என் மலர்
திருவண்ணாமலை
- மாடு குறுக்கே வந்ததால் விபரீதம்
- போலீசார் உடலை மீட்டு விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த நெசல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). எலக்ட்ரீசியன். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.
இந்த நிலையில் வெங்கடேசன் நேற்று வேலை சம்பந்தமாக பைக்கில் வந்தவாசி - ஆரணி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மாடு ஒன்று குறுக்கே வந்தது. திடீரென அதன் மீது மோதி சாலையில் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த வெங்கடேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வெங்கடேசன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது
- இந்த மாத இறுதிக்குள் முழுமை பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தேரோடும் மாடவீதிகளில் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
இதில் முதல் கட்டமாக திருவூடல் தெரு சந்திப்பு முதல் காந்திசிலை வரை உள்ள ஆயிரம் மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த சாலை பணிகளை கலெக்டர் முருகேஷ் பார்பவையிட்டு பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த பணிகள் இந்த மாத இறுதிக்குள் முழுமை பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட ப்பொறியாளர் ரகுராமன், நகராட்சி ஆணையாளர் ந.தட்சணா மூர்த்தி, பொறியாளர் நீலேஸ்வர், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பழனி ராஜூ, உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவி மின் பொறியாளர் சங்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
அடுத்த மாதம் நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சிமெண்ட் சாலையில் நடைபெறும்.
தேரோட்டத்திற்கு வசதியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மாடவீதிகளில் மின் கம்பங்களில் சென்று கொண்டிருந்த மின் வயர்கள் அனைத்தும் புதைவழி மின் தடமாக மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
- 2 பேர் கைது
- கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கைவரிசை
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள கிடங்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன்( வயது 67). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நடராஜன் தனது மனைவி ஜெயக்குமாரி(59) மற்றும் ஜெயக்குமாரியின் சகோதரி காஞ்சனா(50) ஆகிய 3 பேரும், கடந்த 19-ந்தேதி வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, வீட்டுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், நடராஜன், ஜெயக்குமாரி மற்றும் காஞ்சனா ஆகியோரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் மற்றும் சொத்து பத்திரங்களை கேட்டு மிரட்டினர். அப்போது பயந்துபோன 3 பேரும் கூச்சலிட்டனர்.
அலறல் சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் ஓடி வந்தனர். அப்போது, பின் வாசல் வழியாக மர்ம கும்பல் தப்பிச்சென்றனர். இந்த நிலையில் மர்ம கும்பலின் பைக், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. இது குறித்து புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதையடுத்து போலீசார் சுந்தர், விக்னேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கோவிலூர் கிராமம், களத்து மேட்டு தெருவில் வசிக்கும் சந்தானம் மகன் சுந்தர்(38) மற்றும் செய்யாறு நகரம் கொடநகர் சமாதியான் தெருவில் வசிக்கும் ரங்கநாதன் மகன் விக்னேஷ்(32) ஆகியோர் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டுள்ளனர்.
இவர்கள் 2 பேரும் சேர்ந்து, சென்னை குரோம்பேட்டையில் வசிக்கும் உதயா, கரியன் மற்றும் பேபி ஆகிய 3 பேர் கொண்ட கூலிப்படையினர் மூலம் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நடராஜனிடம் சுந்தர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
கடன் தொகைக்கான வட்டி பணத்தை சரியான நேரத்தில் செலுத்தவில்லை. இதனால் வட்டியுடன் அசல் தொகையை சேர்த்து ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என நடராஜன் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து ரூ.4 லட்சத்தை சுந்தர் கொடுத்துள்ளார்.
மேலும் நடராஜன் மீதமுள்ள ரூ.6 லட்சம் கொடுக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுந்தர், தனது நண்பர் விக்னேஷ் உதவியுடன் சென்னை குரோம் பேட்டை கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் மூலம் நடராஜன் வீட்டில் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. 2 பேரை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள சென்னை கூலிப்படையைச் சேர்ந்த உதயா, கரியன், பேபி ஆகியோரை தேடி வருகிறோம். இவ்வாறு கூறினர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று மாலை திருவண்ணாமலைக்கு வந்தார்.
- முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் தி.மு.க. சார்பில் வடக்கு மண்டல அளவிலான வாக்குசாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டம் இன்று மாலை நடக்கிறது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 13 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் இன்று காலை முதல் திருவண்ணாமலையில் குவிய தொடங்கினர்.
இதற்காக மலப்பாம்பாடியில் பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று மாலை திருவண்ணாமலைக்கு வந்தார்.
அவருக்கு மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சோ.காட்டுக்குளம் பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்.
தொடர்ந்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ. கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, அம்பேத்குமார், வசந்தம் கார்த்திகேயன், வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் 600 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு ஆஸ்பத்திரி கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பார்வையிடுகிறார்.
இதனை தொடர்ந்து இன்று மாலை தி.மு.க. பயிற்சி பட்டறை கூட்டத்துக்கு செல்கிறார்.
அதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை நகராட்சி பள்ளி எதிரில் உள்ள கலைஞர் திடலில் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- வேலை முடிந்து நள்ளிரவு வீடு திரும்பியபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
செய்யாறு:
வெம்பாக்கம் அடுத்த பிரம்மதேசத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 41). சமையல் மாஸ்டர். இவரது மனைவி தேவி (35). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஆறுமுகம் நேற்று சமையல் வேலைக்கு சென்றார். வேலைகள் முடிந்து நள்ளிரவு வீடு திரும்பினார்.
பனைமுகை கூட்ரோடு ஊத்துக்காட்டு எல்லை யம்மன் கோவில் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஆறுமுகம் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆறுமுகம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸ் புகார் அளிக்க ப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாவட்ட நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்
- சிறப்பு கூட்டம் நடைபெற்றது
செய்யாறு:
செய்யாறு ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பி. மதுசூதனன் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நட்டார். அதனைத் தொடர்ந்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட அமர்வு நீதிபதி மதுசூதனன், சார்பு நீதிபதி குமாரவர்மன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி தனஞ்செயன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆயுஷ் பேகம், நீதித்துறை நடுவர் பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
கூட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் மாவட்ட நீதிபதியிடம் அளித்த கோரிக்கை மனுவில், செய்யாறில் மூடிய நிலையில் உள்ள கிளை சிறையை மீண்டும் திறக்க வேண்டும்.
நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை நூற்றாண்டு பழமை வாய்ந்த நீதிமன்ற கட்டிடத்திலே செயல்பட அனுமதிக்க வேண்டும், மூடப்பட்டுள்ள உணவு கட்டிடத்தை (கேன்டீன்) திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை தொடர்பாக பரிசீலனை செய்வதாக மாவட்ட நீதிபதி பி.மதுசூதனன் உறுதியளித்தார்.
இதில் மூத்த வழக்கறிஞர்கள் எம் எஸ் சங்கர பாண்டியன், ஜே. ராமகிருஷ்ணன், நம்பி, சக்தி அண்ணாமலை உள்பட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
- மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு உதவி கலெக்டர் மந்தாகினி தலைமை தாங்கினார். தாசில்தார்கள் முருகன் (செங்கம்), சக்கரை (தண்டராம்பட்டு), சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் ரேணுகா (செங்கம்), சுகுணா (கீழ்பெண்ணாத்தூர்), பரிமளா (தி.மலை), வட்ட வழங்கல் அலுவலர்கள் முனுசாமி (செங்கம்), மணிகண்டன் (கீழ்பென்னாத்தூர்), வருவாய் ஆய்வாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செங்கம் தாசில்தார் முனுசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை உதவி கலெக்டர் மந்தாகினியிடம் வழங்கினர்.
மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பரசுராமன், வருவாய்த்துறையினர், தமிழ்நாடு போக்குவரத்து துறை செங்கம் பணிமனை மேலாளர் சேட்டு உள்பட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் செங்கம் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் நன்றி கூறினார்.
