் மனிதன் தன்னை பெரிய வெற்றி வீரனாக நினைத்து கொள்வதால் அவனுக்கு யாரும் எதிரியே கிடையாது. அவன் நினைத்ததைப்போல எல்லாமே நடக்கிறது. இதனால் அக்கனவில் பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. மனிதனின் பலவீனமான எண்ணங்களும் கனவுகளை வரவழைக்கும். எனவே மனதிற்குள் எதை விதைக்கிறோமோ அதுவே இரவில் கனவாக வந்து விளைகிறது.

ஐ.ஆனந்தி
- ஒருவர் படுத்த உடன் எந்த பிரச்சினையும் இன்றி நிம்மதியாக தூங்குகிறார் என்றால் 12-ம் மிடமான அயன சயன ஸ்தானத்தில் சுப கிரக சம்பந்தம் மட்டும் இருக்கும். தானும் மகிழ்ச்சியாக இருப்பதுடன் மற்றவர்களையும் சந்தோஷ படுத்துவார்கள். கவலைகள் இவரை பாதிக்காது, நிம்மதியாக உறங்ககூடியவர்கள்
- கனவு என்பது அயன சயன ஸ்தானமான 12-ம் இடமும், மனோகாரகனாகிய சந்திரனின் சம்பந்தமும் சேர்ந்தது. கனவுக்கு காரக கிரகம் சூரியனாக இருந்தால் கூட ஒருவரின் கனவு, மனம் சார்ந்த நல்லது கெட்டது அனைத்திற்கும் சந்திரனே காரணம். சந்திரன் ஒரு ஜாதகத்தில் இருக்கும் இடமும், சந்திரனுடன் சேர்க்கை பெற்ற மற்ற கிரகங்களை கொண்டும், சந்திரனை பார்க்கும் கிரகங்களை வைத்தும் ஒருவரது மனம் எவ்வாறு இருக்கும், அவருக்கு கனவு பிரச்சினை உள்ளதா, தூக்கமின்மையால் அவதிபடுகிறாரா? என்று எளிதில் சொல்ல முடியும்.
- சந்திரன் பாவகர்த்தாரி தோஷம் பெற்றால் அசுப கனவும் சுப கர்தாரி யோகம் பெற்றால் சுப கனவுகள் இருந்து கொண்டே இருக்கும். சந்திரன் ராகு, கேதுவோடு சம்பந்தம் மற்றும் 6,8,12-ல் மறைபவர்களுக்கும் கனவு வரும்.
- ஒருவரது ஜாதகத்தில் லக்கனத்தில் 12-ம் அதிபதி இருந்தாலும் அல்லது லக்னாதிபதி 3,6, 8, 12 போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ அவர்களுக்கு கனவுகள் வரும்.
- அத்துடன் லக்னாதிபதி அஸ்தங்கம், நீசம், வக்ரம் பெற்று கோட்சார தசா, புத்தி நாதனும் சம்பந்தம் பெறும் போது அதிக கனவு வரும். அதனால் நோய் தாக்கம், தூக்கமின்மையும் வரும். இவர்களுக்கு செய்யும் மருத்துவ சோதனையில் எந்த குறையும் இருக்காது. ஆனால் ஜாதகர் நோய் தாக்கத்தில் இருப்பார். ஒரு ஜாதகத்தின் 1,5,9 வலிமை பெற்று 12-ம்மிடம் சம்பந்தம் பெறும் போது சுப கனவுகளும் 3,6,8,12-ம் பாவகம், அதிபதிகள் தசை நடத்தும் போது துரோகம், இழப்பு, மரணம் தொடர்பான கனவுகள் வரும். மிகக் குறிப்பாக சந்திர தசை சனி புத்தி அல்லது சனி தசை சந்திரபுத்தி நடக்கும் போது மன சஞ்சலமான கனவுகள் மிகுதியாக இருக்கும். இந்த காலகட்டங்களில் வரும் கனவு தூங்கி எழும் போது மறந்து விடும் அல்லது அரைகுறையாக நினைவு இருக்கும். 4-ம் இடமான சுகஸ்தானம் 12-க்கு திரிகோணம் என்பதால் சுகஸ்தானத்தை கோச்சாரத்தில் அசுப கிரகம் தொடர்பு பெறும் போது (3க்கு 2) தூக்கமின்மை மற்றும் குடியிருக்கும் வீட்டில் பிரச்சினை போன்ற காரணத்தால் அசுப கனவு வரும். சுக்கிரன், புதன், சந்திரன் போன்ற பெண் கிரக சம்பந்தம் ஏற்படும் போது பெண்கள் தொடர்பான கனவுகள் அதிகம் வரும்.
