என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

கோபத்தை கட்டுப்படுத்தினால் பெரிய ஞானிதான்!
- அர்ஜுனன் கோபம் கொண்டு அவ்வுருவத்துடன் போரிட்டார். பூதாகரமான அந்த உருவம் அர்ஜுனனை தாக்கி விட்டு மறைந்தது.
- கிருஷ்ணர் சிரிக்க சிரிக்க அந்த உருவம் சிறிதாகிக் கொண்டே வந்தது.
ஒரு மனிதன் தன் வாழ்வில் பல செய்திகளை கேட்டு, கற்று, படித்து, அறிந்து நடக்கிறான். தன் தலைமுறையினருக்காக முன்னோர்கள் இவைகளை உபதேசங்களாக நமக்குக் கொடுத்தனர். இவற்றில் சில நடந்தவைகளாக இருக்கலாம். சில கதை ரூபத்திலும் இருக்கும். ஆனால் இவை மனதில் படிய வேண்டும் அவ்வளவே. எனவே கதை, கற்பனை என்பதனை தவிர்த்து சொல்லப்படும் கருத்தில் கவனம் செலுத்துவோம்.
ஒரு சமயம், ஸ்ரீ கிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் மூவரும் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தனர். இருட்டி விட்டதால் ஏதாவது ஒரு இடத்தில் தங்கி பொழுது விடிந்த பிறகே பயணத்தினை தொடர முடியும். ஓய்வும் எடுத்தது போல் ஆகி விடும் என முடிவு செய்தனர்.
காடு ஆயிற்றே கொடிய மிருகங்கள் இருக்குமே. எனவே சேர்ந்து அனைவரும் தூங்க முடியாது. எனவே ஸ்ரீ கிருஷ்ணரும், பலராமரும் உறங்க சென்றனர். ஒரு ஜாமம் அர்ஜுனன் காவல் செய்ய முடிவு எடுத்தனர்.
அர்ஜுனன் காவல் காத்து கொண்டு இருந்தான். திடீரென ஒரு புகை மண்டலத்தில் இருந்து அகன்ற மூக்கு பெரிய பற்கள், முட்டை போன்ற கண்கள் கொண்ட வடிவில் ஒரு உருவம் தோன்றியது. மரத்தடியில் தூங்கும் ஸ்ரீ கிருஷ்ணர். பலராமனையும் காவல் காக்கும் அர்ஜுனனையும் பார்த்தது. அருகில் சென்றது. அர்ஜுனன் தடுத்தான். அவ்வுருவமோ அர்ஜுனனைப் பார்த்து அவர்கள் இருவரையும் தான் கொல்லப் போவதாகவும் அர்ஜுனன் அந்த உருவத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் சொன்னது.
அர்ஜுனன் கோபம் கொண்டு அவ்வுருவத்துடன் போரிட்டார். பூதாகரமான அந்த உருவம் அர்ஜுனனை தாக்கி விட்டு மறைந்தது.
இரண்டாம் ஜாமம் வந்தது. பலராமனை எழுப்பி விட்டு அர்ஜுனன் தூங்கச் சென்றான். மீண்டும் அவ்வுருவம் வந்தது. அர்ஜுனனிடம் கூறியது போலவே பலராமனிடம் கூறியது. பலராமனும் அவ்வருவத்துடன் கடுமையாக போரிட்டார். ஆனால் அவ்வுருவம் பலராமரையும் கடுமையாய் தாக்கி விட்டு சென்றது.
அடுத்த ஜாமத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் காவல் காக்கும் நேரம் வந்தது. அதே போல் அவ்வுருவமும் வந்தது. அந்த உருவத்தினைக் கண்டு கிருஷ்ணர் கலகலவென சிரித்தார். அந்த உருவம் இதனை எதிர்பார்க்கவில்லை. 'ஏன் என்னைப் பார்த்து சிரிக்கின்றாய்?' என்றது.
'உன்னைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகின்றது? என்றார் ஸ்ரீ கிருஷ்ணர்.
தன்னை கேலி செய்வதனை அவ்வுருவத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மிகுந்த கோபத்துடன் ஸ்ரீ கிருஷ்ணருடன் சண்டை போட்டது. ஆனால் ஸ்ரீகிருஷ்ணரோ சிரித்துக் கொண்டே போரிட்டார்.
கிருஷ்ணர் சிரிக்க சிரிக்க அந்த உருவம் சிறிதாகிக் கொண்டே வந்தது.பலமும் குறைந்தது. கடைசியில் அந்த பெரிய கோர உருவம் ஒரு புழுவாக மாறியது... நெளிந்தது.
கமலி ஸ்ரீபால்
ஸ்ரீ கிருஷ்ணர் அந்த புழுவினை ஒரு துணியில் கட்டி வைத்தார். பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் இரவில் வந்த பயங்கர உருவத்தினைப் பற்றியும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதானது பற்றியும் கூறினர்.
அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் துணியில் கட்டியிருந்த புழுவினைக் காட்டி நீங்கள் சண்டை போட்ட உருவம் இதுதான் என்றார்.
நீங்கள் அந்த உருவத்துடன் சண்டை போடும் போது அதிக கோபத்துடன் சண்டை போட்டீர்கள். அதனால் அதன் பலமும் உருவமும் பெரிதாகிக் கொண்டே போயிற்று. அதன் பலமும் கூடியது.