- 200 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்
- ஒகேனக்கல்லிற்கு சுற்றுலா சென்றனர்
செங்கம்:
பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி குட்கா கடத்தி சென்ற கார் சுற்றுலா பஸ் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பெங்களூரூவில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை காரில் கடத்திக்கொண்டு மர்ம கும்பல் திருவண்ணாமலை நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இருந்து ஒகேனக்கல்லிற்கு சுற்றுலா செல்வதற்காக மினி பஸ்சில் சிலர் வந்து கொண்டிருந்தனர்.
செங்கம் அடுத்த ரோடு கரியமங்கலம் பகுதியில் வளைவான சாலையில் பஸ் திரும்பியது. அப்போது எதிரே வந்த கார் சுற்றுலா பஸ் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் உருண்டு சென்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் நின்றது.
இதை தொடர்ந்து காரை ஓட்டி வந்த மர்ம கும்பல் காரை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடினர்.
அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் 10 மூட்டைகளுக்கு மேல் காரில் இருந்தது.
அதனை பிரித்துப் பார்த்தபோது சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள 200 கிலோ எடை கொண்ட குட்கா போன்ற போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் போதை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
சுற்றுலா சென்ற பயணிகள் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் சங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆரணி ஸ்ரீ கைலாதநாதர் கோவிலில் வழிபாடு
- அன்ன தானம் வழங்கப்பட்டது
\ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் கோட்டை வீதியில் பழமைவாய்ந்த அறம்வளம் நாயகி சமேத கைலாதநாதர் கோவில் உள்ளது.
நவராத்திரி 6-வது நாளை முன்னிட்டு கஜலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
பக்தர்களால் கொண்டு வரப்பட்ட சுமார் 45 லட்சம் புதிய ரூபாய் நோட்டு மற்றும் 200 பவுன் நகை மூலம் தொடர்ந்து 9 மணி நேரம் அலங்காரம் செய்து கஜலட்சுமி அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
கஜலட்சுமி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் சுற்று பகுதிகளில் உள்ள வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வழிப்பட்டனர். இறுதியில் கோவில் நிர்வாகம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
- திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று மாலை திருவண்ணாமலைக்கு வருகிறார்.
அவருக்கு மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சோ.காட்டுக்குளம் பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இதனையடுத்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகின்றார்.
தொடர்ந்து மாலை 4 மணியளவில் திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் தி.மு.க. சார்பில்
வடக்கு மண்டல அளவிலான வாக்குசாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டம் நடக்கிறது.
கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 13 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுக்கின்றார்.
அதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலையில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனை
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த மோரணம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 57). சமையல் மாஸ்டர். இவர் நேற்று முன்தினம் இரவு வெம்பாக்கம் கூட்ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பாபு பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மோரணம் போலீசார் பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விசைத்தறியில் கைத்தறி பட்டு புடவை நெய்வதாக புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆரணி:
ஆரணி என்றாலே பட்டு பெயரெடுத்த ஊராகும் சில மாதங்களாக கைத்தறி பட்டு போல விசைத்தறியில் பட்டுபுடவை நெய்து கைத்தறி பட்டு என விற்பனை செய்யபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாக கூறி நெசவாளர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு கைத்தறி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் ஆரணி அருகே சுந்தரீகம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட சக்தி நகர் பகுதியில் விசைத்தறியில் கைத்தறி பட்டு புடவை நெய்வதாக புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது விசைத்தறி நெய்யப்படும் இடத்தை அதிகாரிகள் தேடி கொண்டிருக்கும் போது அதே பகுதியை சேர்ந்த நெசவாளர் பாபு என்பவர் விசைத்தறி நெய்யப்படும் இடத்தை அதிகாரிகளிடம் கூறியதாக தெரிகிறது. இதனை கண்ட விசைத்தறி நெசவாளர் எங்கள் வீட்டை அதிகாரிகளிடம் காட்டி கொடுக்கின்றாயா என கூறி சிலர் பாபுவை சராமரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் பாபு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