- சனி, ராகு, கேது போன்ற கர்ம வினையை வெளிப்படுத்தும் கிரகங்கள் 6,12-ம் பாவத்தோடு சம்பந்தம் பெற்று செவ்வாய் சம்பந்தமும் பெற்றால் அடிதடி, சண்டை கனவு வரும். 6,12- ல் ராகு, சனி சம்பந்தம் பெறும் போது இறந்த முன்னோர்களின் கனவு வரும். 6,12-ல் செவ்வாய், ராகு சம்பந்தம் பெறும் போது மிருகங்கள் கனவு வரும். உடலில் கபம், வாதம், பித்தம் வாயு தொடர்பான பிரச்சினை, அஜீரண கோளாறு தந்து கனவை உருவாக்கும்.
- ஒரு குடும்பத்தில் சாதாரண மரணமோ, அல்லது திடீர் மரணமோ ஏற்பட்டிருந்தால் அதற்க்கான கர்மங்களை தொடர்ந்து 12 நாட்கள் செய்வார்கள். ஏராளமான பணங்களை செலவுசெய்தும், கடுமையான நியமங்களை கடைபிடித்தும் 12 நாட்கள் செய்யப்பட்ட இறுதி கர்ம காரியங்களால் அந்த ஆத்மா நற்கதியை அடைந்தாரா? இல்லையா? என்பதை சில கனவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். நல்ல கனவு வந்தால் ஆத்மா நற்கதி பெற்றது என்றும் தீய கனவு வந்தால் நற்கதி அடைவதில் சிக்கல் இருக்கிறது என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.
- நல்ல கனவுகள் என்றால் பழுத்த பழங்களுடன் மரம், காளை, கருடன், மயில், தேவர்கள் அவர்களின் வாகனங்கள் கனவில் தோன்றுவது கர்மா நடைபெற்ற வருடத்தில் கர்மா செய்தவரின் மகன் (அ) மகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவது சுப பலன். ஒரு இடத்தில் படுத்திருக்கும் நபர், காலை எழும் போது இடம் மாறி எழுவது. தனது குடும்பத்து நபர்கள் தன்னைவிட்டோ, தன் குடும்பத்தை விட்டோ வெளியேறுவது, யாரோ ஒருவர் தன்னை தூக்கி செல்வது, உண்ணும் உணவை மற்றவர் அபகரித்து செல்வது போல காணுவது போன்ற கனவுகள் அசுபமாகும்.
- இது போன்ற கனவுகள் வந்தால் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, இறந்தவருக்கு நற்கதி ஏற்படவேண்டும் என சங்கல்பம் செய்து ஏழை எளியவர்களுக்கு உண்ண உணவும், உடுத்த உடையும் தானமாக கொடுக்கலாம்.