நான் சிரித்துக் கொண்டே சண்டை போட்டதால் அது உருவமற்று போயிற்று. பலமும் இழந்தது என்றார். இது முழுமையும் கற்பனையான கதையாகவே இருக்கட்டும். ஆனால் எத்தனை அவசியமான கருத்தினை கொடுத்துள்ளனர் என்பதினை சிந்திக்க வேண்டும். வம்பு, சண்டை என வருபவனை புன்னகையோடு எதிர் கொள்ளும் பொழுது அவன் புழுவுக்கு சமமானவனாகி விடுகிறான்.
கோபத்தை கட்டுப்படுத்தி விட்டாலே பெரிய ஞானிதான். வாழ்க்கையில் பல விஷயங்களுக்கு நாம் பதிலுக்கு பதில் என்று கொந்தளிக்காவிட்டாலே போதும் அது எதுவும் இல்லாமல் கலைந்து விடும்.
இதனையும் கற்பனை கதை என்று எள்ளி நகைத்தவரின் கருத்தினை உணர்ந்து வாழ முயல்வோம்.
மேற்கூறியவாறு வாழ்வதற்கு உறுதியான மன வலிமை வேண்டும். இல்லையெனில் சிரித்துக் கொண்டே பிரச்சினைகளுடன் போராடுவது என்பது எளிதான காரியமா என்ன?
சாதிக்க கடினமான விஷயங்களை சாதிப்பதுதானே சாதனை. மனவலிமை இருந்தாலும் சமூக கட்டுப்பாடுகளை அதாவது சட்ட திட்டங்களை மீறக்கூடாது.
எதனையும் பதற, பதற துடிதுடிக்க சதா சர்வ காலமும் எதிர்பார்ப்பிலேயே காலம் தள்ளாதீர்கள். எதிர்பார்க்காமல் இருந்தாலே பிரபஞ்சம் பல அதிசயங்களை நிகழ்த்தும்.
கடந்த காலத்தினை நினைத்து வருத்தம் ஏற்படும் பொழுது மரத்தின் உதிர்ந்த காய்ந்த இலைகளைப்பாருங்கள். அது மீண்டும் அப்படியே மரத்தில் போய் ஒட்ட முடியாது. மரமும் அதனை ஏற்பதில்லை.
கங்கை கூட ஓடிக் கொண்டேதான் இருக்கின்றது. திரும்ப பின்னோக்கி வராது.
இப்படி மனதின் பாசியினை அன்றாடம், ஒவ்வொரு நொடியும் தேய்த்து தேய்த்துதான் மன வலிமையினைக் கூட்ட முடியும்.
நம் வாழ்க்கைக்கு உணவு, உடை, இருப்பிடம் என சில தேவைகள் அவசியமாகின்றன. அதைவிட்டு மனதினை அலையோ அலை என்று அலைய விடுவது எத்தனை பிரச்சினைகளைத் தருகின்றது.
பலவித கெடுதல் உணவுகளை மூக்கு முட்ட சதா உண்பது உடலை கெடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. உணவிலும் சரி, பேச்சிலும் சரி கட்டுப்பாடு இல்லை எனில் வாழ்க்கை, ஆரோக்கியம், ஆன்மீகம் இதனைப் பற்றி சிந்திக்கக்கூட முடியாது.
நல்ல உடல் உழைப்பு இருந்தாலே உடல் உள் உறுப்புகள் சிறப்பாய் இருக்கும். அளவான எதுவும் இயற்கையோடு ஒத்துப்போய்விடும்.
சற்றே சிந்தித்துப் பார்ப்போமோ....
* ஆண்டவனிடம் முழு நம்பிக்கையோடு வேண்டுகின்றோமா! இல்லையெனில் இன்றிலிருந்து தொடங்கி விடுவோம்.
* மகாபாரதம், ராமாயணம் என்று பேசுகின்றோம். எல்லோர் வீட்டிலும் ஒரு கூனியும், சகுனியும் இருக்கத்தானே செய்கின்றார்கள். இப்படி பல கதாபாத்திரங்களை அன்றாட வாழ்விலும் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றோம்.
* ராமனை மணந்த சீதைக்கும் கஷ்டம்தான். ராவணனை மணந்த மண்டோதரிக்கும் கஷ்டம்தான். பஞ்ச பாண்டவரை மணந்த திரவுபதிக்கும் கஷ்டம்தான். கோவலனை மணந்த கண்ணகிக்கும், மாதவிக்கும் கூட கஷ்டம்தான். சித்தார்த்தரை மணந்த யசோதைக்கும் கஷ்டம்தான். இயேசு பிரானை ஈன்ற மேரி அன்னைக்கும் தான் பெற்ற இறைவன் சிலுவையில் அறையப்படு வதனைக் கண்டு நொந்து போனார். இப்படிக் கூறிக்கொண்டே போகலாம். ஆக பெண்ணே-நீயே சக்தி-எழுந்து வா- துன்பங்களை மிதித்து வா. வெற்றி வாகை சூடு. இது உன் வாழ்க்கை சாதித்து காட்டு. மேலே குறிப்பிட்டவர்களும் சாதித்துதான் வாழ்ந்தார்கள்.
* இயற்கைக்கு ஒரு சக்தி இருக்கின்றது.
* நீ என்ன செய்கின்றாயோ அதனை உன்னிடமே திருப்பி கொண்டு வந்துவிடும்.
* நான் இப்படிதான் என்ற வறட்சி கவுரவம் இல்லாது ஒருவர் தன்னை மாற்றிக் கொண்டால் பிரபஞ்சமும் அவரது வாழ்க்கையினை முறையாய் மாற்றி விடுகின்றது.
* கடந்த காலத்தில் மூழ்கி நிகழ் காலத்தினை விட்டு விடக்கூடாது. முயன்று பார்ப்போம்.