- ஆலய தரிசனம், கடவுளுக்கு அபிஷேக ஆராதனை, புனித நீராடுதல், நீர் நிலைகளை கடந்து செல்லுதல், புத்தாடை புது ஆபரணம் அணிவது, சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, விருந்து உணவு சாப்பிடுதல், ஒளியுடன் கூடிய பிரகாசமான பொருள்களை காண்பது, மலைமேல் ஏறிச் செல்வது, மழை பெய்தலை காணுதல், பயிர்களை காணுதல், கடவுள் சிலைகள், படங்கள், உயிருடன் இருக்கும் தாயார், தகப்பனார், மனைவி குழந்தைகள், கன்னிப் பெண், பறவை, சிகப்பு, வெண்மை, மஞ்சள் நிற மலர்கள் அலங்காரம் செய்த பெண், பசு காளை, கண்ணாடி , பலாமரம், தாமரைப்பூ, பால், கோழி, அன்னம், கொக்கு, பிராமணர், தேர், சப்பரம், திருவிழா, கோபுரம் ஆகியவை சுப கனவுகள் ஆகும். இதனால் நன்மை ஏற்படும்.
- பொருட்கள் உடைதல், கட்டிடம் இடிந்து விழல், மரம் சாய்தல், மலைசரிதல், வெள்ளம் பெருகி அடித்துச் செல்லுதல், விபத்துக்கள், விலங்குகள் கடித்து சண்டையிடுதல், மனிதர்கள் தகாத வார்த்தை கூறி சண்டையிடுதல், படங்கள் உடைதல், சிலைகள் உடைதல், இடறி விழுதல், மொட்டை தலை, மரம் ஏறுதல், மரத்தில் இருந்து அல்லது உயரமான இடத்திலிருந்து கீழே விழுதல், தலைவிரி கோலமாக ஒப்பாரி வைக்கும் பெண், புற்று, நெசவுதறி, எண்ணெய், இரும்பு பருத்தி, குரங்கு, கழுதை சர்ப்பம், விலங்குகள் துரத்துதல், ரத்தக்ககரையுள்ள ஆடை, பாம்பு விரட்டுதல், பாம்பு விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அடித்துக் கொல்லுதல், காவல்நிலையம், நீதிமன்றத்திற்கு செல்லுதல், இடுகாடு, துர்தேவதை, சாத்தான் பூஜை செய்தல், மாந்திரீக வேலை செய்தல், விலங்குகள் தோலுரித்தல், பெண்களை அடித்துத் துன்புறுத்துதல், இறந்தவர்கள் கனவில் வருவது, காலி மனை, வறண்ட நிலம் ஆகியவை அடிக்கடி தீய கனவுகளாக வந்தால் ஏதேனும் சம்பவங்கள் நிகழக்கூடும்.
- இரவு 12 மணி முதல் 4 மணிவரை பின்னிரவு காலமாகும். 12 மணி முதல் 2 மணி வரை காணும் கனவுகள் ஒரு வருட கால அளவிலும் பின்னிரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை காணும் கனவுகள் 6 மாதங்களுக்குள்ளாகவும், அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை காணும் கனவுகள் உடனே நிறைவேறும்.
- பலவீனமான உடல்நிலை மற்றும் மனநிலையும் கனவுகளுக்கு காரணம் என்பதால் உடற்பயிற்ச்சியும், மனபயிற்சியும், மனதிற்கு இதம் தரும் யோகா, மூச்சுபயிற்சி, நடைப்பயிற்சி, செய்து மனதினை பக்குவப் படுத்திக் கொண்டால் தூக்கத்தில் கனவுகள் வந்து தொல்லை தருவதில்லை.
- சாத்வீக உணவுகளை உண்டு வாத, பித்த மற்றும் சிலேத்தும நாடிகளினை சரியாக பேணி காக்கவேண்டும்.
- இரவு படுக்கைக்கு செல்லும் முன் ராம நாமம் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்ய வேண்டும்.
- இரவு துங்கும் முன் சித்தர்களை வணங்கி தியானம் செய்து வேண்டியதை கேட்க கனவில் அல்லது காலையில் பதில் கிடைக்கும். மரணம் தொடர்பான கனவு கண்டால் மகா மாருத்யுஞ் ஜய மந்திர பாராயணம் செய்தல் மனம் இலகுவாகும்.
- மகா மிருத்யுஞ் ஜய மந்திரம் :
- ஓம் த்ரயம்பகம் யஜாமகே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
- உர்வாருகமிவ பந்தனான் மிருத்யோர் முக்ஷிய மாம்ருதாத்
- இதற்கும் மேல் மன பாரம் இருந்தால் சர்வம் கிருஷ்ணர்பணம் என்று வாய் விட்டு சொன்னால் கிருஷ்ணன் பார்த்துக் கொள்வார்.
- சிவன் கோவிலில் நெய் தீபம் இடுதல். படுக்கை அறையின் வட கிழக்கு பகுதியில் ஒரு பாத்திர நீரில் உப்பு இட்டு வைக்கவும். தினமும் தண்ணீர், உப்பு மாற்ற வேண்டும்.
- உண்மையில் மூலம் நட்சத்திரம் உன்னதமான நட்சத்திரம். ஒரு குடும்பத்திற்கு பலம் சேர்க்கும் நட்சத்திரம் ஆகும்.
- ஒரு மூலம் நட்சத்திரக்காரரை வேறு ஒரு நட்சத்திரக்காரர் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டால் அந்த நபர் வாழ்க்கையில் வெற்றியை தவிர வேறு எதையுமே சந்திக்க மாட்டார்.
ஜாதகத்தில் ஆணுக்கோ, பெண்ணுக்கோ மூலம் நட்சத்திரம் இருப்பதாக தெரிய வந்தால் பெரும்பாலானவர்கள் பதட்டம் அடையும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மூலம் நட்சத்திரம் என்றாலே அது ஆகாத நட்சத்திரம் என்ற ஒரு மாயை மக்கள் மனதில் மிக மிக ஆழமாக பதிந்து விட்டது. ஜோதிட உலகில் உள்ள எத்தனையோ மூட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்றுதான் என்று இதை சொல்ல வேண்டும்.
உண்மையில் மூலம் நட்சத்திரம் மிக மிக அருமையான நட்சத்திரம் ஆகும். மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் மூலம் நட்சத்திரம் 19-வது நட்சத்திரமாக வரையறுக்கப்பட்டுள்ளது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் மிக மிக சிறந்து விளங்குவார்கள்.
ஒருவரது ஜாதகத்தில் அனைத்து பாதங்களிலும் மூலம் நட்சத்திரம் இருந்தால் அவர்கள் கல்வியில் மிக மிக சிறந்து விளங்குவார்கள். இல்லறத்திலும் சரி, ஆன்மிகத்திலும் சரி அவர்கள் மிகவும் புகழ் பெற்றவர்களாக இருப்பார்கள். மூலம் நட்சத்திரம் மற்ற கிரக அமைப்புகளுடன் வலுவாக இருக்கும் பட்சத்தில் அவர் அசைக்க முடியாத இடத்தில் இருப்பார்.
பொதுவாகவே மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கும். ஆலய பணிகளுக்கு முன்நின்று உதவி செய்வார்கள். கம்பீரமான தோற்றம், யாரையும் கவர்ந்து இழுக்கும் வாக்கு தன்மை ஆகிய இரண்டும் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு அடிப்படையாக அமைந்து இருக்கும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழில் செய்தாலும் சரி அல்லது மற்றவர்களிடம் பணிபுரிந்தாலும் சரி அவர்களது திறமை தனித்துவம் கொண்ட தாக காணப்படும். தொழிலில் எதை தொட்டாலும் வெற்றி பெறுவார்கள். அதற்காக எந்த விலை கொடுக்கவும் தயங்க மாட்டார்கள்.
அதே சமயத்தில் அவர்களிடம் இரக்க குணமும் மிகுந்து இருக்கும். ஏழை-எளியவர்களுக்கு தாராளமாக உதவி செய்வார்கள். அதுபோல குடும்ப உறுப்பினர்களிடம் அளவு கடந்த பாசத்துடன் காணப்படுவார்கள். சுயமரியாதை மிகுந்த இவர்கள் அமைதியான வாழ்க்கை வாழவே விரும்புவார்கள்.
எவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் மூலம் நட்சத்திரம் என்றதும் ஆகாத நட்சத்திரம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லும் வழக்கம் மக்களிடையே காணப்படுகிறது. குறிப்பாக மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்தால் மாமனார் அல்லது மாமியாருக்கு ஆகாது என்று பொத்தாம் பொதுவாக சொல்லி விடுவது உண்டு.
ஆனால் இதில் எந்த உண்மையும் கிடையாது. எதனால் இத்தகைய பேச்சுவழக்கு நடைமுறைக்கு வந்தது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மூலம் நட்சத்திரத்தில் முதல் பாதம் நவாம்சத்தில் மேஷ ராசியில் இடம் பெறும். மேஷ ராசி என்பது சூரியன் உச்சம் அடையும் ராசியாகும். அதாவது ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு பிறகு சூரியன் என்பது அவரது மாமனாரை குறிக்கும்.
இத்தகைய நிலையில் உள்ள ஒரு பெண் ஒரு குடும்பத்துக்குள் செல்லும்போது அந்த வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு அந்த பெண்ணுக்கு தானாகவே வந்து விடும். அதற்கு காரணம் மூலம் நட்சத்திரம். மாமனார் உயிரை எடுத்து விட்டு இது வரும் என்று அர்த்தமல்ல. அந்த பெண்ணுக்கு உள்ள தனித்திறமையால் அது கிடைக்கும்.
இதுவரை நிர்வாகம் செய்து குடும்பத்தை கட்டிகாத்து வரும் மாமனாருக்கு புதிதாக பெண் நிர்வாக பொறுப்பு ஏற்பது பிடிக்கவே பிடிக்காது. இதைதான் ஜோதிடர்கள் மேலோட்டமாக சொல்வதாக நினைத்துக்கொண்டு மூலம் நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்று சொல்லி விடுவார்கள். இப்படி சொல்லி சொல்லிதான் மூலம் நட்சத்திரம் என்றால் ஏதோ பயங்கரமான நட்சத்திரம் என்று நினைக்கும் அளவுக்கு ஆகி விட்டது.

உண்மையில் மூலம் நட்சத்திரம் உன்னதமான நட்சத்திரம். ஒரு குடும்பத்திற்கு பலம் சேர்க்கும் நட்சத்திரம் ஆகும். ராம பக்தனான அனுமனின் நட்சத்திரம் மூலம்தான். அதனால்தான் அனுமனால் இலங்கை சென்று சீதையை மீட்க உதவிகள் செய்ய முடிந்தது.
ஒவ்வொரு நட்சத்திரமும் நமது உடல் அமைப்பில் ஒரு பகுதியை குறிக்கும். அந்த வகையில் மூலம் நட்சத்திரம் நமது மூலாதார பகுதியை குறிப்பதாகும். இந்த மூலாதாரம் என்பது நமது உடலில் உள்ள 7 சக்கரங்களில் முதன்மையானது. மூலாதார சக்கரம் முனைப்பாக வேலை செய்தால்தான் மற்ற 6 சக்கரங்களும் செயல்படும்.
மூலம் நட்சத்திரம் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள இந்த ஒரு உதாரணமே போதும். ஆனால் மூலம் நட்சத்திரம் என்பது கேது எனப்படும் நிழல் கிரகத்தின் கீழ் வருவதால் அதை தோஷமான நட்சத்திரம் என்ற பட்டியலில் சேர்த்து விட்டனர்.
அதாவது மூலம் 1, 2, 3 பாதம் என்றால் மாமனாருக்கு ஆகாதாம். கேட்டை 2, 3, 4 பாதமானால் கணவரின் மூத்த சகோதரருக்கு ஆகாதாம். விசாகம் 4-ம் பாதமானால் கணவரின் இளைய சகோதரருக்கு ஆகாதாம். ஆயில்யம் 2, 3, 4 பாதனால் மாமியாருக்கு தோஷம் என்றெல்லாம் சொல்லி வைத்து இருக்கிறார்கள்.
மூலம் நட்சத்திரத்தின் சிறப்பையும், மூலம் நட்சத்திரத்தை தொடர்புபடுத்தி சொல்லப்படும் பழமொழிகளின் உண்மையையும் உணர்ந்து புரிந்து கொண்டவர்கள் மூலம் நட்சத்திரத்தை ஒரு போதும் தவறாக சொல்ல மாட்டார்கள். புரியாதவர்கள்தான் மூலம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு வேண்டாம் என்று சொல்லும் மரபின் மயக்கத்தில் இப்போ தும் இருக்கிறார்கள். இதனால்தான் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஏராளமான வர்கள் உரிய காலத்தில் திருமணம் கைகூடாமல் கடுமையாக தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
ஒருவர் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து வைத்தால் அவர்களது வாழ்க்கை மற்றவர்களை விட சிறப்பானதாகவே இருக்கும். அதாவது ஒரு மூலம் நட்சத்திரக்காரரை வேறு ஒரு நட்சத்திரக்காரர் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டால் அந்த நபர் வாழ்க்கையில் வெற்றியை தவிர வேறு எதையுமே சந்திக்க மாட்டார்.
ஒரே நட்சத்திரத்தில் பிறந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் ஜாதக ரீதியாக திருமணம் செய்ய மாட்டார்கள். ஆனால் மூலம் நட்சத்திரத்தில் மட்டும்தான் இந்த நட்சத்திரம் கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தாராளமாக திருமணம் செய்யலாம் என்பார்கள்.
என்றாலும் சிலர், "ஆண் மூலம் அரசாளும். பெண் மூலம் நிர்மூலம்" என்ற பழமொழி எப்படி வந்தது என்று கேட்கக்கூடும். இதுவும் பேச்சு வழக்கில் தவறாக மாறி விட்ட ஒன்றுதான். "ஆனி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம்" என்பது தான் சரியானதாகும்.
அதாவது ஆனி மாதம் பவுர்ணமி நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகள் அரசாளும் யோகத்துடன் இருப்பார்கள் என்பார்கள். அதுபோல ஆனி மாதத்திற்கு பிறகு வரும் மாதங்களில் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தால் எதிரிகளை நிர்மூலம் ஆக்குவார்கள் என்பதுதான் உண்மையான கருத்தாகும்.
இதைத்தான் சுருக்கமாக ஆனி மூலம் அரசாளும் பின் மூலம் நிர்மூலம் என்று சொல்லி வைத்தார்கள். புலிப்பானி சித்தரின் ஜோதிட நூல் உள்பட பண்டைய ஜோதிட நூல்களில் இப்படித்தான் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு சில ஜோதிடர்கள் எதுகை மோனைக்காக ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்று எக்குத்தப்பாக சொல்லி வைத்ததால் அதுவே இப்போது உண்மை என்பது போல உலா வருகிறது.
எனவே மூலம் நட்சத்திரம் தோஷமானது அல்ல. ஒருவேளை நீங்கள் தோஷம் என்று நினைத்தால் தினமும் காலையில் விநாயகரை வழிபடுங்கள். கோவில்களுக்கு நிறைய தானம் செய்யுங்கள். பிரமோற்சவம் நடக்கும்போது கோவில்களில் கொடி ஏற்றுவார்கள். அந்த கொடி செலவை ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஆலயங்களுக்கு சென்று மூலம் நட்சத்திர பரிகாரம் அல்லது பிரார்த்தனை பூஜை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம், திருநீர்மலை பெருமாள் ஆலயம், திருவதிகை சிவாலயம் ஆகிய ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம்.






